இயேசு கிறிஸ்து முதலில் நம்மை அன்புகூர்ந்ததினால் நாம் அவரை அன்பு செய்கின்றோம்.

Monday, October 14, 2024

நொறுங்குண்ட இருதயமுள்ளவர்களுக்கு

 'ஆதவன்' அக்டோபர் 15, 2024. செவ்வாய்க்கிழமை    வேதாகமத் தியானம் - எண்:- 1,345

"உன்னதத்திலும் பரிசுத்த ஸ்தலத்திலும் வாசம்பண்ணுகிற நான், பணிந்தவர்களின் ஆவியை உயிர்ப்பிக்கிறதற்கும், நொறுங்கினவர்களின் இருதயத்தை உயிர்ப்பிக்கிறதற்கும், நொறுங்குண்டு பணிந்த ஆவியுள்ளவர்களிடத்திலும் வாசம்பண்ணுகிறேன்." ( ஏசாயா 57 : 15 )

நமது தேவன் உன்னதமான பரலோகத்தில் இருக்கின்றார் என்பதனை நாம் அறிவோம். இந்த தேவன் பழைய ஏற்பாட்டுக் காலத்தில் ஆசாரிப்புக் கூடாரத்தில் பரிசுத்த ஸ்தலத்தில் கேருபீன்கள் மத்தியில் குடியிருந்து மோசேயிடமும் இதர ஆசாரியார்களிடமும் பேசி வழிநடத்தினார். இதே பரிசுத்த தேவன் கூறுகின்றார், "நான், பணிந்தவர்களின் ஆவியை உயிர்ப்பிக்கிறதற்கும், நொறுங்கினவர்களின் இருதயத்தை உயிர்ப்பிக்கிறதற்கும், நொறுங்குண்டு பணிந்த ஆவியுள்ளவர்களிடத்திலும் வாசம்பண்ணுகிறேன்." என்று. 

இயேசு கிறிஸ்து கூறினார், "ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது." ( மத்தேயு 5 : 3 ) அதாவது நாம் ஆவியில் எளிமையுள்ளவர்களாக, பணித்த இதயம் உள்ளவர்களாக வாழ்ந்தால் அவர் நமது இருதயத்தில் வந்து குடியிருப்பார். அப்போஸ்தலரான பவுல் இதனால்தான், "நீங்கள் தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களென்றும், தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருக்கிறாரென்றும் அறியாதிருக்கிறீர்களா?" ( 1 கொரிந்தியர் 3 : 16 ) என்று கூறுகின்றார். அதாவது, பணிந்த உள்ளம் தேவனது ஆலயம்.

இப்படி அவர் வந்து மனிதர்கள் இதயத்தில் குடியிருக்கும் காரணத்தையே இன்றைய தியான வசனத்தில் ஏசாயா, "பணிந்தவர்களின் ஆவியை உயிர்ப்பிக்கிறதற்கும், நொறுங்கினவர்களின் இருதயத்தை உயிர்ப்பிக்கிறதற்கும்" என்று கூறுகின்றார். பணிந்த இதயமுள்ளவர்கள் பணிந்தவர்களாகவே இருக்கவேண்டுமென்று தேவன் விரும்பவில்லை. அதுபோல நொறுங்கிய இதயம் எப்போதும் நொறுங்கியே இருக்கவேண்டுமென்றும் அவர் விரும்பவில்லை. அவை புத்துயிர் பெறவேண்டுமென்று தேவன் விரும்புவதால் அப்படி வந்து குடியிருக்கிறார். 

"நொறுங்குண்ட இருதயமுள்ளவர்களுக்குக் கர்த்தர் சமீபமாயிருந்து, நருங்குண்ட ஆவியுள்ளவர்களை இரட்சிக்கிறார்." ( சங்கீதம் 34 : 18 ) என்றும், "இருதயம் நொறுங்குண்டவர்களைக் குணமாக்குகிறார், அவர்களுடைய காயங்களைக் கட்டுகிறார்." ( சங்கீதம் 147 : 3 ) நாம் வாசிப்பது தேவன் நொறுங்கிய இதயமுள்ளவர்களைப் புறக்கணிப்பதில்லை என்பதனை நமக்கு உணர்த்தும். 

ஆம் அன்பானவர்களே, நாம் எந்தவித புறக்கணிப்புக்கு உள்ளானவர்களாக இருந்தாலும் பணிந்த இதயம் நமக்கு இருக்குமானால் தேவன் நம்மை ஒருபோதும் கைவிட்டுவிடமாட்டார், இப்படி மனதளவில் பெரிய சுமை சுமந்து இதயம் நொறுங்குண்டு சோர்ந்திருப்பவர்களை ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து,  "வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்." ( மத்தேயு 11 : 28 ) என்று அழைக்கிறார். 

உன்னதத்திலும் பரிசுத்த ஸ்தலத்திலும் வாசம்பண்ணுகிற கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, பணிந்தவர்களின் ஆவியை உயிர்ப்பிக்கிறதற்கும், நொறுங்கினவர்களின் இருதயத்தை உயிர்ப்பிக்கிறதற்கும், நொறுங்குண்டு பணிந்த ஆவியுள்ளவர்களிடத்திலும் வாசம்பண்ணுகிறார். அத்தகைய உள்ளமுள்ளவர்கள் தேவனது ஆலயமாகவே இருக்கின்றனர். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  

No comments: