DAILY MEDITATION ON WHATSAPP

ஆதவன் தினசரி வேதாகமத் தியானத்தை வாட்சப் இல் பெறுவதற்கு 96889 33712 அல்லது 76390 22747 எண்களில் தொடர்பு கொள்ளவும் / To get daily Scripture Meditation on WhatsApp kindly contact 9688933712 or 7639022747

Saturday, October 26, 2024

எது ஆவிக்குரிய ஆராதனை?

தேவச் செய்தி - சகோ. எம். ஜியோ பிரகாஷ் 

விக்குரிய ஆராதனை என்றால் என்ன என்பதனைப் பலரும் சரியாகப் புரிந்து கொள்ளாததால் ஆவிக்குரிய சபைகள் என்று கூறப்படும் சபைகளுக்குச் செல்லும் பலர் தங்களை மட்டும்  ஆவிக்குரிய ஆராதனை செய்பவர்களாகவும் மற்றவர்கள் அனைவரும் தேவன் விரும்பாத ஆராதனை செய்வதாகவும்  எண்ணிக்கொள்கின்றனர். இன்று ஆவிக்குரிய சபைகள்  என்று கூறப்படும் பல சபைகளில் பரிசுத்த ஆவியோடு தொழுதுகொள்கிறோம் என்று கூறி அலறி ஆர்ப்பாட்டம் செய்வதை நாம் காணலாம். ஆனால் இவர்களில் பலரும் ஆராதனை முடிந்து வெளியுலக வாழ்க்கையில் தேவனை அறியாத மக்களைவிட அவலட்சணமான குணங்களுள்ளவர்களாக காணப்படுகின்றனர். 

ஆராதனை செய்த இவர்கள் மற்றவர்களைவிட நல்லவர்களாக அல்லவா இருக்கவேண்டும்? அப்படியானால் ஆலய ஆராதனையில் இவர்களைத் துள்ளிக் குதிக்கவைத்த ஆவி எது?  பரிசுத்த ஆவி, "பாவத்தைக்குறித்தும், நீதியைக்குறித்தும், நியாயத்தீர்ப்பைக் குறித்தும், உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார்."( யோவான் 16 : 8 ) என்றல்லவா கூறப்பட்டுள்ளது? "சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்" ( யோவான் 16 : 13 ) என்று கூறப்பட்டுள்ளதே? அப்படியானால் ஆராதனை முடிந்து வெளியே வந்தவுடன் மற்றவர்களுக்கு எதிராகச் செயல்படுவதும், உண்மையற்ற வாழ்க்கை வாழ்வதும் ஏன்? 

ஆனால் என்ன இருந்தாலும் கிறிஸ்தவம் ஆவிக்குரிய ஆராதனையையே வலியுறுத்துகின்றது என்பதே நிஜம். இயேசு கிறிஸ்து கூறினார், "தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ளவேண்டும்." ( யோவான் 4 : 24 ) சமாரியா பெண்ணிடம் பேசும்போது இயேசு கிறிஸ்து இந்த மாபெரும் சத்தியத்தை வெளிப்படுத்தினார். 

மேலும், யூதர்கள் எருசலேமிலுள்ள ஆலயத்திலே தான் தேவனைத் தொழுதுகொள்ளவேண்டுமென நம்பினர். அவர்கள் தேவனை ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் இருப்பவர் என்றே நம்பினர். மேலும் தேவனைத் தொழுதுகொள்ள சில முறைமைகளையும் வைத்திருந்தனர். அந்த நம்பிக்கையையும் முறைமைகளையும் கடைபிடிப்பதுதான் ஆவிக்குரிய ஆராதனை என்று எண்ணிக்கொண்டனர். 

குறிப்பிட்ட இடத்தில் குறிப்பிட்ட முறைமைகளின்படி மட்டுமே தேவனை ஆராதிக்கமுடியும் என்று யூதர்கள் நம்பினர். ஆனால் அந்தச் சமாரிய பெண்ணிடம் பேசும்போது இயேசு கிறிஸ்து, " ஸ்திரீயே, நான் சொல்லுகிறதை நம்பு. நீங்கள் இந்த மலையிலும் எருசலேமிலும் மாத்திரமல்ல, எங்கும் பிதாவைத் தொழுதுகொள்ளுங்காலம் வருகிறது." ( யோவான் 4 : 21 ) என்றார்.

அதாவது நாம் ஆவிக்குரிய ஆராதனை செய்யவேண்டும், மட்டுமல்ல அந்த ஆராதனையை நாம் எந்த இடத்திலும் செய்யலாம் என்று பொருள்.  இன்றும்கூட கிறிஸ்தவர்கள் ஆலயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து திருயாத்திரை செல்கின்றனர். பல்வேறு வழிபாட்டு முறைமைகளைக் கைக்கொள்கின்றனர். ஆனால் உண்மை என்னவென்றால், தேவன் குறிப்பிட்ட ஆலயத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துத் தனது அருளை அங்கு மட்டும் பொழிபவரல்ல. இவற்றைத் தெளிவாகப்  புரிந்துகொள்ள நாம் ஆவிக்குரிய ஆராதனை என்றால் என்ன என்பதனைப் புரிந்துகொண்டால்தான் முடியும்.  

"தேவனை நாம் ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ளவேண்டும்." என்று இயேசு கிறிஸ்துக் கூறுவதன் பொருள்தான் என்ன?

ஆவியோடும் என்பது இரண்டு அர்த்தங்களை உடையது. ஒன்று , நமது உள்ளான ஆத்துமத்தோடு (ஆத்தும அன்போடு) தேவனைத் தொழுதுகொள்ளவேண்டும் என்று பொருள். இரண்டாவதாக, பரிசுத்த ஆவியோடு தொழுதுகொள்ளவேண்டும். அதாவது, பரிசுத்த ஆவியின் குணங்களோடு அல்லது கனிகளோடு. இன்று ஆவிக்குரிய சபை என்று கூறப்படும் சபைகளில் பரிசுத்த ஆவியோடு தொழுதுகொள்கிறோம் என்று கூறி அலறி ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். அலறுவது பரிசுத்த ஆவியல்ல, ஆவியின் கனிகள் உள்ளவனே பரிசுத்த ஆவியை உடையவன்.

"ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்; இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை." ( கலாத்தியர் 5 : 22, 23 ) என்று வாசிக்கின்றோம். அதாவது , தேவனைத் தொழுதுகொள்பவன் உள்ளான ஆத்தும அன்போடும், மேலேகுறிப்பிடப்பட்டுள்ள ஆவியின் குணங்களோடும் தேவனைத் தொழுதுகொள்ளவேண்டும் என்பது பொருள்.

இரண்டாவது இயேசு கூறும் வசனத்தில் "உண்மையோடும் தொழுதுகொள்ளவேண்டும்" என்று கூறுகின்றார். உண்மை என்றால் என்ன? தேவனுடைய வசனமே சத்தியம் என்று இயேசு கூறுகின்றார். "உம்முடைய சத்தியத்தினாலே அவர்களைப் பரிசுத்தமாக்கும்; உம்முடைய வசனமே சத்தியம். ( யோவான் 17 : 17 ) அதாவது தேவனது வார்த்தைகளை வாழ்வாக்கி அவரைத் தொழுதுகொள்ளவேண்டும். மேலும், வாழ்க்கையில் உண்மையுள்ளவர்களாக இருந்து அவரைத் தொழுதுகொள்ளவேண்டும்.

இந்தக் குணங்களோடு தேவனை ஒருவர் எங்கிருந்தபடியும் தொழுதுகொள்ளமுடியும். எனவேதான் இயேசு கிறிஸ்து, "ஸ்திரீயே, நான் சொல்லுகிறதை நம்பு. நீங்கள் இந்த மலையிலும் எருசலேமிலும் மாத்திரமல்ல, எங்கும் பிதாவைத் தொழுதுகொள்ளுங்காலம் வருகிறது". என்று கூறினார்.

அன்பானவர்களே, ஒருவர் ஆராதனைக்குச் செல்லும் ஆலயத்தை வைத்து ஒருவரை ஆவிக்குரிய நபர் என்றோ அல்லது இவர் ஆவிக்குரிய நபர் அல்ல என்றோ என்று நாம் கருதிவிடக் கூடாது. இயேசு கூறிய அளவுகோல்களை உடையவரே ஆவிக்குரிய முறையில் தேவனைத் தொழுதுகொள்பவர். எனவேதான் "தீர்ப்பிடாதீர்கள்" என்று இயேசு கிறிஸ்து கூறினார். 

மற்றவர்கள் செய்யும் ஆராதனை முறைகளைப்பார்த்து அவர்கள் என்ன ஆராதனைச் செய்கிறார்கள் என்று நாம் ஆராய்ச்சிசெய்யத் தேவையில்லை. இயேசு கிறிஸ்த்துக் கூறிய முறையில் நாம் தேவனைத் தொழுதுகொள்கிறோமா என்று நம்மையே நாம் நிதானித்து அறிந்து நம்மைச் சீர்படுத்திக் கொள்வோம். "இப்படியிருக்க, தன்னை நிற்கிறவனென்று எண்ணுகிறவன் விழாதபடிக்கு எச்சரிக்கையாயிருக்கக்கடவன்." ( 1 கொரிந்தியர் 10 : 12 )  

No comments: