DAILY MEDITATION ON WHATSAPP

ஆதவன் தினசரி வேதாகமத் தியானத்தை வாட்சப் இல் பெறுவதற்கு 96889 33712 அல்லது 76390 22747 எண்களில் தொடர்பு கொள்ளவும் / To get daily Scripture Meditation on WhatsApp kindly contact 9688933712 or 7639022747

Thursday, October 31, 2024

ஆவிக்குரிய அனுபவங்களை நம்பமாட்டார்கள்

 'ஆதவன்' 💚நவம்பர் 08, 2024. 💚வெள்ளிக்கிழமை  வேதாகமத் தியானம் - எண்:- 1,370


"அவர்கள் மோசேக்கும் தீர்க்கதரிசிகளுக்கும் செவிகொடாவிட்டால், மரித்தோரிலிருந்து ஒருவன் எழுந்துபோனாலும், நம்பமாட்டார்கள்". ( லுூக்கா 16 : 31 )

இன்றைய தியான வசனம் இயேசு கிறிஸ்து கூறிய கெட்ட குமாரன் (ஊதாரி மைந்தன்) உவமையில் வரும் செல்வந்தனை நோக்கி ஆபிரகாம்  கூறியதாக நாம் வாசிக்கின்றோம். 

இந்த உலகத்தில் பலர் எதனையும் கண்ணால் கண்டால்தான் நம்புவோம் என்று கூறிக்கொண்டிருக்கின்றனர். இவர்கள் தங்களைப் பகுத்தறிவுவாதிகள் என்றும்  கூறிக்கொள்கின்றனர். ஆனால் எல்லாவற்றையும் கண்டுதான் நம்புவோம் என்று வாழ்வோமானால் இறுதியில் உண்மையை அறியாதவர்களாகவே வாழ்ந்து மடியவேண்டியதிருக்கும்.  இது தவறு என்று இயேசு கிறிஸ்து கூறுகின்றார். 

கிறிஸ்தவர்களில் பலர் இப்படி இருக்கின்றனர். பல ஆவிக்குரிய சத்தியங்களை முழு மனதுடன் இவர்கள் ஏற்றுக்கொள்வதில்லை. இப்படி வேதம் கூறும் பல சத்தியங்களையும் நம்பமுடியாத அதிசயம் நடந்தால்தான் நம்புவோம் எனக் கூறுவது மரித்தவர்கள் எழுந்து இந்த உலகத்தில் வந்து கூறினால்தான் நம்புவோம் என்று கூறுவதுபோல்தான் உள்ளது.  இந்த உவமையில் வரும் செல்வந்தன் அப்படி வாழ்ந்தவன்தான். வேதம் கூறும் பல்வேறு காரியங்களை வாசித்து அறிந்தவன்தான். ஆனால் அவன் அவற்றை நம்பி ஏற்றுக்கொண்டு தன்னைத் திருத்திக்கொள்ளவில்லை.  

இன்றும் கிறிஸ்துவால் இப்படி மரித்து உயிரோடு எழுப்பப்பட்டவர்கள் பலர் சாட்சி கூறியுள்ளனர். தங்களது மரித்த அனுபவத்தைக் குறித்து எழுதியுள்ளனர். ஆனால் அந்தச் சாட்சியையும் எல்லோரும் ஏற்றுக்கொள்வதில்லை. அவை புத்தி பேதலித்தவர்களின் உளறல்களாகவே பலரால் பார்க்கப்படுகின்றன. ஆம் அன்பானவர்களே, வேதத்தில் கூறப்பட்டுள்ள சத்தியங்களை விசுவாசத்தால் ஏற்றுக்கொள்ளாமல் தேவையற்ற நிபந்தனைகளை விதிப்பவர்கள் இயேசு கிறிஸ்து இந்த உவமையில் கூறுவதுபோல  மரித்தோரிலிருந்து ஒருவன் எழுந்துபோனாலும், நம்பமாட்டார்கள்.

இதுபோலவே, ஆவிக்குரிய நாம் கூறும் பாவ மன்னிப்பு,  இரட்சிப்பு அனுபவங்களை கிறிஸ்தவர்களில் பலர்கூட  நம்புவதில்லை;  ஏற்றுக்கொள்வதில்லை. காரணம் பாரம்பரியம். தங்களது சபையில் கற்பிக்கப்பட்ட பாரம்பரிய முறைமைகள் இவற்றை நம்பாதபடி அவர்களைத் தடுக்கின்றன. அப்போஸ்தலரான பவுல்,  "நம்பிக்கையினாலே நாம் இரட்சிக்கப்பட்டிருக்கிறோம். காணப்படுகிறதை நம்புகிறது நம்பிக்கையல்ல; ஒருவன் தான் காண்கிறதை நம்பவேண்டுவதென்ன? நாம் காணாததை நம்பினோமாகில், அது வருகிறதற்குப் பொறுமையோடே காத்திருப்போம்." ( ரோமர் 8 : 24, 25 ) என்று கூறுகின்றார். 

இதுவரை உண்டிராத ஒரு புதுவித பழத்தை நாம் உண்ணும்போது  அதனை இதுவரைச்  சுவைத்திராத மற்றவர், "இந்தப்பழம் நல்லா இருக்காது......நாம் ஏற்கெனவே சாப்பிடும் பழங்கள் இதனைவிடச் சுவையாக இருக்கும்" என்று கூறுவாரானால் அவரைப்போன்ற அறிவிலி இருக்கமாட்டான். ஆவிக்குரிய அனுபவம் இல்லாதவர்கள் ஆவிக்குரிய மக்களைப்பார்த்து கூறுவது இதுபோலவே இருக்கின்றது. "எங்கள் சபையில் இல்லாததா உங்கள் அனுபவத்தில் இருக்கப்போகிறது?"  என்கின்றனர்.

ஆம், இயேசு கிறிஸ்து கூறுவதுபோல, "மோசேக்கும் தீர்க்கதரிசிகளுக்கும் செவிகொடாவிட்டால், மரித்தோரிலிருந்து ஒருவன் எழுந்துபோனாலும், நம்பமாட்டார்கள்" தேவன் எழுதிக்கொடுத்துள்ள வேதாகமத்தை முற்றிலும்  நம்பாதவர்கள் எந்த வித மேலான ஆவிக்குரிய அனுபவங்களை அதனை அனுபவித்துக் கொண்டிருப்பவர்கள் கூறினாலும் நம்பமாட்டார்கள். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்              

No comments: