வேதாகம முத்துக்கள் - செப்டம்பர்


                                                                - சகோ. எம். ஜியோ பிரகாஷ் 


ஆதவன் 🖋️ 582 ⛪ செப்டம்பர் 01,  2022 வியாழக்கிழமை

"என்னை நோக்கிக் கூப்பிடு, அப்பொழுது நான் உனக்கு உத்தரவு கொடுத்து, நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன்." ( எரேமியா 33 : 3 )

இன்று பெரும்பாலும் மக்கள், அதுவும் தங்களைக் கிறிஸ்தவர்கள் என்று கூறிக்கொள்ளும் மக்கள், தங்கள் எதிர்காலங்களை அறிந்துகொள்ளவும், தற்போதைய பிரச்சனைகளிலிருந்து விடுபடவும் ஊழியர்களைத் தேடி ஓடும் அவலம் உள்ளது. இது பணம் சம்பாதிக்கும் எண்ணமுள்ள ஊழியர்களுக்குச் சாதகமாக உள்ளது. இதுவே இன்றைய கிறிஸ்தவத்தின் சாபக்கேடாகவும் இருக்கின்றது.

நமது தேவன் பாரபட்சம் காட்டும் தேவனல்ல. எல்லோரையும் ஒரேபோல அன்பு செய்யும் தெய்வம் அவர். குறிப்பிட்டச் சிலருக்கு தேவன் சில காரியங்களை வெளிப்படுத்தலாம். அது அவர்கள் தேவனோடு கொண்டுள்ள உறவைப் பொறுத்ததே தவிர வேறு அதிசயமல்ல. தேவனோடுள்ள இந்த உறவை எல்லோரும் பெறலாம், பெறவேண்டுமென்று தான் தேவனும் விரும்புகின்றார். தேவனோடு உறவுள்ள வாழ்க்கை வாழ்வோமானால் அப்படி வாழும் எல்லோருக்கும் தேவன் தனது சித்தத்தை வெளிப்படுத்துவார்.  

இப்படி தேவனுக்கு ஏற்புடைய வாழ்க்கை வாழ்ந்து வருவோமானால், இன்றைய வசனம் கூறுவதுபோல அவர் நமக்குப் பதில் தந்து நாம் அறியாததும் நமக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை அறிவிப்பார். 

தேவனுக்கு ஏற்புடைய வாழ்க்கை என்றவுடன் அது நம்மால் முடியாது என்று பலரும் திகைக்கின்றனர். எனவேதான் இவர்கள் தற்காலிக விடுதலைவேண்டி ஊழியர்களை நாடுகின்றனர். பெரும்பாலான தீர்க்கதரிசன ஊழியர்கள் தங்களை தேவனோடு நெருங்கிய உறவுள்ளவர்கள் எனக் காட்டிக்கொள்ளவேண்டி போலியான அல்லது வேதத்துக்கு முரணான செயல்களில் ஈடுபட்டு மக்களைக் கவர்கின்றனர். 

வேதாகமத்தில் இயேசு கிறிஸ்து மக்களுக்குச் சுகம் அளிக்குமுன் பல இடங்களில் முதலில், "உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன" என்றுதான் கூறுகின்றார்.  அதாவது நாம் நமது பிரச்சனைகளையும் நோய்களையும் பிரதானமாகப் பார்க்கின்றோம், ஆனால் தேவனோ நமது பாவங்களையே பிரதானமானதாகப் பார்க்கின்றார். 

ஆனால் இன்றைய எந்த ஊழியக்காரனும் இதனை மக்களுக்குச் சொல்வதுமில்லை, மக்களது பாவங்களை உணர்த்திக் கொடுப்பதுமில்லை. அவர்களே பாவங்களில் மூழ்கியிருப்பதால் அதுபற்றி மக்களிடம் தைரியமாக எடுத்துக்கூற அவர்களது மனச் சாட்சியே அவர்களைக் குத்துவதும் இப்படிக் கூறாமல் இருக்கக் காரணமாக இருக்கலாம். எனவே இவர்கள் கூறுவது தேவ வாக்கு என நாம் ஏற்றுக்கொள்ள முடியாது.

எனவேதான் தேவன் கூறுகின்றார், "உங்களுக்குத் தீர்க்கதரிசனம் சொல்லுகிற தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளைக் கேளாதிருங்கள்; அவர்கள் உங்களை வீண்பெருமை கொள்ளும்படி செய்கிறார்கள்; கர்த்தருடைய வாக்கை அல்ல, தாங்கள் யூகித்த தரிசனத்தைச் சொல்லுகிறார்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்." ( எரேமியா 23 : 16 )

இந்த வசனத்தை வாசிக்கும்போது எந்த தீர்க்கதரிசியையும் நாம் நம்பவேண்டாம் என்று பொருளாகின்றது. ஆனால், உண்மையான தீர்க்கதரிசிகளும் உள்ளனர். (அவர்கள் விசுவாசிகளிடம் பணம் பறிக்கும்  திட்டங்களைச் செயல்படுத்த மாட்டார்கள்) அவர்கள் கூறுவது தேவனோடு உறவுகொண்டு வாழும் விசுவாசிகளுக்கு தேவன் ஏற்கெனவே கூறிய வார்த்தைகளை அவர்களுக்கு உறுதிப்படுத்துவதாக இருக்கும்.

அன்பானவர்களே, தீர்க்கதரிசன ஊழியர்களைத் தவிர்த்து, தேவனுக்கு ஏற்ற ஒரு வாழ்க்கை வாழ்ந்து, இன்றைய வசனம் கூறுவதுபோல,  அவரை நோக்கிக் கூப்பிடுவோம், அப்பொழுது அவர் நமக்கு உத்தரவு கொடுத்து, நாம் அறியாததும் நமக்கு  எட்டாததுமான பெரிய காரியங்களை நமக்கு அறிவிப்பார்.

 ஆதவன் 🖋️ 583 ⛪ செப்டம்பர் 02,  2022 வெள்ளிக்கிழமை

"என்னைத் தள்ளி என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளாதவனை நியாயந்தீர்க்கிறதொன்றிருக்கிறது; நான் சொன்ன வசனமே அவனைக் கடைசிநாளில் நியாயந்தீர்க்கும்." ( யோவான் 12 : 48 )

கிறிஸ்துவை ஏற்றுக்கொள்வதும் ஏற்றுக்கொள்ளாததும் அவரவர் தனிப்பட்ட விருப்பம். ஆனால், கிறிஸ்துவை எல்லோருக்கும் அறிவிக்கவேண்டியது கிறிஸ்தவர்களின் கடமை. ஏனெனில் இதனை இயேசு கிறிஸ்து தான் பரலோகம் செல்லுமுன் ஒரு கட்டளையாகக் கூறினார். "பின்பு, அவர் அவர்களை நோக்கி: நீங்கள் உலகமெங்கும்போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள். விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான்; விசுவாசியாதவனோ ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவான்." ( மாற்கு 16 : 15, 16 ) என்று வாசிக்கின்றோம். 

பிரசங்கிக்கவேண்டியது மட்டுமே நமது கடமை. அதனைத்தான் கிறிஸ்தவர்கள் செய்கின்றனரே  தவிர மதம் மாற்றுவதில்லை. ஊழியம் செய்கின்றேன் என்று கூறி வேத அறிவோ அனுபவமோ இல்லாத சில அற்பமான ஊழியர்கள்தான் இதில் தவறு செய்கின்றனர். ஆண்டவர் இயேசுவின் வார்த்தைகளை விதைக்கவேண்டுமேத்தவிர வலுக்கட்டாயமாக எவரையும் நாம் கிறிஸ்துவுக்குள் கொண்டுவரமுடியாது. 

இன்றைய தியான வசனத்தில் இயேசு கிறிஸ்து கூறுவது இதுதான்.  அதாவது எனது வார்த்தைகளை நீங்கள் விதையுங்கள். அதனை ஏற்றுகொள்ளாதவனை நான் கூறிய வசனமே நியாயம் தீர்க்கும். ஆம், தேவனது வார்த்தைகள் உயிரும் வல்லமையும் உள்ளது. அது மனிதனது  உள்ளத்தில் ஊடுருவி அவனது ஆத்துமா, சிந்தனை, செயல், அவனது உடல் அனைத்தையும் ஊடுருவி குத்தக்கூடியது. இதனை நாம் எபிரெயர் நிருபத்தில் பின்வருமாறு வாசிக்கின்றோம்:- 

"தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும், ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது." ( எபிரெயர் 4 : 12 )

ஒருவன் எந்த மார்க்கத்தானாய் இருந்தாலும் மனச்சாட்சி ஒன்றுதான். அதாவது அதுவே அனைவரையும் ஒரே தேவன் உண்டாக்கினார் என்பதற்கு அடையாளம். எனவே எந்த மனிதனும் இறுகி நியாயத் தீர்ப்பில் தப்பிட  முடியாது.

இதனையே அப்போஸ்தலரான பவுல், "அவர்களுடைய மனச்சாட்சியும்கூடச் சாட்சியிடுகிறதினாலும், குற்றமுண்டு குற்றமில்லையென்று அவர்களுடைய சிந்தனைகள் ஒன்றையொன்று தீர்க்கிறதினாலும், நியாயப்பிரமாணத்திற்கேற்ற கிரியை தங்கள் இருதயங்களில் எழுதியிருக்கிறதென்று காண்பிக்கிறார்கள்." ( ரோமர் 2 : 15 ) ஆம், ஆண்டவரது சட்டங்கள் எல்லா மனிதர்கள் உள்ளத்திலும் எழுதப்பட்டுள்ளன.

ஆண்டவரது வசனம் நீதியானது, மதங்களுக்கு அப்பாற்பட்டது. அதனால்தான், என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளாதவனை நியாயந்தீர்க்கிறதொன்றிருக்கிறது; நான் சொன்ன வசனமே அவனைக் கடைசிநாளில் நியாயந்தீர்க்கும் என்கின்றார் இயேசு கிறிஸ்து. இதனாலேயே அனைவருக்கும் சுவிசேஷம் அறிவிக்கின்றோம்.

கிறிஸ்துவைத் தள்ளி அவரது வார்த்தைகளை விசுவாசியாமல் போகும்போது நாம் நீதியாக வாழ முடியாது. அவரது வசனமே நம்மைச் சரியான பாதையில் நடத்த வல்லமையுள்ளது. 

"என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளாதவனை நியாயந்தீர்க்கிற தொன்றிருக்கிறது; நான் சொன்ன வசனமே அவனைக் கடைசிநாளில் நியாயந்தீர்க்கும்" என்பது கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டுள்ளோம் எனக் கூறிக்கொண்டு வசனத்துக்குக் கீழ்ப்படியாத வாழ்க்கை வாழ்ந்துகொண்டு தங்களைக் கிறிஸ்தவர்கள்  எனக் கூறிக்கொள்ளும் கிறிஸ்தவர்களுக்கும் பொருந்தும். நமது வாழ்க்கை கிறிஸ்துவின் வசனத்தின்படி உள்ளதா? என்பதனையும் நாம் ஆராய்ந்து பார்க்கக் கடமைப்பட்டுள்ளோம். 

 ஆதவன் 🖋️ 584 ⛪ செப்டம்பர் 03,  2022 சனிக்கிழமை

"ஆகையால் கர்த்தர் அவனோடிருந்தார்; அவன் போகிற இடம் எங்கும் அவனுக்கு அனுகூலமாயிற்று" ( 2 இராஜாக்கள் 18 : 7 )

இன்றைய வசனம் எசேக்கியா ராஜாவைபற்றிக் கூறுகின்றது. கர்த்தர் அவரோடு இருந்ததால் அவர் போகுமிடமெல்லாம் அவருக்கு வெற்றியாயிற்று.  இந்த எசேக்கியா "ராஜாவாகிறபோது, இருபத்தைந்து வயதாயிருந்து, எருசலேமிலே இருபத்தொன்பது வருஷம் அரசாண்டான்" ( 2 இராஜாக்கள் 18 : 2 ) ஆம் இருபத்தைந்து வயதிலேயே எசேக்கியா கர்த்தரை அறிந்து அவருக்கு ஏற்புடையவராய் வாழத் தன்னை ஒப்புக்கொடுத்திருந்தார்.  

யூதாவின் பல ராஜாக்களும் கார்த்தரைவிட்டு பின்மாறிப்போன காலத்தில் எசேக்கியா மட்டும் கர்த்தருக்கு உண்மையானவராக வாழ்ந்தார். "அவன் கர்த்தரை விட்டுப் பின்வாங்காமல் அவரைச் சார்ந்திருந்து, கர்த்தர் மோசேக்குக் கற்பித்த அவருடைய கற்பனைகளைக் கைக்கொண்டு நடந்தான்." ( 2 இராஜாக்கள் 18 : 6 ) என்று வாசிக்கின்றோம். 

அன்பானவர்களே, பழைய ஏற்பாட்டுக்கால மக்கள் தேவனை அச்சத்துக்குரியவராகவே பார்த்து வந்தனர். அந்தக்காலகட்டத்திலேயே தாவீது, எசேக்கியா போன்றவர்கள் கர்த்தரிடம் அன்புகொண்டு வாழ்ந்தார்களானால் இன்று கிறிஸ்துவின் அன்பை ருசித்த நாம் கர்த்தர்மேல் எவ்வளவு அன்புள்ளவர்களாக வாழவேண்டும்?

இதனைத்தான் நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவும், "என்னில் நிலைத்திருங்கள், நானும் உங்களில் நிலைத்திருப்பேன்; கொடியானது திராட்சச்செடியில் நிலைத்திராவிட்டால் அது தானாய்க் கனிகொடுக்கமாட்டாததுபோல, நீங்களும் என்னில் நிலைத்திராவிட்டால், கனிகொடுக்கமாட்டீர்கள்." ( யோவான் 15 : 4 ) என்று கூறினார். நாமும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவோடு இருந்ததால் நாம் போகுமிடமெல்லாம் நமது ஆவிக்குரிய வாழ்வு  நமக்கு வெற்றியாகும்.

மேலும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவோடு இணைந்து அவருக்கு ஏற்புடைய வாழ்க்கை வாழும்போது நமது ஜெபங்களையும் அவர் கனிவுடன் கேட்டுப் பதிலளிப்பார்.  

எசேக்கியாவோடு கர்த்தர் இருந்ததால் அவரது ஜெபத்தைக்கேட்டு  ஏசாயா தீர்க்கதரிசி மூலம் தான் கூறிய வார்த்தைகளையே  கர்த்தர் மாற்றினார். மரித்துப்போவாய் என்று முதலில் கூறியிருந்தும் தனது முடிவினை கர்த்தர் மாற்றி எசேக்கியா மேலும் பதினைந்து ஆண்டுகள் வாழ வாழ்வை நீட்டிக்கொடுத்து மகிழப்பண்ணினார். 

எசேக்கியா ஜெபித்தபோது,  தான் கர்த்தருக்கு உண்மையாக இருந்ததை கர்த்தருக்கு நினைவு படுத்தினார். "ஆ கர்த்தாவே, நான் உமக்கு முன்பாக உண்மையும் மனஉத்தமமுமாய் நடந்து, உமது பார்வைக்கு நலமானதைச் செய்தேன் என்பதை நினைத்தருளும் என்று விண்ணப்பம்பண்ணினான். எசேக்கியா மிகவும் அழுதான்." ( 2 இராஜாக்கள் 20 : 3 ) என்று கூறப்பட்டுள்ளது. 

நாம் இப்படி நமது சாட்சியுள்ள வாழ்வை கர்த்தருக்கு எடுத்துக்கூறி ஜெபிக்கக்கூடியவர்களாக வாழ்வோமானால் எசேக்கியாவுக்குச் செய்ததுபோல நமக்கும் அதிசயமான நன்மைகளைச் செய்வார்.  ஆம், கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நம்முள் வசிக்கும்படி இடம்கொடுக்கும்போது  நாம் செயல்கள் அனைத்தையும் அவர் நமக்கு அனுகூலமாக்குவார். மட்டுமல்ல, நமது விண்ணப்பங்களும் உடனடியாகப் பதில் தருவார். 

 ஆதவன் 🖋️ 585 ⛪ செப்டம்பர் 04,  2022 ஞாயிற்றுக்கிழமை

"நல்ல மனுஷனுடைய நடைகள் கர்த்தரால் உறுதிப்படும், அவனுடைய வழியின்மேல் அவர் பிரியமாயிருக்கிறார்." ( சங்கீதம் 37 : 23 )

தேவன் நம் ஒவ்வொருவருடைய செயல்களையும் சிந்தனைகளையும் அறிந்துகொண்டிருக்கின்றார். மனிதனின் அன்றாடச்  செயல்பாடுகள்  அவருக்கு மறைவானவையல்ல. உத்தமமாய்த், தனக்கு ஏற்புடைய வாழ்க்கை வாழும் மக்களிடம் அவர் பிரியமாய் இருக்கிறார். அத்தகைய மனிதர்களது வாழ்க்கையினை அவர் பொறுப்பெடுத்துக்கொள்கின்றார். எனவே இத்தகைய நல்ல மனிதர்களது செயல்பாடுகள் கர்த்தரால் உறுதிப்படும். அவற்றில் எந்தக் குழப்பமும் இடர்பாடும் ஏற்படாது. கர்த்தர் அவர்களது செயல்பாடுகளில் பிரியமாய் இருக்கின்றார்.  

அத்தகைய நல்ல மாந்தர்கள் "விழுந்தாலும் தள்ளுண்டு போவதில்லை; கர்த்தர் தமது கையினால் அவனைத் தாங்குகிறார்." ( சங்கீதம் 37 : 24 ) என்று அடுத்த வசனத்தில் கூறப்பட்டுள்ளது. அதாவது, தேவனுக்கு ஏற்புடைய வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும்போது எதிர்பாரா விதமாகச் சில தவறுகளை நல்ல மனிதர்களும் செய்யலாம். ஆனால் அப்படி அவர்கள் விழுந்தாலும் தள்ளுண்டு போவதில்லை. ஏதாவது வழியில் அவர்களது தவறினை  தேவன் உணர்த்திக்கொடுத்து அவர்களைத் தாங்குகின்றார். 

தாவீது ராஜா தேவனுக்கு ஏற்புடைய வாழ்க்கை வாழ்ந்து வந்தாலும் எதிர்பாராத விதமாக உரியாவின் மனைவியிடம் பாவத்தில் விழுந்துவிட்டார். ஆனால் தேவன் அவரை அப்படியே தள்ளிவிடவில்லை. நாத்தான் தீர்க்கதரிசி மூலம் அவரது பாவத்தை உணர்த்திக்கொடுத்து மீண்டும் தன்னோடு சேர்த்துக்கொண்டார். காரணம் தாவீதின் மனம். அவர் நாத்தான் தனது பாவத்தை உணர்த்தியதும் மனம் திரும்பி அழுது மன்னிப்பு வேண்டினார். 

அவர் எழுதிய பாவ மன்னிப்பின் சங்கீதம் (சங்கீதம் 51) இன்றும் நாம் பாவத்தில் விழும்போது நாம் ஜெபிக்க ஏற்ற ஜெபமாக இருக்கின்றது. 

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவோடு வாழ்ந்து அவரோடே இருந்தும் அப்போஸ்தலரான பேதுரு, கிறிஸ்துவை மறுதலிக்கவும் சபிக்கவும் செய்தார். ஆனால், தனது தவறுக்கு மனம் வருந்தி அழுதார். கிறிஸ்து அவரை மீண்டும் சேர்த்துக்கொண்டார். தலைமை அப்போஸ்தலராகவும் ஏற்படுத்தினார்.

ஆம், "நீதிமான் ஏழுதரம் விழுந்தாலும் திரும்பவும் எழுந்திருப்பான்; துன்மார்க்கரோ தீங்கிலே இடறுண்டு கிடப்பார்கள்." ( நீதிமொழிகள் 24 : 16 ). அதாவது பூனையைப் போன்றவர்கள் நல்ல மனிதர்கள். எழுதரம் விழுந்தாலும் மனச்சாட்சியில் குத்தப்பட்டு தங்களது பாவங்களை தேவனிடம் அறிக்கையிட்டு மனம் திரும்பிடுவார்கள். ஆனால் துன்மார்க்கரோ பன்றியைப்போல எத்தனைத்தரம் கழுவினாலும் சேற்றிலேயே இன்பம்கண்டு அதில்தானே மூழ்கியிருப்பார்கள்.

அன்பானவர்களே, நாம் பலவீனமானவர்கள்தான். எனவே நாம் அடிக்கடி தேவனுக்கு ஏற்பில்லாதச் செயல்பாடுகளைச் செய்துவிடலாம். ஆனால், அதிலேயே மூழ்கிடாமல் தேவனிடம் பாவங்களை அறிக்கையிட்டு மனம்திரும்பவேண்டும்.  இப்படி வாழும்போது நமது வழிகளில் கர்த்தர் பிரியமாய் இருப்பார். நமது நடைகளை உறுதிப்படுத்துவார். 

 ஆதவன் 🖋️ 586 ⛪ செப்டம்பர் 05,  2022 திங்கள்கிழமை

"தேவனுடைய ஆலயத்துக்கும் விக்கிரகங்களுக்கும் சம்பந்தமேது? நான் அவர்களுக்குள்ளே வாசம்பண்ணி, அவர்களுக்குள்ளே உலாவி, அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனங்களாயிருப்பார்கள் என்று, தேவன் சொன்னபடி, நீங்கள் ஜீவனுள்ள தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களே."( 2 கொரிந்தியர் 6 : 16 )

நமது தேவன் மனிதர்களோடு உறவுகொண்டு வாழ விரும்புகின்றவர். அவர் பேசக்கூடாத ஒரு சிலையல்ல. இந்த விருப்பத்தில் தேவன் மனிதர்களோடு மனிதனாக உலாவியதை நாம் ஆதியாகமத்தில் வாசிக்கின்றோம். ஆதாம் ஏவாளோடு அவர் ஏதேன் தோட்டத்தில் உலாவினார். "பகலில் குளிர்ச்சியான வேளையிலே தோட்டத்தில் உலாவுகிற தேவனாகிய கர்த்தருடைய சத்தத்தை அவர்கள் கேட்டார்கள்." ( ஆதியாகமம் 3 : 8 ) என வாசிக்கின்றோம்.

உயிருள்ள மனிதரோடுதான் உறவுகளை, நமது உணர்ச்சிகளைப் பரிமாறிக்கொள்ள முடியும். நாம் விக்கிரகங்களை வணங்கும்போது நமது இருதயமும் கண்களும் அந்த விக்கிரகத்தை நோக்குமேயல்லாமல் அதற்குமேலாக தேவனை நோக்காது; நமது ஆத்துமாவில் அது எந்த உணர்ச்சியையும் தூண்டாது. 

இன்றைய வசனம், "நீங்கள் ஜீவனுள்ள தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களே" என்று கேள்வி எழுப்புகின்றது. ஆம், நாமே ஜீவனுள்ள தேவன் வசிக்கும் ஆலயம்.  இதனை 1 கொரிந்தியர் 3:16, 6:19 வசனங்களிலும் நாம் வாசிக்கலாம். இந்த ஆலயத்தை நாம் கெடுத்தால் தேவன் நம்மைக் கெடுப்பார்.  "ஒருவன் தேவனுடைய ஆலயத்தைக் கெடுத்தால், அவனைத் தேவன் கெடுப்பார்; தேவனுடைய ஆலயம் பரிசுத்தமாயிருக்கிறது; நீங்களே அந்த ஆலயம்." ( 1 கொரிந்தியர் 3 : 17 ) என்றும் வாசிக்கின்றோம். தேவனது ஆலயமாகிய நமது உடலாகிய ஆலயத்தை விக்கிரக ஆராதனை செய்யும்போது நாம் கெடுக்கின்றோம். 

மேலும், வேதாகம அடிப்படையில் சிலைவழிபாடு எனும் விக்கிரக ஆராதனை என்பது வெறும் சிலையை வழிபடுவதை மட்டும் குறிக்கவில்லை. மாறாக, தேவனுக்குக் கொடுக்கவேண்டிய முக்கியத்துவத்தை உலக பொருட்களுக்கு கொடுப்பதும் சிலைவழிபாடுதான். ஆம், பொருளாசையும் சிலைவழிபாடே. 

"விபசாரக்காரனாவது, அசுத்தனாவது, விக்கிரகாராதனைக்காரனாகிய பொருளாசைக்காரனாவது தேவனுடைய ராஜ்யமாகிய கிறிஸ்துவின் ராஜ்யத்திலே சுதந்தரமடைவதில்லையென்று அறிந்திருக்கிறீர்களே." ( எபேசியர் 5 : 5 ) என எழுதுகின்றார் அப்போஸ்தலரான பவுல். 

அதாவது, இன்றைய தியானத்துக்குரிய வசனத்தின் ஒட்டுமொத்தக் கருத்து, நமது உடல் தேவனுடைய ஆலயம். இதனை தேவன் தனக்காக முற்றிலும் நாம் பயன்படுத்த விரும்புகின்றார். இந்த உடலில் மனிதர்களோடு மனிதனாக வாழ்ந்து தன்னை வெளிப்படுத்த விரும்புகின்றார். எனவே, அவருக்குக் கொடுக்க வேண்டிய முதலிடத்தை அவருக்குக் கொடுக்கவேண்டும். இதற்கு மிஞ்சியது அனைத்துமே சிலைவழிபாடுதான். 

அதனையே இன்றைய வசனம், தேவனுடைய ஆலயத்துக்கும் விக்கிரகங்களுக்கும் சம்பந்தமேது? என்று சொல்லுகின்றது. ஆம், கிறிஸ்துவுக்கு உரியவர்கள் என்றால் அவருக்கே நமது உடலாகிய ஆலயத்தில் முதலிடம் கொடுக்கவேண்டும். அப்படி நாம் வாழும்போது மட்டுமே அவர் நமக்குள் உலாவி நமது தேவனாக இருப்பார்; நாம் அவரது மக்களாக இருப்போம். 

இன்று பெரும்பாலான கிறிஸ்தவர்கள் தாங்கள் மண்ணினால் செய்யப்பட்டச் சிலைகளை வாங்காததால் தாங்கள் சிலைவழிபாடு செய்யவில்லை என்று தவறாக எண்ணிக்கொண்டிருக்கின்றனர். ஆனால் மிகப்பெரிய பொருளாசையில் சிக்கி இருக்கின்றனர். பொருளுக்காகவும், புகழுக்காகவும், பதவிக்காகவும் அலையும் எல்லோருமே விக்கிரக ஆராதனைக்காரர்கள்தான்.

அன்பானவர்களே, தேவனுடைய ஆலயத்துக்கும் விக்கிரகங்களுக்கும் சம்பந்தமேது?  தேவன் நமக்குள்ளே வாசம்பண்ணி, உலாவி, நமது தேவனாயிருக்கவும் நாம் அவரது  ஜனங்களாயிருக்கவும் இடம்கொடுப்போம். அப்போது மட்டுமே நாம் தேவன் சொன்னபடி, ஜீவனுள்ள தேவனுடைய ஆலயமாயிருப்போம். 

 ஆதவன் 🖋️ 587 ⛪ செப்டம்பர் 06,  2022 செவ்வாய்க்கிழமை

"நான் எப்போதும் வழக்காடமாட்டேன்; நான் என்றைக்கும் கோபமாயிருப்பதுமில்லை; ஏனென்றால், ஆவியும், நான் உண்டுபண்ணின ஆத்துமாக்களும், என் முகத்துக்கு முன்பாகச் சோர்ந்துபோகுமே." ( ஏசாயா 57 : 16 )

நாம் அனைவருமே அவரைப்போல பரிசுத்தர்களாக மாறவேண்டும் என தேவன் எதிர்பார்க்கின்றார். ஆனால், மனிதர்கள் அப்படி முற்றிலும் பரிசுத்தமாக வாழ முடியவில்லை. எனவே எத்தனைத்தான் புனித வாழ்வு வாழ்ந்தாலும் சில நேரங்களில் மனிதர்கள் தவறு செய்துவிடுவதுண்டு. அனால், தேவன் அன்புள்ளவராக இருப்பதால் மனிதர்களை மன்னிக்கின்றார். எப்போதும் அவர் கோபப்படுவதில்லை. ஏனெனில் அப்படி அவர் கோபப்பட்டு மனிதர்களை புறம்தள்ளுவாரென்றால் எல்லோருமே சோர்ந்துபோவோம். அதனையே இன்றைய வசனத்தில் கூறுகின்றார்.

இதேபோல நோவாவின்காலத்திலும் மனிதர்கள் தங்களைக் கெடுத்துப் பாவம்செய்தபோது தேவன் கூறினார், " என் ஆவி என்றைக்கும் மனுஷனோடே போராடுவதில்லை; அவன் மாம்சந்தானே, அவன் இருக்கப்போகிற நாட்கள் நூற்றிருபது வருஷம் என்றார்." ( ஆதியாகமம் 6 : 3) இது மனிதர்கள் சில வேளைகளில் கூறுவது போல இருக்கின்றது. கொடிய நோய்வாய்ப்பட்டு மரணத்தை நெருங்கும் மனிதர்களுக்கு மருத்துவர்களே அந்த மனிதர்களது வீட்டாரிடம், " இனி ரெம்ப நாள் செல்லாது, அவர் இருக்கப்போவது இன்னும் ஒன்று  ரெண்டு மாதங்கள்தான். அவர் ஆசைப்பட்டு கேட்பதெல்லாம் அவருக்கு கொடுங்கள்" என்பார்கள். அதுபோலவே தேவன் பாவ வியாதி பிடித்த மனிதர்களது வாழ்வைப்பற்றி வேதனையுற்று இப்படிக்  கூறுகின்றார்.  போகட்டும், அவன் இருக்கப்போகும் நாட்கள் நூற்று இருப்பது வருஷம்தானே ?

எனவேதான் பலவீனமான மனிதன் பாவத்தினாலும் விசுவாசக் குறைவினாலும் பாதிக்கப்படும்போது, தேவன் கோபங்கொண்டு அவனைத் முற்றிலும் தள்ளிடாமல் இருக்கிறார். ஆம், "அவர் நியாயத்திற்கு ஜெயங்கிடைக்கப்பண்ணுகிறவரைக்கும், நெரிந்த நாணலை முறிக்காமலும், மங்கியெரிகிற திரியை அணைக்காமலும் இருப்பார்." ( மத்தேயு 12 : 20 )

சில வேளைகளில் நமக்குள் நமது ஆவிக்குரிய வாழ்க்கையினைக் குறித்து சந்தேகம் எழுந்துவிடும். மங்கி எரிகிற திரிபோல ஒளி இழந்து காணப்படுவதுபோலத்தெரியும். 'ஐயோ , நான் செய்த இந்தச்  செயல் தேவனுக்கு ஏற்புடைய செயல் அல்ல .... எனவே அவர் என்மேல் கோபமாயிருப்பார்' என எண்ணக்கூடும். ஆனால் அப்படி நாம் மனம் மடிந்திடத் தேவையில்லை. மங்கி எரியும் திரிதானே என்று அணைத்திடமாட்டார். 

எப்போது நாம் நமது உள்ளத்தில் நமது தவறை, பாவத்தை உணர்ந்து கொள்கின்றோமோ அப்போதே தேவன் நம்மேலுள்ள கோபத்தை மாற்றிவிடுகின்றார். "ஏனென்றால், ஆவியும், நான் உண்டுபண்ணின ஆத்துமாக்களும், என் முகத்துக்கு முன்பாகச் சோர்ந்துபோகுமே." என்பதே தேவனுக்குரிய தாய் உள்ளத்தின் எண்ணம். 

ஆனால், இந்த வசனம் துன்மார்க்கனுக்குப் பொருந்துவதில்லை. ஏனெனில் துன்மார்க்கன் தான் செய்த தவறை உணர்வதுமில்லை, அவனது உள்ளத்தில் தேவனைப்பற்றிய எண்ணம் எழுவதுமில்லை. எனவே துன்மார்க்கர்களது ஆவி தேவனால் கைவிடப்பட்டு பல வேளைகளில் தற்கொலைமூலம் மாய்ந்து பாதாளத்துக்குப் போகின்றது. 

அன்பானவர்களே, நாம் மெய்யான ஆவிக்குரிய வாழ்க்கை வாழ்வோமென்றால்  எனவே தைரியமாக ஆவிக்குரிய வாழ்வைத் தொடரலாம். சிறு சிறு தவறுகள், பாவங்களுக்கு தேவனிடம் மன்னிப்பு கேட்டு ஆவிக்குரிய வாழவைத் தொடர்வோம். 

ஏனெனில், நமது தேவன் எப்போதும் வழக்காடமாட்டார்; அவர் என்றைக்கும் கோபமாயிருப்பதுமில்லை; ஏனென்றால், ஆவியும், தான் உண்டுபண்ணின ஆத்துமாக்களும், அவரது முகத்துக்கு முன்பாகச் சோர்ந்துபோகும் என்பது அவருக்குத் தெரியும். 

தேவன் இத்தனை அன்பானவர் என்பதனை நாம் உணர்ந்து கொள்ளும்போது தான் அவரிடம் நமது அன்பும் அவருக்கேற்ற வாழ்க்கையை நாம்  கண்டிப்பாக வாழவேண்டுமெனும் எண்ணமும் ஆசையும் நம்மை நிரப்பும். 

 ஆதவன் 🖋️ 588 ⛪ செப்டம்பர் 07,  2022 புதன்கிழமை

"கர்த்தர் வருமளவும் நீடிய பொறுமையாயிருங்கள். இதோ, பயிரிடுகிறவன் பூமியின் நற்பலனை அடையவேண்டுமென்று, முன்மாரியும் பின்மாரியும் வருமளவும், நீடிய பொறுமையோடே காத்திருக்கிறான். நீங்களும் நீடிய பொறுமையோடிருந்து, உங்கள் இருதயங்களை ஸ்திரப்படுத்துங்கள்; கர்த்தரின் வருகை சமீபமாயிருக்கிறதே" ( யாக்கோபு 5 : 7, 8 )

இன்றைய தியானத்துக்குரிய வசனத்தில் அப்போஸ்தலரான யாக்கோபு கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வருகைக்கு நாம் காத்திருக்கவேண்டியதை விவசாயத்துடன் ஒப்பிட்டுப் பேசுகின்றார். 

விவசாயம் செய்பவர்கள் குறிப்பிட்டக் காலங்களைக் கணக்கிட்டு விவசாயத்துக்கான முன் ஏற்பாடுகளைச் செய்வார்கள். அக்டோபர் மாதம் மழை வரும் என்பது தெரியுமானதால் விவசாயம் செய்பவர்கள் விதைகளையும் விவசாயத்துக்குத் தேவையான பொருட்களையும் சேகரித்துவைத்து மழையை எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள். முதல் மழை விழுந்ததுமே விதையை விதைத்து விடுவார்கள்.  

சில ஆண்டுகளில் மழை குறிப்பிட்ட காலத்தில் பெய்யாமல் கால தாமதம் ஆகிவிடும். அப்போது விவசாய வேலைகள்  தாமதமாகத் துவங்கும். எந்த விவசாயியும் மழை வருவதற்குத் தாமதமாகிவிட்டால் விதையை விதைக்க மாட்டான்.  பெறுமையோடு காத்திருந்து நிலத்தைப் பண்படுத்துவான். 

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வருகை சமீபமானதால் நாமும் விவசாயிகள் முன் தயாரிப்புச் செய்வதுபோல பொறுமையோடு காத்திருந்து நமது இருதயங்களை ஸ்திரப்படுத்தவேண்டும்  என்கின்றார் யாக்கோபு. 

இன்று பல ஊழியர்களும் வருகைக்கு ஆயத்தப்படுதல் குறித்துப் பேசுகின்றனர். வருகைக்கு ஆயத்தப்படுதல் என்பது சிறப்பான பலவிதச்  செயல்பாடுகளைச் செய்வதல்ல, மாறாக, வேதத்தில் கூறப்பட்டுள்ள வாழ்க்கை வாழ்வதுதான். 

நாம் வாழவேண்டிய வழிமுறைகள், போதனைகள் எல்லாமே ஏற்கெனவே வேதத்தில் கூறப்பட்டுள்ளன. அவற்றின்படி வாழ்வதுதான் வருகைக்கு ஆயத்தப்படுதல். ஆனால் பல கிறிஸ்தவர்களுக்கும் இயேசுவின் இரண்டாம் வருகை குறித்து பேசும்போது அது சிரிப்புக்குரியதாகத்தான் தெரிகின்றது. "இரண்டாயிரம் ஆண்டுகளாக இயேசு வருகிறார் என்றுதான் கூறிக்கொண்டிருக்கிறார்கள் எப்போதுதான் வருவார்?" என்கின்றனர். இவர்களுக்கு அப்போஸ்தலரான பேதுரு கூறுகின்றார்:- 

"அவர் வருவார் என்று சொல்லுகிற வாக்குத்தத்தம் எங்கே? பிதாக்கள் நித்திரையடைந்தபின்பு சகலமும் சிருஷ்டிப்பின்தோற்றமுதல் இருந்தவிதமாயிருக்கிறதே என்று சொல்லுவார்கள்." ( 2 பேதுரு 3 : 4 )

"தாமதிக்கிறார் என்று சிலர் எண்ணுகிறபடி, கர்த்தர் தமது வாக்குத்தத்தத்தைக்குறித்துத் தாமதமாயிராமல்; ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார்." ( 2 பேதுரு 3 : 9 ) ஆம், எல்லோரும் மனம்திரும்பித்  தூய ஒரு வாழ்க்கை வாழவேண்டும், ஒருவருமே கெட்டுபோய்விடக்கூடாது என்பதற்காகவே அவரது வருகை தாமதமாகின்றது. 

மேலும், நமது காலத்தில் அவர் வருகின்றாரோ இல்லையோ நாம் எப்போது மரித்தாலும் அவரை எதிர்கொள்ளவேண்டியது வரும். அது எப்போதும் நிகழலாம். எனவே நாம் எப்போதும் ஆயத்தமாய் இருக்கவேண்டியது அவசியம். 

அன்பானவர்களே, அப்போஸ்தலரான யாக்கோபு கூறுவதுபோல ஒரு விவசாயி பருவகாலத்துக்குக் காத்திருந்து முன் ஏற்பாடுகள் செய்வதுபோல நாமும் கிறிஸ்துவின் வருகைக்கு முன்னேற்பாடுகள் செய்து காத்திருக்கவேண்டியது அவசியம். அவர் வரும்போது கைவிடப்பட்டவர்களாக நாம் ஆகிவிடக்கூடாது. ஆவியானவரின் துணையோடு கிறிஸ்துவின் வருகைக்கு ஆயத்தமாவோம்.

 ஆதவன் 🖋️ 589 ⛪ செப்டம்பர் 08,  2022 வியாழக்கிழமை

"அவர் நம்மை இப்பொழுதிருக்கிற பொல்லாத பிரபஞ்சத்தினின்று விடுவிக்கும்படி நம்முடைய பிதாவாகிய தேவனுடைய சித்தத்தின்படியே நம்முடைய பாவங்களுக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார்" ( கலாத்தியர் 1 : 4 )

இயேசு கிறிஸ்து இந்த பூமியில் மனிதனாகப் பிறந்ததற்கான காரணத்தை அப்போஸ்தலரான பவுல் இன்றைய வசனத்தில் கூறுகின்றார்.  அதாவது இந்த பொல்லாத உலக காரியங்களிலிருந்து நம்மை விடுவித்து; உலக பாவ இச்சைகள்,  நாட்டங்களிலிருந்து நம்மை விடுவித்து,  நம்மைக் காக்கும்படி பிதாவாகிய தேவனுடைய சித்தத்தின்படி தன்னை ஒப்புக்கொடுத்தார். 

பல்வேறு நீதிச் சட்டங்களை தேவன் கொடுத்திருந்தும் மனிதர்களால் அவற்றின்படி வாழ முடியவில்லை. மேலும், இந்த உலக மனிதர்களும்கூட பல நீதிகளைக் கூறியுள்ளனர்.  திருக்குறள், நன்னெறி, ஆத்திச்சூடி நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது, இனியவை நாற்பது,      திரிகடுகம்,   ஆசாரக்கோவை,  பழமொழி நானூறு,  சிறுபஞ்சமூலம்,  முதுமொழிக்காஞ்சி எனத் தமிழில் உள்ளதுபோல வேறு எந்த  மொழியிலும் நீதிநூல்கள் இல்லை. அனால் இவைகளால் மனிதர்களை நல்வழிப்படுத்த முடியவில்லை. உலகத்திலிருந்து விடுவிக்க முடியவில்லை. 

நீதி போதனைகள் மனிதர்களை நல்வழிப்படுத்தி தேவனுக்கு ஏற்புடையவர்கள் ஆக்கிட முடியாது. எனவேதான் இயேசு கிறிஸ்து உலகினில் பிறந்து இரத்தம் சிந்தி பாடுபட்டு நித்திய மீட்பினை ஏற்படுத்தினார். அவர்மேல் விசுவாசம்கொண்டு அவர் தரும் மீட்பினைப் பெறும்போது மட்டுமே நாம் பாவத்திலிருந்தும் உலக ஆசைகளிலிருந்தும் விடுதலை பெறமுடியும்.    

ஆனால் இந்த சத்தியங்கள் பவுல் அடிகள் காலத்திலேயே அப்போதிருந்த ஊழியர்களால் மறைக்கப்பட்டன. இப்போதுள்ள பண ஆசை ஊழியர்கள் மனிதர்களுக்கேற்பவும்  , மனிதர்களைத் திருப்திப்படுத்தவும்  பிரசங்கிப்பதுபோல வேத சத்தியங்களைத் திரித்தும் மறைத்தும் பிரசங்கித்தார்கள். ஆனால் அப்போஸ்தலரான பவுல் தான் அப்படிப்பட்டவனல்ல என்று கூறுகின்றார். 

"இப்பொழுது நான் மனுஷரையா, தேவனையா, யாரை நாடிப் போதிக்கிறேன்? மனுஷரையா பிரியப்படுத்தப்பார்க்கிறேன்? நான் இன்னும் மனுஷரைப் பிரியப்படுத்துகிறவனாயிருந்தால் நான் கிறிஸ்துவின் ஊழியக்காரனல்லவே." ( கலாத்தியர் 1 : 10 ). ஆம், மனிதரைப் பிரியப்படுத்தும்படி ஊழியம் செய்பவன் கிறிஸ்துவின் ஊழியக்காரனல்ல.

ஆசீர்வாதங்களையே பிரசங்கிப்பவன் கிறிஸ்துவின் ஊழியக்காரனல்ல. வேத சத்தியங்களின்படி கிறித்து ஏன் உலகத்தில் வந்தார் என்பதை எடுத்துக்கூறி, அவர் அளிக்கும் மீட்பினையும் மக்களுக்கு எடுத்துச்சொல்லி அதனை அடைந்திட மக்களுக்கு  வழி காட்டுபவனே கிறிஸ்துவின் ஊழியன். 

எனவே, உலக ஆசீர்வாதம் பெறுவதையே குறிக்கோளாகக்கொண்டு சத்தியத்தை மறுதலிக்கும்  ஊழியர்களைத் தேடி ஓடாமல் கிறிஸ்துவை நோக்கி ஓடக்கடவோம்.  இதனை எபிரெய  நிருப ஆசிரியர் அழகாகக் கூறுகின்றார், "அந்தப்படியே, இயேசுவும் தம்முடைய சொந்த இரத்தத்தினாலே ஜனத்தைப் பரிசுத்தஞ்செய்யும்படியாக நகர வாசலுக்குப் புறம்பே பாடுபட்டார். ஆகையால், நாம் அவருடைய நிந்தையைச் சுமந்து, பாளயத்துக்குப் புறம்பே அவரிடத்திற்குப் புறப்பட்டுப் போகக்கடவோம்." ( எபிரெயர் 13 : 12,13 )

ஆம்  அன்பானவர்களே, கிறிஸ்துவின் சிலுவையினை அன்றாடம் சுமந்துகொண்டு பாளயத்துக்குப் புறம்பே (உலக ஆசைகளுக்குப் புறம்பே) அவரிடத்துக்குப் புறப்பட்டுப் போவோம். உலகம் கொடுக்க முடியாத நித்திய சமாதானத்தினாலும், பரிசுத்த வாழ்க்கை வாழ மீட்பு அனுபவத்தினாலும் அவர் நம்மை நிரப்பி நடத்துவார்.  

                                   

 ஆதவன் 🖋️ 590 ⛪ செப்டம்பர் 09,  2022 வெள்ளிக்கிழமை

"ஞானஸ்நானமானது, மாம்ச அழுக்கை நீக்குதலாயிராமல், தேவனைப்பற்றும் நல்மனச்சாட்சியின் உடன்படிக்கையாயிருந்து, இப்பொழுது நம்மையும் இயேசுகிறிஸ்துவினுடைய உயிர்த்தெழுதலினால் இரட்சிக்கிறது." (1 பேதுரு 3:21)

ஞானஸ்நானம் என்பது விசுவாசிகள் மேற்கொள்ளவேண்டிய  முக்கிய கடமையாக வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஞானஸ்நானம் பெறும் விசுவாசி கிறிஸ்துவை ஏற்றுக்கொள்வதாக அறிக்கையிட்டு அதன் அடையாளமாக நீரில் மூழ்கி ஞானஸ்நானம் பெறுகின்றார்.  இது நீரில் மூழ்கி உடலின் அழுக்கை நீக்குதலல்ல, குளிப்பதுபோலத் தெரிந்தாலும் இது குளிப்பதல்ல. மாறாக அப்போஸ்தலரான பேதுரு கூறுவதுபோல தேவனைப்பற்றும் நல்மனச்சாட்சியின் உடன்படிக்கை. 

அதாவது இது தேவனுக்கும் நமக்குமான ஒரு ஒப்பந்தம் (Agreement ). இதுவரை உலக மனிதனாக வாழ்ந்த நான் இன்றுமுதல் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை என் ஆத்தும இரட்சகராக ஏற்றுக்கொள்கிறேன். இனி நான் கிறிஸ்துவுக்கு உரியவன் என்று நாம் அறிக்கையிடுகின்றோம்.   

ஆனால் இன்று பல கிறிஸ்தவ சபைகளில் ஊழியர்கள் இவை எதனையும் கணக்கில்கொள்ளாமல் சபையின் உறுப்பினர் எண்ணிக்கையை அதிகரிக்கவேண்டி தங்கள் சபைக்கு  வருகின்ற எல்லோருக்கும் ஞானஸ்நானம் கொடுக்கின்றனர். ஞானஸ்நானத்தில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து அறிக்கைசெய்வதும், பாவத்திலிருந்து மனம் திரும்புவதும்  தான் முக்கிய அம்சம். ஆனால் இன்று பலர் கடமைக்காக, சாதாரண ஒரு கட்டளைக்குக் கீழ்படிவதுபோல எந்த வித ஆத்தும இரட்சிப்பு அனுபவமோ பாவ மன்னிப்பின் நிச்சயமோ இல்லாமல் ஞானஸ்நானம் பெறுகின்றனர். இதனால் சாட்சி வாழ்க்கையினை இவர்களிடம்  நாம் காண முடிவதில்லை. 

மனம் திரும்புதலுக்கான ஞானஸ்நானத்தை யோவான் ஸ்நானன் கொடுத்துவந்தார். (மத்தேயு 3) ஆனால் அவரிடம் இயேசு கிறிஸ்துவும் ஞானஸ்நானம் பெற்றார். அவர் மனம் திரும்புதலுக்காக ஞானஸ்நானம் பெறவில்லை. காரணம், பாவமில்லாத அவர் மனம் திரும்பவேண்டிய அவசியமில்லை. அவர் நீதியை நிலை நாட்டவே ஞானஸ்நானம் பெற்றார். (மத்தேயு 3: 15) ஆம், ஞானஸ்நானம் பெறவேண்டுமென்பது பிதாவாகிய தேவன் வகுத்துள்ள நீதி. அதற்குக் கீழ்படியவேண்டியே இயேசு கிறிஸ்து ஞானஸ்நானம் பெற்றார்.   

எத்தியோப்பிய நிதி மந்திரி பிலிப்பு மூலம் இயேசு கிறிஸ்துவை அறிந்து விசுவாசித்து ஞானஸ்நானம் பெறுவதை நாம் அப்போஸ்தலர்  பணி புத்தகத்தில் வாசிக்கின்றோம். பிலிப்பு அவரிடம், நீர் முழு இருதயத்தோடும் விசுவாசித்தால் ஞானஸ்நானம் பெறத் தடையில்லை என்று கூறியபோது மந்திரி, "இயேசு கிறிஸ்துவைத் தேவனுடைய குமாரனென்று விசுவாசிக்கிறேன்" என்று சொல்லி ஞானஸ்நானம் பெற்றார். ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 8 : 37 )

அப்போஸ்தலரான பவுல், இயேசு கிறிஸ்துவை நேரடியாகத் தரிசித்து ஞானஸ்நானம் பெற்றார்.  ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 9 )

பிலிப்பு சமாரியாவில் நற்செய்தி அறிவித்தபோது சீமோன் எனும் மாயவித்தைக்காரனும் அவரிடம் ஞானஸ்நானம் பெற்றான்.  அவன் மெய்யான மனம் திரும்புதல் இல்லாமல் பிலிப்பு செய்த அற்புதங்களையும் அதிசயங்களையும் கண்டு அதிசயித்து ஞானஸ்நானம் பெற்றான். ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 8:13  ) எனவேதான் அவன் பணத்தின்மூலம் பரிசுத்த ஆவியானவரின் வரத்தைப் பெறுவதற்கு முயன்றான். அப்போஸ்தலரான பேதுரு அவனைப்பார்த்து, "நீ உன் துர்க்குணத்தைவிட்டு மனந்திரும்பி, தேவனை நோக்கி வேண்டிக்கொள்; ஒருவேளை உன் இருதயத்தின் எண்ணம் உனக்கு மன்னிக்கப்படலாம்." ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 8 : 22 ) என்கின்றார். 

அன்பானவர்களே, இன்றும் பலர் இப்படியே மாயவித்தைக்காரனான சீமோனைப்போல  மெய்யான மனம் திரும்புதல் இல்லாமல் வெறும் உணர்ச்சிகளின் அடிப்படையில் ஞானஸ்நானம் பெறுகின்றனர். 

பலர் ஊழியர்களால் வற்புறுத்தப்பட்டு ஞானஸ்நானம் பெறுகின்றனர். இப்படி ஊழியர்களின் வற்புறுத்தலுக்கு உட்படாமல் மெய்யாகவே கிறிஸ்துவை ஏற்று, பாவ மன்னிப்பின் நிச்சயம் பெற்று ஞானஸ்நானம் பெறுவதே வேதம் காட்டும் வழி. இது தேவனுக்கும் நமக்குமான ஒரு ஒப்பந்தம் (Agreement ) என்பதை மறந்துவிடக் கூடாது. 

ஆதவன் 🖋️ 591 ⛪ செப்டம்பர் 10,  2022 சனிக்கிழமை

"என் ஜனங்கள் காணாமற்போன ஆடுகள், அவர்களுடைய மேய்ப்பர்கள் அவர்களைச் சிதறப்பண்ணி, பர்வதங்களில் அலையவிட்டார்கள்; ஒரு மலையிலிருந்து மறுமலைக்குப் போனார்கள்; தங்கள் தொழுவத்தை மறந்துவிட்டார்கள்." ( எரேமியா 50 : 6 )

கிறிஸ்துவை விட்டு ஊழியர்களை மகிமைப்படுத்தும் கூட்டம் இன்று பெருகிவிட்டது. கவர்ச்சியாக பேசும் ஊழியனின் பின்னால் ஒரு கூட்டம், பொய் ஆசீர்வாதங்களையே பேசி மக்களை மயக்கும் ஊழியனின் பின்னால் ஒரு கூட்டம், ஊழியம் எனும் பெயரால் இசை ரசிகர்களைத் திருப்திப்படுத்தும் மனிதனின்பின்னாலும் கிளப் டான்ஸ் போல நடனமாடும் ஊழியனின் பின்னாலும் மதிமயங்கி ஒரு கூட்டம் என  இன்று சினிமா நடிகர்களுக்கு ரசிகர்கள் இருப்பதுபோல ஊழியர்களுக்கும் ரசிகர் கூட்டம்.  

ஆம், இவர்களைத்தான் தங்கள் தொழுவத்தை மறந்த ஆடுகளாக எரேமியா காண்கின்றார்.  நமது தொழுவமும், தொழுவத்துக்கு வாசலும்  ஆயனும்  கர்த்தருமாகிய  இயேசு கிறிஸ்துதான். (யோவான் 10). ஆனால் இன்று தங்களைக் கிறிஸ்தவ  விசுவாசிகள் என்று கூறிக்கொள்ளும் பலர் கிறிஸ்துவைவிட இந்த ஊழியர்களை அன்புசெய்பவர்களாக இருக்கின்றனர்.  இந்த ஊழியர் அடிமை விசுவாசிகள் பதிவிடும் முகநூல் பதிவுகள், வாட்ஸப் செய்தி பகிர்வுகள் இவர்கள் குறிப்பிட்ட  ஊழியர்களின் விசிறிகள் என்பதை  வெளிக்காட்டுகின்றனவே தவிர இவர்கள் கிறிஸ்துவை அறிந்தவர்கள் என்பதைப் பிரதிபலிப்பதில்லை. தாங்கள் துதிபாடும்  இந்த ஊழியர்கள் பேசுவதும் செய்வதும் வேதத்துக்கு ஏற்புடைவைதானா என்று கூட இந்த விசிறிகள் பார்ப்பதில்லை.    

இந்த என் ஜனங்கள் காணாமற்போன ஆடுகள், அவர்களுடைய மேய்ப்பர்கள் அவர்களைச் சிதறப்பண்ணி, பர்வதங்களில் அலையவிட்டார்கள்; ஒரு மலையிலிருந்து மறுமலைக்குப் போனார்கள் என்கின்றார் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து. ஆம், இவர்கள் கிறிஸ்துவைவிட்டுக் காணாமல் போய்விட்டார்கள். இவர்களுக்கு உபதேசங்கள், போதனைகள் இவற்றை கிறிஸ்துவின் ஆவியானவர் கொடுக்கவில்லை. மாறாக இவர்கள் அடிமைகளாக இருக்கும் பிரபல ஊழியர்கள் தான் கொடுக்கின்றனர். அவர்கள்தான் இவர்களை வழி நடத்துகின்றனர். கிறிஸ்துவுக்கும் இவர்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. 

இப்படி அடிமைகளாக இருக்கும் இந்த விசுவாசிகள் ஏதோ குறிப்பிட்ட ஒரு சம்பவத்தில் இவர்கள் நம்பிப்  பின்பற்றும் ஊழியர் பெரிய தவறு செய்யும்போது மனம் வேதனைப்பட்டு மற்றுமொரு பிரபல ஊழியனின் அடிமைகளாக மாறுகின்றனர். ஆம், அவர்கள் இன்றைய வசனம் கூறுவதுபோல மேய்ச்சலைத் தேடி , ஒரு மலையிலிருந்து மறுமலைக்குப் போகிறார்கள். ஆனாலும் இறுதிவரை கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்குத் தங்களை ஒப்புவித்து அவரது வழிநடத்துதலுக்குள் வரத் தயங்குகிறார்கள். காரணம் கிறிஸ்துவின் மெய்யான உபதேசம் இவர்களுக்குக் கசக்கிறது; இவர்களது வாழ்க்கையின் அலங்கோலங்களை வெளிப்படுத்தி அவர்களது இருதயத்தைக் குத்துகின்றது. 

அன்பானவர்களே, குறிப்பிட்ட ஊழியர்களுக்கு அடிமை எனும் நிலையிலிருந்து வெளிவரும்போது மட்டுமே கிறிஸ்துவின் அன்பையும் வழிகாட்டுதலையும் ருசிக்க முடியும்; அப்போது மட்டுமே பாவத்திலிருந்து விடுதலையையும், பாவத்தை மேற்கொள்ளும் வல்லமையையும் பெற முடியும். 

தொழுவத்தை மறந்த ஆடுகளாய் ஒரு மலையிலிருந்து மறு மலைக்கு அலைந்துதிரியும் அவல  நிலையிலிருந்து விடுபட்டு பிரதான மேய்ப்பனாகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் தொழுவத்துக்கு வந்து சேரும்போதே நாம் அவரால் அறிந்துகொள்ளப்பட்டவர்கள் ஆவோம்.  

"அவன் தன்னுடைய ஆடுகளை வெளியே விட்டபின்பு, அவைகளுக்கு முன்பாக நடந்துபோகிறான், ஆடுகள் அவன் சத்தத்தை அறிந்திருக்கிறபடியினால் அவனுக்குப் பின்செல்லுகிறது."( யோவான் 10 : 4 ) என்று இயேசு கிறிஸ்து கூறிய இந்த வார்த்தைகள் வெறும் வசனமல்ல, ஆவிக்குரிய மேலான அனுபவம். ஆடுகள் தொழுவத்துக்குள் வரும்போது மட்டுமே இந்த அனுபவத்தைப் பெற முடியும். 

 ஆதவன் 🖋️ 592 ⛪ செப்டம்பர் 11,  2022 ஞாயிற்றுக் கிழமை

"ஆகிலும், சர்ப்பமானது தன்னுடைய தந்திரத்தினாலே ஏவாளை வஞ்சித்ததுபோல, உங்கள் மனதும் கிறிஸ்துவைப்பற்றிய உண்மையினின்று விலகும்படி கெடுக்கப்படுமோவென்று பயந்திருக்கிறேன்." ( 2 கொரிந்தியர் 11 : 3 )

ஆதியில் ஏதேன் தோட்டத்தில்  பாம்பு ரூபத்தில் வந்த சாத்தான் ஏவாளை வஞ்சித்தது. தேவனது வார்த்தையினை மாற்றிப்பேசி அவளைத் தான் சொல்லுவதுதான் சரி என்று நம்பச் செய்தது. இங்குத்  தவறான உபதேசங்களை பவுல் அடிகள் சாத்தானின் வஞ்சக உபதேசத்துக்கு ஒப்பிட்டுப் பேசுகின்றார். 

கிறிஸ்துவின்மேலான உண்மையான விசுவாசத்துக்குத் தடையான உபதேசங்கள், கிறிஸ்துவின்மேல் மெய்யான அன்பு ஏற்படுத்துவதற்குத் தடையான உபதேசங்கள் எல்லாமே சாத்தானின் வஞ்சக உபதேசங்கள்தான்.  

வேதத்தில் சொல்லப்படாத கிறிஸ்துவைப் பிரசங்கிப்பது சாத்தானின் வஞ்சக உபதேசம். ஒருவேளை இத்தகைய போதனைகளைக் கேட்க மக்கள்  கூட்டம் அதிகம் சேரலாம், மற்றபடி இது வேறொரு கிறிஸ்துவைப் போதிப்பதே,  "எப்படியெனில், உங்களிடத்தில் வருகிறவன் நாங்கள் பிரசங்கியாத வேறொரு இயேசுவைப் பிரசங்கித்தானானால், அல்லது நீங்கள் பெற்றிராத வேறொரு ஆவியையும், நீங்கள் ஏற்றுக்கொள்ளாத வேறொரு சுவிசேஷத்தையும் பெற்றீர்களானால்,  ( 2 கொரிந்தியர் 11 : 4 )  அது சாத்தானின் உபதேசம்.

புதிய ஏற்பாட்டின்படி  நமது உள்ளத்தையும் உடலையும் பரிசுத்தமாகப்  பாதுகாத்து உயிருள்ள  ஜீவ பலியாக தேவனுக்கு ஒப்புக்கொடுப்பதே புத்தியுள்ள மெய்யான ஆராதனை. (ரோமர் 12:1) இதுவே ஆவிக்குரிய ஆராதனை. மட்டுமல்ல, இதுவே ஆவிக்குரிய ஆசீர்வாதத்தின் முதல் படி. ஆனால் ஒருவன், "நீ ஆயிரம் ரூபாய் காணிக்கைக் கொடுத்தால் உனக்கு பத்தாயிரமாகத் தேவன் திருப்பித் தருவார், அதிகம் காணிக்கைக் கொடுப்பவனுக்கு தேவன் அதிகம் கொடுப்பார்" எனப் பிரசங்கித்தால் அது ஏவாளை வஞ்சித்த சாத்தானின் உபதேசம்.  

ஏவாள் இப்படித்தான் வஞ்சிக்கப்பட்டாள்.  "தோட்டத்தின் நடுவிலிருக்கும் மரத்தின் கனியைப் புசிக்க வேண்டாம்; அதை புசிக்கும் நாளில் சாகவே சாவாய்" என்று தேவன் ஆதாம் ஏவாளிடம் கூறியிருந்தார். ஆனால் இன்று ஆசீர்வாத போதகர்கள் ஆசீர்வாதத்தின் அர்தத்தினையும் அதனைப் பெறும் வழிகளையும் மறைத்துப் பிரசங்கிப்பதுபோல சாத்தானும் ஏவாளிடம் மாற்றிப் போதித்தான்.  

"அப்பொழுது சர்ப்பம் ஸ்திரீயை நோக்கி: நீங்கள் சாகவே சாவதில்லை; நீங்கள் இதைப் புசிக்கும் நாளிலே உங்கள் கண்கள் திறக்கப்படும் என்றும், நீங்கள் நன்மை தீமை அறிந்து தேவர்களைப்போல் இருப்பீர்கள் என்றும் தேவன் அறிவார் என்றது." ( ஆதியாகமம் 3 : 4, 5 )

இதனைத்தான் அப்போஸ்தலரான பவுல் அடிகள் இன்றைய தியானத்துக்குரிய வசனத்தில், "ஆகிலும், சர்ப்பமானது தன்னுடைய தந்திரத்தினாலே ஏவாளை வஞ்சித்ததுபோல, உங்கள் மனதும் கிறிஸ்துவைப்பற்றிய உண்மையினின்று விலகும்படி கெடுக்கப்படுமோவென்று பயந்திருக்கிறேன்." என்று குறிப்பிடுகின்றார்.

அன்பானவர்களே, பவுல் அடிகள் பயப்பட்டதுபோலவே இன்று நடைபெறுகின்றது. பிற மதத்து மக்கள்  இன்றைய பல ஊழியர்களது போதனைகள், அவர்களது செயல்பாடுகளால் கிறிஸ்தவ மார்க்கத்தின்மேல் சரியான புரிதல் கொள்ளமுடியாமல் இருக்கின்றனர். ஆம், சத்தியத்தை இப்படித் திரித்துப் போதிப்பது சாத்தானுக்கு ஏற்புடையதாக இருப்பதால் சாத்தான் இவர்களது ஊழியங்களைப் பரிபூரணமாக ஆசீர்வதித்திருக்கின்றான். 

தேவனுடனான நமது தனிப்பட்ட  உறவில் நாம் வளர்ந்தால் மட்டுமே நாம் இந்த வஞ்சக போதனைகளுக்குத் தப்பி சத்தியத்தை அறிய முடியும்.  ஆலயங்களுக்குச் செல்வது, வேதாகமம் வாசிப்பது, ஜெபக்கூட்டங்களில் பங்கு பெறுவது மட்டும் போதாது. நமது தனி ஜெபம்தான் தேவனோடுள்ள உறவைப் பலப்படுத்தும். அந்த உறவு பலப்படும்போது மட்டுமே சாத்தானின் தந்திரங்களுக்குத் தப்பி ஒரு மெய்யான ஜெயமுள்ள ஆவிக்குரிய  வாழ்வு வாழ முடியும்.   

                                        

 ஆதவன் 🖋️ 593 ⛪ செப்டம்பர் 12,  2022 திங்கள் கிழமை

"கடைசியாக, சகோதரரே, சந்தோஷமாயிருங்கள், நற்சீர் பொருந்துங்கள், ஆறுதலடையுங்கள்; ஏகசிந்தையாயிருங்கள், சமாதானமாயிருங்கள், அப்பொழுது அன்புக்கும் சமாதானத்துக்கும் காரணராகிய தேவன் உங்களோடேகூட இருப்பார்." ( 2 கொரிந்தியர் 13 : 11 )

ஆவிக்குரிய பல்வேறு அறிவுரைகளைக் கொரிந்திய சபைக்கு இரண்டு நிரூபங்கள்  மூலம் கூறிய பவுல் அடிகள், இறுதியாக ஐந்து  காரியங்களைக் கூறுகின்றார். அவையே இன்றைய தியானத்துக்குரிய வசனம். 

ஆவிக்குரிய மக்கள் என்று தங்களைக் கூறிக்கொண்டாலும், சிலர் எப்போதும் துக்க முகத்துடனேயே இருப்பார்கள். காரணம், இவர்கள் எப்போதும் தேவனிடம் எதையாவது கேட்டுக்கொண்டே இருப்பார்கள். அவை கிடைக்கவில்லை எனும் கவலைதான் இவர்களை முக வாட்டத்தோடு இருக்கச் செய்கின்றது. எப்போவாவது முகவாட்டம் நமக்கு ஏற்படலாம், கவலை ஏற்படலாம். ஆனால் ஆவிக்குரிய மனிதன் முகத்தின் நாம் சந்தோஷத்தைக் காணவேண்டும். தேவனிடம் விசுவாசமாக இருக்கும்போது மட்டுமே துக்கம் மாறி சந்தோஷம் வரும். எனவேதான் சகோதரரே சந்தோஷமாய் இருங்கள் என்று கூறுகின்றார்.

நாற்சீர் பொருந்துங்கள் என்பது நல்ல பண்புகளோடு வாழுங்கள் என்று பொருள்.   நல்ல கிறிஸ்தவ பண்புகளோடு வாழும்போதுதான் கிறிஸ்துவை நம்மூலம்  பிறர் அறிந்திடமுடியும். 

மன ஆறுதலோடு வாழுங்கள் (என் அறிவுரைக்குச் செவி சாயுங்கள் என்று ஒருங்கிணைந்த மொழிபெயர்ப்பில் கூறப்பட்டுள்ளது) ஆறுதலான சமாதான வாழ்க்கையே கிறிஸ்தவ வாழ்க்கை.

ஏக சிந்தையாயிருங்கள் என்பது, நீங்கள் எல்லோரும் ஓர் மனம் உள்ளவர்களாய் இருங்கள். மட்டுமல்ல, உங்கள் சிந்தனையில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை மட்டுமே ஏக எண்ணமாய்க் கொண்டிருங்கள் என்று பொருள்.

எல்லோரிடமும் மன சமாதானமாய் இருங்கள். சண்டைச் சச்சரவுகள் வேண்டாம். 

இப்படி வாழும்போது, அன்புக்கும் சமாதானத்துக்கும் காரணராகிய தேவன் உங்களோடேகூட இருப்பார். என்கின்றார் பவுல் அடிகள். இங்கு முக்கியமாக நாம் கவனிக்கவேண்டியது, ஜெபியுங்கள் என்றோ, வேதாகமத்தை வாசியுங்கள் என்றோ, காணிக்கை கொடுங்கள் என்றோ, ஆலய வழிபாடுகளிலும் ஜெபக்கூட்டங்களிலும் கலந்துகொள்ளுங்கள் என்றோ பவுல் அடிகள் கூறவில்லை. இவைகளை அவரது நிரூபங்களில் அவர் கூறியிருந்தாலும் இங்கு நிறைவாக, அவர்களைவிட முக்கியமாக இவைகளைக் குறிப்பிடுகின்றார். 

அதாவது ஆவிக்குரிய மனிதன், ஜெபிப்பதுடனும் வேதம் வசிப்பதுடனும் நில்லாமல் கூடவே, மகிழ்ச்சியாகவும், நற்குணங்கள் உள்ளவனாகவும், ஆறுதலுள்ளவனாகவும், ஆவிக்குரிய வாழ்க்கை வாழும் மற்றவர்களுடன் ஒரே சிந்தையுள்ளவனாகவும்,. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவையே - அவரது வசனங்களையே சிந்திப்பவனாகவும், எல்லோருடனும் சமாதானமுள்ளவனாகவும் வாழ்பவனாக இருக்க வேண்டும் என்கின்றார்.  

இப்படி வாழும்போது மட்டுமே அன்புக்கும் சமாதானத்துக்கும் காரணரான தேவன் உங்களோடுகூட இருப்பார் என்று இந்த வசனம் கூறுகின்றது. இன்று நம்மில் பலரும் ஜெபிக்கும்போது , "பவுலோடும் பேதுருவோடும் உமது அப்போஸ்தலர்களோடும் இருந்ததுபோல எங்களோடும் இரும் " என்று ஜெபிக்கின்றோம். அதற்கு முதல்படி பவுல் கூறும்  இந்த ஐந்து காரியங்களையும் நம்மில் ஆராய்ந்து சீர்படுத்தவேண்டியதுதான். 

அன்பானவர்களே, நாம் எல்லோருமே இவற்றை முதலில் நம்மிடம் உருவாக்குவோம். அப்போது சமாதானத்தின் தேவன் நம்மோடுகூட இருப்பார். 

                                    

ஆதவன் 🖋️ 594 ⛪ செப்டம்பர் 13,  2022 செவ்வாய்க் கிழமை 

"தேவனுக்கு மகிமையும் துதியும் உண்டாகும்படி இயேசுகிறிஸ்துவினால் வருகிற நீதியின் கனிகளால் நிறைந்தவர்களாகி, நீங்கள் கிறிஸ்துவின் நாளுக்கென்று துப்புரவானவர்களும் இடறலற்றவர்களுமாயிருக்கவும் வேண்டுதல் செய்கிறேன்." ( பிலிப்பியர் 1 : 10, 11 )

இன்றைய வசனம் ஒரு கிறிஸ்தவன்  எப்படிப்பட்டவனாக இருக்கவேண்டுமென்று விளக்குகின்றது. மட்டுமல்ல, ஒரு ஊழியன் தன்னை நாடிவரும் மக்களுக்கு எதற்கு முன்னுரிமை கொடுத்து ஜெபிக்கவேண்டுமென்றும் விளக்குகின்றது. 

அப்போஸ்தலனாகிய பவுல் தனது செய்கையின்மூலம் நமக்கு வழிகாட்டுகின்றார். அதாவது ஒரு கிறிஸ்தவன் அல்லது கிறிஸ்துவின் விசுவாசி கிறிஸ்துவினால் வருகின்ற நீதியின் கனிகளால் நிரம்பியவனாக இருக்கவேண்டும். கனியற்ற வாழ்க்கை நம்மை பிறருக்கு எடுத்துக்காட்டாது. கனியுள்ள வாழ்வே நம்மை பிறருக்கு வெளிச்சமிட்டுக் காட்டும். அப்படிக்  கனியுள்ள வாழ்க்கை வாழும்போதுதான் தேவனுக்கு மகிமையும் துதியும் உண்டாகும் என்கின்றார் பவுல் அடிகள். 

மேலும் இப்படி ஒரு கிறிஸ்தவ விசுவாசி வாழ்வதே அவனை கிறிஸ்துவின் நாளுக்கு, அதாவது கிறிஸ்துவின் வருகையின்போது அவருக்குமுன் தூய்மையானவர்களாகவும் இடறலற்றவர்களாகவும் இருக்கச் செய்யும்.  என்று கூறுகின்றார் பவுல் அடிகள். 

கனியற்ற வாழ்க்கை வாழ்ந்துகொண்டு நாம் கிறிஸ்துவை அறிவிக்க முடியாது. ஒரு சாதாரண சினிமா நடிகன்கூட மக்களால் ரசிக்கப்படுபவனாக இருக்கவேண்டுமானால் அவனுக்குச் சிலத் தனித் தகுதிகள் வேண்டும். அப்போதுதான் மக்கள் அவனை ஏற்றுக்கொள்வார்கள். அதுபோல கிறிஸ்தவர்களை பிறர் ஏற்றுக்கொள்ளவேண்டுமானால், வித்தியாசமான கனியுள்ள வாழ்க்கை நமக்கு இருக்கவேண்டும்.  

இன்றைய வசனம் ஊழியர்களுக்கும் ஒரு படிப்பினையாக உள்ளது. அதாவது இங்கு அப்போஸ்தலனாகிய பவுல் தனது சபை மக்கள் இப்படிக் கனியுள்ளவர்களாக, தூய்மையுள்ளவர்களாக, கிறிஸ்துவின் வருகைக்குத் தகுதியுள்ளவர்களாக இருக்கவேண்டுமென்று விண்ணப்பம் பண்ணுகின்றார்.

அவர் வெறும் போதனையும், ஆடலும், பாடலும், துள்ளலும் செய்பவராக இருக்கவில்லை. தனது சபை மக்கள் மேற்படி தகுதியுள்ளவர்களாக விளங்கவேண்டுமென்று அவர்களுக்காக தேவனிடம் விண்ணப்பம் பண்ணுபவராக இருந்தார்.   தனது சபைக்கு வருபவர்கள் எல்லோரும் உலக ஆசீர்வாதம் பெற்றவர்களாகவும், செழிப்பானவர்களாகவும் மாறவேண்டுமென்று அவர் ஜெபித்துக்கொண்டிருக்கவில்லை. 

என்னை ஆவிக்குரிய வழியில் நடத்திய பாஸ்டர் ஜான்சன் டேவிட் ஐயா அவர்கள் இப்படிப்பட்டவராக இருந்தார். மிகப்பெரிய தீர்க்கதரிசியாகவும் இருந்தார் அவர். நாம் ஏதாவது தவறோ, விசுவாசக் கேட்டுக்கான காரியங்களோ செய்துவிட்டால் அது அவருக்குத் தெரிந்துவிடும். ஞாயிறு ஆராதனை முடிந்து அவரிடம் ஜெபிக்கச் செல்லும்போது கண்டித்துக் கூறுவார். "தம்பி , எச்சரிக்கையாயிருங்கள் ஆண்டவர் தொலைத்துவிடுவார் " என்று பயமுறுத்தும் விதமாக எச்சரிப்பார். தனிப்பட்ட விதத்தில் நல்ல நண்பனாக இருந்தாலும் ஆண்டவர் கூறிய காரியத்தை நம்மிடம் எச்சரித்துக் கூறாமல் இருக்கமாட்டார். 

ஆனால் ஆசீர்வாதத்தைத் தேடிவரும் விசுவாசிகள் அவரை விரும்புவதில்லை. அவர் எல்லோரையும் சபிப்பதாகக் குறை சொல்வார்கள். அவரது சபைக்கு அருகிலுள்ள பல விசுவாசிகள் அந்த சபையைவிட்டு பேருந்து ஏறி தொலைவிலுள்ள வேறு சபைகளுக்குச் செல்வார்கள். ஆம், விசுவாசிகளுக்கு தங்கள் பாவங்கள் குத்தப்பட்டு சூடு உண்டாக்கும் சபைகளைவிட ஏர்கண்டிஷன் செய்யப்பட்ட குளுகுளு சபைகள் பிடித்துள்ளது. அங்கு சென்று கைதட்டிப்பாடி நடனம் செய்வதே அவர்களுக்குப் பிடித்துள்ளது.  

எனது இன்றைய நிலைமையைச் சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்னரே அவரால் கூறமுடிந்தது. அதுவே இன்றும் தேவன்மேல் அசைக்க முடியாத விசுவாசத்தை என்னுள் வளர்ந்துள்ளது. ஆனால் இத்தகைய ஊழியர்கள் எண்ணிக்கையில் மிகமிகக் குறைவாகவே இன்று உள்ளனர். 

அன்பானவர்களே, இதனை வாசிக்கும் நீங்கள் விசுவாசிகளாக இருந்தால், கனியுள்ள வாழ்க்கை வாழ ஒப்புக்கொடுங்கள். ஊழியராக இருந்தால் பவுலைப்போல உங்கள் சபை விசுவாசிகளின் உலக ஆசீர்வாதத்துக்காக அல்ல,  அவர்கள்  பரிசுத்தமும் கனியுள்ளவர்களுமாக மாறிட ஜெபியுங்கள்.  

                                       

ஆதவன் 🖋️ 595 ⛪ செப்டம்பர் 14,  2022 புதன்கிழமை 

"நீங்கள் கிறிஸ்துவின் நாமத்தினிமித்தம் நிந்திக்கப்பட்டால் பாக்கியவான்கள்; ஏனென்றால் தேவனுடைய ஆவியாகிய மகிமையுள்ள ஆவியானவர் உங்கள்மேல் தங்கியிருக்கிறார்; அவர்களாலே தூஷிக்கப்படுகிறார்; உங்களாலே மகிமைப்படுகிறார்." (1 பேதுரு 4:14)

இன்றைய காலகட்டங்களில் கிறிஸ்தவர்களுக்கு எதிரானச் செயல்பாடுகளும் அவதூறானச் செய்திகளும் அதிகமாகப் பரவியுள்ளன. ஆனால் இத்தகைய செயல்பாடுகளுக்கு நாம் பதிலளிக்கவோ மற்ற உலக மனிதர்கள் செய்வதுபோல எதிர்ச்செயல் செய்யவோ வேதம் நமக்கு அறிவுறுத்தவில்லை.  

இப்படி நிந்திக்கப்படுவது நம்மை பாக்கியவானாக மாற்றுகின்றது என்கின்றது இன்றைய வசனம். அது ஏன்? எப்படி?

கிறிஸ்துவுக்கு உரிமையானவர்களாகிய நம்மேல் தேவனுடைய ஆவியானவர் குடிகொண்டுள்ளார். எனவே நம்மை ஒருவர் தூஷிப்பது, அவமானப்படுத்துவது, கேவலமாய் நடத்துவது இவை நம்மையல்ல நம்முள் இருக்கும் ஆவியானவரையே அப்படிச் செய்கின்றார்கள். இப்படி அவர்கள் நம்மை இழிவாய் நடத்தும்போது நாம் அமைதியாக இருந்தோமானால் நமது அமைதிச் செயல்பட்டு நம்மூலம் ஆவியானவர் மகிமைப்படுத்தப்படுகின்றார்.

இயேசு கிறிஸ்து துன்பங்களை சகித்தார். மட்டுமல்ல நமக்கும் அவ்வாறு சகிக்கவேண்டுமென்று அறிவுறுத்தினார். ஒரு கன்னத்தில் அறைபவனுக்கு மறுகன்னத்தையும் காட்டு என்பதே அவரது போதனை. அந்தப் போதனையின்படி வாழும்போது தேவன் மகிமைப்படுகின்றார். இப்படி வாழ்வது  சிரமமான காரியம்தான். ஆனால், நாம் அன்றாட ஜெபத்தில் தேவனிடம் பெலத்தைப் பெற்று இருப்போமானால் இந்தக்காரியத்தில் ஜெயம் பெறலாம். 

அன்னை தெரசா அவர்கள் ஒருமுறை கல்கத்தா நகரில் ஏழைகளுக்காக கடைகளில்  பணம் சேகரிக்கச் சென்றார். ஒரு கடைக்காரன் கோபத்தில் அவரது மேல் காறித்துப்பி விட்டான். அன்னை அவர்கள் சிரித்துக்கொண்டே அவனிடம், "எனக்குள்ளதைத் தந்துவிட்டாய், இந்த ஏழை குழந்தைகளுக்கு ஏதாவது தா" என்றார். இந்தச் செய்கை அவனை அழச் செய்தது. அன்னையிடம் மன்னிப்புக்கேட்டு அவர்களுக்கு உதவினான். 

ஒரு பள்ளியில் குறிப்பிட்ட ஒரு ஆசிரியருக்கு வேண்டப்படாதவர் ஒருவர் தனக்கு ஆதரவாகச் சிலரைத் தன்னுடன் சேர்த்துக்கொண்டு எப்போதும் அவரைப்பற்றி பள்ளி நிர்வாகத்துக்கு குறைகூறி மனு அனுப்பிக்கொண்டிருந்தார். அந்தப் பள்ளி நிர்வாகம் அந்த ஆசிரியரைக் கூப்பிட்டு விசாரித்து அந்தக் குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்று அறிந்ததால் அவர்மீது நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால் அந்தக் குறிப்பிட்ட ஆசிரியர் பள்ளிக்கும் பள்ளி நிர்வாகத்துக்கும் உண்மையுள்ளவராகப்  பணியாற்றிவந்தார். 

அந்த ஆசிரியர் நல்ல எழுத்தாற்றல் உள்ளவர். அவர் ஓய்வு நேரங்களில் கதைகள், நாவல்கள் எழுதிவந்தார்.  அவர் எழுதிய நாவலுக்கு இந்திய அரசு சாகித்ய அகாடமி விருது வழங்கி கௌரவித்தது. மறுநாள் அனைத்துப் பத்திரிகைகளிலும் , வானொலி , தொலைக்காட்சிகளிலும் அவரைபற்றியும் அவர் பணிபுரியும் பள்ளி பற்றியும் செய்திகள் வெளியாயின. பள்ளி நிர்வாகத்தின் பேட்டியும் தொலைக்காட்சிகளில் வெளியாயின.  ஆம், அந்த ஆசிரியரால் அந்தப்பள்ளி மகிமை அடைந்தது. இன்னொரு செய்தி, அவர் அந்தப் பரிசு பெற்ற நாவலில் தனது பள்ளி அனுபவத்தை, தான்  நிந்திக்கப்பட்ட அனுபவத்தையே கதையாக்கியிருந்தார்.

அன்பானவர்களே, இந்த ஆசிரியரைப்போலவே நாம் கிறிஸ்துவின் நாமத்தினிமித்தம் நிந்திக்கப்பட்டால் பாக்கியவான்கள்; அந்த ஆசிரியர் அந்த நிந்தனையையே கதையாக்கி வெற்றிபெற்றதுபோல தேவன் நமக்கும்  ஜெயம் தருவார்.  ஆம், ஏனென்றால் தேவனுடைய ஆவியாகிய மகிமையுள்ள ஆவியானவர் நம்மேல்  தங்கியிருக்கிறார்; மற்றவர்களால் தூஷிக்கப்பட்டாலும் நம்மால் மகிமைப்படுகிறார்.

நமக்கு எதிரான நிந்தனைகளைச் சகித்து வாழ பெலன் வேண்டி ஜெபிப்போம். கர்த்தர்தாமே நம்மை ஆசீர்வதிப்பார். 

                                

ஆதவன் 🖋️ 596 ⛪ செப்டம்பர் 15,  2022 வியாழக்கிழமை

"என் சிநேகத்துக்குப் பதிலாக என்னை விரோதிக்கிறார்கள், நானோ ஜெபம்பண்ணிக்கொண்டிருக்கிறேன்." (சங்கீதம் 109:4)

இன்றைய வசனம் நமக்கு எதிராகச்  செயல்படுபவர்களிடம் நாம் நடந்துகொள்ளவேண்டிய முறைமையைக் கூறுகின்றது. உலக மனிதர்கள் எதிராகச் செயல்படுபவர்களிடம் பழிக்குப் பழி வாங்கத் துடிக்கின்றார்கள். இன்றையப்  பத்திரிக்கைச் செய்திகளை நாம் படிக்கும்போது பல கொலைகள் வைராக்கியத்தினாலும் பழிக்குப்பழி வாங்கும் எண்ணத்தினாலும் தான் நடக்கின்றன என்பது புரியும். 

ஆனால் இங்குத் தாவீது, என்  சிநேகத்துக்குப்  பதிலாக என்னை விரோதிக்கிறார்கள் என்று கூறுகின்றார்.  ஆம், இப்படியும் சிலவேளைகளில் நமக்குச் சம்பவிக்கலாம். அதாவது நாம் நம்பி அன்புடன் பழகும் சிலர் நமக்கு விரோதமாக எழும்புவதுண்டு. இதனைத்தான் துரோகம் என்கின்றோம். இப்படிப்பட்டத் துரோகிகள் சிலரையும் நாம் வாழ்வில் சில வேளைகளில் நாம் சந்திக்கலாம். இயேசு கிறிஸ்துவைக் காட்டிக்கொடுத்த யூதாஸ் ஒரு துரோகி. இயேசு கிறிஸ்துவின் சிநேகத்துக்குப் பதிலாக அவன் அவரை விரோதித்தான். 

இப்படிப்பட்ட வேளைகளில் நாம் உலக மனிதர்களைப்போல செயல்படாமல் ஜெபிக்கவேண்டுமென்று வேதம் இங்கு அறிவுறுத்துகின்றது. தாவீது அதைத்தான் செய்கின்றார். "என் சிநேகத்துக்குப் பதிலாக என்னை விரோதிக்கிறார்கள், நானோ ஜெபம் பண்ணிக்கொண்டிருக்கிறேன்."  என்கின்றார். அப்போஸ்தலராகிய பவுல் அடிகளும், "நீங்கள் ஒன்றுக்குங்கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்." ( பிலிப்பியர் 4 : 6 ) என்கின்றார். 

எதற்கும் கவலைப்படாமல் ஸ்தோத்திரத்தோடு எல்லாவற்றையும் தேவனுக்குத் தெரியப்படுத்தும்போது கர்த்தரே நமக்காக யுத்தம் செய்வார். நாம் நினைப்பதற்கு அப்பாற்பட்ட மரண அடி துரோகிகளுக்கு கிடைக்கும். அல்லது அவர்களை நமக்கு நண்பர்களாக மாற்றுவார். 

எனக்குத் தெரிந்த உண்மையுள்ள ஒரு பாஸ்டர் மிகவும் சிரமப்பட்டு ஒரு நான்கு சென்ட் நிலம் வாங்கியிருந்தார். அவருக்கு ஆண்  பிள்ளைகள் கிடையாது. அந்த ஊரிலிருந்த ஒரு ரௌடி அவரது அந்த நிலத்தை ஆக்கிரமித்து எல்லைக் கல்லை மாற்றி நாட்டி நிலத்தின் ஒருபகுதியை தனக்குரியதாக மாற்றிவிட்டான். அவனோடு சண்டைபோட பாஸ்டரால் முடியவில்லை. அன்று இரவு அவர், "ஆண்டவரே நீர் எனக்கு ஆண் பிள்ளையைத் தரவில்லை. எனது சிறிய வருமானத்தில் குருவி சேகரிப்பதுபோல பணம் சேர்த்து இந்த நிலத்தை வாங்கினேன். இன்று அதுவும் எனக்கு இல்லாமல் போய்விட்டதே. என்னால் அவனோடு சண்டைபோடவும் முடியாது. நீரே எனக்கு உதவும்" என்று  கண்ணீரோடு ஜெபித்தார். 

மறுநாள் காலை ஐந்து ஐந்தரை மணிக்கு அந்த ஊரிலிருந்து ஒருவர் பாஸ்டரிடம் வந்து, "ஐயா, உங்க நிலத்தை அபகரித்த அந்த ரௌடி இரவு ஹார்ட் அட்டாக் வந்து இறந்துவிட்டான்" என்றார். இந்தச் சம்பவத்தை என்னிடம் கூறிய அந்த பாஸ்டர் சொன்னார், "உண்மையில் நான் அவனுக்காக வருந்துகிறேன். அவன் சாகவேண்டுமென்று நான் எண்ணவில்லை; அப்படி ஜெபிக்கவும் இல்லை. அவனை நினைத்தால் மனதுக்கு சங்கடமாக இருக்கிறது. ஏன் ஆண்டவரே அவனுக்கு இப்படி ஒரு தண்டனையைக் கொடுத்தீர்? என்றுதான் நான் ஆண்டவரிடம் வருந்தி மன்றாடுகிறேன்" என்றார்.  ஆம், அன்பானவர்களே, எல்லாவற்றையும் ஜெப விண்ணப்பங்கள் மூலம் தேவனுக்குத் தெரியப்படுத்துவோம். அவரே எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வார்.

"கர்த்தர் உங்களுக்காக யுத்தம்பண்ணுவார்; நீங்கள் சும்மாயிருப்பீர்கள்." ( யாத்திராகமம் 14 : 14 )   

                                       

ஆதவன் 🖋️ 597 ⛪ செப்டம்பர் 16,  2022 வெள்ளிக்கிழமை

"ஆகையால் முதலாம் உடன்படிக்கையின் காலத்திலே நடந்த அக்கிரமங்களை நிவிர்த்திசெய்யும்பொருட்டு அவர் மரணமடைந்து, அழைக்கப்பட்டவர்கள் வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட நித்திய சுதந்தரத்தை அடைந்துகொள்வதற்காக, புது உடன்படிக்கையின் மத்தியஸ்தராயிருக்கிறார். ஏனென்றால், எங்கே மரணசாதனமுண்டோ, அங்கே அந்த சாதனத்தை எழுதினவனுடைய மரணமும் உண்டாகவேண்டும்." ( எபிரெயர் 9 : 15, 16 )

மோசே மூலம் கொடுக்கப்பட்ட பழைய உடன்படிக்கை மக்கள் கடைபிடிக்கவேண்டிய கட்டளைகளைக் கொடுத்ததே தவிர அவைகளால் மக்களைத் தூய்மைப்படுத்தமுடியவில்லை.  மக்களது அக்கிரம சிந்தனை மாறவுமில்லை. அதாவது அந்தக்கட்டளைகளால் உள்ளான மனிதனில் எந்த மாறுதலும் செய்யமுடியவில்லை. 

கட்டளைக்குக் கொடுத்த முக்கியத்துவத்தை மக்கள் மனிதாபிமானத்திற்கு கொடுக்கவில்லை. எனவேதான் இயேசு கிறிஸ்து ஓய்வு நாளில் மக்களுக்குக் குணமளித்ததை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இப்படி வாழ்வது தேவனுக்கு ஏற்புடைய மக்களாக நம்மை மாற்றிட முடியாது. எனவேதான் செயலிழந்த பழைய உடன்படிக்கையினை மாற்றி இயேசு கிறிஸ்து தனது இரத்தத்தால் புதிய உடன்படிக்கையினை ஏற்படுத்தினார். 

இதனையே, "முதலாம் உடன்படிக்கையின் காலத்திலே நடந்த அக்கிரமங்களை நிவிர்த்திசெய்யும்பொருட்டு அவர் மரணமடைந்து, அழைக்கப்பட்டவர்கள் வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட நித்திய சுதந்தரத்தை அடைந்துகொள்வதற்காக, புது உடன்படிக்கையின் மத்தியஸ்தராயிருக்கிறார்."  என்று இன்றைய வசனம் கூறுகின்றது. 

புதிய உடன்படிக்கையினை மரண சாசனம் என்று இன்றைய வசனம் கூறுகின்றது. மரண சாசனம் என்பது உயில். ஒரு தகப்பன் தான் மரணமடையுமுன் தனது சொத்துக்களைக்குறித்து உயில் எழுதுவதுபோல இயேசு கிறிஸ்து புதிய உடன்படிக்கையின் மக்களாகிய நமக்காக எழுதிய உயில் தான் புதிய உடன்படிக்கை.  

இங்கு எபிரெய நிருப ஆசிரியர் மேலும் ஒரு உண்மையினை விளக்குகின்றார். அதாவது தகப்பன் எழுதிய உயில் தகப்பனது மரணத்துக்குப்பின்தான் உயிர் பெறும். அதற்குமுன் அந்த உயில் செல்லாது. அதுபோல இயேசு கிறிஸ்து எழுதிய புதிய உடன்படிக்கையின் உயிலானது அவரது மரணத்தினால் உயிர் பெற்று இன்றும் அதனை விசுவாசித்து ஏற்றுக்கொள்பவர்களை உயிர்ப்பிக்கின்றது. இதனையே இன்றைய வசனத்தில்  "ஏனென்றால், எங்கே மரணசாதனமுண்டோ, அங்கே அந்த சாதனத்தை எழுதினவனுடைய மரணமும் உண்டாகவேண்டும்." ( எபிரெயர் 9 : 16 ) என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

அன்பானவர்களே, பழைய ஏற்பாட்டின் (உடன்படிக்கையின்) மூலம் மக்களை முற்றும் முடிய இரட்சிக்க முடியாததால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இரத்தம் சிந்தி வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட நாம் எல்லோரும் நித்திய சுதந்தரத்தை அடைந்துகொள்வதற்காக, புதிய உடன்படிக்கையின் உயிலை எழுதியுள்ளார். அவரது மரணத்தால் அதனை உயிர்பெறச் செய்தார்.

தகப்பன் எழுதிய உயிலில் சில நிபந்தனைகளை விதித்திருந்தால் அந்த நிபந்தனைக்கு உட்பட்டவர்களுக்கே உயிலில் குறிப்பிடப்பட்டவைகள் சொந்தமாகும். இயேசு கிறிஸ்துவின் உயிலின் முக்கிய சொத்து ஆத்தும இரட்சிப்பு. அதனை பெற்றுக்கொள்ள கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவும் ஒரு நிபந்தனை விதித்துள்ளார். அது:- 

"என்னவென்றால், கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய். நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும், இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கைபண்ணப்படும்." ( ரோமர் 10 : 9,10 )

                                            

ஆதவன் 🖋️ 598 ⛪ செப்டம்பர் 17,  2022 சனிக்கிழமை

"என் ஆவி என்னில் தியங்குகிறது; என் இருதயம் எனக்குள் சோர்ந்துபோகிறது. பூர்வநாட்களை நினைக்கிறேன், உமது செய்கைகளையெல்லாம் தியானிக்கிறேன்; உமது கரத்தின் கிரியைகளை யோசிக்கிறேன்." ( சங்கீதம் 143 : 4, 5 )

ஆவிக்குரிய வாழ்வில் சோர்வுகளும் மனமடிவுகளும் ஏற்படுவதுண்டு. எவ்வளவுதான் நாம் கிறிஸ்துவுக்குள் பலம்கொண்டாலும் சிலவேளைகளில் நமது பிரச்சனைகளை; துன்பங்களை  நாம் துன்மார்க்கருடைய செழிப்புடன் ஒப்பிட்டுப்பார்த்துவிடும்போது மனம் சோர்வடைந்துவிடுகின்றோம். துன்மார்க்கன் செழிப்பான என்றுதான் வேதம் கூறுகின்றது. (சங்கீதம் 73) ஆனால் அது புல்லைப்போன்ற செழிப்பு. புல்  எப்படி வெயிலால் வறண்டு போகிறதோஅதுபோல அவர்கள் வறண்டுபோவார்கள். 

ஆனால், ஆவிக்குரிய வாழ்வு வாழும்போது நமக்குள் ஏற்படும் சோர்வுகளின்போது நாம் இவைகளைச் சிந்திப்பதில்லை. நாம் இவ்வளவு நேர்மையாக, உண்மையாக வாழ்ந்து என்ன பயன்? எனும் எண்ணம் எழுந்துவிடுகின்றது. 

இதனை மேற்கொள்ள தாவீது இன்றைய தியானத்தில் வழி காட்டுகின்றார். அதாவது நாம் கிறிஸ்துவுக்குள் வளர ஆரம்பிக்கும் ஆரம்ப நாட்களில் தேவன் நமது வாழ்வில் பல்வேறு அதிசயங்களையும் அற்புதங்களையும் செய்திருப்பார். ஒவ்வொருவரையும் தேவன் இப்படியே வித்தியாசமாக நடத்துகின்றார். நாம் விசுவாசத்தில் வளர்வதற்காகவே  தேவன் இப்படிச் சில அதிசயங்களை நமது வாழ்வில் செய்து நம்மை வழிநடத்துகின்றார்.  

நமது வாழ்வில் சோதனைகள் ஏற்பட்டு மனம் மடியும்போது தேவன் நமக்குச் செய்த அதிசயங்களை நாம் தியானிக்கும்போது  நம்மை அவை  உயிர்ப்பிக்கும். தேவன்மேல் நமக்குள்ள விசுவாசம் குறைந்திடாமல் நம்மைப் பாதுகாக்கும். இதனையே தாவீது இங்குக் கூறுகின்றார், "என் இருதயம் எனக்குள் சோர்ந்துபோகிறது. பூர்வநாட்களை நினைக்கிறேன், உமது செய்கைகளையெல்லாம் தியானிக்கிறேன்; உமது கரத்தின் கிரியைகளை யோசிக்கிறேன்." என்று. 

தாவீதுக்கு ஏற்பட்டச் சோதனைகள் அதிகம். சகோதரர்கள் அவனிடம் அன்பாய் இருக்கவில்லை. பிற்காலத்தில் சவுல், சொந்த மகன் அப்சலோம் என அவனது உயிரை வாங்கத் துடித்தவர்கள் பலர். ஆனால் இந்தச் சூழ்நிலைகளில் தாவீது தனது பழைய வாழ்வை எண்ணிப்பார்த்திருப்பார்.  ஆடு மேய்த்துக்கொண்டு வனாந்தரத்தில் அலைந்த நாட்கள்..... அப்போது தான் பிற்காலத்தில் ராஜாவாக ஆவோம் என அவன் எண்ணியதில்லை. ஆனால் தேவன் அவனை உயர்த்தி வைத்தார். 

அன்பானவர்களே, தாவீதின் இந்தப் பழக்கத்தை நாமும் பின்பற்றுவோம். நமது பழைய வாழ்வை எண்ணிப்பார்ப்போம். அதிலிருந்து தேவன் நம்மை எப்படியெல்லாம் மாற்றி வழிநடத்தி வந்துள்ளார் என்பதனைச் சிந்தித்துப்பார்ப்போம். அவற்றுக்காக தேவனுக்கு நன்றி கூறுவோம். 

இப்படி நமது பழைய நாட்களை எண்ணும்போது தேவன்மேல் நமக்கு மேலும் அன்பும் விசுவாசமும் அதிகரிக்கும். 

நமது ஆவி நமக்குள் தியங்கும்போது சோர்ந்துபோகாமல் பூர்வநாட்களை நினைப்போம் அவரது  செய்கைகளையெல்லாம் தியானிப்போம் அவரது கரத்தின் கிரியைகளை யோசிப்போம். கர்த்தர் நமக்கு ஆறுதலும் மகிழ்ச்சியும் தந்து நமது சோர்வை மாற்றுவார். 

                                        

ஆதவன் 🖋️ 599 ⛪ செப்டம்பர் 18,  2022 ஞாயிற்றுக்கிழமை  

"தேசத்துக்குடிகளோடே கர்த்தருக்கு வழக்கு இருக்கிறது; அதேனென்றால் தேசத்திலே உண்மையும் இல்லை, இரக்கமும் இல்லை; தேவனைப்பற்றிய அறிவும் இல்லை. பொய்யாணையிட்டு, பொய்சொல்லி, கொலைசெய்து, திருடி, விபசாரம்பண்ணி, மிஞ்சி மிஞ்சிப்போகிறார்கள்; இரத்தப்பழிகளோடே இரத்தப்பழிகள் சேருகிறது." ( ஓசியா 4 : 1, 2 )

இன்றைய பத்திரிக்கைச் செய்திகளைப் படிக்கும்போது தேவனது இன்றைய தியானத்துக்குரிய இந்த வார்த்தைகள்தான் நினைவில் வருகின்றது. விபச்சாரம், வேசித்தனம் அதனை மறைக்கும் நோக்கத்தில் நடக்கும் கொலைகள், பொய், களவு என தேசம் தேவனது சாபத்தைப் பெறும் நிலையில்தான் இருக்கின்றது. தமிழகத்திலேயே இப்படி எனும்போது வட இந்தியா இன்னும் அதிகப் பாவ இருள் சூழ்ந்துள்ளதாக இருக்கின்றது.  குறிப்பாக வடஇந்தியாவில் விபச்சாரமும் போதைப் பழக்கமும் அதிக அளவில் உள்ளன.

ஆனால் இன்றைய ஆசீர்வாத பிரசங்கிகள் எதனைப்பற்றியும் கவலை கொள்ளாமல், தேச ஆசீர்வாத உபவாச ஜெபம் நடத்துகின்றார்கள். விபச்சாரமும் வேசித்தனமும் நிறைந்த நாட்டுக்கு எந்த உபவாச ஜெபமும் ஆசீர்வாதத்தைக் கொண்டுவராது. அப்படி ஒரு பாவ இருளான நாட்டினை தேவன் எப்படி ஆசீர்வதிக்க முடியும்?

மனம் திரும்புதலுக்கேற்ற செய்திகள் மக்களுக்குக் கொடுக்கப்பட வேண்டுமேயல்லாமல் ஆசீவாதச் செய்தியல்ல. ஒட்டுமொத்த தேசமும் விபச்சாரத்தில், போதை பழக்கத்திலும், லஞ்சம், ஊழல், பொய், களவு , கொலைவெறி என இருக்கும்போது ஆசீர்வாதச் செய்திகள் அர்த்தமில்லாதவையே. 

கர்த்தர் சொல்கிறார், "இதினிமித்தம் தேசம் புலம்பும்; அதில் குடியிருக்கிற அனைவரோடுங்கூட மிருகஜீவன்களும் ஆகாயத்துப் பறவைகளும் தொய்ந்துபோகும்; கடலின் மச்சங்களும் வாரிக்கொள்ளப்படும்." ( ஓசியா 4 : 3 ) ஆம், தேசம் மனம் திரும்பாதபட்சத்தில் இதுதான் நடக்கும். 

அன்பானவர்களே, இதனால்தான் நாம் அனைவருமே கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அறிவிக்க அழைக்கப்படுகின்றோம். தேசத்துக்காக ஜெபிக்க அழைக்கப்படுகின்றோம். தேச ஆசீர்வாதத்துக்கு அல்ல; தேசம்  பாவ இருளைவிட்டு கிறிஸ்துவின் மெய்யான ஒளியைப் பெற்றுக்கொள்ள ஜெபிக்க அழைக்கப்படுகின்றோம்.

தேசத்தின் இந்தப்பாவ இருள் அகல ஜெபிக்காமல் நமது சுய ஆசீர்வாதத்துக்காகவே ஜெபித்துக்  கொண்டிருந்தோமானால்  நம்மைவிட அறிவிலிகள் கிடையாது. ஆசீர்வாத ஜெபக் கூட்டங்கள் நடத்தி காணிக்கை வசூலித்து ஆலயங்கள் கட்டுவதும், மருத்துவமனை கட்டுவதும் தேவன் காட்டும் வழியல்ல.  இருளைவிட்டு மெய்யான வழியை மக்கள் கண்டறிந்து ஒளியினிடம் வரச் செய்வதே நமது இன்றைய முக்கிய கடமை.

அன்பானவர்களே, கிறிஸ்துவின் வருகைக்குமுன் நமது தேசம் இன்றைய அலங்கோல நிலையிலிருந்து விடுபடவேண்டும். ஆளுவோர்கள் அதற்கேற்ற விதமாக நாட்டின் சட்டங்களை செயல்படுத்தவும், சட்டத்தை நிறைவேற்றும் துறைகள் உண்மையாகவும் நேர்மையாகவும் செயல்படவும் நாம் ஜெபிக்கவேண்டியது அவசியம். 

ஆசீர்வாத உபதேச ஊழியர்களை ஒதுக்கி, மனம் திரும்புதலுக்கேற்ற செய்திகளையும் வழிகளையும் காண்பிக்கும் ஊழியர்களைப் பின்பற்றி மெய்யான மனம் திரும்பிய வாழ்வு வாழ நம்மை ஒப்புக்கொடுப்போம். 

பண ஆசீர்வாதங்களுக்கே முக்கியத்துவம் கொடுத்து வாழ்வோமானால் நாம் அழிந்துபோவது நிச்சயம். "கர்த்தருடைய உக்கிரத்தின் நாளிலே அவர்கள் வெள்ளியும் அவர்கள் பொன்னும் அவர்களைத் தப்புவிக்கமாட்டாது; அவருடைய எரிச்சலின் அக்கினியினால் தேசமெல்லாம் அழியும்; தேசத்தின் குடிகளையெல்லாம் சடிதியாய் நிர்மூலம்பண்ணுவார்." ( செப்பனியா 1 : 18 )

                                          

ஆதவன் 🖋️ 600 ⛪ செப்டம்பர் 19,  2022 திங்கள்கிழமை   

"உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து, உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்." ( நீதிமொழிகள் 3 : 5, 6 )

மனிதர்கள் அனைவருக்கும் தேவன் புத்தியைக் கொடுத்துள்ளார். அந்தப் புத்தி நாம் உலகினில் அறிவுபூர்வமாக வாழ்வதற்கும், செயல்படுவதற்குமே தவிர அதனையே நம்பி வாழ்வதற்கல்ல. நமது முழு நம்பிக்கையும் கர்த்தரைச் சார்ந்தே இருக்கவேண்டும் என்கின்றது இன்றைய வசனம். நமது மனத்தின்படி முடிவுகள் எடுக்கும்போது அதனை தேவனுக்குத் தெரியப்படுத்தி அவரது சித்தத்தை அறிந்து செயல்படுவதே சிறந்தது.

இன்று உலக அறிஞர்களும் சாதாரண மக்களும் பெரும்பாலும் கர்த்தரை மறந்து தங்களது புத்தி சொல்வதன்படியே வாழ்கின்றனர். இதுவே பெரும்பாலும் பிரச்சனைகளுக்குக் காரணமாக அமைந்துவிடுகின்றது. 

ஆதாம் ஏவாள் இப்படித்தான் பாவத்தில் வீழ்ந்தார்கள். அவர்கள் தேவனது வார்த்தைகளை மறந்து தங்கள் சொந்த புத்தியின்படி செயல்பட்டனர். வீழ்ச்சியடைந்தனர். சுய புத்தியில் நடக்கும் பாதை பெரும்பாலும் சரியாக அமைவதில்லை. உலக மக்களுக்கு ஒருவேளை அவை வெற்றி வாழ்க்கைபோலத் தெரியலாம். ஆனால், நமது ஆவிக்குரிய வாழ்வானது சுய புத்தியின்படி நடக்கும்போது தோல்வியையேத்  தரும். 

மேலும் சுய புத்தியால் வெற்றிபெறும்போது நம்மை அறியாமல்  கடவுளை நாம் இரண்டாம் இடத்துக்குத் தள்ளுகின்றோம். "என்னால் தான்" அல்லது, "என் கடின உழைப்பால்தால்" நான் வெற்றிபெற்றேன் எனும் பெருமை மனிதர்களுக்குள் வந்து விடும். மட்டுமல்ல, மற்றவர்களை அற்பமாக் எண்ணும்  மனநிலையும் ஏற்பட்டுவிடும். "உன் ஞானமும் உன் அறிவுமே உன்னைக் கெடுத்தது; நான்தான், என்னைத் தவிர ஒருவருமில்லையென்று உன் இருதயத்தில் எண்ணினாய்."  ( ஏசாயா 47 : 10 ) என்று ஏசாயா பாபிலோனைப்பார்த்துக் கூறுவதுபோல ஞானமும் அறிவுமே நம்மைக் கெடுத்துவிடும். 

நன்றாக படிக்கக்கூடிய பல மாணவர்கள், நல்ல மதிப்பெண் பெற்று நல்ல கல்லூரிகளில் இடம் பிடித்து, படித்து பட்டம்பெற்று, வேலையும் கிடைத்தபின்பும் அவர்களது வாழ்க்கை நன்றாக அமையாத சூழ்நிலையினை பல சாட்சிகள் மூலம் கேட்டுள்ளேன். "நன்றாகக் படிப்பான் பிரதர், பல்கலைக்கழகத்தில்  முதலிடம் (University Rank) பெற்றான்  ஆனால் அவன் வாழ்க்கை இப்படி நாசமாகி விட்டது" என்று ஒருமுறை ஒரு அம்மா அழுதார்கள். 

அன்பானவர்களே, பிறரைவிட நமக்கு அறிவும் எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய சக்தியும் இருக்கலாம். ஆனால் அது மட்டுமே நமது வாழ்க்கையினை சிறப்பாக மாறிட மாட்டாது. எந்தச் சூழ்நிலையிலும் நமது இருதயம் கர்த்தரைவிட்டு பின்வாங்கிடாமல் காத்துக்கொள்வோம். அவரே நமக்கு அறிவையும் ஞானத்தையும் தருகின்றவர். 

எந்த வேலையில் இருந்தாலும், எவ்வளவு சம்பாதித்தாலும் கர்த்தரே நமது நம்பிக்கையாக இருக்கவேண்டும். நமது முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து, நமது செயல்பாடுகளையும் அவருக்கு ஏற்றதாக மாற்றி அவரையே வாழ்வில் நினைத்துக்கொள்ளும்போது அவர் நமது பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்.

அப்போஸ்தலரான பவுல் கர்த்தரோடு இணைந்து அவரது சித்தத்துக்கு ஒப்புக்கொடுத்து ஊழியம் செய்ததால் தனது  ஊழியத்தில் சுய சித்தத்துக்கு இடமளிக்கவில்லை.  அவரைக் கர்த்தரே ஊழியத்தில் வழி நடத்தினார். அவர்களது சுய சித்தத்தைத் தேவனே தடைப்பண்ணி தேவ சித்தம் செய்யச் செய்தார். 

"அவர்கள் பிரிகியா கலாத்தியா நாடுகளைக் கடந்துபோனபோது, ஆசியாவிலே வசனத்தைச் சொல்லாதபடிக்குப் பரிசுத்த ஆவியினாலே தடைபண்ணப்பட்டு, மீசியா தேசமட்டும் வந்து, பித்தினியா நாட்டுக்குப்போகப்பிரயத்தனம் பண்ணினார்கள்; ஆவியானவரோ    அவர்களைப்                        போகவொட்டாதிருந்தார். ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 16 : 6, 7 )

ஆம் அன்பானவர்களே நமது முழு இருதயத்தோடு கர்த்தர்மேல் நம்பிக்கையாய் இருப்போம்;  அவரையே நினைத்துக்கொள்வோம், அவர் நமது பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்.  

                                     

ஆதவன் 🖋️ 601 ⛪ செப்டம்பர் 20,  2022 செவ்வாய்க்கிழமை   

"அக்காலத்திலே நான் எருசலேமை விளக்குக்கொளுத்திச் சோதித்து, வண்டல்போலக் குழம்பியிருக்கிறவர்களும், கர்த்தர் நன்மை செய்வதும் இல்லை தீமைசெய்வதும் இல்லையென்று தங்கள் இருதயத்தில் சொல்லுகிறவர்களுமான மனுஷரைத் தண்டிப்பேன்."( செப்பனியா 1 : 12 )

இன்றைக்கு நம்மிடையே சிலர் கடவுளையும் அவரது செயல்களையும் நம்புவதில்லை. அவர்களது எண்ணமெல்லாம் கடவுள் இல்லை என்பதே. இன்னும் சிலர் சந்தேகப் பேர்வழிகள். அவர்கள் மனதில் கடவுளைப்பற்றி குழப்பமான எண்ணம் உள்ளது. அதாவது இந்த உலகத்தில் நிகழும் நிகழ்ச்சிகளைப் பார்த்து ஏன் இப்படி நடக்கிறது? கடவுள் என ஒருவர் உண்மையிலேயே  இருக்கின்றாரா? எனும் சந்தேகம் இவர்களுக்கு எழுகின்றது. இவர்களையே இன்றைய வசனம் வண்டல்போலக் குழம்பி இருக்கிறவர்கள் என்று கூறுகின்றது.    

கலங்கிய குட்டையில் மீன் பிடிப்பதுபோல இப்படி உலக நிகழ்வுகளால்  கலங்கிக் குழம்பி இருக்கிறவர்களைக் கர்த்தர் கண்டுபிடிக்கின்றார். மட்டுமல்ல, கடவுள் நம்பிக்கையற்று "கடவுளா? அப்படி ஒருவரும் கிடையாது. அப்படி அவர் நன்மை செய்வதும் இல்லை, தீமை செய்வதும் இல்லை. எல்லாம் மனிதனால்தான் நடக்கின்றது." என்கின்றனர் சிலர். "மின்சாரத்தைக் கடவுளா கண்டுபிடித்தார்? செல் போன், தொலைக்காட்சி போன்ற நவீன விஞ்ஞான கருவிகளிக் கடவுளா கண்டுபிடித்தார்? எல்லாம் மனிதனது அறிவுதான் கண்டுபிடித்தது" என்பவர்களையும் கண்டுபிடிக்கின்றார்.  

இன்றைய வசனம் இத்தகைய இரண்டு மன நிலையுள்ளவர்களையும் நான் தண்டிப்பேன் என்று கூறுகின்றது. அதாவது கடவுளைப்பற்றிய சந்தேக எண்ணத்தோடு குழம்பி இருப்பவர்களையும் கடவுள் இல்லை, அவரால் நன்மையையும் தீமையையும் செய்ய முடியாது என்பவர்களையும் தண்டிப்பேன் என்கின்றார்.

அன்பானவர்களே, நானும் ஒரு காலத்தில் இப்படியே இருந்தேன். தீவிர இடதுசாரி பத்திரிகையில் ஆசிரியராக இருந்து கடவுள் மறுப்பு கட்டுரைகளையும் கருத்துக்களையும் கூறிவந்தேன்.  மனிதனால் எல்லாம் முடியும்போது கடவுள் என இல்லாத ஒன்றை நாம் ஏன் எண்ணிக்கொண்டிருக்கவேண்டும்? என்று கூறிவந்தேன். ஆனால், கர்த்தர் கிருபையாய் எனக்குத் தன்னை வெளிப்படுத்தினார். எனது வாழ்வில் கர்த்தர் வந்தபிறகான மாறுதல் பிரமிக்கத்தக்கது. 

இன்று நவீன உலகினில் கோடிக்கணக்கான இளைஞர்கள் இதுபோல கடவுள் நம்பிக்கையற்று இன்றைய வசனம் கூறுவதுபோல, கர்த்தர் நன்மை செய்வதும் இல்லை தீமைசெய்வதும் இல்லையென்று தங்கள் இருதயத்தில் சொல்லிகொண்டு அலைகின்றனர். இதில் வேதனையான விஷயம் என்னவென்றால் இந்த இளைஞர்கள் பெரும்பாலும் இன்றைய பிரபல ஊழியர்களது செயல்பாடுகளைப்பார்த்து இப்படி மாறியுள்ளனர். 

கிறிஸ்துவை அறிவிக்கவேண்டிய ஊழியர்கள்களும் அவர்கள் நடத்தும் தொலைக்காட்சியும் கடவுளைப்பற்றிய அறிவில்லாத குருடராக இருக்கும் இளைஞர்களை மேலும் மேலும் குழப்பத்துக்குள்ளாக்குகின்றன. குருடராக்குகின்றன. ஆம், கடவுளை அறியா குருடராக இருக்கும் மக்களை மேலும்  வழிதப்பச் செய்கின்றனர் இவர்கள். இத்தகைய ஊழியர்கள் மனம்திரும்பி மக்களுக்கு இடறல் உருவாக்காமல் சத்தியத்தை அறிவிக்க  ஜெபிப்போம். குருடரை வழி தப்பச் செய்வது மகா பாவம். பழைய ஏற்பாடும் புதிய ஏற்பாடும் இதனைக் கண்டிக்கின்றது.

"குருடனை வழிதப்பச் செய்கிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள்." ( உபாகமம் 27 : 18 )

"அவர்களை விட்டுவிடுங்கள், அவர்கள் குருடருக்கு வழிகாட்டுகிற குருடராயிருக்கிறார்கள்; குருடனுக்குக் குருடன் வழிகாட்டினால் இருவரும் குழியிலே விழுவார்களே." ( மத்தேயு 15 : 14 )

                                          

ஆதவன் 🖋️ 602 ⛪ செப்டம்பர் 21,  2022 புதன்கிழமை    

"இதோ, இருள் பூமியையும், காரிருள் ஜனங்களையும் மூடும்; ஆனாலும் உன்மேல் கர்த்தர் உதிப்பார்; அவருடைய மகிமை உன்மேல் காணப்படும்." ( ஏசாயா 60 : 2 )

கர்த்தருடைய பிள்ளைகளுக்கான ஆசீர்வாதத்தை இன்றைய வசனம் எடுத்துக் கூறுகின்றது. கர்த்தருக்குள் உண்மையான வாழ்க்கை வாழும்போது, நாம் மற்றவர்களிலிருந்து வேறுபிரிக்கப்படுகின்றோம். மற்றவர்கள் உலக காரியங்களைச் சிந்தித்து உலக நாட்டம்கொண்டு அலைவார்கள். ஆனால் கர்த்தருடைய பிள்ளைகள் அவரையே நம்பி வாழ்வார்கள். அவர்களை தேவனே வழி நடத்துவார். 

மோசே இஸ்ரவேல் மக்களை எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுவித்து அழைத்து வர பார்வோனுக்குமுன் அநேக அதிசயங்களையும் வல்ல செயல்களையும் செய்யவேண்டியிருந்தது. அவற்றுள் ஒரு அடையாளம் இருள். இஸ்ரவேல் மக்களை தேவன் காரிருளுக்குத் தப்புவித்து எகிப்தியரையோ இருளை அனுபவிக்கச் செய்தார். 

"மோசே தன் கையை வானத்திற்கு நேராக நீட்டினான்; அப்பொழுது எகிப்து தேசம் எங்கும் மூன்றுநாள் மட்டும் காரிருள் உண்டாயிற்று. மூன்றுநாள் மட்டும் ஒருவரை ஒருவர் காணவும் இல்லை, ஒருவரும் தம்மிடத்தைவிட்டு எழுந்திருக்கவும் இல்லை; இஸ்ரவேல் புத்திரர் யாவருக்குமோவெனில் அவர்கள் வாசஸ்தலங்களிலே வெளிச்சம் இருந்தது." ( யாத்திராகமம் 10 : 22, 23 )

இதுபோல இஸ்ரவேல் மக்களை கர்த்தர் மேக ஸ்தம்பமாகவும் அக்கினி ஸ்தம்பமாகவும் இருந்து அவர்களை வழி நடத்தினார்.  

இதுபோலவே கடவுளை அறியாதவர்களையும் கடவுளுளது கட்டளைக்குக் கீழ்ப்படியாமல் செயல்படுபவர்களையும்  பிரச்சனைகள், துன்பங்கள் எனும் இருளானது மூடிக்கொள்ளும்போது அவருக்கு ஏற்புடைய வாழ்க்கை வாழ்வோர்மீது கர்த்தர் தனது ஒளியைப் பிரகாசிக்கச்செய்வார். ஆம்,    "இருள் பூமியையும், காரிருள் ஜனங்களையும் மூடும்; ஆனாலும் உன்மேல் கர்த்தர் உதிப்பார்; அவருடைய மகிமை உன்மேல் காணப்படும்." என்கிறார் கர்த்தர்.

அன்பானவர்களே, எந்தச் சூழ்நிலையிலும் கர்த்தரை விட்டுப் பிரியாத, அவருக்கு ஏற்புடைய ஒரு வாழ்க்கை வாழ்வோமானால் மற்றவர்களிலிருந்து கர்த்தர்  நம்மை வேறுபடுத்திக்காட்டுவார் என்பதே இந்த வசனத்தின் அடிப்படைக்  கருத்து.

சிப்போரின் மகனான பாலாக் ராஜா, பிலேயாமை அழைத்து இஸ்ரவேல் மக்களை சபிக்கும்படிக் கூறினான். ஏனெனில் பிலேயாம் ஆசீர்வதிப்பவன் ஆசீர்வாதம்பெறுவான் , அவன் சபிக்கிறவன் சாபமடைவான். ஆனால் மூன்று முறை முயன்றும் தேவன் பிலேயாமை இஸ்ரவேலை சபிக்க அனுமதிக்கவில்லை. (எண்ணாகமம் 22,23,24) 

மாறாக அவன், "அவர் யாக்கோபிலே அக்கிரமத்தைக் காண்கிறதும் இல்லை, இஸ்ரவேலிலே குற்றம் பார்க்கிறதும் இல்லை; அவர்களுடைய தேவனாகிய கர்த்தர் அவர்களோடே இருக்கிறார்; ராஜாவின் ஜயகெம்பீரம் அவர்களுக்குள்ளே இருக்கிறது. தேவன் அவர்களை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினார்; காண்டாமிருகத்துக்கொத்த பெலன் அவர்களுக்கு உண்டு." ( எண்ணாகமம் 23 : 21, 22 ) என்று கூறி அவர்களை ஆசீர்வதித்தான்.

ஆம், எகிப்து எனும் பழைய பாவவாழ்க்கையிலிருந்து விடுதலை பெற்று மீட்பு அனுபவம் பெற்றிருந்தோமானால் இதுபோலவே நம்மை தேவன் ஆசீர்வதிப்பார். 

நமது தேவனாகிய கர்த்தர் நம்மோடே இருப்பார். ராஜாவின் ஜயகெம்பீரம் நமக்குள்ளே இருக்க்கும். காண்டாமிருகத்துக்கொத்த பெலன் நமக்கு உண்டு.

"நீ நெகிழப்பட்டதும், கைவிடப்பட்டதும், ஒருவரும் கடந்து நடவாததுமாயிருந்தாய்; ஆனாலும் உன்னை நித்திய மாட்சிமையாகவும், தலைமுறை தலைமுறையாயிருக்கும் மகிழ்ச்சியாகவும் வைப்பேன்." ( ஏசாயா 60 : 15 ) என்கிறார் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து. 

                                   

ஆதவன் 🖋️ 603 ⛪ செப்டம்பர் 22,  2022 வியாழக்கிழமை 

"நீர் என்னை உலகத்தில் அனுப்பினதுபோல, நானும் அவர்களை உலகத்தில் அனுப்புகிறேன்." ( யோவான் 17 : 18 )

இந்த உலகத்தில்  நாம் பணி செய்யும் இடங்களில் நமது பணி நிமித்தமாக நாம் பல்வேறு இடங்களுக்கு அனுப்பப்படுகின்றோம். உயர் அதிகாரிகளாக இருந்தாலும் சிறிய பதவிகளில் இருந்தாலும் நமது பணிக்கேற்ப சில வேலைகளுக்காக நாம் அனுப்பப்படுகின்றோம். 

நாம் ஒரு ஆசிரியராக இருந்தால், தேர்வு மையங்களில் பணி புரிய, விடைத்தாள்களைத் திருத்தும் செய்யச் செல்லவேண்டியிருக்கும். ஒரு வங்கி அதிகாரி,  மேலதிகாரிகளின் கூட்டத்திற்கோ, கடன் கொடுப்பது சம்பந்தமாக கிராமங்களுக்கோ செல்ல வேண்டியதுண்டு. அலுவலக உதவிப்பணியாளர் என்றால், அலுவலக சம்பந்தகமாக தபால் நிலையத்துக்கோ, தேநீர் கடைக்கோ செல்லவேண்டியது வரும். இப்படி நாம் ஒவ்வொருவருமே ஒரு பணிக்காக அனுப்பப்படுகின்றோம்.  இப்படி அனுப்பப்படும்போது நமக்கு நியமிக்கப்பட்டப் பணியை நாம் சிறப்பாகச் செய்யவேண்டியது அவசியம். 

இதுபோலவே, பிதாவாகிய தேவன் இயேசு கிறிஸ்துவை தனது பணிக்காக இந்த உலகத்தில் அனுப்பினார். இந்த உலகம் மீட்புப்பெறவும் அதனால் கிறிஸ்து இயேசு பிதாவோடு இருப்பதுபோல நாமும் அவர் இருக்கும் இடத்தில அவரோடுகூட இருக்கத் தகுதிபெறும்படி நம்மை மாற்றிடவும் அவர் அனுப்பப்பட்டார்.  (யோவான் 17:21) பிதாவாகிய தேவன் கொடுத்த இந்தப்பணியை அவர் தனது இரத்தத்தைச் சிந்தி செய்து முடித்தார். அவர் மாதிரி காட்டியதுபோல வாழ்ந்து மக்களை அதே வழியில் நடத்திட சீடர்களை அனுப்பினார். 

எனவேதான், "நீர் என்னை உலகத்தில் அனுப்பினதுபோல, நானும் அவர்களை உலகத்தில் அனுப்புகிறேன்." ( யோவான் 17 : 18 ) என்று பிதாவிடம் அவர்களுக்காக மன்றாடினார். 

இந்தப்பணி கடினமான பணி என்பதை இயேசு கிறிஸ்து அறிந்திருந்தார். வஞ்சக ஓநாய்கள் நிறைந்த உலகம் இது. நல்லவைகளை எப்போதுமே இந்த உலகம் ஏற்றுக்கொள்ளாது என்பது இயேசு கிறிஸ்துவுக்குத் தெரியும். எனவேதான் சீடர்களை இந்தப் பணிக்கு அனுப்பும்போது அவர் கூறினார், "ஆடுகளை ஓநாய்களுக்குள்ளே அனுப்புகிறதுபோல, இதோ, நான் உங்களை அனுப்புகிறேன்; ஆகையால், சர்ப்பங்களைப்போல வினாவுள்ளவர்களும் புறாக்களைப்போலக் கபடமற்றவர்களுமாய் இருங்கள். "( மத்தேயு 10 : 16 )

அன்பானவர்களே, இயேசு கிறிஸ்து கூறிய வார்த்தைகள் சீடர்களுக்கு மட்டுமல்ல, இன்று உலகினில் கிறிஸ்துவுக்கு ஏற்ற சாட்சியாக வாழமுயலும் எல்லோருக்கும் பொருந்தும். நாம் நமது சாட்சியுள்ள வாழ்க்கையால் கிறிஸ்து இயேசுவை அறிவிக்கக் கடமைப்பட்டுள்ளோம். அதற்காகவே கிறிஸ்து நம்மை அனுப்பியுள்ளார். எனவே, இந்த ஓநாய் குணமுள்ள மக்களிடம் நாம் பாம்பைப்போல  முன்னறிவுள்ளவர்களாகவும் புறாவைப்போல கபடம் இல்லாதவர்களாகவும் நடந்து கிறிஸ்துவை அறிவிக்கவேண்டும்.

ஆம், காடுகளில் வாழும் ஓநாய்களை சமாளிக்க நமக்குப் பாம்பைப்போன்ற  முன்னறிவு தேவை;  ஓநாய்களை நம் பக்கம் திருப்பி அவைகளை மனம் திரும்பிடச் செய்ய நமக்கு புறா போன்ற கபடமற்ற உள்ளம் தேவை. 

கிறிஸ்து நமக்குத் தந்துள்ள பணியை நாம் சிறப்பாகச் செய்திட முயல்வோம்; அதற்காக வேண்டுதல் செய்வோம். நமது தலைமை ஆயனாம் இயேசு கிறிஸ்துவும் நமக்காக ஜெபித்துள்ளார். (யோவான் 17) எனவே நாம் நமது பணியினை தயக்கமின்றி தைரியமாகத் தொடர்ந்து செய்வோம். 

                                           

ஆதவன் 🖋️ 604 ⛪ செப்டம்பர் 23,  2022 வெள்ளிக்கிழமை

"அவன் வனாந்தரத்தில் ஒருநாள் பிரயாணம் போய், ஒரு சூரைச்செடியின் கீழ் உட்கார்ந்து, தான் சாகவேண்டும் என்று கோரி: போதும் கர்த்தாவே, என் ஆத்துமாவை எடுத்துக்கொள்ளும்; நான் என் பிதாக்களைப்பார்க்கிலும் நல்லவன் அல்ல என்று சொல்லி, படுத்துக்கொண்டு நித்திரைபண்ணினான்; அப்பொழுது ஒரு தூதன் அவனைத் தட்டியெழுப்பி: எழுந்திருந்து போஜனம்பண்ணு என்றான்." ( 1 இராஜாக்கள் 19 : 4, 5 )

ஆவிக்குரிய வாழ்வில் எப்போதுமே மகிழ்ச்சியும் செழிப்பும் மட்டுமே இருக்கும் என்று நாம் எண்ணிவிடக்கூடாது. துன்பங்களும், கஷ்டங்களும் நம்மைத் தொடரலாம், வனாந்தரம் போன்ற வறண்ட சூழல் ஏற்படலாம். 

எலியா மிகப்பெரிய தீர்க்கதரிசிதான். ஆனால் அவரும்கூட உலக வாழ்க்கை வெறுத்து ஆண்டவரிடம் சாவை வேண்டக்கூடிய நிலைமைக்கு வந்துவிட்டார்.  ஆகாபின் மனைவி யேசபேல் எலியாவின்மேல் கோபமாகி அவரைக் கொலைசெய்யத் தேடினாள். அப்போது எலியா மிகவும் மனமடிவுக்குள்ளானார்.   "கர்த்தாவே, என் ஆத்துமாவை எடுத்துக்கொள்ளும்; நான் என் பிதாக்களைப்பார்க்கிலும் நல்லவன் அல்ல" என்று வேதனையோடு ஜெபித்தார். 

அன்பானவர்களே, எலியாவுக்கு வந்ததுபோன்ற மனமடிவு நமக்கும் ஏற்படலாம். ஆனால், தேவன் நம்மை அப்படியே விட்டுவிடமாட்டார். வேதனையோடு படுத்து உறங்கிய எலியாவுக்குத் தேவன் தனது தூதனை அனுப்பி உணவளித்து பலப்படுத்தினார். "அப்பொழுது அவன் எழுந்திருந்து புசித்துக் குடித்து, அந்த போஜனத்தின் பலத்தினால் நாற்பது நாள் இரவு பகல் ஓரேப் என்னும் தேவனுடைய பர்வதமட்டும் நடந்து போனான்." ( 1 இராஜாக்கள் 19 : 8 )

நாமும் இதுபோல தேவ பர்வதத்தை நோக்கியே பயணம் செய்கின்றோம். கர்த்தருடைய தூதன் அளித்த உணவின் பலத்தால் எலியா நாற்பது நாள் இரவும் பகலும் ஓரேப் பர்வதம் வரை நடந்தார். தேவதூதன் அளித்த உணவின் பலம் அவருக்கு  எந்த பலவீனமுமில்லாமல் நாற்பது நாட்கள் நடக்கக் கூடிய சக்தியைக் கொடுத்தது. ஆவிக்குரிய வாழ்வில் நாம் சோர்ந்துபோகும்போது இதேபோல பெலனைத் தேவன் நமக்கும் தருவார். 

ஆம், நமது பலவீனத்தில் கர்த்தரது பலத்தை நாம் அனுபவிக்கமுடியும். "என் கிருபை உனக்குப்போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும்" ( 2 கொரிந்தியர் 12 : 9 ) என்று அப்போஸ்தலனாகிய பவுலைப் பலப்படுத்திய தேவன் நம்மையும் அதுபோலப் பலப்படுத்துவார். 

கர்த்தருடைய ஒரு தூதன் எலியாவைத் தட்டியெழுப்பி: எழுந்திருந்து போஜனம்பண்ணு என்றான். நமக்கோ கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே தூதன் கொடுத்ததைவிட மேலான உணவினை நேரடியாக நமக்குக் கொடுத்துள்ளார். 

"என் மாம்சம் மெய்யான போஜனமாயிருக்கிறது, என் இரத்தம் மெய்யான பானமாயிருக்கிறது. என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம்பண்ணுகிறவன் என்னிலே நிலைத்திருக்கிறான், நானும் அவனிலே நிலைத்திருக்கிறேன்."( யோவான் 6 : 55, 56 )

எனவே நாம் எலியாவைப்போல மனமடிவு ஏற்படும்போது இந்த வானக  உணவினை உண்ணும்போது பலமடைகின்றோம். ஆம், கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்காகத்  தனது உடலையும் இரத்தத்தையும் உணவாகத் தந்துள்ளார். இதனை விசுவாசித்து அவர் நமக்காக மரித்தார் எனவே நம்மை முற்றும் முடிய இரட்சிப்பார்  என விசுவாசிக்கும்போது - உண்ணும்போது;   எலியாவைப்போல பலமடைகின்றோம். எலியா நடந்ததுபோல்  பரம கானானை நோக்கி தொய்வில்லாமல் நாமும் நடப்போம்.

                                    

ஆதவன் 🖋️ 605 ⛪ செப்டம்பர் 24,  2022 சனிக்கிழமை

"உம்மிலே பெலன்கொள்ளுகிற மனுஷனும், தங்கள் இருதயங்களில் செவ்வையான வழிகளைக் கொண்டிருக்கிறவர்களும் பாக்கியவான்கள். அழுகையின் பள்ளத்தாக்கை உருவ நடந்து அதை நீரூற்றாக்கிக் கொள்ளுகிறார்கள்; மழையும் குளங்களை நிரப்பும்." ( சங்கீதம் 84 : 5, 6 )

நாம் கர்த்தருக்குள் வாழ்வது மட்டுமல்ல,ஆவிக்குரிய அனுபவங்களில் வளருபவர்களாகவும் இருக்கவேண்டியது அவசியம். குழந்தைகள் பலமற்றவர்கள். நாம் வளர வளர பலம் கொள்ளுகின்றோம். கிறிஸ்துவுக்குள் வேர்கொண்டவர்களாக வாழும்போதே நாம் வளர்ச்சியடைகின்றோம். "ஆகையால், நீங்கள் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை ஏற்றுக்கொண்டபடியே, அவருக்குள் வேர்கொண்டவர்களாகவும், அவர்மேல் கட்டப்பட்டவர்களாகவும், அவருக்குள் நடந்துகொண்டு,"( கொலோசெயர் 2 : 6 ) என்று அப்போஸ்தலனாகிய பவுல் எழுதுகின்றார். 

இப்படிக் கிறிஸ்துவுக்குள்  பலம் கொள்ளுகின்ற மனிதன்தான் இருதயத்தில் செவ்வையான வழிகளைக் கொண்டிருக்கமுடியும். இப்படி பெலன்கொள்ளுகிற மனுஷனும், தங்கள் இருதயங்களில் செவ்வையான வழிகளைக் கொண்டிருக்கிறவர்களும் பாக்கியவான்கள்.

இதனால்தான் அப்போஸ்தலனாகிய பேதுருவும், "நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையிலும் அவரை அறிகிற அறிவிலும் வளருங்கள்." ( 2 பேதுரு 3 : 18 ) என்று கூறுகின்றார். 


"நாம் இனிக் குழந்தைகளாயிராமல், மனுஷருடைய சூதும் வஞ்சிக்கிறதற்கேதுவான தந்திரமுமுள்ள போதகமாகிய பலவித காற்றினாலே அலைகளைப்போல அடிபட்டு அலைகிறவர்களாயிராமல், அன்புடன் சத்தியத்தைக் கைக்கொண்டு, தலையாகிய கிறிஸ்துவுக்குள் எல்லாவற்றிலேயும், நாம் வளருகிறவர்களாயிருக்கும்படியாக" ( எபேசியர் 4 : 14,15 ) என்கின்றார் பவுல் அடிகள்.

இப்படிப் பலம் கொள்ளும்போது என்ன நடக்கும் என்பதை இன்றைய தியான வசனத்தின் பிற்பகுதி விளக்குகின்றது. இப்படிப்  பலம் கொள்ளும் மனிதர்கள் அழுகையின் பள்ளத்தாக்கை உருவ நடந்து அதை நீரூற்றாக்கிக் கொள்ளுகிறார்கள். அதாவது துன்பங்கள் பிரச்சனைகளை அவர்கள் சந்தித்தாலும் அதனைக் கடந்து தங்கள்  வாழ்வைக்  களிப்பான நீரூற்றாக மாற்றிக்கொள்கிறார்கள்.  மட்டுமல்ல, ஆவிக்குரிய மழை அவர்கள்மேல் பொழியும். அவர்கள் நீர் நிறைந்த  குளங்களைப்போல  ஆவியின் அருளினால் நிரம்பி அனைவருக்கும் பயன்தருபவர்களாக மாறுவார்கள். 

அன்பானவர்களே, என்றோ ஒருநாள் பெற்ற பாவ மன்னிப்பின் அனுபவத்தோடேயே நாம் நின்றுவிடக்கூடாது. அந்த அனுபவத்தில் வளரும்போதுதான் நாம் மீட்பு பெற முடியும். ஆம், இறுதிவரை நிலை நிற்பவனே இரட்சிக்கப்படுவான்   என்று கர்த்தராகிய இயேசு கிறிஸ்து கூறியுள்ளார். ஆவிக்குரிய வாழ்வில் தினமும் வளருவோம். நாம் நீர் ஊற்றி வளர்க்கும் மரமோ செடியோ வளருவதை நாம் பார்க்கும்போது நமக்குள் ஒரு மகிழ்ச்சி ஏற்படுகின்றது. அதுபோல நாம் ஆவிக்குரிய வாழ்வில் வளரும்போதே கிறிஸ்துவும் மகிழ்ச்சியடைவார். 

ஏனெனில் வளரும்போதுதான் மரமானது ஏற்ற கனிகளைக் கொடுக்கும். நாம் கனி கொடுப்பவர்களாக வாழ்வதே தேவனுடைய சித்தம். ஆவிக்குரிய வளர்ச்சிபெற்று கனிகொடுக்காத மரங்கள் அக்கினியில் சுட்டெரிக்கப்படும். 

"இப்பொழுதே கோடரியானது மரங்களின் வேர் அருகே வைத்திருக்கிறது; ஆகையால், நல்ல கனிகொடாத மரமெல்லாம் வெட்டுண்டு அக்கினியிலே போடப்படும்." ( மத்தேயு 3 : 10 ) வளருவோம்; பெலனடைவோம்; அழுகையின் பள்ளத்தாக்கை உருவ நடந்து அதை நீரூற்றாக்கிக் கொள்ளுவோம். 

                                    

ஆதவன் 🖋️ 606 ⛪ செப்டம்பர் 25,  2022 ஞாயிற்றுக்கிழமை

"பிதாக்கள் திராட்சக்காய்களைத் தின்றார்கள், பிள்ளைகளின் பற்கள் கூசிப்போயின என்று அந்நாட்களில் சொல்லமாட்டார்கள். அவனவன் தன்தன் அக்கிரமத்தினிமித்தமே சாவான்; எந்த மனுஷன் திராட்சக்காய்களைத் தின்பானோ அவனுடைய பற்களே கூசிப்போகும்." ( எரேமியா 31 : 29, 30 )

புதிய உடன்படிக்கைக்கால மேலான ஒரு ஆசீர்வாதத்தை எரேமியா தீர்க்கதரிசி இங்குக் கூறுகின்றார். தாய் தகப்பன் செய்யும் மீறுதல்கள் பிள்ளைகளைப் பாதிக்கும் என்பது பழைய ஏற்பாட்டு கற்பனை. "குற்றவாளியைக் குற்றமற்றவனாக விடாமல், பிதாக்கள் செய்த அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்திலும், பிள்ளைகளுடைய பிள்ளைகளிடத்திலும் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவர்" ( யாத்திராகமம் 34 : 7 ) என்று கூறப்பட்டுள்ளது.

"பிதாக்களுடைய அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்தில் மூன்றாம், நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவராயிருக்கிறேன்." ( உபாகமம் 5 : 9 )

இதனையே சாபங்கள் என்று கூறுகின்றோம். அதனையே இங்கு "பிதாக்கள் திராட்சக்காய்களைத் தின்றார்கள், பிள்ளைகளின் பற்கள் கூசிப்போயின" என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்தப் பழைய முறைமை மாற்றப்படும் என்று எரேமியா கூறுகின்றார். 

தாய் தகப்பன் செய்த பாவமல்ல, அவனவன் செய்த பாவமே அவனைத் தண்டிக்கும் என்கின்றார். அதனையே,  "அவனவன் தன்தன் அக்கிரமத்தினிமித்தமே சாவான்; எந்த மனுஷன் திராட்சக்காய்களைத் தின்பானோ அவனுடைய பற்களே கூசிப்போகும்." என்று கூறப்பட்டுள்ளது. 

ஆம், இன்று நாம் கிறிஸ்து இயேசுவினால் நமது பாவங்கள் கழுவப்பட்டு, கிறிஸ்துவுக்குள் புதுப்பிறப்பு அடைந்திருந்தோமானால் முன்னோர்களின் சாபம் நம்மைத் தொடராது. ஏனெனில், "மரத்திலே தூக்கப்பட்ட எவனும் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறபடி, கிறிஸ்து நமக்காகச் சாபமாகி, நியாயப்பிரமாணத்தின் சாபத்திற்கு நம்மை நீங்கலாக்கி மீட்டுக்கொண்டார்." ( கலாத்தியர் 3 : 13 )

பாவங்களிலிருந்த்து நாம் மீட்கப்பட்டு கிறிஸ்துவின் மறுபிறப்பு அனுபவத்தைப்பெறும்போது மட்டுமே நமக்கு இந்த பெரும் பாக்கியம் கிடைக்கின்றது. கிறிஸ்துவின் மீட்பு மற்றும் மறுபிறப்பு அனுபவத்தைப் பெறாதவர்கள் இன்னும் நியாயப்பிரமாணத்துக்கு உட்பட்டிருப்பதால் அவர்களை முன்னோர்களின் சாபம் தொடரும். 

கிறிஸ்துவின் கிருபையினால் உண்டான மீட்பினை பெறாமல் வெறும் கட்டளைகளையே நம்பி கைக்கொண்டிருப்பது (அதாவது நியாயப்பிரமணத்தையே நம்பியிருப்பது) ஒருவரை சாபத்துக்கு நீங்கலாக்காது. ஒருவருக்குள் கிறிஸ்து வரும்போது மேலான கட்டளைகளுக்கு நேராக அவரை நடத்துவார். இதனையே அப்போஸ்தலராகிய பவுல் அடிகள், "நியாயப்பிரமாணத்தின் கிரியைக்காரராகிய யாவரும் சாபத்திற்குட்பட்டிருக்கிறார்கள் என்று எழுதியிருக்கிறதே." ( கலாத்தியர் 3 : 10 )

இது ஏனென்றால், கட்டளைகளுக்குக் கீழ்ப்படிபவன் அப்படி ஒரு கட்டளை இருப்பதால் கீழ்படிகின்றான். ஆனால் மறுப்பிற்ப்பு அனுபவம் பெற்றவர்கள் தேவனுடைய ஆவியானவரால் நடத்தப்படுவதால் இயல்பிலேயே நீதி, நேர்மையாய் நடக்கிறார்கள். தேவ அன்புடன் அப்படிச் செய்கிறார்கள். 

அன்பானவர்களே, கிறிஸ்து இயேசுவின் இரத்தத்தால் கழுவப்படும்போது கிடைக்கும் மேலான அனுபவம் இதுதான். பாவங்கள் கழுவப்படுவதுமட்டுமல்ல முன்னோர்களின் சாபங்களும் நம்மைத் தொடராமல் பாதுகாக்கப்படுகின்றோம். கிறிஸ்துவுக்கு நம்மை ஒப்புக்கொடுத்து பாவங்கள் மன்னிக்கப்பட வேண்டுவோம். அவர் நம்மை மேலான ஆசீர்வாதங்களுக்குள் நடத்துவார்.                                     

ஆதவன் 🖋️ 607 ⛪ செப்டம்பர் 26,  2022 திங்கள்கிழமை

"லோத்தின் மனைவியை நினைத்துக் கொள்ளுங்கள்." ( லுூக்கா 17 : 32 )

இயேசு கிறிஸ்து தனது உபதேசத்தில் பல்வேறு இடங்களில் பழைய ஏற்பாட்டிலிருந்து உதாரங்களைக் காட்டி விளக்கியுள்ளார். இன்றைய வசனத்தில் ஆதியாகமத்திலிருந்து ஒரு சம்பவத்தை உதாரணம் காட்டுகின்றார். 

ஆணடவராகிய இயேசு கிறிஸ்து தனது இரண்டாம் வருகையினைக் குறித்துக் கூறும்போது இந்த வசனத்தைக் கூறுகின்றார். இந்த உலக செல்வங்கள் மகிமைகள் இவற்றையே எண்ணிக்கொண்டு, செல்வம் சேர்ப்பத்திலும் இந்த உலக நாட்டங்களிலும் ஈடுபட்டு  தேவனுடைய வார்த்தைகளுக்கு கீழ்ப்படியாமல் போனால் எல்லோரும் அழிந்துபோவீர்கள் என்கிறார் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து.  

சோதோம் கொமோராவை தேவன் அழிக்கும் முன்பு லோத்துவைக் காப்பாற்றுவதற்குத் தனது தூதனை அனுப்பினார். அந்தத் தூதன் "அவர்களை வெளியே கொண்டுபோய்விட்டபின்பு,  "உன் ஜீவன் தப்ப ஓடிப்போ, பின்னிட்டுப் பாராதே; இந்தச் சமபூமியில் எங்கும் நில்லாதே; நீ அழியாதபடிக்கு மலைக்கு ஓடிப்போ என்றார்." ( ஆதியாகமம் 19 : 17 )

இதனையே இயேசு கிறிஸ்து இன்றைய தியான வசனத்தில் கூறுகின்றார். சோதோம் கொமோராவுக்கு நேர்ந்ததுபோன்ற அழிவு பூமிக்கு வரப்போகின்றது. எனவே, அந்த மக்களைப்போல அறிவிலிகளாய் இராமல் உங்கள் ஜீவனைக் காத்துக்கொள்ளுங்கள் என்கின்றார் இயேசு கிறிஸ்து. 

இயேசு கிறிஸ்து கூறினார், "லோத்தினுடைய நாட்களில் நடந்ததுபோலவும் நடக்கும்; ஜனங்கள் புசித்தார்கள், குடித்தார்கள், கொண்டார்கள், விற்றார்கள், நட்டார்கள், கட்டினார்கள். லோத்து சோதோமை விட்டுப் புறப்பட்ட நாளிலே வானத்திலிருந்து அக்கினியும் கந்தகமும் வருஷித்து, எல்லாரையும் அழித்துப்போட்டது." ( லுூக்கா 17 : 28, 29 ) இப்படியான அழிவுக்குத் தப்பித்துக்கொள்ளுங்கள் என்கின்றார்.

இப்படி கிறிஸ்துவின் கட்டளைக்குக் கீழ்படியாவிட்டால் என்ன நடக்கும் என்பதை விளக்க  இயேசு இன்றைய வசனத்தில், " லோத்தின் மனைவியை நினைத்துக்கொள்ளுங்கள்" என்கின்றார்.  அந்தத் தூதன் லோத்துவிடம், "உன் ஜீவன் தப்ப ஓடிப்போ, பின்னிட்டுப் பாராதே; இந்தச் சமபூமியில் எங்கும் நில்லாதே; நீ அழியாதபடிக்கு மலைக்கு ஓடிப்போ என்றார்". ஆனால், அவர்களது சொத்துக்கள், வீடு, இதர ஆஸ்திகளை எண்ணி அவன் மனைவி தூதனது கட்டளையினை மீறி திரும்பிப் பார்த்தாள். ஆம்,  "அவன் மனைவியோ பின்னிட்டுப்பார்த்து, உப்புத்தூண் ஆனாள்."( ஆதியாகமம் 19 : 26 )

இந்த உலகத்தில் நம்மைக் கிறிஸ்துவைவிட்டுப் பிரிக்கும் பல்வேறு இச்சை காரியங்கள் உள்ளன. அவற்றுள் மிக முக்கியமானது பொருளாசை. அந்த ஆசைதான் லோத்தின் மனைவியைப் பின்னிட்டுப்பார்க்கத் தூண்டியது. எனவேதான் இயேசு கிறிஸ்து அவளை நமக்கு எச்சரிப்புக்காக எடுத்துக்காட்டுகின்றார்.

அன்பானவர்களே, கிறிஸ்துவை நோக்கி வந்தபின்பு நாம் உலக ஆசைகள், பிரச்சனைகள் துன்பங்களைக்கண்டு கிறிஸ்துவின்மேலுள்ள விசுவாசத்தைவிட்டுப்  பின்னிட்டுப் பார்க்கக் கூடாது. அந்தத் தூதன் லோத்துக்குக் கூறியதுபோல மலையை நோக்கி நாம் ஓடவேண்டும். அந்தக் கன்மலை கிறிஸ்துவே. (1 கொரிந்தியர் 10:4) உலகக் கவர்ச்சி, மாயைகளில் நாட்டம்கொண்டு பின்னிட்டுப்பார்த்தால் லோத்தின் மனைவியைப்போல ஆகிவிடுவோம். 

                                            

ஆதவன் 🖋️ 608 ⛪ செப்டம்பர் 27,  2022 செவ்வாய்க்கிழமை

"நீங்கள் வலதுபுறமாய்ச் சாயும்போதும், இடதுபுறமாய்ச் சாயும்போதும்: வழி இதுவே, இதிலே நடவுங்கள் என்று உங்களுக்குப் பின்னாலே சொல்லும் வார்த்தையை உங்கள் காதுகள் கேட்கும்." ( ஏசாயா 30 : 21 )

இன்றைய வசனம் பரிசுத்த ஆவியானவரின் வழிநடத்துதல் பற்றிக் கூறுகின்றது. கர்த்தரது வார்த்தைக்குக்  கீழ்ப்படிந்து வாழும்போது நாம் அவரது மக்களாகின்றோம். பரலோக சீயோனுக்கு நாம் சொந்தக்காரர்கள் ஆகின்றோம். அப்படி வாழ்பவர்கள் கர்த்தரது பரிசுத்த நகரான எருசலேமில் வாழ்பவர்களாக இருப்பார்கள்.  இன்றைய தியான வசனத்துக்கு முந்தின வசனங்களில் ஏசாயா இதனைத்தான் பின்வருமாறு கூறுகின்றார்:- 

"சீயோனைச் சேர்ந்த ஜனங்கள் எருசலேமில் வாசமாயிருப்பார்கள்; இனி நீ அழுதுகொண்டிராய்; உன் கூப்பிடுதலின் சத்தத்துக்கு அவர் உருக்கமாய் இரங்கி, அதைக் கேட்டவுடனே உனக்கு மறுஉத்தரவு அருளுவார்." ( ஏசாயா 30 : 19 )

மட்டுமல்ல இப்படி வாழும் மக்கள் வலதுபுறமாய்ச் சாயும்போதும், இடதுபுறமாய்ச் சாயும்போதும்: வழி இதுவே, இதிலே நடவுங்கள் என்று வழிநடத்தக்கூடிய தேவனது வார்த்தைகளை அவர்களே கேட்பார்கள். இதனையே ஆவியானவரின் வழிநடத்துதல் என்கின்றோம். இந்த தேவனது வழிநடத்தும் வார்த்தைகளே  நம்மை நீதி நியாயம் உள்ள மனிதர்களாக மாற்றி நம்மை நீதியின் பாதையில் நடந்திடும். 

இப்படி நம்மை வழிநடத்திடும் பரிசுத்த ஆவியானவரைத்தான் இயேசு கிறிஸ்து நமக்கு வாக்களித்தார். 

"நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன்; நான் போகிறது உங்களுக்குப் பிரயோஜனமாயிருக்கும்; நான் போகாதிருந்தால் தேற்றரவாளன் உங்களிடத்தில் வரார்; நான் போவேனேயாகில் அவரை உங்களிடத்திற்கு அனுப்புவேன். "அவர் வந்து, பாவத்தைக்குறித்தும், நீதியைக்குறித்தும், நியாயத்தீர்ப்பைக்குறித்தும், உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார்"( யோவான் 16 : 7, 8 )

இயேசு கிறிஸ்து வாக்களித்த பரிசுத்த ஆவியானவரின் வழி நடத்துதல் நமக்குத் தேவையென்றால், நாம் முதலில் அதனை விரும்பவேண்டும். இயேசு கிறிஸ்து கூறியபடி அவருக்கு உகந்தவர்களாக வாழ  நம்மை அவருக்கு  முற்றிலும் ஒப்படைக்கவேண்டும்.  

இன்று கிறிஸ்தவர்கள் என்று தங்களைக் கூறிக்கொள்ளும் பலர் ஆவியானவருக்குத் தங்களை ஒப்புவிக்காமல், அவரது வழிநடத்துதலின்படி வாழ விரும்பாமல் இருந்துகொண்டு தங்களது தேவைகள், பிரச்சனைகளுக்கு மட்டும் அவரைத் தேடுகின்றனர். அவர்கள் தேவனது குரலை குறுக்கு வழியில் கேட்க முயலுகின்றனர். கண்களை மூடி வேதாகமத்தைத் திறந்து விரலை வேதாகமத்தில் வைத்து அங்கு காணும் வசனத்தை தேவன் தங்களுக்குத் தந்த வழிகாட்டும் வசனமாக எண்ணிக்கொள்கின்றனர்.   

இப்படி நாம் தேவ குரலைக் கேட்க வேதாகமம் நமக்கு அறிவுறுத்தவில்லை.  நமது தேவன் கிளி ஜோசியம்போல பேசுபவரல்ல. அவர் பிரத்தியட்சமாக பேசுபவர். நமது பாவத்தைக்குறித்தும், நீதியைக்குறித்தும், நியாயத்தீர்ப்பைக்குறித்தும், கண்டித்து உணர்த்தி நம்மை நீதியின் பாதையில் நடத்துபவர். 

அன்பானவர்களே, தேவனுக்கும் அவரது வழிநடத்துதலுக்கும் நம்மை முற்றிலும் ஒப்படைப்போம். அப்போது, நாம் வலதுபுறமாய்ச் சாயும்போதும், இடதுபுறமாய்ச் சாயும்போதும்: வழி இதுவே, இதிலே நடவுங்கள் என்று நம்மை வழிநடத்தும் தேவனது வார்த்தைகளை நமது காதுகள் கேட்கும். இந்த வழிநடத்துதல் தான் தேவனுக்கேற்ற பரிசுத்தராக நம்மை வாழவைக்கும்.

                                     

ஆதவன் 🖋️ 609 ⛪ செப்டம்பர் 28,  2022 புதன்கிழமை

"பத்துநாள் சென்றபின்பு, ராஜபோஜனத்தைப் புசித்த எல்லா வாலிபரைப்பார்க்கிலும் அவர்கள் முகம் களையுள்ளதாயும், சரீரம் புஷ்டியுள்ளதாயும் காணப்பட்டது." ( தானியேல் 1 : 15 )

உலகத்தால் கறைபடாதபடித் தங்களைக் காத்துக்கொண்ட  தானியேல் மற்றும் அவரது நண்பர்களான சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களைக்குறித்து சொல்லப்பட்ட வசனம்தான் இன்றைய தியானத்துக்குரியது. 

பாபிலோனின் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் எருசலேமைக் கைப்பற்றி அங்குள்ள மக்களைக் கைதியாக பாபிலோனுக்குக் கொண்டுசென்றான். அப்படிக் கொண்டுபோகப்பட்டவர்களுள்  தானியேலும் அவரது நண்பர்களும்  இருந்தனர். ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் கைதியாகக் கொண்டுபோகப்பட்ட மனிதர்களில் அழகும், கல்வியும், ஞானமும் உள்ளவர்களைத் தனது அரண்மனையில் பணியில் அமர்த்த விரும்பி, அத்தகைய வாலிபர்களைக் கண்டுபிடிக்க  தனது பிரதானிகளுக்குக் கட்டளைக் கொடுத்தான்.  அவர்கள் தானியேலையும் அவரது நண்பர்களான சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களயும் சிறந்தவர்களாக கண்டறிந்து அரசனின் முன்பாக நிறுத்தினர். 

"ராஜா, தான் உண்ணும் போஜனத்திலேயும் தான் குடிக்கும் திராட்சரசத்திலேயும் தினம் ஒரு பங்கை அவர்களுக்கு நியமித்து, அவர்களை மூன்றுவருஷம் வளர்க்கவும், அதின் முடிவிலே அவர்கள் ராஜாவுக்கு முன்பாக நிற்கும்படிசெய்யவும் கட்டளையிட்டான்." ( தானியேல் 1 : 5 ) ஆனால் தானியேலும் அவரது நண்பர்களும் ராஜ உணவினை தங்களைப் பராமரித்தவனிடம் , "எங்களுக்கு வெறும் பருப்பும் காய்கறிகளும் போதும்; ராஜ உணவு வேண்டாம் என்று மறுத்துவிட்டனர். 

பராமரிப்பாளன், "அப்படியல்ல, ராஜா உங்களைப் பார்க்கும்போது நீங்கள் மற்றவர்களைவிட முகம் வாடிப்போனவர்களாக கண்டால் எனக்குத்தான்  தண்டனைத்தருவான்" என்றான். அப்போது தானியேல், பத்துநாள் எங்களுக்கு நாங்கள் கேட்பதுபோல  வெறும் பருப்பும் காய்கறிகளும் தந்து எங்களைச் சோதித்துப் பாரும்." என்று கூற, அவன் சம்மதித்து அவர்கள் கேட்ட உணவைக்கொடுத்துவந்தான்.  "பத்துநாள் சென்றபின்பு, ராஜபோஜனத்தைப் புசித்த எல்லா வாலிபரைப்பார்க்கிலும் அவர்கள் முகம் களையுள்ளதாயும், சரீரம் புஷ்டியுள்ளதாயும் காணப்பட்டது." ( தானியேல் 1 : 15 )

அன்பானவர்களே, இன்று இதுபோல வாழவே நாம் அழைக்கப்படுகின்றோம். உலக ஆசை இச்சைகளை மறுத்து, கிறிஸ்துவுக்காக வாழும் வாழ்வையே தேவன் விரும்புகின்றார். இறைச்சி, திராட்சைரசம் என ராஜபோஜனத்தைப் புசித்த எல்லா வாலிபரைப்பார்க்கிலும் தானியேல் மற்றும் அவரின் நண்பர்களது முகம் களையுள்ளதாயும், சரீரம் புஷ்டியுள்ளதாயும் காணப்பட்டது என்று கூறப்பட்டுள்ளது. இதுபோலவே ஆவிக்குரிய வாழ்க்கை வாழும் நமக்கு ஒருவேளை மற்றவர்களைப்போல சிறப்பான உலக செல்வங்கள் இல்லாமலிருக்கலாம். ஆனால்,  ராஜ உணவு உண்டவர்களைவிட  எக்காரணம்கொண்டும் நாம் தாழ்ந்துபோகமாட்டோம். 

தானியேலையும் அவரது நண்பர்களையும் சோதிக்க பத்துநாட்கள் குறிக்கப்பட்டதுபோல நமக்கும் தேவன் ஒரு குறிப்பிட்ட நாளை நியமித்திருப்பார். தேவன் குறித்த அந்த நாட்கள் நிறைவேறும்போது மற்றவர்களிலிருந்து நாம் வேறுபட்டு உயர்த்திருப்பதை இந்த உலகம் கண்டு அதிசயிக்கும்.  கிறிஸ்துவுக்கு விருப்பமில்லாத செயல்களை நம்மைவிட்டு அகற்றுவோம். கர்த்தர்தாமே நம்மை ஆசீர்வதிப்பார். 

                                   

ஆதவன் 🖋️ 610 ⛪ செப்டம்பர் 29,  2022 வியாழக்கிழமை

"அதிக ஞானத்திலே அதிக சலிப்புண்டு; அறிவுபெருத்தவன் நோவுபெருத்தவன்." ( பிரசங்கி 1 : 18 )

இன்று உலகமானது தேவனை அறியமுடியாமல் இருப்பதற்கு ஒரு முக்கியக்  காரணம் தங்களது அறிவு மூலம் அவரைத் தேடி கண்டுபிடிக்க முயல்வது. நவீன விஞ்ஞான வளர்ச்சியைக்கண்டு பலர் எல்லாமே மனிதனால் கூடும் என்று நம்பத் துவங்கிவிட்டனர். தேவனை நாங்கள் அறிந்துள்ளோம் என்று கூறும் மனிதர்கள்கூட வேதாகமத்தை இறையியல் கல்லூரிகளில் சென்று படித்து பட்டங்கள் பெற்று தாங்கள் மற்றவர்களைவிட தேவனைப்பற்றி அதிகம் அறிந்துள்ளதாக எண்ணிக்கொள்கின்றனர். உண்மைதான்; இவர்கள தேவனைப்பற்றி அதிகம் அறிந்துள்ளனரே தவிர தேவனை அறியவில்லை.

வேதம் கூறுகின்றது, அறிவு பெருத்தவன் நோவு பெருத்தவன் என்று. ஆம்,  அதிக அறிவேத் தேவனை அறிய பலருக்குத் தடையாக உள்ளது.  மூளை அறிவால் தேவனைப்பற்றி அறிய முடியுமே தவிர தேவனை அறிய முடியாது. சுத்தமுள்ள இதயத்தால் மட்டுமே அவரை அறியமுடியும். "இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள்." ( மத்தேயு 5 : 8 ) என்று இயேசு கிறிஸ்து கூறவில்லையா? 

இருதய சுத்தம் யாருக்கு வரும்? அது சிறு குழந்தையாக நாம் மாறும்போது அதாவது சிறு குழந்தைக்குரிய இருதய சிந்தனை கொண்டவர்களாக வாழும்போது மட்டுமே நாம் சுத்த இருதயம் கொண்டவர்களாக முடியும். எனவேதான் இயேசு கிறிஸ்து, "பிதாவே! வானத்துக்கும் பூமிக்கும் ஆண்டவரே! இவைகளை ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து, பாலகருக்கு வெளிப்படுத்தினபடியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்." ( மத்தேயு 11 : 25 ) என்று கூறி ஜெபித்தார்.

ஆம், வேதாகமத்தை நன்கு படித்து அறிவதாலோ, மற்றவர்களைவிட நாம் அதிகம் படித்துள்ளதாலேயோ நாம் தேவனை அறிய முடியாது. நான் ஒருமுறை ஒரு ஆலயத்தில் ஒருவரது பிரசாங்கத்தைக் கேட்டேன். இதுவரை அத்தகைய ஒரு பிரசங்கத்தை நான் கேட்ததில்லை. அவ்வளவு தெளிவான ஆழமான தேவ செய்தி அது.  இறையியல் படிப்பில் டாக்டர் பட்டம்பெற்ற ரெவெரென்ட்கள் கூட அத்தகைய தேவ செய்தியைக் கொடுக்கமுடியாது. ஆனால் அந்தச் செய்தியைக் கொடுத்த ஊழியர் வெறும் எட்டாவது வகுப்புப் படித்தவர். தேவனோடு தொடர்பில் இருக்கும் மனிதனது செய்திகள் இப்படியே இருக்கும்.

"ஞானிகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பைத்தியமானவைகளைத் தெரிந்துகொண்டார்; பலமுள்ளவைகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பலவீனமானவைகளைத் தெரிந்துகொண்டார்." ( 1 கொரிந்தியர் 1 : 27 ) என்கின்றார் அப்போஸ்தலனாகிய பவுல் அடிகள்.

அன்பானவர்களே, நமது படிப்பு, அறிவு இவைகளின் அடிப்படையில் நாம் தேவனை அறியமுடியாது. நமது அறிவே தேவனை நாம் அறியத்  தடையாக இருக்கலாம். கல்வியறிவற்ற, மீன்பிடித்துக்கொண்டிருந்த பேதுருவின் முதல் பிரசங்கத்தில் 3000 பேர் இரட்சிக்கப்பட்டனர் (அப்போஸ்தலர் 2:41). இன்னொரு பிரசாங்கத்தால் 5000 பேர் இரட்சிக்கப்பட்டு விசுவாசிகள் ஆனார்கள் (அப்போஸ்தலர் 4:4). காரணம் அவர் கிறிஸ்துவோடு இருந்தவர்கள். 

இன்றைய வசனம் கூறுவதன்படி நமது அறிவை நாம் நம்பிக்கொண்டு வாழ்ந்தால் நோவுதான் அதிகரிக்கும். உலக காரியங்களிலும்கூட இதுவே உண்மை. அறிவு எப்போதும் கைகொடுக்காது. எனவே, எவ்வளவு உலக அறிவை நாம் பெற்றிருந்தாலும் பவுலைப்போல நம்மைத் தாழ்த்தி தேவனை நமக்குள் முதலில் பெறவேண்டும். அதற்கு குழந்தையைப்போன்ற சுத்த இருதயம் நமக்கு வேண்டும். 

"தேவனே, சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும், நிலைவரமான ஆவியை என் உள்ளத்திலே புதுப்பியும்." ( சங்கீதம் 51 : 10 ) எனத் தாவீதைப்போல முழு இருதயத்தோடு வேண்டுதல் செய்வோம்.


                                       

ஆதவன் 🖋️ 611 ⛪ செப்டம்பர் 30,  2022 வெள்ளிக்கிழமை

"தேவனுடைய வழி உத்தமமானது; கர்த்தருடைய வசனம் புடமிடப்பட்டது; தம்மை நம்புகிற அனைவருக்கும் அவர் கேடகமாயிருக்கிறார்." ( சங்கீதம் 18 : 30 )

இந்த உலகத்தில் எல்லா நாடுகளிலும் பாதுகாப்புக்காக செலவிடப்படும் தொகைதான் அதிகம். இந்திய அரசாங்கம் பாதுகாப்புத் துறைக்கு இந்த ஆண்டு ஒதுக்கியுள்ள தொகை ரூபாய் 5,25,166 கோடிகள். இதுபோல தனியார் நிறுவனங்கள் தங்களது பாதுகாப்புக்காக பெரிய தொகையை ஆண்டுதோறும் ஒதுக்குகின்றன. ஆனால் இன்றைய வசனம் கூறுகின்றது, "கர்த்தருடைய வசனம் புடமிடப்பட்டது; தம்மை நம்புகிற அனைவருக்கும் அவர் கேடகமாயிருக்கிறார்." அதாவது கர்த்தரது வசனமே பெரிய கேடகமாக இருந்து பாதுகாக்கும் என்று. 

நாடுகள் பாதுகாப்புக்காக பணத்தை ஒதுக்கீடு செய்வதுபோல நமது பாதுகாப்புக்கும், நமது குடும்பம், சமுதாயம் இவற்றின் பாதுகாப்புக்கும் நாம் தேவனது வசனத்தை ஒதுக்கீடு செய்யவேண்டும். அதாவது தேவ வசனங்களின்மேல் விசுவாசம்கொண்டு அவரையே நம்பி வாழவேண்டும். கோலியாத்தை வீழ்த்த தாவீது தேவனாகிய கர்த்தரையே நம்பிச் செயல்பட்டார். தேவனைச் சேனைகளின் கர்த்தராகக் கண்டார். வெற்றிபெற்றார். 

கர்த்தரால் வரும் பாதுகாப்பையும் இரட்சிப்பையும் தாவீது நன்கு அனுபவித்து அறிந்திருந்தார். எனவேதான் இந்த பதினெட்டாம் சங்கீதத்தையே எழுதினார். கர்த்தர் தாவீதை அவனது எல்லா சத்துருக்களிடமிருந்தும் சவுலினிடமிருந்தும் விடுவித்தபோது தாவீது பாடிய சங்கீதம் என்று இந்தச் சங்கீதம் குறிப்பிடப்பட்டுள்ளது.

"கர்த்தரை அல்லாமல் தேவன் யார்? நம்முடைய தேவனையன்றிக் கன்மலையும் யார்?" ( சங்கீதம் 18 : 31 )

"என்னைப் பலத்தால் இடைகட்டி, என் வழியைச் செவ்வைப்படுத்துகிறவர் தேவனே." ( சங்கீதம் 18 : 32 )

என வரிக்குவரி இந்த சங்கீதத்தில் தேவனது பாதுகாப்பை தாவீது நினைவுகூருகின்றார். 

தாவீதைப்போல கர்த்தர்மேல் உறுதியான விசுவாசம் கொண்டு வாழும்போது அவரே நமது அரணும்  கோட்டையுமாக இருந்து நம்மைப் பாதுகாப்பார். ஆனால் ஒரு நிபந்தனை. இன்றைய வசனம், "தேவனுடைய வழி உத்தமமானது; கர்த்தருடைய வசனம் புடமிடப்பட்டது" என்று கூறுகின்றது.

அதாவது தேவனுடைய தூய்மையான உத்தமுமான வழியில் நாம் நடக்கவேண்டும் மட்டுமல்ல புடமிடப்பட்ட கர்த்தரது வசனம் நம் வாழ்வில் இருக்கவேண்டும், வசனத்தின்படி நாம் வாழவேண்டும். இப்படி வாழ்பவர்களுக்கு அவர் கேடகமாயிருப்பார்.

விஞ்ஞானத்தில் நாம் ஒரு குறிப்பிட்ட கோட்பாடை நிரூபிக்கவேண்டுமானால் சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருக்கும். அந்த நிபந்தனைகளுக்கு உட்பட்டு செயல்பட்டால் மட்டுமே எதிர்பார்க்கும் முடிவு கிடைக்கும். அதுபோல எல்லா வேத ஆசீர்வாத  வசனங்களும் நிபந்தனைகளோடுதான் இருக்கும். தேவன் விதித்துள்ள அந்த நிபந்தனைகளை நிறைவேற்றும்போதே அவை நமது வாழ்வில் செயல்படும். 

தேவனுடைய தூய்மையான உத்தமுமான வழியில் நாம் நடக்க நம்மை ஒப்புக்கொடுத்து அவரது புடமிடப்பட்ட வசனம் கூறுகின்றபடி வாழ்வோம். அப்போது இன்றைய வசனம் கூறுவதுபோல அவரை நம்பும் நம்மை அவர் கேடகமாய் இருந்து காத்துக்கொள்வார். 

                                    

Comments

அதிகமாகப் படிக்கப்பட்டச் செய்திகள்