இயேசு கிறிஸ்து முதலில் நம்மை அன்புகூர்ந்ததினால் நாம் அவரை அன்பு செய்கின்றோம்.

Saturday, August 31, 2024

ஆவியும் ஜீவனுமாக இருக்கும் அவரையே பற்றிக்கொள்வோம்.

 'ஆதவன்' செப்டம்பர் 09, 2024. திங்கள்கிழமை             வேதாகமத் தியானம் - எண்:- 1,309

"ஆவியே உயிர்ப்பிக்கிறது, மாம்சமானது ஒன்றுக்கும் உதவாது; நான் உங்களுக்குச் சொல்லுகிற வசனங்கள் ஆவியாயும் ஜீவனாயும் இருக்கின்றன." ( யோவான் 6 : 63 )

தேவ வசனங்கள் ஆவியாகவும் ஜீவனாகவும் இருக்கின்றன என்று இயேசு கிறிஸ்து இன்றைய தியான வசனத்தில் கூறுகின்றார். தேவனது வாயிலிருந்து வரும் வார்த்தைகள் உயிருள்ளவை. எனவேதான் அவை மரித்தவனுக்கு உயிர்கொடுக்கும் வல்லமையும் நோய்களைக் குணமாக்கும் வல்லமையும் கொண்டுள்ளன. அதுபோலவே அந்த வார்த்தைகள் நமக்கு நித்திய ஜீவன் எனும் முடிவில்லா வாழ்வையும் கொடுக்க வல்லவை. 

இதனையே அப்போஸ்தலரான பேதுரு, "ஆண்டவரே, யாரிடத்தில் போவோம், நித்தியஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே." ( யோவான் 6 : 68 ) என்று இயேசு கிறிஸ்துவிடம் கூறினார். 

இயேசு கிறிஸ்து கூறுவதுபோல ஆவியே உயிர்ப்பிக்கிறது, அவர் கூறும் வசனங்கள் ஆவியாயும் ஜீவனாயும் இருக்கின்றன. மாம்சமானது ஒன்றுக்கும் உதவாது. அதாவது மாம்சகாரியங்கள் ஒன்றுக்கும் பயனற்றவை. ஆனால் இன்று பலரும் ஆவிக்குரிய காரியங்களைவிட மாம்சகாரியங்களையே தேவனிடம் கேட்டுப் பெற்றுக்கொள்ள விரும்புகின்றனர். தேவனது ஜீவனுள்ள வார்த்தைகளைப் புறக்கணிக்கின்றனர். வார்தையைப் புறக்கணிப்பது என்பது  கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவையே புறக்கணிப்பதாகும். 

காரணம், நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துதான் தேவனது வார்த்தை என்று வேதம் கூறுகின்றது. ஆம், "ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது." ( யோவான் 1 : 1 ) "அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம் பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரேபேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது." ( யோவான் 1 : 14 ) என்று நாம் வாசிக்கின்றோம். 

எனவே, மெய்யான சுவிசேஷ அறிவிப்பு என்பது நமது ஆண்டவராகிய இயேசுவை அறிவிப்பதுதான். அப்போஸ்தலரான யோவான் கூறுகின்றார், "ஆதிமுதல் இருந்ததும், நாங்கள் கேட்டதும், எங்கள் கண்களினாலே கண்டதும், நாங்கள் நோக்கிப்பார்த்ததும், எங்கள் கைகளினாலே தொட்டதுமாயிருக்கிற ஜீவவார்த்தையைக் குறித்து உங்களுக்கு அறிவிக்கிறோம்.' ( 1 யோவான்  1 : 1 ) என்று. எனவே, கிறிஸ்துவையும் அவர் தரும்  நித்தியஜீவனையும் அறிவிக்காமல் உலக ஆசீர்வாதங்களையே சுவிசேஷமாக அறிவிப்பது அவரைப் புறக்கணிப்பதாகும்.

ஆம் அன்பானவர்களே, இன்றைய தியான வசனம் கூறுகின்றபடி, ஆவியே உயிர்ப்பிக்கிறது, மாம்சமானது ஒன்றுக்கும் உதவாது; அந்த வசனங்கள் ஆவியாயும் ஜீவனாயும் இருக்கின்றன என்று கூறியுள்ளபடி கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே ஆவியாகவும் ஜீவனாகவும் இருக்கின்றார். அவரைப் நமது வாழ்வில் ஏற்றுக்கொள்ளாமல் தள்ளிவிட்டு நாம் நமது மாம்சத்தில் எடுக்கும் முடிவுகள் ஒன்றுக்கும் உதவாதவை. 

எனவே, ஆவியும் ஜீவனுமாக இருக்கும் அவரையே வாழ்வில் பற்றிக்கொள்வோம்.  ஆவியாயும் ஜீவனாயும் இருக்கின்ற அவரே நமக்கு நித்திய ஜீவனையும் தருவார். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  

No comments: