இயேசு கிறிஸ்து முதலில் நம்மை அன்புகூர்ந்ததினால் நாம் அவரை அன்பு செய்கின்றோம்.

Thursday, October 03, 2024

நன்மையும் தீமையும் உன்னதமானவரிடமிருந்தே

 'ஆதவன்' அக்டோபர் 06, 2024. ஞாயிற்றுக்கிழமை       வேதாகமத் தியானம் - எண்:- 1,336


"ஐசுவரியமும் கனமும் உம்மாலே வருகிறது; தேவரீர் எல்லாவற்றையும் ஆளுகிறவர்; உம்முடைய கரத்திலே சத்துவமும் வல்லமையும் உண்டு; எவரையும் மேன்மைப்படுத்தவும் பலப்படுத்தவும் உம்முடைய கரத்தினால் ஆகும்." ( 1 நாளாகமம் 29 : 12 )

இந்த உலகத்தில் நாம் அனுபவிக்கும் அனைத்து நன்மைகளும் தீமைகளும் தேவனுடைய கரத்திலிருந்தே வருகின்றன. "ஆண்டவர் கட்டளையிடாதிருக்கக் காரியம் சம்பவிக்கும் என்று சொல்லுகிறவன் யார்? உன்னதமானவருடைய வாயிலிருந்து தீமையும் நன்மையும் புறப்படுகிறதில்லையோ?" ( புலம்பல் 3 : 37, 38 ) என்று வாசிக்கின்றோம். இன்று நாம் ஒருவேளை தாழ்மையான நிலையில் இருக்கலாம்; ஆனால் எல்லாவற்றையும் ஆளுகிறவரது கரத்திலே சத்துவமும் வல்லமையும் உண்டு; எவரையும் மேன்மைப்படுத்தவும் பலப்படுத்தவும் அவரது கரத்தினால் ஆகும்.

அதுபோலவே ஒருவர் மிக உயர்ந்த நிலையில் இருக்கலாம் அவரை ஒரே நொடியில் தாழ்த்திட தேவனால் கூடும். எனவே நாம் எந்த நிலையில் இருந்தாலும்  அவருக்கு அஞ்சி அடங்கி வாழவேண்டியது அவசியம்.  இதனை அன்னை மரியாள் உணர்ந்திருந்தால் கூறுகின்றார், "தம்முடைய புயத்தினாலே பராக்கிரமஞ்செய்தார்; இருதய சிந்தையில் அகந்தையுள்ளவர்களைச் சிதறடித்தார். பலவான்களை ஆசனங்களிலிருந்து தள்ளி, தாழ்மையானவர்களை உயர்த்தினார். பசியுள்ளவர்களை நன்மைகளினால் நிரப்பி, ஐசுவரியமுள்ளவர்களை வெறுமையாய் அனுப்பிவிட்டார்." ( லுூக்கா 1 : 51 - 53 ) என்று.

ஆனால் பெரிய செல்வ நிலையில் இருக்கும் பலர் இந்தச் சத்தியத்தை உணர்வதில்லை. தாங்கள் எப்போதுமே இப்போது இருப்பதுபோல சுகஜீவிகளாக வாழ்வோம் என்று எண்ணிக்கொள்கின்றனர். அதனால் மற்றவர்களை அற்பமாக எண்ணி வாழ்கின்றனர்.  எனவே தங்களது வாழ்வில் சிறிய சறுக்கல் வந்துவிட்டாலும் அதனைத் தாங்கிக்கொள்ள முடியாமல் தற்கொலை எனும் விபரீத முடிவைத் தேடிக்கொள்கின்றனர். 

பலர்  உழைப்பே உயர்வு என்று கூறி உழைப்புக்கு முன்னுரிமை கொடுக்கின்றனர்; தேவனைப் புறக்கணிக்கின்றனர். ஆனால் இந்த உலகத்தில் நாம் பார்க்கின்றோம் கடுமையாக உழைக்கும் எல்லோரும் முன்னேறிவிடுவதில்லை. கடும் வெயிலிலும் மழையிலும் உழைக்கும் பலர் உழைத்துக்கொண்டே தான் இருக்கின்றனர்.  ஆனால் அப்படி உழைப்பதற்கு உடலில் ஆரோக்கியம் வேண்டும். அதனைத் தேவன்தான் கொடுக்க முடியும்.  மட்டுமல்ல இப்படிக் கடினமாக உழைக்காத பலர் எளிதில் முன்னேறிவிடுகின்றனர். 

ஆம் அன்பானவர்களே, ஐசுவரியமும் கனமும் தேவனாயிலேயே வருகின்றது. அவரே  எல்லாவற்றையும் ஆளுகிறவர்; அவரது கரத்திலே சத்துவமும் வல்லமையும் உண்டு; எவரையும் மேன்மைப்படுத்தவும் சிறுமைப்படுத்தவும் அவரது கரத்தினால் ஆகும். எனவே நாம் நம்மை அவரது கிருபைக்கு ஒப்புக்கொடுத்து மனத்தாழ்மையோடு  வாழ்வோம்.  அவரது வல்லமை மிக்க கரமே ஏற்ற காலத்தில் நமக்கு வேண்டிய உயர்வினைக் கொண்டுவரும். 


தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்    

No comments: