இயேசு கிறிஸ்து முதலில் நம்மை அன்புகூர்ந்ததினால் நாம் அவரை அன்பு செய்கின்றோம்.

Wednesday, October 16, 2024

தேவனுடைய ராஜ்யம்

 'ஆதவன்' அக்டோபர் 18, 2024. 💚வெள்ளிக்கிழமை   வேதாகமத் தியானம் - எண்:- 1,349


"தேவனுடைய ராஜ்யம் பேச்சிலே அல்ல, பெலத்திலே உண்டாயிருக்கிறது." ( 1 கொரிந்தியர் 4 : 20 )

தேவனுடைய ராஜ்ஜியம் குறித்து கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பல இடங்களில் பேசுவதை நாம் அறிவோம். அப்போஸ்தலரான பவுல் அடிகளும் இதுபற்றி கூறும்போது, "தேவனுடைய ராஜ்யம் புசிப்பும் குடிப்புமல்ல, அது நீதியும் சமாதானமும் பரிசுத்த ஆவியினாலுண்டாகும் சந்தோஷமுமாயிருக்கிறது." ( ரோமர் 14 : 17 ) என்று கூறுகின்றார். இந்த தேவனுடைய ராஜ்ஜியம் பேச்சிலே அல்ல, மாறாக பெலத்தில் இருக்கின்றது என்று இன்றைய தியான வசனத்தில்  வாசிக்கின்றோம்.

அதாவது, தேவனுடைய ராஜ்ஜியம் வெறுமனே பேசிக்கொண்டிருப்பதினாலல்ல, பிரசங்கங்களில் அல்ல, உபவாச ஜெபங்களில் அல்ல, மாறாக அது பரிசுத்த ஆவியின் பலத்தில் இருக்கின்றது. ஆம், பவுல் அப்போஸ்தலர் கூறும் நீதி, சமாதானம், பரிசுத்த ஆவியினால் உண்டாகும் சந்தோஷம் போன்றவை நம்மால் உருவாக்கக் கூடியவையல்ல, மாறாக பரிசுத்த ஆவியினால் உருவாகக்கூடியவை. 

இந்தத் தேவனுடைய ராஜ்ஜியத்தை நாம் நமக்குள் அனுபவிக்கவேண்டுமானால் முதலில் நமக்குள் இருக்கும் சில வேண்டாத காரியங்களை நாம் நம்மைவிட்டு விலக்கவேண்டும்  அவைகளை அப்போஸ்தலரான பவுல் பின்வருமாறு கூறுகின்றார்:-"விக்கிரகாராதனை, பில்லிசூனியம், பகைகள், விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், சண்டைகள், பிரிவினைகள், மார்க்கபேதங்கள், பொறாமைகள், கொலைகள், வெறிகள், களியாட்டுகள் முதலானவைகளே; இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்கள் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று முன்னே நான் சொன்னதுபோல இப்பொழுதும் உங்களுக்குச் சொல்லுகிறேன்." ( கலாத்தியர் 5 : 20, 21 ) என்று கூறுகின்றார்.

இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்கள் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று பவுல் அப்போஸ்தலர் கூறுவதால் இவைகளை விட்டு நாம் நீங்கவேண்டும் என்று பொருள். மேற்படி காரியங்கள் நம்மிடமிருந்து நீங்கவேண்டுமானால் நமக்கு ஆவியானவரின் பலம் தேவையாய் இருக்கின்றது. இதனையே, "தேவனுடைய ராஜ்யம் பேச்சிலே அல்ல, பெலத்திலே உண்டாயிருக்கிறது." என்று கூறப்பட்டுள்ளது. எனவே நாம் தேவனுடைய ராஜ்யத்துக்குரியவர்களாக வாழ பரிசுத்த ஆவியானவரை நமதுவாழ்வில் பெற்றுக்கொள்ளவேண்டியது அவசியமாய் இருக்கின்றது. 

தேவனுடைய ராஜ்யத்துக்குரியவர்களாக நாம் வாழும்போது ஆவியின் கனிகள் (கலாத்தியர் 5:22, 23) நம்மிடம் இருக்கும். இந்தக் கனிகள் நம்மிடம் இருக்குமானால் நாம் தேவனுடைய ராஜ்யத்துக்குட்பட்டவர்கள். எனவே நாம் வெறுமனே பரலோக ராஜ்ஜியம், தேவனுடைய ராஜ்ஜியம் என்று பேசிக்கொண்டிருக்காமல் ஆவியினால் பலமடைய முயற்சி செய்வோம். மேலான இந்தக் காரியங்களுக்காக வேண்டுதல் செய்வோம். 

"தேவனுடைய ராஜ்யம் பேச்சிலே அல்ல, பெலத்திலே உண்டாயிருக்கிறது." என்று இன்றைய தியான வசனம் கூறுவதற்கிணங்க ஆவியானவரின் பெலனடைந்து மற்றவர்களுக்கு கிறிஸ்துவை நமது அன்றாட வாழ்க்கையால் அறிவிக்கிறவர்களாக வாழ்வோம். 

"முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும்." ( மத்தேயு 6 : 33 )

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  

No comments: