DAILY MEDITATION ON WHATSAPP

ஆதவன் தினசரி வேதாகமத் தியானத்தை வாட்சப் இல் பெறுவதற்கு 96889 33712 அல்லது 76390 22747 எண்களில் தொடர்பு கொள்ளவும் / To get daily Scripture Meditation on WhatsApp kindly contact 9688933712 or 7639022747

Monday, October 28, 2024

விழுந்துவிடாத எச்சரிக்கை

 'ஆதவன்' 💚நவம்பர் 03, 2024. ஞாயிற்றுக்கிழமை       வேதாகமத் தியானம் - எண்:- 1,365

 

"இப்படியிருக்க, தன்னை நிற்கிறவனென்று எண்ணுகிறவன் விழாதபடிக்கு எச்சரிக்கையாயிருக்கக்கடவன்." ( 1 கொரிந்தியர் 10 : 12 )

ஆவிக்குரிய வாழ்வு நாம் மிகவும் கவனமாக வாழவேண்டிய வாழ்வாகும். நமது வாழ்வு நம்  பார்வைக்குச்  சரியான வாழ்வாகத் தெரியலாம் அதற்காக நாம் முற்றிலும் சரியானவர்கள் என்று எண்ணிவிடக்கூடாது. நமது ஆவிக்குரிய வாழ்வை நாமே சுய சோதனை செய்துகொள்ள வேண்டியது அவசியம்.  இதனாலேயே அப்போஸ்தலரான பவுல், "தன்னை நிற்கிறவனென்று எண்ணுகிறவன் விழாதபடிக்கு எச்சரிக்கையாயிருக்கக்கடவன்." என்று கூறுகின்றார். நிற்பதுபோலத் தெரிந்தாலும் ஒருவேளை நாம் விழுந்து விடலாம், அல்லது விழுந்து கிடக்கலாம். 

இதனை அப்போஸ்தலரான பவுல் இஸ்ரவேலரின் வாழ்வைக்கொண்டு நமக்கு விளக்குகின்றார். எகிப்திலிருந்து புறப்பட்ட இஸ்ரவேலர் அனைவரும் செங்கடல் நீரினால் ஞானஸ்நானம் பெற்றார்கள், ஞான போஜனத்தைப் புசித்தார்கள்,  ஞானக் கன்மலையின் தண்ணீரைக் குடித்தார்கள் அப்படியிருந்தும், அவர்களில் அதிகமானபேர்களிடத்தில் தேவன் பிரியமாயிருந்ததில்லை; ஆதலால் வனாந்தரத்திலே அவர்கள் அழிக்கப்பட்டார்கள். ( 1 கொரிந்தியர் 10 : 5 ) என்கின்றார். 

இதுபோலவே இன்று பாவ எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற்ற நாம் ஞானஸ்நானம் பெற்றிருக்கலாம், கிறிஸ்துவின் உடலையும் இரத்தத்தையும் பானம் செய்பவர்களாக இருக்கலாம் ஆனால் அவர்களில் அதிகமானபேர்களிடத்தில் தேவன் பிரியமாயிருந்ததில்லை என்று கூறியுள்ளபடி தேவன் நம்மிடமும் பிரியமில்லாதவராக இருக்கலாம். 

இஸ்ரவேலரிடம் தேவன் பிரியமாய் இல்லாமல் இருக்கக் காரணம் அவர்களது இச்சை, புசித்தல், குடித்தல், (அதாவது உணவுமீது அதிக ஆசை - உலக ஆசைகள் என்று நாம் பொருள்கொள்ளலாம் ) விக்கிரக ஆராதனை, வேசித்தனம், கிறிஸ்துவைப் பரீட்சைபார்த்தல், முறுமுறுத்தல் என்று கூறுகின்றார் அப்போஸ்தலரான பவுல். "இவைகளெல்லாம் திருஷ்டாந்தங்களாக அவர்களுக்குச் சம்பவித்தது; உலகத்தின் முடிவுகாலத்திலுள்ள நமக்கு எச்சரிப்புண்டாக்கும்படி எழுதப்பட்டும் இருக்கிறது." ( 1 கொரிந்தியர் 10 : 11 ) என்கின்றார் பவுல் அப்போஸ்தலர். அன்பானவர்களே, தயவுசெய்து வேதாகமத்தில் 1 கொரிந்தியர் 10 : 1- 12 வசனங்களை வாசித்துத் தியானியுங்கள். 

இஸ்ரவேலர் அதிகமான பேர்களிடத்தில் தேவன் பிரியமாயில்லாமலிருக்கக் காரணமான  மேற்படி கூறப்பட்ட இச்சை, புசித்தல், குடித்தல், விக்கிரக ஆராதனை, வேசித்தனம், கிறிஸ்துவைப் பரீட்சைபார்த்தல், முறுமுறுத்தல் போன்ற குணங்கள்  நம்மிடம் இருக்குமானால் நாமும் ஞானஸ்நானம் பெற்று கிறிஸ்துவின் அப்பத்தையும் இரத்தத்தையும் பானம் செய்பவர்களாக இருந்தாலும் நிற்கிறவர்களல்ல, விழுந்துவிட்டவர்களே. 

எனவே மேற்படி தகாத செயல்கள் நம்மிடம் இருக்குமானால் நம்மைத் திருத்திக்கொள்ள முயலுவோம். தன்னை நிற்கிறவனென்று எண்ணுகிறவன் விழாதபடிக்கு எச்சரிக்கையாயிருக்கக்கடவன் என்று பவுல் அப்போஸ்தலர் கூறுகின்றபடி நாமும் எச்சரிக்கையாக இருப்போம். கிறிஸ்துவை மட்டுமே வாழ்வில் நேசிப்போம். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                       

No comments: