இயேசு கிறிஸ்து முதலில் நம்மை அன்புகூர்ந்ததினால் நாம் அவரை அன்பு செய்கின்றோம்.

Friday, August 23, 2024

பொறுமையாகக் காத்திருக்கும் மனம்

 'ஆதவன்' செப்டம்பர் 01, 2024. ஞாயிற்றுக்கிழமை 💚 வேதாகமத் தியானம் - எண்:- 1,301 

"தேவன் தம்மை நோக்கி இரவும் பகலும் கூப்பிடுகிறவர்களாகிய தம்மால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் விஷயத்தில் நீடிய பொறுமையுள்ளவராயிருந்து அவர்களுக்கு நியாயஞ் செய்யாமலிருப்பாரோ?" ( லுூக்கா 18 : 7 )

தேவன் எவ்வளவு தயவு மிக்கவர் என்பதனை விளக்க இயேசு ஒரு உவமையைக் கூறுகின்றார். அநியாய நியாயாதிபதி (Judge) பற்றிய உவமையே அது. அவன், "தேவனுக்குப் பயப்படாதவனும் மனுஷரை மதியாதவனுமாயிருந்தான்." ( லுூக்கா 18 : 2 ) அவனிடம் ஒரு விதவை தனது வழக்கை விசாரித்து நீதி வழங்குமாறு தினசரி வந்து உபத்திரவப்படுத்திக் கொண்டிருந்தாள் . அவளது தொல்லை தாங்காமல் இறுதியில் அவளது வழக்கை அந்த அநியாய நீதிபதி விசாரித்துத் தீர்ப்பு வழங்கினான். 

நமது தேவன் நீதியும் இரக்கமும் கிருபையும் மிகுந்தவர். அவர் இப்படி இருப்பதால்தான் நாம் அவரிடம் வேண்டுவதைப் பெற்றுக் கொள்கின்றோம்.  இதனையே இன்றைய தியான வசனத்தில் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துக்  கூறுகின்றார். அநியாயமிக்க நீதிபதி விதவையின் குரலுக்குச் செவிகொடுத்து அவளுக்கு நியாயம் செய்தானென்றால், "தேவன் தம்மை நோக்கி இரவும் பகலும் கூப்பிடுகிறவர்களாகிய தம்மால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் விஷயத்தில் நீடிய பொறுமையுள்ளவராயிருந்து அவர்களுக்கு நியாயஞ் செய்யாமலிருப்பாரோ?" என்கின்றார். 

ஆம் அன்பானவர்களே. நமது அன்றாட ஜெபங்களும் விண்ணப்பங்களும் ஒருபோதும் வீணாகிப்போகாது. இதனை வாசிக்கும்போது நீங்கள் ஒருவேளை, "அப்படியானால் எனது ஜெபத்துக்குத்   தேவன் ஏன் பதில்தரவில்லை" என்று  எண்ணலாம்.  அதனால்தான் இயேசு கிறிஸ்து இந்த வசனத்தில் கூறுகின்றார்,  "தம்மால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் விஷயத்தில் நீடிய பொறுமையுள்ளவராயிருந்து" என்று. அதாவது, நாம் அவரால் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் என்பதற்கேற்ப நமது வாழ்க்கை இருக்கவேண்டும். இரண்டாவது  நமக்கு  நீடிய பொறுமை வேண்டும்.  

மேலும், தேவன் அந்த அநீதியுள்ள நீதிபதி போன்றவரல்ல; நமக்கு என்ன தேவை எப்போது தேவை என்பதனையும் அவர் அறிவார். நாம் நமக்கு மிகவும் தேவை எனக் கருதுவது தேவனது பார்வையில் அவ்வளவு முக்கியமானதாக இருக்காமல் போகலாம். அதேவேளையில் நாம் முக்கியமற்றதாகக் கருதும் ஒன்று முக்கியமானதாக இருக்கலாம்.  எனவேதான் இந்த வசனத்தில் இயேசு நமது கூப்பிடுதலுக்குச் செவிகொடுத்து நிறைவேறுவார் என்று கூறாமல், "நீடிய பொறுமையுள்ளவராயிருந்து அவர்களுக்கு நியாயஞ் செய்யாமலிருப்பாரோ?" என்கின்றார். அதாவது, பொறுமையாக இருந்து  எது நியாயமோ அதனைச் செய்வார்.  எனவேதான்  தேவ சித்தத்துக்கு நம்மை ஒப்புக்கொடுத்து நாம் ஜெபிக்கவேண்டியது அவசியமாயிருக்கிறது.  

ஆம்  அன்பானவர்களே, தேவன் தம்மை நோக்கி இரவும் பகலும் கூப்பிடுகிறவர்களாகிய தம்மால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் விஷயத்தில் நீடிய பொறுமையுள்ளவராயிருந்து அவர்களுக்கு நியாயஞ் செய்யாமலிருக்க மாட்டார். விசுவாசத்தோடு தேவ சித்தத்துக்கு நம்மை ஒப்புக்கொடுத்து அவர் பதில் தரும்  வரை பொறுமையாகக் காத்திருப்போம். அவர் ஒருபோதும் நமக்கு அநியாயம் செய்யமாட்டார். 

 தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்             

No comments: