DAILY MEDITATION ON WHATSAPP

ஆதவன் தினசரி வேதாகமத் தியானத்தை வாட்சப் இல் பெறுவதற்கு 96889 33712 அல்லது 76390 22747 எண்களில் தொடர்பு கொள்ளவும் / To get daily Scripture Meditation on WhatsApp kindly contact 9688933712 or 7639022747

Monday, October 21, 2024

தேவ சித்தம்.

 'ஆதவன்' 💚அக்டோபர் 26, 2024. 💚சனிக்கிழமை     வேதாகமத் தியானம் - எண்:- 1,357

"நீங்கள் பரிசுத்தமுள்ளவர்களாக வேண்டுமென்பதே தேவனுடைய சித்தமாயிருக்கிறது." ( 1 தெசலோனிக்கேயர் 4 : 3 ) "எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ்செய்யுங்கள்; அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவுக்குள் உங்களைக்குறித்து தேவனுடைய சித்தமாயிருக்கிறது." ( 1 தெசலோனிக்கேயர் 5 : 18 )

இன்றைய தியான வசனங்களில் இரண்டு தேவ சித்தங்களைக்குறித்து நாம் வாசிக்கின்றோம். நம் ஒவ்வொருவரையும் குறித்தத் தனிப்பட்ட  தேவ சித்தமும் அனைவருக்குமான பொதுவான தேவ சித்தமும் உண்டு. இன்றைய தியான வசனத்தில் கூறப்பட்டுள்ள இரு தேவசித்தங்களும்  அனைவருக்கும் பொதுவானவை. 

நாம் அனைவரும் பரிசுத்தமாகவேண்டும் என்பது தேவனது சித்தம்.  காரணம், பரிசுத்தமில்லாமல் நாம் தேவனை யாரும் தரிசிக்கமுடியாது என்று வேதம் கூறுகின்றது. அதுபோல, எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரம் செய்வதே கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மைக் குறித்த  தேவனுடைய சித்தமாகும் என்றும் கூறப்பட்டுள்ளது. 

இந்த இரண்டு தேவ சித்தங்களும் ஒன்றுக்கொன்று இணைந்தவை. எப்படியெனில், நாம் பரிசுத்தமாகவேண்டுமானால் பாவங்கள், சோதனைகள் இவற்றை மேற்கொள்ளவேண்டியது அவசியம். எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ்செய்யுங்கள் என்றுகூறியுள்ளபடி நாம் இப்படி ஸ்தோத்திரம் செய்யும்போது பாவத்துக்கு விலகி, பரிசுத்தத்துக்கு நேராகச் செல்ல முடியும்.   

மேலும், தேவனது கிருபை இல்லாமல் நம்மால் வெற்றிகரமான வாழ்க்கை வாழ முடியாது. அந்தத் தேவ கிருபை ஸ்தோத்திரம் செய்வதால் பெருகும். "தேவனுடைய மகிமை விளங்குவதற்கேதுவாகக் கிருபையானது அநேகருடைய ஸ்தோத்திரத்தினாலே பெருகும்படிக்கு, இவையெல்லாம் உங்கள்நிமித்தம் உண்டாகியிருக்கிறது." ( 2 கொரிந்தியர் 4 : 15 ) என்று கூறப்பட்டுள்ளது. 

ஆம் அன்பானவர்களே, ஆவிக்குரிய வாழ்க்கை வெறுமனே ஜெபிப்பதும் ஆராதனைகளில் கலந்து கொள்வதும் வேதாகமத்தை வாசிப்பதும் மட்டுமல்ல, நமது பரிசுத்தத்தைக் காத்துக்கொள்வது. அதுவே நம்மைக்குறித்த முதன்மையான தேவ சித்தம். எனவே நாம் பரிசுத்த வாழ்க்கைக்கு முன்னுரிமை கொடுக்கவேண்டியது அவசியம். தேவனது ஐக்கியம் மட்டுமே நம்மை பரிசுத்தமாக்க முடியும். 

எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரம் செய்யும்போது நாம் தேவ  ஐக்கியத்தில் வளர முடியும். தேவ ஐக்கியத்தில் வளர வளர நம்மில் பரிசுத்தம் அதிகரிக்கும். எனவே நாம் ஆவிக்குரிய வாழ்க்கையில் வளர இந்த இரண்டு தேவ சித்தத்தையும் நிறைவேற்றுபவர்களாக வாழ்வோம்.  

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்           

No comments: