இயேசு கிறிஸ்து முதலில் நம்மை அன்புகூர்ந்ததினால் நாம் அவரை அன்பு செய்கின்றோம்.

Wednesday, October 02, 2024

நம்மை அடிக்கிறவரிடத்தில் திரும்புவோம்

 'ஆதவன்' 💚அக்டோபர் 03, 2024. வியாழக்கிழமை   வேதாகமத் தியானம் - எண்:- 1,333

"ஜனங்கள் தங்களை அடிக்கிறவரிடத்தில் திரும்பாமலும், சேனைகளின் கர்த்தரைத் தேடாமலும் இருக்கிறார்கள்." ( ஏசாயா 9 : 13 )

நமது தேவனாகிய ஆண்டவர் அன்பும் கிருபையும் நிறைந்தவராக இருந்தாலும் அவர் பட்சிக்கும் அக்கினியாகவும் இருக்கிறார். நாம் நமது தவறான வழிகளை விட்டு அவரிடம் திரும்பவேண்டுமென்று அவர் எதிர்பார்க்கின்றார். அதற்காக சிலவேளைகளில் நமக்குச் சில தண்டனைகளைத் தந்து  நம்மைத் திருத்த முயலுகின்றார்.  ஆனாலும் மனிதர்கள் அவரது தண்டனையை உணராமலும் மனம் திரும்பாமலும் இருக்கின்றனர். 

இதனையே இன்றைய தியான வசனத்தில் நாம்,  "ஜனங்கள் தங்களை அடிக்கிறவரிடத்தில் திரும்பாமலும், சேனைகளின் கர்த்தரைத் தேடாமலும் இருக்கிறார்கள்" என்று தேவன் கூறுவதாக வாசிக்கின்றோம். இஸ்ரவேலரைத் தேவன் இப்படியேத் தண்டித்தார். இதனை இன்றைய தியான வசனத்தின் முந்தின வசனத்தில் தேவன் கூறுகின்றார்,  "முற்புறத்தில் சீரியரும், பிற்புறத்தில் பெலிஸ்தரும் வந்து, இஸ்ரவேலைத் திறந்தவாயால் பட்சிப்பார்கள்; இவையெல்லாவற்றிலும் அவருடைய கோபம் ஆறாமல், இன்னும் அவருடைய கைநீட்டினபடியே இருக்கிறது." ( ஏசாயா 9 : 12 ) என்று.

ஆம் அன்பானவர்களே, தேவன் தரும் தண்டனையைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து நாம் நமது பாவங்களிலேயே வாழ்வோமானால் அவருடைய கோபம் ஆறாமல், இன்னும் அவருடைய கைநீட்டினபடியே இருக்கும். ஆனால் இதனை அறியாமல் பலரும், "நான் எவ்வளவோ ஜெபிக்கிறேன், உபவாசிக்கிறேன், தர்மங்கள் செய்கிறேன் .....ஆனாலும் தேவன் என்னைக் கண்டுகொள்ளவுமில்லை, எனக்கு நன்மை செய்யவுமில்லை" என்று தேவனுக்கு எதிராக முணுமுணுக்கின்றனர். 

அப்படிப்பட்டவர்களுக்கு தேவன் பின்வருமாறு பதிலளிக்கிறார்:-".............நான் இன்று உனக்குக் கற்பிக்கிற உன் தேவனாகிய கர்த்தரின் கற்பனைகளையெல்லாம் நீ கைக்கொண்டு, உன் தேவனாகிய கர்த்தருடைய பார்வைக்குச் செம்மையானதைச் செய்யும்படி, அவர் சத்தத்திற்குச் செவிகொடுப்பாயானால், கர்த்தர் தமது கோபத்தின் உக்கிரத்தைவிட்டுத் திரும்பி, உனக்குத் தயைசெய்து, உனக்கு இரங்கி, அவர் உன் பிதாக்களுக்கு ஆணையிட்டபடி உன்னை விருத்தியடையப்பண்ணுவார்". (உபாகமம் 13:17,18)

எனவே அன்பானவர்களே, துன்பங்கள் பிரச்சனைகள் தொடரும்போது தேவன்மேல் கோபம்கொள்ளாமல், அவரைக் குற்றப்படுத்தாமல்  நமது பாவங்களையும் மீறுதல்களையும் உணர்ந்து அவரிடம் மன்னிப்பு வேண்டுவோம். ஏனெனில், "சேனைகளின் கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால்: என்னிடத்தில் திரும்புங்கள்; அப்பொழுது நான் உங்களிடத்துக்குத் திரும்புவேன்." ( சகரியா 1 : 3 )

"நம்மை அடிக்கிறவரிடத்தில் திரும்புவோம், சேனைகளின் கர்த்தரைத் தேடுவோம்."

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  

No comments: