துன்மார்க்கன் நீதியைக் கற்றுக்கொள்ளான்

 'ஆதவன்' 💚நவம்பர் 07, 2024. 💚வியாழக்கிழமை     வேதாகமத் தியானம் - எண்:- 1,369


"துன்மார்க்கனுக்குத் தயைசெய்தாலும் நீதியைக் கற்றுக்கொள்ளான்; நீதியுள்ள தேசத்திலும் அவன் அநியாயஞ்செய்து கர்த்தருடைய மகத்துவத்தைக் கவனியாதேபோகிறான்." ( ஏசாயா 26 : 10 )

தேவன் தனது இரக்கத்தின் பெருக்கத்தினால் அனைத்து மக்களுக்கும் சில நன்மைகளைச் செய்து கொண்டுதானிருக்கிறார். எனது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிபவனுக்கு மட்டுமே நான் நன்மைகள் செய்வேன் என்று அவர் கூறவில்லை. இப்படி தேவன் அனைவருக்கும் நன்மைகளைச்  செய்வதால் துன்மார்க்க வாழ்க்கை வாழ்பவர்கள் நீதி வாழ்க்கைக்குத் திரும்பிவிடுவதில்லை. இப்படி அவர்கள் தேவ கிருபையை புறக்கணிக்கிறார்கள். 

துன்மார்க்கன் இப்படி நன்மைகளைப் பெறும்போது அது தனது "அதிஷ்ட்டம்" (luck)  என்று கூறிக்கொள்கிறான். அல்லது தான் வணங்கும் ஏதோ ஒரு தெய்வத்தின் கருணை என்று சொல்லிக்கொள்கிறான். ஆனால் தொடர்ந்து தனது துன்மார்க்கச் செயல்களிலேயே ஈடுபட்டுக் கொண்டிருக்கிறான். இதனையே, தேவன்  "துன்மார்க்கனுக்குத் தயைசெய்தாலும் நீதியைக் கற்றுக்கொள்ளான்"  என்று இன்றைய தியான வசனத்தில் கூறுகின்றார்.    

இன்று உலகினில் வாழும் உலக ஆசீர்வாதங்களைப் பெற்றிருக்கும் கோடிக்கணக்கான மக்களும் நீதிமான்களல்ல, மாறாக தேவனது கிருபையினால் இந்த ஆசீர்வாதங்களைப் பெற்று அனுபவிக்கின்றனர். இத்தகைய மனிதர்களை எவ்வளவு பெரிய நீதியைக் கடைபிடிக்கும் நாட்டில் கொண்டு வாழவைத்தாலும் அவர்கள் தொடர்ந்து அநியாயஞ்செய்து கர்த்தருடைய மகத்துவத்தைக் கவனியாதேபோகிறார்கள். 

இன்று உலகின் பணக்கார நாடுகளில் வாழும் மக்கள் நல்ல செலவச் செழிப்புடன் வாழ்கின்றனர். ஆனால் அவர்கள் அனைவரும் தேவனுக்கு ஏற்ற வாழ்க்கை வாழ்வதில்லை. செழிப்புடன் வாழ்கின்றனர் அவ்வளவே. இப்படி இவர்களுக்குத் தேவன் தயைசெய்திருந்தாலும் அவர்கள் தேவ நீதியை அறிந்துகொள்ளவில்லை. கர்த்தருடைய மகத்துவத்தைக் கவனியாதே போகிறார்கள். ஆம் அன்பானவர்களே, உலக ஆசீர்வாதம் என்பது மட்டுமே தேவனை அறியவும் நமது துன்மார்க்கத்தைவிட்டு நாம் திரும்பிடவும் உதவாது. துன்மார்க்க மனம் உள்ளவன் எவ்வளவு நல்ல நிலையில் வாழ்ந்தாலும் தேவ நீதியை அறியாதவனாகவே இருப்பான். 

இன்றும் நாம் உலகினில் பல ஏழை மனிதர்கள் நீதியுள்ள வாழ்க்கை வாழ்வதைப் பார்க்கின்றோம். லட்சக்கணக்கான பணத்தை ஒருவர் ஆட்டோவில் தவறவிட்டுச் சென்றதை ஏழை ஆட்டோ ஓட்டுநர் அப்படியே கொண்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்தைச் செய்தி பத்திரிகைகளில் வெளிவந்ததை வாசித்திருப்பீர்கள். ஆனால் அதே நேரத்தில் அரசு பதவியில் இருந்து மாதம் எழுபதாயிரம் எண்பதாயிரம் மாதச் சம்பளம் வாங்கும் மனிதன் ஏமாற்றும் லஞ்சமும் வாங்கி பொருள் குவிக்கிறான். 

தேவனது தண்டனை உடனேயே கிடைக்காததால் தவறு செய்பவர் தன்னை தேவனுக்கேற்றவர் என எண்ணிக்கொள்ளவேண்டாம்.  என்பதையே இன்றைய தியான வசனம் அறிவுறுத்துகின்றது. ஆம், தேவன் தயைசெய்தாலும் அத்தகைய மனிதன் நீதியைக் கற்றுக்கொள்ளான்; தொடர்ந்து அவன் அநியாயஞ்செய்து கர்த்தருடைய மகத்துவத்தைக் கவனியாதேபோகிறான் என்பதே உண்மை. கிறிஸ்துவின் வருகையில் இத்தகைய மனிதர்கள் அழுது புலம்புவார்கள். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                

No comments:

சமீபத்தியக் கட்டுரைகள் (Latest Articles)

🦋 Meditation verse - ரோமர் 6 : 7 / Romans 6:7

  " ஆதவன் " தியானம் - 1951 2026 ஜூன் 11,   வியாழன்        "மரித்தவன் பாவத்துக்கு நீங்கி விடுதலையாக்கப்பட்டிருக்கிறானே." ...