இயேசு கிறிஸ்து முதலில் நம்மை அன்புகூர்ந்ததினால் நாம் அவரை அன்பு செய்கின்றோம்.

Thursday, October 17, 2024

மீன் வயிற்றிலே யோனா

 'ஆதவன்' 💚அக்டோபர் 19, 2024. 💚சனிக்கிழமை     வேதாகமத் தியானம் - எண்:- 1,350


"யோனாவை விழுங்கும்படி ஒரு பெரிய மீனைக்  கர்த்தர் ஆயத்தப்படுத்தியிருந்தார்; அந்த மீன் வயிற்றிலே யோனா இராப்பகல் மூன்றுநாள் இருந்தார்." ( யோனா 1 : 17 )

ஆவிக்குரிய வாழ்வில் நாம் தேவனுக்கு உகந்த ஒரு வாழ்க்கை வாழ்ந்தாலும் சில வேளைகளில் தவறிவிடுகின்றோம். ஆனால் தேவன் நமது பலவீனங்களை அறிந்திருக்கின்றார். எனவே, நம்மைக்குறித்த அவரது சித்தத்தை நிறைவேற்றிட அவர் சில தண்டனைகள் தந்து நம்மை உணர்வடையச் செய்து  சரியான வழிக்குத் திருப்பி நடத்துகின்றார். 

யோனாவின் வாழ்வில் இதுதான் நடந்தது. யோனாவைக்குறித்து தேவனுக்கு ஒரு சித்தம் இருந்தது. அது நினிவே நகருக்குச் சென்று தேவச்செய்தியை எடுத்துரைப்பது. ஆனால் யோனா அந்தத் தேவச்  சித்தத்துக்கு எதிராகச் செயல்படத் துவங்கினார்.  அவரைக் கண்டித்துத் திருத்தவேண்டியிருந்ததால் யோனாவை விழுங்கும்படி ஒரு பெரிய மீனை கர்த்தர் ஆயத்தப்படுத்தியிருந்தார்; அந்த மீன் வயிற்றிலே யோனா இராப்பகல் மூன்றுநாள் இருந்தார்.

ஆம் அன்பானவர்களே, இதுபோலவே நமது வாழ்க்கையிலும் நடைபெறுகின்றது. நாம் தவறும்போது தேவன் நம்மைச் சோதித்துத் திருத்துகின்றார். அவர் நம்மைச் சோதித்தாலும் யோனாவுக்கு ஒரு பெரிய மீனை ஆயத்தப்படுத்தி வைத்திருந்ததுபோல நமக்கும் தப்பித்துக்கொள்ளும் ஒரு வழியை ஆயத்தப்படுத்தி வைத்திருப்பார். 

இதனையே அப்போஸ்தலரான பவுல், "மனுஷருக்கு நேரிடுகிற சோதனையேயல்லாமல் வேறே சோதனை உங்களுக்கு நேரிடவில்லை. தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார்; உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடங்கொடாமல், சோதனையைத் தாங்கத்தக்கதாக, சோதனையோடுகூட அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார்." ( 1 கொரிந்தியர் 10 : 13 ) என்று கூறுகின்றார். 

யோனாவுக்கு மூன்று நாள் தண்டனை கொடுத்துத் தப்புவித்தார். நமக்கு ஒருவேளை அது மூன்று மாதங்களாகவோ மூன்று ஆண்டுகளாகவோ இருக்கலாம். ஆனால் யோனா அந்த மூன்று நாட்களிலும் மீனின் வயிற்றிலிருந்து தேவனை நோக்கி ஜெபித்துக்கொண்டிருந்தார். "அந்த மீனின் வயிற்றிலிருந்து, யோனா தன் தேவனாகிய கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணி.."( யோனா 2 : 1 ) என்று நாம் வாசிக்கின்றோம். 

மூன்று நாட்களுக்குப்பின் "கர்த்தர் மீனுக்குக் கட்டளையிட்டார், அது யோனாவைக் கரையிலே கக்கிவிட்டது." ( யோனா 2 : 10 ) இதுபோல நம்மை விழுங்கும் உபத்திரவங்களும் கர்த்தர் நியமித்த நாட்களுக்குப்பின் நம்மை விட்டு அகலும். ஆம் அன்பானவர்களே,  யோனாவைப்போல நாமும் வாழவேண்டியது அவசியம். இதனையே அப்போஸ்தலரான பவுல், "நம்பிக்கையிலே சந்தோஷமாயிருங்கள்; உபத்திரவத்திலே பொறுமையாயிருங்கள்; ஜெபத்திலே உறுதியாய்த் தரித்திருங்கள்." ( ரோமர் 12 : 12 ) என்று எழுதுகின்றார். 

யோனாவை விழுங்கிய பெரிய மீனைப்போல நம்மைப் பிரச்சனைகளும் துன்பங்களும் விழுங்கினாலும் அதனுள்ளிருந்து நம்பிக்கையோடு பொறுமையாக ஜெபித்தில் உறுதியாகத் தரித்திருப்போம். கர்த்தர் மீனுக்குக் கட்டளையிட்டாதுபோல பிரச்சனைகளுக்கும் கட்டளைக்கொடுப்பார். யோனாவைக் கரையிலே கக்கிவிட்டதுபோல நம்மையும் அது கக்கிவிடும்; அகன்றுவிடும்.

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்    

No comments: