DAILY MEDITATION ON WHATSAPP

ஆதவன் தினசரி வேதாகமத் தியானத்தை வாட்சப் இல் பெறுவதற்கு 96889 33712 அல்லது 76390 22747 எண்களில் தொடர்பு கொள்ளவும் / To get daily Scripture Meditation on WhatsApp kindly contact 9688933712 or 7639022747

Wednesday, October 23, 2024

ஏவாளை வஞ்சித்த பாம்பு

 'ஆதவன்' 💚அக்டோபர் 31, 2024. வியாழக்கிழமை     வேதாகமத் தியானம் - எண்:- 1,362

"ஆகிலும், சர்ப்பமானது தன்னுடைய தந்திரத்தினாலே ஏவாளை வஞ்சித்ததுபோல, உங்கள் மனதும் கிறிஸ்துவைப்பற்றிய உண்மையினின்று விலகும்படி கெடுக்கப்படுமோவென்று பயந்திருக்கிறேன்." ( 2 கொரிந்தியர் 11 : 3 )

ஆதியில் ஏதேனில் பாம்பானது தனது வஞ்சகமான பேச்சினால் ஏவாளை ஏமாற்றியது. அதாவது, தேவன் கூறிய வார்த்தைகள் பொய்யானவை என்றும், தான் கூறுவதுதான் மெய்  என்றும்  அவளை நம்பச் செய்தது. தோட்டத்தின் நடுவில் இருக்கும் நன்மை தீமை அறியும் மரத்தின் கனியை உண்ணும் நாளில் நீங்கள் சாகவே சாவீர்கள் என்று கர்த்தர் கூறியிருந்தார். 

ஆனால் வஞ்சக பாம்பாகிய சாத்தான், அவளை நோக்கி: "நீங்கள் சாகவே சாவதில்லை; நீங்கள் இதைப் புசிக்கும் நாளிலே உங்கள் கண்கள் திறக்கப்படும் என்றும், நீங்கள் நன்மை தீமை அறிந்து தேவர்களைப்போல் இருப்பீர்கள் என்றும் தேவன் அறிவார் என்றது." ( ஆதியாகமம் 3 : 4, 5 ) ஆனால், தேவனது வார்த்தைகளைவிட  பாம்பு கூறியதையே ஏவாள் நம்பினாள்; தேவனது வார்த்தைகளைப் புறக்கணித்தாள். 

அப்போஸ்தலரான பவுல் இந்தச் சம்பவத்தைக்  கிறிஸ்துவின் நற்செய்தி அறிவித்தலோடு ஒப்பிடுகின்றார். அன்று சாத்தான் பாம்பு உருவம்கொண்டு ஏவாளை வஞ்சித்தது. இன்று அதுபோல ஒருவர் வேத வசனங்களுக்கு  தவறான அளித்து அவற்றை உண்மை என விசுவாசிகளை நம்பச் செய்யும்போது மக்களை சாத்தான் போல வஞ்சிக்கிறார் என்று பொருள். "எப்படியெனில், உங்களிடத்தில் வருகிறவன் நாங்கள் பிரசங்கியாத வேறொரு இயேசுவைப் பிரசங்கித்தானானால், அல்லது நீங்கள் பெற்றிராத வேறொரு ஆவியையும், நீங்கள் ஏற்றுக்கொள்ளாத வேறொரு சுவிசேஷத்தையும் பெற்றீர்களானால்.......( 2 கொரிந்தியர் 11 : 4 ) என்று கூறுகின்றார். 

அதாவது, வேதம் குறிப்பிடும் கிறிஸ்துவைப் பிரசங்கியாமல், கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டால் உலக ஆசீர்வாதம் நிரம்பி வழியும் என்று மக்களை நம்பச் செய்வது   ஆதியில் ஏதேனில் சாத்தானாகிய பாம்பு பேசிய பேச்சைப்போலவே இருக்கும். இத்தகைய   தவறான நற்செய்தி அறிவிப்பால் "உங்கள் மனதும் கிறிஸ்துவைப்பற்றிய உண்மையினின்று விலகும்படி கெடுக்கப்படுமோ என்று பயந்திருக்கிறேன்" என்கிறார் அப்போஸ்தலரான பவுல். ஏனெனில், "உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன் என்றார்." ( யோவான் 16 : 33 ) இயேசு கிறிஸ்து. உபத்திரவத்தை சகித்து வெற்றிபெற்ற வாழ்க்கை வாழவே கிறிஸ்து நம்மை அழைத்துள்ளார்.

ஆனால், அப்போஸ்தலரான பவுல் காலத்திலேயே இத்தகைய தாறுமாறான உபதேசங்கள் இருந்திருக்கின்றன என்றால் இன்று எத்தனை அதிகமாக இருக்குமென்று எண்ணிப்பாருங்கள். பாம்பு வேஷமணிந்த சாத்தானின் வார்த்தைகளை ஆதாமும் ஏவாளும் விசுவாசித்ததுபோல இன்று பலரும் தவறான சுவிசேஷ அறிவிப்புகளைத்தேடி அதிகம் ஓடுகின்றார்கள்.  

எப்போதும் ஆசீர்வாதம் ஆசீர்வாதம் என்று உலக ஆசீர்வாதத்தை மட்டுமே  பிரசங்கிப்பது, கிறிஸ்துவின் இரத்தத்தால் உண்டாகும் பாவ மன்னிப்பு, இரட்சிப்பு, நித்திய  ஜீவன் இவைகளைக்குறித்து பேசாமலிருப்பது, வேதாகமத்தில் குறிப்பிடாதமுறைகளில் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக்கொள்ள மக்களைத் தூண்டுவது, மனம்திரும்புதல் / வாழ்க்கை மாற்றத்தைக் குறித்துப் முக்கியத்துவம்கொடுத்துப் பேசாமலிருப்பது  போன்றவை ஏதெனில் சாத்தான் விலக்கப்பட்ட கனியின் அழகையும் கவர்ச்சியையும் ஆதிப்பெற்றோருக்குக் காட்டியது போன்ற செயலே.    

சர்ப்பமானது தன்னுடைய தந்திரத்தினாலே ஏவாளை வஞ்சித்ததுபோல, நமது மனதையும்  கிறிஸ்துவைப்பற்றிய உண்மையினின்று விலகச் செய்திடாமல் காத்துக்கொள்வோம். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்             

No comments: