இயேசு கிறிஸ்து முதலில் நம்மை அன்புகூர்ந்ததினால் நாம் அவரை அன்பு செய்கின்றோம்.

Wednesday, October 16, 2024

நித்திய வழியிலே என்னை நடத்தும்

 'ஆதவன்' 💚அக்டோபர் 17, 2024. வியாழக்கிழமை   வேதாகமத் தியானம் - எண்:- 1,347


"தேவனே, என்னை ஆராய்ந்து, என் இருதயத்தை அறிந்துகொள்ளும்; என்னைச் சோதித்து, என் சிந்தனைகளை அறிந்துகொள்ளும்." ( சங்கீதம் 139 : 23 )

விஞ்ஞான அறிவு வளர்ந்துவிட்ட இந்தக்காலத்தில் பலர் கடவுள் உண்டுமா இல்லையா என்று ஆராய்ச்சியில் ஈடுபடுகின்றார்கள்.  உலகின் பெரும்பாலான விஞ்ஞானிகள் கடவுள் உண்டு என்று நம்புகின்றார்கள். ஆனால் அவர்களால் உருவாக்கப்பட்டப் பொருட்களை பயன்படுத்தும் சாதாரண அறிவே உள்ள மனிதர்கள், "இந்த நவீன காலத்தில் கடவுள் கத்தரிக்காய் என்று போதித்துக்கொண்டு திரிகிறீர்களே" என்கின்றனர். 

ஆனால் இன்றைய தியான வசனத்தில் தாவீது இதற்கு மாறாக, "தேவனே, என்னை ஆராய்ந்து, என் இருதயத்தை அறிந்துகொள்ளும்; என்னைச் சோதித்து, என் சிந்தனைகளை அறிந்துகொள்ளும்." என்று தன்னை தேவனுக்கு ஒப்புக்கொடுக்கின்றார். இந்த வசனத்தைத் தொடர்ந்து அவர் கூறுகின்றார், "வேதனை உண்டாக்கும் வழி என்னிடத்தில் உண்டோ என்று பார்த்து, நித்திய வழியிலே என்னை நடத்தும்." ( சங்கீதம் 139 : 24 )

சில வேளைகளில் நமது வாழ்வில் வேதனைகள், துன்பங்கள் ஏற்பட நமது வாழ்க்கையில் நாம் செய்யும் தவறான காரியங்கள் காரணமாக அமைந்துவிடக்கூடும். இதனைத் தாவீது அறிந்திருந்தார். எனவேதான், அப்படித் தான் தவறிவிடக்கூடாது என்று தேவனுக்குப் பயந்து  வேதனை உண்டாக்கும் வழி என்னிடத்தில் உண்டோ என்று பார்த்து, நித்திய வழியிலே என்னை நடத்தும் என்று மன்றாடுகின்றார். 

தாவீதின் இந்த ஜெப மன்றாட்டு நாம் ஒவ்வொருவரும் நமது வாழ்வில் செய்யவேண்டிய ஒரு மன்றாட்டாகும். இன்று உலக ஆசீர்வாதங்களுக்காக மட்டுமே மக்கள் தேவனை நோக்கிப் பார்க்கின்றனர். பெரும்பாலான மக்கள் தங்கள் ஆத்துமாவைக்குறித்தோ இனி வரப்போகும் நியாயத் தீர்ப்பைக்குறித்தோ எண்ணுவதில்லை; தங்கள் வழிகளைத் திருத்த முயல்வதுமில்லை. 

தேவனுக்கு ஊழியம் செய்கிறேன் என்று கூறிக்கொள்ளும் பலர் எப்படி அடுத்தவர்களை வஞ்சித்து பணம் பறிக்கலாம் என்று எண்ணுகின்றனரேத் தவிர தாவீதைப்போல இப்படி ஜெபிப்பதில்லை. மக்களுக்கு அப்படி ஜெபிக்கக் கற்றுக்கொடுப்பதுமில்லை. அப்படி ஜெபிப்பார்களென்றால் தேவன்  நித்திய வழியிலே அவர்களை நடத்தியிருப்பார்; அவர்களும் விசுவாசிகளை நேர்வழியில் நடத்தியிருப்பார்கள். 

ஆம் அன்பானவர்களே, நாம் மட்டுமல்ல நமது குழந்தைகளுக்கும் நாம் இப்படி ஜெபிக்கக் கற்றுக்கொடுக்கவேண்டும். மேலான இத்தகைய ஜெபத்தைத் தேவன் விரும்புகின்றார். ஆட்டு மந்தையை மேய்தத் தாவீதை தேவன் அரசனாக உயர்த்த அவரது இந்த மன நிலைதான் காரணமாக இருந்தது. அவர் தவறும் பாவமும் செய்திருக்கலாம் ஆனாலும் தாவீதை "எனது இருதயத்துக்கு ஏற்றவனாகக் கண்டேன்" என்றார் தேவன். 

"தம்முடைய தாசனாகிய தாவீதைத் தெரிந்துகொண்டு, ஆட்டுத்தொழுவங்களிலிருந்து அவனை எடுத்தார். கறவலாடுகளின் பின்னாகத் திரிந்த அவனை, தம்முடைய ஜனமாகிய யாக்கோபையும் தம்முடைய சுதந்தரமாகிய இஸ்ரவேலையும் மேய்ப்பதற்காக, அழைத்துக்கொண்டுவந்தார்." ( சங்கீதம் 78 : 70,71 ) காரணம் தாவீது தனது வழிகளை தேவனுக்கு ஒப்புக்கொடுத்து வாழ்ந்தார். பாவம் செய்தாலும் உணர்வடைந்து தேவனிடம் மன்னிப்புக் கேட்டார்.

"தேவனே, என்னை ஆராய்ந்து, என் இருதயத்தை அறிந்துகொள்ளும்; என்னைச் சோதித்து, என் சிந்தனைகளை அறிந்துகொள்ளும்." என்று நாமும் வேண்டுவோம். அப்போது வேதனை உண்டாக்கும் வழி நம்மிடம் இருந்தாலும் தேவன் நம்மை உணர்த்தி, திருத்தி  நித்திய வழியிலே நம்மை நடத்துவார். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  

No comments: