Sunday, October 27, 2024

நம்மை நம்பப்பண்ணின வசனம்

 'ஆதவன்' 💚நவம்பர் 02, 2024. 💚சனிக்கிழமை            வேதாகமத் தியானம் - எண்:- 1,364

"நீர் என்னை நம்பப்பண்ணின வசனத்தை உமது அடியேனுக்காக நினைத்தருளும். அதுவே என் சிறுமையில் எனக்கு ஆறுதல், உம்முடைய வாக்கு என்னை உயிர்ப்பித்தது." ( சங்கீதம் 119 : 49, 50 )

தேவனுக்குள் விசுவாசம்கொண்டு ஆவிக்குரிய வாழ்க்கை வாழும்போது தேவன் நமக்குச் சில வார்த்தைகளைத்  தருவார். அவை அந்தச் சூழ்நிலையில் நாம் நம்பமுடியாதவையாக இருந்தாலும் அவர் அவற்றை நிச்சயமாக நமது வாழ்வில் நிறைவேற்றுவார். ஆனால் தேவன் நமக்கென்று ஒரு வாக்குறுதியைத் தரும்போது பொறுமையாகக் காத்திருக்கவேண்டியது அவசியம். காரணம் தேவன் கூறிய உடனேயே அதனை நிறைவேற்றுவதில்லை. ஆனால் அவற்றை நாம் நம்பவேண்டும். 

ஆபிரகாமுக்குத்தேவன் அளித்த வாக்குறுதி நிறைவேற அவர் 25 ஆண்டுகள் காத்திருக்கவேண்டியிருந்தது. "அநேக ஜாதிகளுக்கு உன்னைத் தகப்பனாக ஏற்படுத்தினேன்" ( ரோமர் 4 : 17 ) என்று கூறினாலும் சூழ்நிலை நம்பமுடியாத ஒன்றாக இருந்தது. ஆனால் ஆபிரகாம் தேவனை நம்பினார். "அவன் விசுவாசத்திலே பலவீனமாயிருக்கவில்லை; அவன் ஏறக்குறைய நூறு வயதுள்ளவனாயிருக்கும்போது, தன் சரீரம் செத்துப்போனதையும், சாராளுடைய கர்ப்பம் செத்துப்போனதையும் எண்ணாதிருந்தான்." ( ரோமர் 4 : 19 ) என்று வாசிக்கின்றோம். 

மட்டுமல்ல, இன்றைய தியான வசனம் கூறுவதுபோல, "நீர் என்னை நம்பப்பண்ணின வசனத்தை உமது அடியேனுக்காக நினைத்தருளும்." என்று நாம் தேவனிடம் விண்ணப்பம் செய்யவேண்டியதும் அவசியம். வேதனையோடு நாம் ஜெபிக்கும்போது "அதுவே என் சிறுமையில் எனக்கு ஆறுதல், உம்முடைய வாக்கு என்னை உயிர்ப்பித்தது." என்று இன்றைய தியான வசனம் கூறுவதுபோல நமது இக்கட்டு, சிறுமையான காலங்களில் அந்த வாக்குறுதிகளே நமக்கு ஆறுதலாகவும் நம்மை உயிர்ப்பிப்பதாகவும் இருக்கும்.  

உலக ஆசீர்வாதத்துக்குரிய வாக்குத்தத்தங்கள் மட்டுமல்ல, மேலான ஆவிக்குரிய வாக்குத்தத்தங்களும் நமக்கு உண்டு. இதனையே அப்போஸ்தலரான பேதுரு, "இச்சையினால் உலகத்திலுண்டான கேட்டுக்குத் தப்பி, திவ்விய சுபாவத்துக்குப் பங்குள்ளவர்களாகும்பொருட்டு, மகா மேன்மையும் அருமையுமான வாக்குத்தத்தங்களும் அவைகளினாலே நமக்கு அளிக்கப்பட்டிருக்கிறது." ( 2 பேதுரு 1 : 4 ) என்று கூறுகின்றார். 

கிறிஸ்துவைப்போல நாம் திவ்ய சுபாவம் உள்ளவர்களாக வேண்டும் எனும் வாக்குத்தத்தத்தை நாம் உறுதியாக நம்பி ஏற்றுக்கொள்ளும்போது பேதுரு கூறுவதுபோல நாம் இச்சையினால் உலகத்திலுண்டான கேட்டுக்குத் தப்பி வாழமுடியும்;  பரிசுத்தமாக முடியும். நீர் என்னை நம்பப்பண்ணின வசனத்தை உமது அடியேனுக்காக நினைத்தருளும் என்று ஜெபிப்போம். அதுவே நமது சிறுமையில் (உலக சிறுமையோ ஆவிக்குரிய சிறுமையோ) நமக்கு ஆறுதலாகவும் நம்மை உயிர்ப்பிப்பதாகவும் இருக்கும். 

தேவ வாக்குறுதிகளை உறுதியாக நம்புவோம்; ஏற்றுக்கொள்வோம்.

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்         

No comments:

சமீபத்தியக் கட்டுரைகள் (Latest Articles)

🦋 Meditation verse - 1 கொரிந்தியர் 10 : 4, 5 / 1 Corinthians 10:4, 5

  " ஆதவன் " தியானம் - 1993  ஜூலை 23 வியாழன் 2026     "எல்லாரும் ஒரே ஞானபானத்தைக் குடித்தார்கள். எப்படியெனில், அவர்களோடேகூடச...