இயேசு கிறிஸ்து முதலில் நம்மை அன்புகூர்ந்ததினால் நாம் அவரை அன்பு செய்கின்றோம்.

Saturday, August 24, 2024

உன்னதத்திலிருந்து வரும் பெலன்

 'ஆதவன்' செப்டம்பர் 03, 2024. செவ்வாய்க்கிழமை    வேதாகமத் தியானம் - எண்:- 1,303


"என் பிதா வாக்குத்தத்தம்பண்ணினதை, இதோ, நான் உங்களுக்கு அனுப்புகிறேன். நீங்களோ உன்னதத்திலிருந்து வரும் பெலனால் தரிப்பிக்கப்படும்வரைக்கும் எருசலேம் நகரத்தில் இருங்கள்" ( லுூக்கா 24 : 49 )

பிதாவான தேவன் நம்மை வழிநடத்தும் ஆவியானவரை நமக்கு வாக்களித்துள்ளார். நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துமூலம் ஆவியானவர் நமக்கு அருளப்படுகின்றார். "பிதாவினிடத்திலிருந்து நான் உங்களுக்கு அனுப்பப்போகிறவரும், பிதாவினிடத்திலிருந்து புறப்படுகிறவருமாகிய சத்திய ஆவியான தேற்றரவாளன் வரும்போது, அவர் என்னைக்குறித்துச் சாட்சி கொடுப்பார்." ( யோவான் 15 : 26 ) என்று இயேசு கிறிஸ்து கூறினார். இதனையே, "என் பிதா வாக்குத்தத்தம்பண்ணினதை, இதோ, நான் உங்களுக்கு அனுப்புகிறேன்" என்கின்றார் இயேசு கிறிஸ்து. 

ஆவியானவர் நமக்குள் வரும்போதுதான் நமக்கு பெலன் கிடைக்கின்றது. இன்றைய தியான வசனம் இயேசு கிறிஸ்து தனது சீடர்களோடு உலகத்தில் வாழ்ந்தபோது கூறியது. அதுபோல தான் மரித்து உயிர்த்தபோதும் இதனையே கூறினார். "நீங்கள் எருசலேமை விட்டுப் போகாமல் என்னிடத்தில் கேள்விப்பட்ட பிதாவின் வாக்குத்தத்தம் நிறைவேறக் காத்திருங்கள் என்று கட்டளையிட்டார்." ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 1 : 5 ) என்று உயிர்த்த இயேசு சீடர்களிடம் கூறினார். 

"எருசலேம் நகரத்தில் இருங்கள்" என்றும்  "நீங்கள் எருசலேமை விட்டுப் போகாமல் பிதாவின் வாக்குத்தத்தம் நிறைவேறக் காத்திருங்கள்" என்றும் கூறப்பட்டுள்ளது. எருசலேம் என்பது பரிசுத்த நகரம். அதாவது நீங்கள் உங்கள் பரிசுத்தத்தைவிட்டு விலகாமல் எனது வாக்குத்தத்தம் நிறைவேற காத்திருக்கள் என்கின்றார் இயேசு கிறிஸ்து. 
 
அன்பானவர்களே, நாம் இங்குக் கவனிக்கவேண்டியது பரிசுத்தத்தைவிட்டு விலகாமல் காத்திருக்கும் அனுபவம். நாம் கிறிஸ்துவை அறிவிக்கவேண்டுமானால் இந்தக் காத்திருத்தல் அவசியமாய் இருக்கின்றது. பாவங்கள் மன்னிக்கப்படுவது ஆவிக்குரிய வாழ்வின் முதல்படிதான். உடனேயே கிறிஸ்துவை அறிவிக்கப்போகின்றேன் என்று புறப்பட்டுவிடக்கூடாது. நமக்கு உன்னத பெலன் தேவையாய் இருக்கின்றது. அந்த பெலன் ஆவியானவரால் நமக்கு அருளப்படுகின்றது. அந்த பெலன் தான் சாட்சியுள்ள வாழ்க்கை வாழ நமக்கு உதவக்கூடியது. 

எனவேதான் இயேசு கிறிஸ்து சீடர்களிடம் கூறினார், "பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிப்பரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள்" ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 1 : 8 ) ஆம்,  எருசலேம் நாம் இருக்கும் பரிசுத்த நகரம், நமது சொந்த வீடு, குடும்பம். முதலில் நமது சாட்சி அங்கு இருக்கவேண்டும். தொடர்ந்து அடுத்திருக்கும் யூதேயா, அதாவது நம்மைச் சுற்றியிருக்கும் சமூகம் / ஊர்,  அடுத்து சமாரியா எனும் பிற இனத்து மக்கள்.  இப்படி நமது சாட்சியுள்ள வாழ்க்கை விரிவடைந்து இருக்குமானால் நாம் நமது ஆவிக்குரிய வாழ்வில் பூமியின் கடைசி எல்லைவரை சாட்சிகளாய் இருக்க முடியும். 

சொந்த வீட்டிலும், ஊரிலும் நம்மைச் சுற்றியுள்ள சமூகத்திலும் சாட்சிக்கேடான வாழ்க்கை வாழ்ந்துகொண்டு நாம் கிறிஸ்துவை அறிவிக்க முடியாது.   ஆம் அன்பானவர்களே, உன்னதத்திலிருந்து வரும் பெலனால் தரிப்பிக்கப்படும்வரைக்கும் எருசலேம் நகரத்தில் இருங்கள் என்று இயேசு கிறிஸ்து கூறியபடி எருசலேமில் தரித்திருந்து ஆவிக்குரிய பெலனடைவோம். அதன்பின்னர் கிறிஸ்துவை அறிவிக்க நமக்கு பெலன் கிடைக்கும். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்            

No comments: