DAILY MEDITATION ON WHATSAPP

ஆதவன் தினசரி வேதாகமத் தியானத்தை வாட்சப் இல் பெறுவதற்கு 96889 33712 அல்லது 76390 22747 எண்களில் தொடர்பு கொள்ளவும் / To get daily Scripture Meditation on WhatsApp kindly contact 9688933712 or 7639022747

Monday, October 21, 2024

ஆவியும் மாம்சமும்

 'ஆதவன்' அக்டோபர் 28, 2024. 💚திங்கள்கிழமை       வேதாகமத் தியானம் - எண்:- 1,359


"நீங்கள் மாம்சத்துக்குரியவர்களாயிருக்கிறபடியால், இப்பொழுதும் உங்களுக்குப் பெலனில்லை. பொறாமையும் வாக்குவாதமும் பேதகங்களும் உங்களுக்குள் இருக்கிறபடியால், நீங்கள் மாம்சத்திற்குரியவர்களாயிருந்து மனுஷமார்க்கமாய் நடக்கிறீர்களல்லவா? ( 1 கொரிந்தியர் 3 : 2, 3 )

மெய்யான ஆவிக்குரிய வழியும் வாழ்க்கையும் தேவ சுபாவத்தோடு நம்மை வாழச்செய்வது. அது இல்லாத வாழ்க்கை மாம்சத்துக்குரியது. அதாவது, அது சாதாரண மனித சுபாவம் கொண்டது.  போட்டிகள், பொறாமை, வாக்குவாதம், மார்க்க பேதங்கள் இவை தேவனுக்குக் கிடையாது. நாம் ஆவிக்குரியவர்களாக இருப்போமானால் தேவன் வெறுக்கும்; தேவனிடம் இல்லாத இந்தக் குணங்கள் நம்மிடமும் இருக்காது. 

ஆனால் இன்று தங்களை ஆவிக்குரிய சபை என்று கூறிக்கொள்ளும் சபைகளுக்குள்ளே ஊழியர்களுக்குள் போட்டியும் பொறாமையும் வஞ்சகமும் நிறைந்துள்ளதை நாம் காண முடிகின்றது. மூன்றாம்தர அரசியல்வாதிகளைவிட அவலட்சணமான குணங்கள் இவர்களுக்குள் இருப்பதால் சாதாரண விசுவாசிகள் இத்தகைய சபைகளை வெறுக்கின்றனர்.   

அப்போஸ்தலரான பவுல் கூறுகின்றார் இப்படி இருக்கக் காரணம் ஆவிக்குரிய சபைகள் என்றுகூறிக்கொண்டாலும் உண்மையில் இத்தகைய சபைகள் ஆவிக்குரிய சபைகளல்ல; மாறாக மாம்சத்துக்குரிய சபைகள்; ஆவிக்குரிய பெலனில்லாத சபைகள்.  சபைகள் மட்டுமல்ல, விசுவாசிகளுக்கும் இது பொருந்தும். காரணம், சபை என்பது மீட்கப்பட்ட விசுவாசிகளின் கூட்டம்; அது கிறிஸ்துவின் உடல்.   

பவுல் நிறுவிய கொரிந்து சபைக்குள்  இருந்த விசுவாசிகளிடம் இத்தகைய குணங்கள்  இருப்பதை அவர் சுட்டிக்காட்டுகின்றார்.  ஆம் அன்பானவர்களே, இது இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமுன் நடந்த கொரிந்து சபையில் மட்டுமல்ல; இன்றும் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றது. இத்தகைய குணங்களைத் தங்களுக்குள் கொண்டுள்ள சபைகளும் விசுவாசிகளும் ஆவியில் பெலனில்லாதவை.  மனுஷமார்க்கமாய் நடக்கின்றவை.  

இன்று நாம் பார்க்கும் அரசியல் கட்சிகளுக்குள் பதவிகளுக்காக் சண்டைகளும், போட்டிகளும், பொறாமைகளும் கொலைகளும் நடப்பதுபோலவே கிறிஸ்தவ சபைகளுக்குள்ளும் நடைபெறும்போது மற்றவர்கள் நம்மை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? சபைகள் மாறும்போது மட்டுமே நாம் கிறிஸ்துவின் சாட்சிகள் என்று நம்மைப் பிறர் ஏற்றுக்கொள்வார்கள்.  

சபைகள் மாறுவது என்பது விசுவாசிகளிடம் மாற்றம் வரும்போதுதான் சாத்தியமாகும். எனவே  நம்மிடமிருக்கும் மாம்சீக பலவீனங்களை அகற்றிட முயற்சியெடுப்போம். அதற்காகத்  தேவனிடம் ஊக்கமாய் ஜெபிப்போம். ஆவியானவர் நம்முள் செயல்படும்போது மட்டுமே நமது உள்ளான குணங்கள் மாறி நாம் ஆவிக்குரிய பெலனடைய முடியும். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  

No comments: