இயேசு கிறிஸ்து முதலில் நம்மை அன்புகூர்ந்ததினால் நாம் அவரை அன்பு செய்கின்றோம்.

Thursday, October 03, 2024

தேவனைக் குறித்து நிதானமாய்ப் பேசுவோம்

 'ஆதவன்' 💚அக்டோபர் 05, 2024. 💚சனிக்கிழமை       வேதாகமத் தியானம் - எண்:- 1,335


"என் தாசனாகிய யோபு பேசினதுபோல், நீங்கள் என்னைக்குறித்து நிதானமாய்ப் பேசவில்லை." ( யோபு 42 : 7 )

பல்வேறு துன்பங்களை வாழ்வில் அனுபவித்த யோபுவைப் போல நம்மில் பலரும் அனுபவிக்கவில்லை. ஆனால் எந்தச் சூழ்நிலையிலும் யோபு தேவனைப் பழித்துப் பேசவில்லை. அவரது மனைவி  தேவன்மேல் அவர் கொண்டிருந்த விசுவாசத்தைக் கண்டு எரிச்சலடைந்து, அவரிடம் இன்னும் நீர் தேவனை நம்பிக்கொண்டிருக்கின்றீரோ? "தேவனைத் தூஷித்து ஜீவனை விடும்" என்றாள். அதாவது, "தேவனைப் பழித்துக் கூறிவிட்டு செத்துத்  தொலையும்" என்றாள். 

ஆனால் யோபுவோ,  "நீ பயித்தியக்காரி பேசுகிறதுபோலப் பேசுகிறாய்; தேவன் கையிலே நன்மையைப் பெற்ற நாம் தீமையையும் பெறவேண்டாமோ என்றான்; இவைகள் எல்லாவற்றிலும் யோபு தன் உதடுகளினால் பாவஞ்செய்யவில்லை." ( யோபு 2 : 10 ) என்று கூறப்பட்டுள்ளது. 

"யோபுடைய மூன்று சிநேகிதராகிய தேமானியனான எலிப்பாசும், சூகியனான பில்தாதும், நாகமாத்தியனான சோப்பாரும், யோபுக்கு நேரிட்ட தீமைகள் யாவையும் கேள்விப்பட்டபோது, அவனுக்காகப் பரிதபிக்கவும், அவனுக்கு ஆறுதல் சொல்லவும், ஒருவரோடொருவர் யோசனை பண்ணிக்கொண்டு, அவரவர் தங்கள் ஸ்தலங்களிலிருந்து வந்தார்கள்." ( யோபு 2 : 11 )

இந்த நண்பர்கள் யோபுவோடு நடத்திய உரையாடல்தான் யோபு நூலில் அதிகமாகக் கூறப்பட்டுள்ளது. இந்த நண்பர்கள் தேவனைப் பற்றிக் கூறிய கருத்துக்கள் அனைத்தும் நல்ல கருத்துக்கள்தான். பல தேவ சத்தியங்களை இந்த நண்பர்கள் பேசுவதை நாம் பார்க்கலாம். ஆனால் இவர்கள் மூவருமே யோபுவின் துன்பத்துக்கு அவரது ஏதோ ஒரு தகாத செயல்தான் காரணம் என்பதுபோல பேசினர். மட்டுமல்ல, யோபு பேசியதுபோல தாழ்மை அவர்களிடம் இல்லை. தங்களைப் பெரிய நீதிமான்கள்போலக் காட்டிக்கொண்டனர்.

எனவே, கர்த்தர் தேமானியனான எலிப்பாஸ் என்பவனை நோக்கி, "உன்மேலும் உன் இரண்டு சிநேகிதர்மேலும் எனக்குக் கோபம் மூளுகிறது; என் தாசனாகிய யோபு பேசினதுபோல், நீங்கள் என்னைக்குறித்து நிதானமாய்ப் பேசவில்லை." ( யோபு 42 : 7 ) என்று கூறுகின்றார். 

இன்றும் துன்பங்கள், நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் சொல்லச்  செல்லும் பலர், யோபுவின் நண்பர்கள் பேசியதைப்போல தேவையில்லாத வார்த்தைகளைப்  பேசுவதைக் காணலாம். ஒருவருக்கு நோயோ, துன்பங்களோ வருவதற்கு அவர்களது வாழ்க்கைத் தவறுகளே எப்போதும் காரணமாய் இருப்பதில்லை. எனவே பிறருக்கு ஆறுதல் சொல்லக் சென்று நாம் பாவத்தில் சிக்கித் தேவ கோபத்தைப் பெற்றுவிடக்கூடாது. 

அப்படிப் பேசுவோமானால், "நீங்கள் என்னைக்குறித்து நிதானமாய்ப் பேசவில்லை." என்று தேவன் நம்மைக் கடிந்துகொள்வார். தேவனது இரகசிய திட்டங்கள் நமக்குத் தெரியாததால் அமைதலாக பிறருக்கு ஆறுதல் கூறுவோம். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  

No comments: