DAILY MEDITATION ON WHATSAPP

ஆதவன் தினசரி வேதாகமத் தியானத்தை வாட்சப் இல் பெறுவதற்கு 96889 33712 அல்லது 76390 22747 எண்களில் தொடர்பு கொள்ளவும் / To get daily Scripture Meditation on WhatsApp kindly contact 9688933712 or 7639022747

Wednesday, October 30, 2024

யோவான் 3:8

 'ஆதவன்' 💚நவம்பர் 01, 2024. 💚வெள்ளிக்கிழமை   வேதாகமத் தியானம் - எண்:- 1,363


"காற்றானது தனக்கு இஷ்டமான இடத்திலே வீசுகிறது, அதன் சத்தத்தைக் கேட்கிறாய், ஆகிலும் அது இன்ன இடத்திலிருந்து வருகிறதென்றும், இன்ன இடத்துக்குப் போகிறதென்றும் உனக்குத் தெரியாது; ஆவியினால் பிறந்தவனெவனோ அவனும் அப்படியே இருக்கிறான்." (யோவான் 3:8)
ஆவிக்குரிய அனுபவத்துடன் ஒருவர் வாழ்வதை காற்று வீசுவதற்கு ஒப்பிட்டு இன்றைய தியான வசனத்தில் இயேசு கிறிஸ்து பேசுகின்றார்.

வெளிப்பார்வைக்கு மற்ற மனிதர்களைப்போல இருந்தாலும் பரிசுத்த ஆவியினால் மறுபடி பிறந்தவர்களது எண்ணங்களும் செயல்பாடுகளும் வித்தியாசமானவையாக இருக்கும். காற்று எங்கிருந்து வருகின்றது எங்கே செல்கின்றது என்று நமக்குத் தெரியாததுபோல் அதனை நாம் அறிய முடியாது. இதனைத்தான் இயேசு கிறிஸ்து இன்றைய வசனத்தில் கூறுகின்றார்.

ஆம் அன்பானவர்களே, ஒன்றைப்பற்றி நாம் முழுவதுமாக அறியவேண்டுமானால் அதுவாக நாம் மாறினால் மட்டுமே முடியும். உதாரணமாக, சாலையோரம் படுத்திருக்கும் மாடு, அல்லது நம்மைநோக்கி வரும் நாய் அல்லது எந்த மிருகமாக இருந்தாலும் அந்த மிருகங்களின் எண்ணம் நமக்குத் தெரியாது. அவை உண்ணும் உணவுகள், அவற்றின் சுவை எதுவுமே நமக்குத் தெரியாது. மிருகங்களின் எண்ணங்களும் சுவைகளும் மனிதர்களிலிருந்து வித்தியாசமானவை. நாமும் அவைகளைப்போல ஒரு மிருகமாக மாறினால்தான் அதனை நம்மால் முற்றிலும் அறிய முடியும்.

இதனையே அப்போஸ்தலரான பவுல் அடிகளும், " மனுஷனிலுள்ள ஆவியேயன்றி மனுஷரில் எவன் மனுஷனுக்குரியவைகளை அறிவான்?அப்படிப்போல, தேவனுடைய ஆவியேயன்றி, ஒருவனும் தேவனுக்குரியவைகளை அறியமாட்டான்."( 1 கொரிந்தியர் 2 : 11 ) என்று கூறுகின்றார். "அன்றியும் மாம்சத்தின்படி நடக்கிறவர்கள் மாம்சத்துக்குரியவைகளைச் சிந்திக்கிறார்கள்; ஆவியின்படி நடக்கிறவர்கள் ஆவிக்குரியவைகளைச் சிந்திக்கிறார்கள்." ( ரோமர் 8 : 5 ) என்று கூறுகின்றார்.

எனவே நம்மைப் புரிந்துகொள்ளாத சிலர் ஆவிக்குரிய வாழ்க்கை வாழும் நமது செயல்பாடுகளைக் குறித்து குறைகூறலாம். ஆனால் நாம் கவலைப்படத் தேவையில்லை. தேவனுடைய ஆவியேயன்றி, ஒருவனும் தேவனுக்குரியவைகளை அறியமாட்டான் என்று கூறியுள்ளபடி தேவனுடைய ஆவிக்குரிய சித்தப்படி வாழ்பவனையும் உலக மனிதர்கள் அறிய முடியாது. சொந்த குடும்பத்தினர்கூட அறிய முடியாது.

சமாதானத்தையுண்டாக்க வந்த இயேசு கிறிஸ்து "பிரிவினை உண்டாகவே வந்தேன்" என்றும் கூறுவதை ஆவிக்குரிய அனுபவம் இல்லாதவர்கள் புரிந்துகொள்ள முடியாது. ஆம், "எப்படியெனில், மகனுக்கும் தகப்பனுக்கும், மகளுக்கும் தாய்க்கும், மருமகளுக்கும் மாமிக்கும் பிரிவினையுண்டாக்க வந்தேன். ஒரு மனுஷனுக்குச் சத்துருக்கள் அவன் வீட்டாரே." ( மத்தேயு 10 : 35, 36 ) என்றார் இயேசு கிறிஸ்து. இதற்குக் காரணம் ஒரே வீட்டினுள் இருந்தாலும் ஆவியில் பிறந்தவர்களும் மற்றவர்களும் மனதளவில் பல காரியங்களில் பிரிந்தவர்களாகவே இருப்பார்கள்.

ஆவிக்குரிய வழிகளை அறியவும் தேவ வழியில் நடக்கவும் உண்மையான மனதுடன் வீட்டிலுள்ளவர்கள் அனைவரும் தங்களை ஒப்புக்கொடுக்கும்போதுதான் இந்தப் பிரிவினை முடிவுக்குவரும். அதுவரை காற்று இன்ன இடத்திலிருந்து வருகிறதென்றும், இன்ன இடத்துக்குப் போகிறதென்றும் தெரியாததுபோல நமது நடவடிக்கைகளின் உண்மைத்தன்மை தேவனுக்கு மட்டுமே தெரிவதாக இருக்கும். இதன் அடிப்படையிலேயே தேவன் மனிதர்களை நியாயம் தீர்ப்பார்.

"நானும் என் வீட்டாருமோவென்றால், கர்த்தரையே சேவிப்போம்" ( யோசுவா 24 : 15 ) என்று உறுதியெடுத்து அனைவரும் ஆவிக்குரிய அனுபவத்தினுள் வரும்போது மட்டுமே வீட்டிலுள்ள இந்தப் பிரிவினை மறையும். அதுவரை காற்றினைப்போல நாமும் மற்றவர்களுக்குப் புரியாதவர்களும் புரிந்துகொள்ள முடியாதவர்களுமாகவே இருப்போம்.

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  

No comments: