இயேசு கிறிஸ்து முதலில் நம்மை அன்புகூர்ந்ததினால் நாம் அவரை அன்பு செய்கின்றோம்.

Friday, August 16, 2024

தேவனது பார்வைக்கு மறைவானது ஏதுமில்லை

 'ஆதவன்' 💚ஆகஸ்ட் 23, 2024. 💚வெள்ளிக்கிழமை வேதாகமத் தியானம் - எண்:- 1,292 

 

"அவருடைய பார்வைக்கு மறைவான சிருஷ்டி ஒன்றுமில்லை; சகலமும் அவருடைய கண்களுக்கு முன்பாக நிர்வாணமாயும் வெளியரங்கமாயுமிருக்கிறது, அவருக்கே நாம் கணக்கு ஒப்புவிக்கவேண்டும்." (எபிரெயர் 4:13)

இந்த உலகத்தில் நாம் பலவேளைகளில் பலரையும் ஏமாற்றிவிடலாம். ஆனால் எல்லோரையும் எப்போதும் ஏமாற்றிவிட முடியாது என்று கூறுவார்கள். இது உண்மையான கூற்றாக இருந்தாலும் தேவனைப் பொறுத்தவரை அவரை நாம் ஒரு சின்ன காரியத்தில்கூட ஏமாற்றிடமுடியாது. 

ஒரு மனிதன் பதினைந்து ஆண்டுகளாக தனது மனைவிக்குத் தெரியாமல் இன்னொரு பெண்ணுடன் குடும்பம் நடத்திக்கொண்டிருந்தான். ஆனால் இந்த மனிதன் ஊரிலும் ஆலய காரியங்களிலும் முன்னின்று செயல்படுபவன். ஆண்டு விழாக்களிலும் இதர கூட்டங்களிலும் கலந்துகொள்ளும் அனைத்து பிரமுகர்களும் ஆயர்களும் இவனையும் இவனது பணிகளையும் பாராட்டி, "நமது ஊருக்குக் கிடைத்த பொக்கிஷம் இவர்" என்று கூறுவார்கள். 

ஆம் அன்பானவர்களே, நாம் ஒரு மனிதரது வெளிச் செயல்பாடுகளைப் பார்த்து அவர்களை மதிப்பிடுகின்றோம். ஆனால் தேவனை ஏமாற்றிட முடியாது. "அவருடைய பார்வைக்கு மறைவான சிருஷ்டி ஒன்றுமில்லை; சகலமும் அவருடைய கண்களுக்கு முன்பாக நிர்வாணமாயும் வெளியரங்கமாயுமிருக்கிறது, அவருக்கே நாம் கணக்கு ஒப்புவிக்கவேண்டும்." 

ஒரு மனிதனது வெளிச் செயல்பாடுகளையல்ல, அவனது உள்ளான மனத்தினையும் தேவன் அறிந்திருக்கின்றார். ஆதியாகமம் நூலில் காயின் ஆபேல் சரித்திரத்தை நாம் வாசித்திருக்கின்றோம். காயினது காணிக்கையினை தேவன் அங்கீகரிக்கவில்லை. காரணம், அவனது உள்ளான மனம் நேர்மையானதாக இல்லை; நன்மைசெய்யும் குணமுள்ளதாக இல்லை. எனவே காயினது காணிக்கையினை  தேவன் அங்கீகரிக்கவில்லை  இதனையே, "காயீனையும் அவன் காணிக்கையையும் அவர் அங்கிகரிக்கவில்லை." ( ஆதியாகமம் 4 : 5 ) என்று வாசிக்கின்றோம். ஆம், காயினை அங்கீகரிக்காததால் அவன் காணிக்கையினையும் அங்கீகரிக்கவில்லை. 

இதனை நாம் தொடர்ந்து வாசிக்கும்போது பார்க்கின்றோம், "அப்பொழுது கர்த்தர் காயீனை நோக்கி: உனக்கு ஏன் எரிச்சல் உண்டாயிற்று? உன் முகநாடி ஏன் வேறுபட்டது? நீ நன்மைசெய்தால் மேன்மை இல்லையோ? நீ நன்மைசெய்யாதிருந்தால் பாவம் வாசற்படியில் படுத்திருக்கும்." ( ஆதியாகமம் 4 : 6, 7 ) என்றார். காயினது எரிச்சல் அவனுக்குள்ளிருந்த கொலைகார  குணத்தை வெளிப்படுத்துகின்றது. தேவன் அதனை அறிந்திருந்தார். ஆம், அவருடைய பார்வைக்கு மறைவான சிருஷ்டி ஒன்றுமில்லை; சகலமும் அவருடைய கண்களுக்கு முன்பாக நிர்வாணமாயும் வெளியரங்கமாயுமிருக்கிறது. 

நம்மை நாம் நிதானித்துப்பார்ப்போம். தேவனுக்கு அல்லது நம்மோடு வாழும் சக மனிதர்களுக்கு உண்மையில்லாத காரியங்களை நாம் செய்துகொண்டிருப்போமானால் நாம் எவ்வளவுதான் நல்ல காரியங்களை ஆலயத்துக்கென்று செய்தாலும் தேவன் அவற்றை அங்கீகரிக்கமாட்டார். சகலமும் அவருடைய கண்களுக்கு முன்பாக நிர்வாணமாயும் வெளியரங்கமாயுமிருக்கிறது,

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்            
Rephrase with Ginger (Ctrl+Alt+E)

No comments: