எல்லா மனுஷரும் சத்தியத்தை அறியவேண்டும்

 'ஆதவன்' அக்டோபர் 27, 2024.ஞாயிற்றுக்கிழமை      வேதாகமத் தியானம் - எண்:- 1,358

"எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார்." ( 1 தீமோத்தேயு 2 : 4 ) 

உலகினில் பலநூறு விதமான மார்க்கங்கள் உள்ளன. ஒரே மதத்தினுள் பல்வேறு பிரிவினைகள் உள்ளன. இவை அனைத்தையும் தேவன் அறிவார். ஆனால் நீ என்னைத்தான் வணங்கவேண்டும் என்றோ, நான்தான் மெய்யான தேவன் என்றோ அவர் தன்னை மனிதர்களிடம் திணிப்பது கிடையாது. தன்னை மனிதர்கள் அறிந்துகொள்ள அவர்களுக்கு அறிவினைக் கொடுத்துள்ளார். ஆனால் மனிதர்கள் அவரை அறியாததற்குக் காரணம் பாரம்பரியங்களும் வீண் மத வைராக்கியமும் மனக் கடினமுமே. 

தன்னை அறிய தேவன் வைத்துள்ள ஒரே நிபந்தனை இருதய சுத்தம். இருதய சுத்தம் ஒருவருக்கு இருக்குமானால் தேவன் அவருக்குத் தன்னை வெளிப்படுத்துவார். இதனால்தான் இயேசு கிறிஸ்து, "இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள்." ( மத்தேயு 5 : 8 ) என்று சொன்னார். பலர் தேவனை வாழ்வில் அறியாமலிருக்கக் காரணம் மனக்கடினத்துடன் இருதய சுத்தமும்  இல்லாமலிருப்பதுதான். ஆம் அன்பானவர்களே, கிறிஸ்தவர்கள் என்று தங்களைக் கூறிக்கொள்ளும் எல்லோரும் கிறிஸ்துவை அறிந்தவர்களல்ல. 

கிறிஸ்துவின் இரத்தத்தால் பாவங்கள் கழுவப்பட்டு பாவ மன்னிப்பு பெற்று மீட்பு அனுபவம் பெற்றவர்களே மெய்யான கிறிஸ்தவர்கள். இந்த அனுபவத்தை அனைவரும் பெறவேண்டும் என்று தேவன் விரும்புகின்றார். இதனையே,  "எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார்." என்று இன்றைய தியான வசனம் கூறுகின்றது. இதற்கு மனிதர்கள் தங்கள் மனநிலையில் மாறுதல் செய்யவேண்டும். 

நாம் அனைவருமே பல்வேறு சமயங்களில் பாவம் செய்கின்றோம். ஆனால் அந்தப் பாவங்களை நாம் தேவனிடம் ஒளிவு மறைவில்லாமல் அறிக்கையிடும்போதே சுத்த இருதயம் நம்மில் உருவாகும். தாவீது ராஜா பாவத்தில் விழுந்தபோது, "தேவனே, சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும், நிலைவரமான ஆவியை என் உள்ளத்திலே புதுப்பியும்." ( சங்கீதம் 51 : 10 ) என்றுகதறினார். நமது மனக்கடினத்தை விட்டு பாவ உணர்வடைந்து நாம் தேவனை நெருங்குவோமானால் சுத்த இருதயத்தை தேவன் நமக்குத் தந்தருள்வார். 

இப்படி எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், தேவன்  சித்தமுள்ளவராயிருக்கிறார். இதற்காகவே அவர் ஊழியர்களை நியமித்திருக்கின்றார். ஆனால் இந்தப் பணியை ஊழியர்கள் மட்டுமல்ல, மாறாக கிறிஸ்துவை வாழ்வில் அறிந்தவர்கள் அனைவரும் சேர்ந்து செய்யவேண்டுமென்று தேவன் விரும்புகின்றார். எனவே ஊழியர்கள் அறிவிக்கும் தேவ அறிவிப்பு பலரை கிறிஸ்துவண்டை கொண்டுவர நாம் அனைவருமே ஜெபிக்கவேண்டியது நமது கடமையாகும். 
 
எனவேதான் அப்போஸ்தலரான பவுல், "நான் பிரதானமாய்ச் சொல்லுகிற புத்தியென்னவெனில், எல்லா மனுஷருக்காகவும் விண்ணப்பங்களையும் ஜெபங்களையும் வேண்டுதல்களையும் ஸ்தோத்திரங்களையும்பண்ணவேண்டும்;" ( 1 தீமோத்தேயு 2 : 1 ) என்று கூறுகின்றார். நாம் ஜெபிக்கும்போது சுவிசேஷ வாசல்கள் திறக்கும். இப்படி நாம் ஜெபிப்பது "நம்முடைய இரட்சகராகிய தேவனுக்கு முன்பாக அது நன்மையும் பிரியமுமாயிருக்கிறது." ( 1 தீமோத்தேயு 2 : 3 )

எப்போதும் நமது தேவைகளுக்காக மட்டும் ஜெபிக்காமல்  இன்றைய தியான வசனம் கூறுவதுபோல எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், நாம் ஜெபிக்கவேண்டியது அவசியம். நம்முடைய இரட்சகராகிய தேவனுக்கு முன்பாக அது நன்மையும் பிரியமுமாயிருக்கிறது.

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  

No comments:

சமீபத்தியக் கட்டுரைகள் (Latest Articles)

🦋 Meditation verse - ரோமர் 6 : 7 / Romans 6:7

  " ஆதவன் " தியானம் - 1951 2026 ஜூன் 11,   வியாழன்        "மரித்தவன் பாவத்துக்கு நீங்கி விடுதலையாக்கப்பட்டிருக்கிறானே." ...