இயேசு கிறிஸ்து முதலில் நம்மை அன்புகூர்ந்ததினால் நாம் அவரை அன்பு செய்கின்றோம்.

Saturday, August 31, 2024

ஆவியும் ஜீவனுமாக இருக்கும் அவரையே பற்றிக்கொள்வோம்.

 'ஆதவன்' செப்டம்பர் 09, 2024. திங்கள்கிழமை             வேதாகமத் தியானம் - எண்:- 1,309

"ஆவியே உயிர்ப்பிக்கிறது, மாம்சமானது ஒன்றுக்கும் உதவாது; நான் உங்களுக்குச் சொல்லுகிற வசனங்கள் ஆவியாயும் ஜீவனாயும் இருக்கின்றன." ( யோவான் 6 : 63 )

தேவ வசனங்கள் ஆவியாகவும் ஜீவனாகவும் இருக்கின்றன என்று இயேசு கிறிஸ்து இன்றைய தியான வசனத்தில் கூறுகின்றார். தேவனது வாயிலிருந்து வரும் வார்த்தைகள் உயிருள்ளவை. எனவேதான் அவை மரித்தவனுக்கு உயிர்கொடுக்கும் வல்லமையும் நோய்களைக் குணமாக்கும் வல்லமையும் கொண்டுள்ளன. அதுபோலவே அந்த வார்த்தைகள் நமக்கு நித்திய ஜீவன் எனும் முடிவில்லா வாழ்வையும் கொடுக்க வல்லவை. 

இதனையே அப்போஸ்தலரான பேதுரு, "ஆண்டவரே, யாரிடத்தில் போவோம், நித்தியஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே." ( யோவான் 6 : 68 ) என்று இயேசு கிறிஸ்துவிடம் கூறினார். 

இயேசு கிறிஸ்து கூறுவதுபோல ஆவியே உயிர்ப்பிக்கிறது, அவர் கூறும் வசனங்கள் ஆவியாயும் ஜீவனாயும் இருக்கின்றன. மாம்சமானது ஒன்றுக்கும் உதவாது. அதாவது மாம்சகாரியங்கள் ஒன்றுக்கும் பயனற்றவை. ஆனால் இன்று பலரும் ஆவிக்குரிய காரியங்களைவிட மாம்சகாரியங்களையே தேவனிடம் கேட்டுப் பெற்றுக்கொள்ள விரும்புகின்றனர். தேவனது ஜீவனுள்ள வார்த்தைகளைப் புறக்கணிக்கின்றனர். வார்தையைப் புறக்கணிப்பது என்பது  கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவையே புறக்கணிப்பதாகும். 

காரணம், நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துதான் தேவனது வார்த்தை என்று வேதம் கூறுகின்றது. ஆம், "ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது." ( யோவான் 1 : 1 ) "அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம் பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரேபேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது." ( யோவான் 1 : 14 ) என்று நாம் வாசிக்கின்றோம். 

எனவே, மெய்யான சுவிசேஷ அறிவிப்பு என்பது நமது ஆண்டவராகிய இயேசுவை அறிவிப்பதுதான். அப்போஸ்தலரான யோவான் கூறுகின்றார், "ஆதிமுதல் இருந்ததும், நாங்கள் கேட்டதும், எங்கள் கண்களினாலே கண்டதும், நாங்கள் நோக்கிப்பார்த்ததும், எங்கள் கைகளினாலே தொட்டதுமாயிருக்கிற ஜீவவார்த்தையைக் குறித்து உங்களுக்கு அறிவிக்கிறோம்.' ( 1 யோவான்  1 : 1 ) என்று. எனவே, கிறிஸ்துவையும் அவர் தரும்  நித்தியஜீவனையும் அறிவிக்காமல் உலக ஆசீர்வாதங்களையே சுவிசேஷமாக அறிவிப்பது அவரைப் புறக்கணிப்பதாகும்.

ஆம் அன்பானவர்களே, இன்றைய தியான வசனம் கூறுகின்றபடி, ஆவியே உயிர்ப்பிக்கிறது, மாம்சமானது ஒன்றுக்கும் உதவாது; அந்த வசனங்கள் ஆவியாயும் ஜீவனாயும் இருக்கின்றன என்று கூறியுள்ளபடி கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே ஆவியாகவும் ஜீவனாகவும் இருக்கின்றார். அவரைப் நமது வாழ்வில் ஏற்றுக்கொள்ளாமல் தள்ளிவிட்டு நாம் நமது மாம்சத்தில் எடுக்கும் முடிவுகள் ஒன்றுக்கும் உதவாதவை. 

எனவே, ஆவியும் ஜீவனுமாக இருக்கும் அவரையே வாழ்வில் பற்றிக்கொள்வோம்.  ஆவியாயும் ஜீவனாயும் இருக்கின்ற அவரே நமக்கு நித்திய ஜீவனையும் தருவார். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  

மாறுபாடுள்ளவனுக்கு அவர் மாறுபாடுள்ளவர்

 'ஆதவன்' செப்டம்பர் 08, 2024. ஞாயிற்றுக்கிழமை       வேதாகமத் தியானம் - எண்:- 1,308


"தயவுள்ளவனுக்கு நீர் தயவுள்ளவராகவும், உத்தமனுக்கு நீர் உத்தமராகவும்; புனிதனுக்கு நீர் புனிதராகவும், மாறுபாடுள்ளவனுக்கு நீர் மாறுபடுகிறவராகவும் தோன்றுவீர்." ( சங்கீதம் 18 : 25, 26 ) 

கடவுளை நாம் எப்படிப் பார்க்கின்றோமோ அப்படியே அவர் நமக்குத் தோன்றுவார். பணத்தை அடிப்டையாகக் கொண்டு தேவ ஆசீர்வாதத்தினைத் தேடுபவர்களுக்கு அவர் வெறும் பணம் தரும் தெய்வமாகவும் ஆத்தும இரட்சிப்பைத் தேடுபவர்களுக்கு அவர் ஆத்தும இரட்சகராகவும் தோன்றுவார். 

திருடச் செல்பவனும் தனது மனதில் தேவனைத் தன்னைப்போல ஒரு திருடனாக எண்ணுவதால் திருடும்போது யாரும் தன்னைக் கண்டு பிடித்துவிடக்கூடாது என்றுதான் வேண்டுதல் செய்கின்றான். இப்படித்  தன்னை ஒருவன் எப்படிப்பட்டவராக எண்ணுகின்றானோ அப்படியே அவனுக்குத் தோன்றுவார். ஆம்,   மாறுபாடுள்ளவனுக்கு  அவர் மாறுபடுகிறவராகத்  தோன்றுவார். எனவே தான் தேவனைத் துன்மார்க்கர்கள் எளிதில் கடவுளை அடையாளம் கண்டுகொள்ள முடிவதில்லை. இந்த உலகத்தில் ஊழல் செய்யும் ஊழல்வாதிகள், எத்தர்கள், துன்மார்க்க அரசியல்வாதிகள் பலரும் பக்திக் செயல்பாடுகளிலும் அதிகம் ஈடுபட்டுள்ளனர். காரணம், அவர்கள் பார்வைக்கு கடவுளும் அவர்களைப் போன்றவர்தான்.  

இன்றைய தியான வசனம் கூறுகின்றது, "தயவுள்ளவனுக்கு நீர் தயவுள்ளவராகவும், உத்தமனுக்கு நீர் உத்தமராகவும்; புனிதனுக்கு நீர் புனிதராகவும் தோன்றுவீர்"  என்று.  ஆம் அன்பானவர்களே, நாம் தேவனது தயவு, உத்தமம், பரிசுத்தம் அல்லது புனிதம் இவற்றை அடையவேண்டுமானால் தேவனை நாம் அப்படிப்பட்டவராக எண்ணி வாழவேண்டியது அவசியம். 

இன்று கிறிஸ்தவ ஊழியர்கள் பலரும் தேவனை உலக ஆசீர்வாதங்களைத் தருபவராகவே மக்களுக்கு எடுத்துச் சொல்கின்றனர். எனவே அவர்களுக்கு அவர் அந்த மட்டுமே வெளிப்படுவார். நித்தியஜீவனை அளிப்பவராக தேவனைப் பார்பவர்களுக்கோ நித்திய ஜீவனை அளிப்பார். 

ஆம், "தேவன் அவனவனுடைய கிரியைகளுக்குத்தக்கதாய் அவனவனுக்குப் பலனளிப்பார். சோர்ந்துபோகாமல் நற்கிரியைகளைச்செய்து, மகிமையையும் கனத்தையும் அழியாமையையும் தேடுகிறவர்களுக்கு நித்தியஜீவனை அளிப்பார். சண்டைக்காரராயிருந்து, சத்தியத்திற்குக் கீழ்ப்படியாமல், அநியாயத்திற்குக் கீழ்ப்படிந்திருக்கிறவர்களுக்கோ உக்கிரகோபாக்கினை வரும்." ( ரோமர் 2 : 6 - 8 ) என்று வாசிக்கின்றோம். 

தேவன் தன்னை எவரிடமும் வலுக்கட்டாயமாகத் திணிப்பது கிடையாது. எனவே அவரவர் குணங்களுக்கேற்ப தயவுள்ளவனுக்கு தயவுள்ளவராகவும், உத்தமனுக்கு உத்தமராகவும்; புனிதனுக்கு புனிதராகவும், மாறுபாடுள்ளவனுக்கு மாறுபடுகிறவராகவும் தோன்றுகின்றார்.  எனவே, அன்பானவர்களே, பாவ மன்னிப்பையும் பரிசுத்த வாழ்வையும் நித்தியஜீவனையும் தேடுபவர்களுக்கு மட்டுமே அவர் தன்னை உண்மையாக வெளிப்படுத்தி அவர்களுக்கு இவைகளை அருளுகின்றார்.  

"..............நீங்கள் எந்த அளவினால் அளக்கிறீர்களோ அந்த அளவினால் உங்களுக்கும் அளக்கப்படும். " ( லுூக்கா 6 : 38 ) என்று இயேசு கிறிஸ்து கூறவில்லையா? 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்       

Friday, August 30, 2024

சந்தேகம்

 'ஆதவன்' செப்டம்பர் 07, 2024. 💚சனிக்கிழமை    வேதாகமத் தியானம் - எண்:- 1,307


"இருமனமுள்ளவன் தன் வழிகளிலெல்லாம் நிலையற்றவனாயிருக்கிறான்." ( யாக்கோபு 1 : 8 )

இருமனமுள்ளவர்கள் உலக காரியங்களில் மட்டுமல்ல, ஆவிக்குரிய வாழ்விலும் எதனையும் பெற்றுக்கொள்ள முடியாதவர்களாக தோல்வி வாழக்கையையே சந்திப்பார்கள். உலக காரியங்களில் சிலர் ஒரு வேலையினைச் செய்யத் துவங்குவார்கள். பின்னர் மற்றவர்களையும் தங்களது செயலில் ஏற்படும் பிரச்சனைகளையும் கண்டு மனம்மாறி வேறு ஒரு செயலைச் செய்யத் துவங்குவார்கள். இத்தகைய மனிதர்கள் நிலையற்றவர்கள் என்று இன்றைய தியான வசனம் கூறுகின்றது. 

இதற்குக் காரணம் சந்தேகம். ஒருவேளை நாம் செய்யும் இந்தச் செயல் நஷ்டத்தில் முடியுமோ? என்று சந்தேகப்படுவது. ஆவிக்குரிய வாழ்விலும் பலர் இப்படியே இருக்கின்றனர். எப்போதும் எதெற்கெடுத்தாலும் சிலர் சந்தேகத்திலேயே இருப்பார்கள். நன்றாக ஜெபிப்பார்கள், ஆனால் ஒருவேளை நாம் ஜெபித்தபடி நடக்காவிட்டால் என்னசெய்வது? என்பதே இவர்களது எண்ணமாக இருக்கும். எனவேதான் அப்போஸ்தலரான யாக்கோபு இன்றைய தியான வசனத்தின் முந்தின வசனத்தில், "அப்படிப்பட்ட மனுஷன் தான் கர்த்தரிடத்தில் எதையாகிலும் பெறலாமென்று நினையாதிருப்பானாக." ( யாக்கோபு 1 : 7 ) என்று கூறுகின்றார். 

இயேசு கிறிஸ்துவும், "நீங்கள் ஜெபம்பண்ணும்போது எவைகளைக் கேட்டுக்கொள்ளுவீர்களோ, அவைகளைப் பெற்றுக்கொள்வோம் என்று விசுவாசியுங்கள், அப்பொழுது அவைகள் உங்களுக்கு உண்டாகும் என்று சொல்லுகிறேன்." ( மாற்கு 11 : 24 ) என்று கூறுகின்றார். 

எனவேதான் இன்றைய தியான வசனத்தின் முன்பு யாக்கோபு கூறுகின்றார், "சந்தேகப்படுகிறவன் காற்றினால் அடிபட்டு அலைகிற கடலின் அலைக்கு ஒப்பாயிருக்கிறான். அப்படிப்பட்ட மனுஷன் தான் கர்த்தரிடத்தில் எதையாகிலும் பெறலாமென்று நினையாதிருப்பானாக." ( யாக்கோபு 1 : 6, 7 ) என்று. ஆம் அன்பானவர்களே, சந்தேகம் ஒரு பெரிய நோய். உலக காரியங்களிலும் ஆவிக்குரிய காரியங்களிலும் மனிதர்களின் அழிவுக்கு சந்தேகம் இட்டுச்செல்லும். 

எனவே நாம் ஜெபிப்பது எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் சந்தேகப்படாமல் ஜெபிப்பது. எனது ஜெபத்துக்கு நான் விரும்பும் பதில் வந்தாலும் வராவிட்டாலும் நான் கர்த்தர்மேலுள்ள விசுவாசத்தை விட்டுவிடமாட்டேன் என்று உறுதியாக இருப்பது. இந்த உறுதி இருக்குமானால் நாம் கலங்கிடமாட்டோம். நிலையற்றவர்களாக அலைந்து திரியமாட்டோம். இன்று கிறிஸ்தவர்கள் பலர்கூட தங்களுக்குச் சில பிரச்சனைகள் வரும்போது  பல்வேறு மூட நம்பிக்கைச் செயல்பாடுகளையும் பிறமதத்தினர் கையாளும் காரியங்களுக்கும் அடிமைகளாக உள்ளனர். இது தவறல்ல, இந்தியன் கல்ச்சர் என்று கூறித் தங்கள் தப்பிதங்களை நியாயப்படுத்திக்கொண்டு வாழ்கின்றனர். 

இத்தகைய இருமனதுள்ளவர்களைப் பார்த்து வேதம் கூறுகின்றது,  "நீங்கள் எந்தமட்டும் இரண்டு நினைவுகளால் குந்திக்குந்தி நடப்பீர்கள்; கர்த்தர் தெய்வமானால் அவரைப் பின்பற்றுங்கள்; பாகால் தெய்வமானால் அவனைப் பின்பற்றுங்கள்." ( 1 இராஜாக்கள் 18 : 21 )

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்        

Thursday, August 29, 2024

ஞானமுள்ளவர்களாக பிதாவின் சித்தம் செய்வோம்

 'ஆதவன்' செப்டம்பர் 06, 2024. வெள்ளிக்கிழமை     வேதாகமத் தியானம் - எண்:- 1,306


"நீங்கள் ஞானமற்றவர்களைப்போல நடவாமல், ஞானமுள்ளவர்களைப்போலக் கவனமாய் நடந்துகொள்ளப்பார்த்து, நாட்கள் பொல்லாதவைகளானதால் காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள்." ( எபேசியர் 5 : 15, 16 )

இந்த உலகத்தில் நமக்கு வாழக்கொடுக்கப்பட்ட நாட்கள் குறைவு. எனவே அந்தக் குறைந்த  நாட்களை நாம்  நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என்று இன்றைய தியான வசனம் கூறுகின்றது. ஏன் கவனமாக நடக்கவேண்டும்? இந்த உலகத்தின் நாட்கள் பொல்லாதவைகளாய் இருக்கின்றன. காரணம் இந்த உலகம் பொல்லாங்கனுக்குள்  கிடக்கின்றது. "நாம் தேவனால் உண்டாயிருக்கிறோமென்றும், உலகமுழுவதும் பொல்லாங்கனுக்குள் கிடக்கிறதென்றும் அறிந்திருக்கிறோம்." ( 1 யோவான்  5 : 19 ) என்று கூறுகின்றார் யோவான். 

நாம் தேவனால் உண்டாயிருக்கிறோம், ஆனால்  உலகமுழுவதும் பொல்லாங்கனுக்குள் (பிசாசு அல்லது சாத்தானின் கையில்)  கிடக்கிறது. இந்த முரண்பாடே பிரச்னைகளுக்குக் காரணமாக இருக்கின்றது. எனவே நாம்  ஞானமற்றவர்களாய் இருக்காமல்  ஞானமுள்ளவர்களாய்க் கவனமாய் நடந்து கொள்ளவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.   

ஞானமில்லாதவன் அறிவில்லாமல் சில காரியங்களைச் செய்வதைப்போல நாமும் செய்துவிடக்கூடாது என்கிறார் அப்போஸ்தலராகிய பவுல். எனவேதான் இன்றைய தியான வசனத்தைத் தொடர்ந்து கூறுகின்றார்,  "ஆகையால், நீங்கள் மதியற்றவர்களாயிராமல், கர்த்தருடைய சித்தம் இன்னதென்று உணர்ந்துகொள்ளுங்கள்." ( எபேசியர் 5 : 17 ) அதாவது ஞானமுள்ளவன் தன்னைக்குறித்த தேவனது சித்தம் இன்னதென்று அறிந்தவனாக இருப்பான். ஞானமில்லாதவனுக்கு அந்த அறிவு இருக்காது. 

இந்த உலகத்தில் படைக்கப்பட்ட ஒவ்வொருவரைக்குறித்தும் தேவனுக்கு ஒரு சித்தம் உண்டு. அந்தச் சித்தத்தைச் செய்வதே தேவனுக்கு உகந்ததாகும். தேவ சித்தத்தை மீறும்போது நாம் பாவம் செய்தவர்களாகின்றோம். எனவேதான் அப்போஸ்தலராகிய பவுல், "இதனிமித்தம், நாங்கள் அதைக்கேட்ட நாள்முதல் உங்களுக்காக இடைவிடாமல் ஜெபம்பண்ணுகிறோம்; நீங்கள் எல்லா ஞானத்தோடும், ஆவிக்குரிய விவேகத்தோடும் அவருடைய சித்தத்தை அறிகிற அறிவினாலே நிரப்பப்படவும்......." ( கொலோசெயர் 1 : 9 ) என்று கொலோசெய சபை விசுவாசிகள் தேவ சித்தத்தை அறிகிற அறிவினாலே நிரப்பப்பட ஜெபிப்பதாகக் கூறுகின்றார். 

இயேசு கிறிஸ்துவும் தான் சொல்லிக்கொடுத்த ஜெபத்தில், "உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக." ( மத்தேயு 6 : 10 ) என்று ஜெபிக்கச் சொல்லிக்கொடுத்தார். ஆம் அன்பானவர்களே, பிதாவின் சித்தம் பரலோகத்தில் எப்படி அவரது விருப்பப்படி செய்யப்படுகின்றதோ அதுபோல பூமியில் நாம் அதனை நிறைவேற்றவேண்டும்.  எனவே, நாட்கள் பொல்லாதவைகளானதால் நமது குறுகிய வாழ்நாள்  காலத்தைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள் என்கின்றார் பவுல் அப்போஸ்தலர். ஞானமுள்ளவர்களாக நம்மைக்குறித்த பிதாவின் சித்தம் அறிந்து செயல்படுவோம். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  

Wednesday, August 28, 2024

ஆதாம் ஏவாள் புறக்கணித்த நித்தியஜீவன்

 'ஆதவன்' செப்டம்பர் 05, 2024. வியாழக்கிழமை   வேதாகமத் தியானம் - எண்:- 1,305


"ஜீவவிருட்சத்தின்மேல் அதிகாரமுள்ளவர்களாவதற்கும், வாசல்கள் வழியாய் நகரத்திற்குள் பிரவேசிப்பதற்கும் அவருடைய கற்பனைகளின்படி செய்கிறவர்கள் பாக்கியவான்கள்." ( வெளிப்படுத்தின விசேஷம் 22 : 14 ) '

ஆதியாகமம் முதல் வெளிப்படுத்தின சுவிசேஷம்வரை கோர்வையாக நாம் பார்ப்போமானால் மனிதர்கள் தன்னைப்போல பரிசுத்தமாக வாழ்ந்து நித்தியஜீவனுக்குள் பிரவேசிக்க தேவன் தொடர்ந்து எடுத்தச்  செயல்பாடுகளை நாம் பார்க்கலாம்.  ஆதியாகமத்தில் ஜீவவிருட்சமாக  நித்தியஜீவன் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தேவனாகிய கர்த்தர், "...தோட்டத்தின் நடுவிலே ஜீவவிருட்சத்தையும், நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தையும் பூமியிலிருந்து முளைக்கப்பண்ணினார்." ( ஆதியாகமம் 2 : 9 ) ஆனாலும் அவர் நன்மை தீமை அறியத்தக்க மரத்தின் கனியை உண்ண மட்டுமே தடைசெய்திருந்தார். தோட்டத்தின் நடுவிலே இருந்த ஜீவவிருட்சத்தைக்  குறித்து அவர் எதுவும் சொல்லவில்லை. ஆனால் ஆதாமும் ஏவாளும் ஜீவவிருட்சத்தை விரும்பவுமில்லை அதனை அடைய விரும்பவுமில்லை. ஆனால் தேவன் தடைசெய்த மரத்தின் கனியைத் தின்று தேவனுக்கு எதிராகப் பாவம் செய்தனர். 

ஜீவனுக்குள் பிரவேசிக்க பரிசுத்தம் வேண்டும். "தீட்டுள்ளதும் அருவருப்பையும் பொய்யையும் நடப்பிக்கிறதுமாகிய ஒன்றும் அதில் பிரவேசிப்பதில்லை; ஆட்டுக்குட்டியானவரின் ஜீவபுஸ்தகத்தில் எழுதப்பட்டவர்கள் மாத்திரம் அதில் பிரவேசிப்பார்கள்." ( வெளிப்படுத்தின விசேஷம் 21 : 27 ) என்று நாம் வாசிக்கின்றோம்.

தேவ கட்டளையை மீறியபோது ஆதாமும் ஏவாளும் உண்மையில்லாதவர்களாக மாறிவிட்டனர். எனவே, அதுவரை பாவம் செய்யாமல் இருந்த ஆதாமுக்கும் ஏவாளுக்கும் திறந்திருந்த ஜீவவிருட்சத்துக்குச் செல்லும் வாசல் அடைக்கப்பட்டது. இதனை,  "அவர் மனுஷனைத் துரத்திவிட்டு, ஜீவவிருட்சத்துக்குப் போகும் வழியைக் காவல்செய்ய ஏதேன் தோட்டத்துக்குக் கிழக்கே கேருபீன்களையும், வீசிக்கொண்டிருக்கிற சுடரொளி பட்டயத்தையும் வைத்தார்." ( ஆதியாகமம் 3 : 24 ) என்று வாசிக்கின்றோம். 

ஆதாமும் ஏவாளும் இழந்துபோன இந்த பாக்கியத்தை கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நம் ஒவ்வொருவருக்கும் வழங்க விரும்புகின்றார். அதற்கு நம்மைத் தகுதியுள்ளவர்களாக்கவே அவர் பாடுபட்டு மரித்து நித்திய மீட்பினை உண்டுபண்ணினார்.  ஆம், அவரே வாசல். அவர் வழியாகவே நாம் நித்திய ஜீவனுக்குள் நுழைய முடியும். இதனையே, "ஜீவவிருட்சத்தின்மேல் அதிகாரமுள்ளவர்களாவதற்கும், வாசல்கள் வழியாய் நகரத்திற்குள் பிரவேசிப்பதற்கும் அவருடைய கற்பனைகளின்படி செய்கிறவர்கள் பாக்கியவான்கள்." என்று இன்றைய தியான வசனம் கூறுகின்றது. 

ஆம் அன்பானவர்களே,  கிறிஸ்து தனது சுய இரத்தத்தால் உண்டாக்கிய இந்த மீட்பின் பாதையினைப் புறக்கணிக்காமல் வாழ்வோம். ஆதாம் ஏவாள் சுவைக்க மறுத்த ஜீவவிருட்சத்தின் கனியினை உண்டு மகிழ்வோம். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  

Sunday, August 25, 2024

ஒருவரது குறையை மற்றவர்களிடம் .....

 'ஆதவன்' செப்டம்பர் 04, 2024. 💚புதன்கிழமை       வேதாகமத் தியானம் - எண்:- 1,304


"உங்களைக்குறித்துப் பேசவும் நியாயந்தீர்க்கவும் எனக்கு அநேக காரியங்களுண்டு. என்னை அனுப்பினவர் சத்தியமுள்ளவர்; நான் அவரிடத்தில் கேட்டவைகளையே உலகத்துக்குச் சொல்லுகிறேன். " ( யோவான் 8 : 26 )

இன்றைய தியான வசனத்தில் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நாம் கடைபிடிக்கவேண்டிய ஒரு முக்கியமான குணத்தைக்குறித்துப்  பேசுகின்றார். மனிதர்களாகிய நாம் பல வேளைகளில் ஒருவரைக்குறித்து முழுவதும் அறியாமல் அவர்களைப் பற்றிப் பல காரியங்களைப் பேசவும் அவர்களிடம் நாம் காணும் குறைகளைவைத்து அவர்களை நியாயம்தீர்க்கவும் செய்கின்றோம். 

ஆனால் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து எல்லோரையைப் பற்றியும் அவர்களது மனத்தின் எண்ணங்களைக்குறித்தும் நன்கு அறிந்திருந்தார். இதனை நாம், "மனுஷருள்ளத்திலிருப்பதை அவர் அறிந்திருந்தபடியால், மனுஷரைக் குறித்து ஒருவரும் அவருக்குச் சாட்சி கொடுக்கவேண்டியதாயிருக்கவில்லை." ( யோவான் 2 : 25 ) என்று வாசிக்கின்றோம். ஆனால் அவர் மனிதர்களைப்போல ஒருவரது குறையை மற்றவர்களிடம் கூறிக்கொண்டிருக்கவில்லை.  

இதனையே அவர் இன்றைய தியான வசனத்தில் கூறுகின்றார், "உங்களைக்குறித்துப் பேசவும் நியாயந்தீர்க்கவும் எனக்கு அநேக காரியங்களுண்டு. என்னை அனுப்பினவர் சத்தியமுள்ளவர்; நான் அவரிடத்தில் கேட்டவைகளையே உலகத்துக்குச் சொல்லுகிறேன்." என்று. அதாவது, உங்களைக் குறித்துப் பேச உங்களைப்பற்றி  பல காரியங்கள் எனக்குத் தெரியும். ஆனால் நான் அவைகளைப் பேச விரும்பவில்லை, மாறாக என்னை அனுப்பின சத்தியமுள்ள பிதாவாகிய தேவன் என்னிடம்  சொல்ல நான் கேட்டவைகளையே உலகத்துக்குச் சொல்லுகிறேன்".

ஆம் அன்பானவர்களே, நாம் பேசவேண்டியக்  காரியங்கள் இப்படியே இருக்கவேண்டும். மற்றவர்களைக்குறித்து அரையும் குறையுமாக நாம் கேள்விப்பட்டவற்றைப் பேசுவதையும் அதன் அடிப்படையில் அவர்களை நியாயம்  தீர்ப்பதையும் விட்டுட்டு தேவனுக்கேற்ற காரியங்களை மட்டுமே பேச முயற்சியெடுக்க வேண்டும்.  பிறரைக்குறித்த தேவையற்ற பேச்சுக்கள் மனிதர்களிடையே சண்டையையும் பிரச்சனைகளையுமே வளர்க்கும். 

ஒருவரைக்குறித்து நாம் சில காரியங்களை எளிதில் பேசிவிடலாம். ஆனால் நாம் பேசியது தவறு என்று பின்னர் நாம் உணர்ந்துகொண்டாலும் நாம் மற்றவர்களிடம் சென்று நான் இன்னாரைக்குறித்து பேசியது தவறு என்று கூறிக்கொண்டிருக்க முடியாது. காரணம் நாம் தவறுதலாகக் கூறிய அந்தச் செய்தி அதற்குமுன் பலரிடம் பரிமாறப்பட்டிருக்கும். அதாவது நாம் ஒருவரது நற்பெயருக்கு கெடுதல் உண்டாக்கியிருக்கின்றோம் என்று பொருள். 

எனவே, மற்றவர்களைக்குறித்து நாம் கேள்விப்படுகின்ற காரியங்களை நாம் நமக்குளேயே வைத்துக்கொள்வது நல்லது. இதனால்தான் வேதம் கூறுகின்றது, "தூற்றிக்கொண்டு திரிகிறவன் இரகசியங்களை வெளிப்படுத்துவான்; ஆதலால் தன் உதடுகளினால் அலப்புகிறவனோடே கலவாதே." ( நீதிமொழிகள் 20 : 19 ) அவர்களோடு கலவாமல் இருப்பது மட்டுமல்ல; நாமும் அதுபோல தூற்றிக்கொண்டும் இரகசியக்களை வெளிப்படுத்திக்கொண்டும் வாழாமல் தேவனுக்குச் சித்தமானவைகளை மட்டுமே பேசுபவர்களாக வாழ்வோம். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                 

Saturday, August 24, 2024

உன்னதத்திலிருந்து வரும் பெலன்

 'ஆதவன்' செப்டம்பர் 03, 2024. செவ்வாய்க்கிழமை    வேதாகமத் தியானம் - எண்:- 1,303


"என் பிதா வாக்குத்தத்தம்பண்ணினதை, இதோ, நான் உங்களுக்கு அனுப்புகிறேன். நீங்களோ உன்னதத்திலிருந்து வரும் பெலனால் தரிப்பிக்கப்படும்வரைக்கும் எருசலேம் நகரத்தில் இருங்கள்" ( லுூக்கா 24 : 49 )

பிதாவான தேவன் நம்மை வழிநடத்தும் ஆவியானவரை நமக்கு வாக்களித்துள்ளார். நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துமூலம் ஆவியானவர் நமக்கு அருளப்படுகின்றார். "பிதாவினிடத்திலிருந்து நான் உங்களுக்கு அனுப்பப்போகிறவரும், பிதாவினிடத்திலிருந்து புறப்படுகிறவருமாகிய சத்திய ஆவியான தேற்றரவாளன் வரும்போது, அவர் என்னைக்குறித்துச் சாட்சி கொடுப்பார்." ( யோவான் 15 : 26 ) என்று இயேசு கிறிஸ்து கூறினார். இதனையே, "என் பிதா வாக்குத்தத்தம்பண்ணினதை, இதோ, நான் உங்களுக்கு அனுப்புகிறேன்" என்கின்றார் இயேசு கிறிஸ்து. 

ஆவியானவர் நமக்குள் வரும்போதுதான் நமக்கு பெலன் கிடைக்கின்றது. இன்றைய தியான வசனம் இயேசு கிறிஸ்து தனது சீடர்களோடு உலகத்தில் வாழ்ந்தபோது கூறியது. அதுபோல தான் மரித்து உயிர்த்தபோதும் இதனையே கூறினார். "நீங்கள் எருசலேமை விட்டுப் போகாமல் என்னிடத்தில் கேள்விப்பட்ட பிதாவின் வாக்குத்தத்தம் நிறைவேறக் காத்திருங்கள் என்று கட்டளையிட்டார்." ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 1 : 5 ) என்று உயிர்த்த இயேசு சீடர்களிடம் கூறினார். 

"எருசலேம் நகரத்தில் இருங்கள்" என்றும்  "நீங்கள் எருசலேமை விட்டுப் போகாமல் பிதாவின் வாக்குத்தத்தம் நிறைவேறக் காத்திருங்கள்" என்றும் கூறப்பட்டுள்ளது. எருசலேம் என்பது பரிசுத்த நகரம். அதாவது நீங்கள் உங்கள் பரிசுத்தத்தைவிட்டு விலகாமல் எனது வாக்குத்தத்தம் நிறைவேற காத்திருக்கள் என்கின்றார் இயேசு கிறிஸ்து. 
 
அன்பானவர்களே, நாம் இங்குக் கவனிக்கவேண்டியது பரிசுத்தத்தைவிட்டு விலகாமல் காத்திருக்கும் அனுபவம். நாம் கிறிஸ்துவை அறிவிக்கவேண்டுமானால் இந்தக் காத்திருத்தல் அவசியமாய் இருக்கின்றது. பாவங்கள் மன்னிக்கப்படுவது ஆவிக்குரிய வாழ்வின் முதல்படிதான். உடனேயே கிறிஸ்துவை அறிவிக்கப்போகின்றேன் என்று புறப்பட்டுவிடக்கூடாது. நமக்கு உன்னத பெலன் தேவையாய் இருக்கின்றது. அந்த பெலன் ஆவியானவரால் நமக்கு அருளப்படுகின்றது. அந்த பெலன் தான் சாட்சியுள்ள வாழ்க்கை வாழ நமக்கு உதவக்கூடியது. 

எனவேதான் இயேசு கிறிஸ்து சீடர்களிடம் கூறினார், "பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிப்பரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள்" ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 1 : 8 ) ஆம்,  எருசலேம் நாம் இருக்கும் பரிசுத்த நகரம், நமது சொந்த வீடு, குடும்பம். முதலில் நமது சாட்சி அங்கு இருக்கவேண்டும். தொடர்ந்து அடுத்திருக்கும் யூதேயா, அதாவது நம்மைச் சுற்றியிருக்கும் சமூகம் / ஊர்,  அடுத்து சமாரியா எனும் பிற இனத்து மக்கள்.  இப்படி நமது சாட்சியுள்ள வாழ்க்கை விரிவடைந்து இருக்குமானால் நாம் நமது ஆவிக்குரிய வாழ்வில் பூமியின் கடைசி எல்லைவரை சாட்சிகளாய் இருக்க முடியும். 

சொந்த வீட்டிலும், ஊரிலும் நம்மைச் சுற்றியுள்ள சமூகத்திலும் சாட்சிக்கேடான வாழ்க்கை வாழ்ந்துகொண்டு நாம் கிறிஸ்துவை அறிவிக்க முடியாது.   ஆம் அன்பானவர்களே, உன்னதத்திலிருந்து வரும் பெலனால் தரிப்பிக்கப்படும்வரைக்கும் எருசலேம் நகரத்தில் இருங்கள் என்று இயேசு கிறிஸ்து கூறியபடி எருசலேமில் தரித்திருந்து ஆவிக்குரிய பெலனடைவோம். அதன்பின்னர் கிறிஸ்துவை அறிவிக்க நமக்கு பெலன் கிடைக்கும். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்            

Friday, August 23, 2024

ஜாதி பாகுபாடு

 'ஆதவன்' செப்டம்பர் 02, 2024. திங்கள்கிழமை 💚 வேதாகமத் தியானம் - எண்:- 1,302



"...எந்த மனுஷனையும் தீட்டுள்ளவனென்றும் அசுத்தனென்றும் நான் சொல்லாதபடிக்கு தேவன் எனக்குக் காண்பித்திருக்கிறார்." ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 10 : 28 )

நமது நாட்டின் சாபக்கேடான விஷயங்களில் ஒன்று ஜாதி பாகுபாடு. ஜாதி வெறி இன்று கிறிஸ்தவர்களுக்குள்ளும் இருப்பது மறுக்கமுடியாத நிஜம். ஜாதி பாகுபாட்டைக் கொண்டுசெயல்படும் கிறிஸ்தவ ஆலயங்கள், கல்லறைகள் மட்டுமல்ல ஜாதி அடிப்படையில் உயர் பதவிகளுக்கு ஊழியர்களை நியமனம் செய்யும் அவலநிலையும்  கிறிஸ்தவத்திலும் மற்ற சமூகங்களுக்கு எந்த விதத்திலும் குறைவில்லாமல் இருக்கின்றது. ஜாதி அடிப்படையில் மறைமாவட்டங்களைப் பிரித்து ஆட்சிசெய்வதையும் நாம் பார்க்கின்றோம். 

ஆனால் இன்று இவைகளை மறைத்து தங்களிடம்  குறையில்லாததுபோல கிறிஸ்தவர்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். ஜாதிவெறி பாவம் என்பதும் அது தேவனுக்கு ஏற்பில்லாத செயல் எனும் எண்ணமும்  கிறிஸ்தவத்  தலைவர்களுக்கும் இருப்பதில்லை. தேவன் இதனை அப்போஸ்தலரான பேதுருவுக்கு வெளிப்படுத்தினார். எனவே அவர் கூறுகின்றார், "...எந்த மனுஷனையும் தீட்டுள்ளவனென்றும் அசுத்தனென்றும் நான் சொல்லாதபடிக்கு தேவன் எனக்குக் காண்பித்திருக்கிறார்." என்று. 

தேவன் ஆள்பார்த்தும் ஜாதி இனம் பார்த்தும் செயல்படுபவரல்ல. ஒருவன் தனக்கு உகந்த வாழ்க்கை வாழ்கின்றானா இல்லையா என்பதே அவரது அளவுகோல். ஆம், "தேவன் பட்சபாதமுள்ளவரல்ல என்றும், எந்த ஜனத்திலாயினும் அவருக்குப் பயந்திருந்து நீதியைச் செய்கிறவன் எவனோ அவனே அவருக்கு உகந்தவன் என்றும் நிச்சயமாய் அறிந்திருக்கிறேன்." ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 10 : 34, 35 ) என்கிறார் பேதுரு. 

தேவனுக்குப் பயந்து நீதியைச் செய்கின்றவன், நீதியைச் செய்யாதவன் எனும் இரு பிரிவுகள் தான் தேவனுக்கு உண்டுமேத்தவிர ஒருவர் பிறந்த ஜாதி இனத்தின் அடிப்படையில் அவர் மனிதர்களைப் பிரித்துப் பார்ப்பதில்லை. அப்படியிருந்தும் நீதியைச் செய்யாதவன் மனம் திரும்பி தேவனுக்கு ஏற்புடைய வாழ்க்கை வாழத் தன்னை ஒப்புக்கொடுக்கும்போது தேவன் அவனையும் எந்தப் பாகுபாடுமில்லாமல் ஏற்றுக்கொள்கின்றார். 

கிறிஸ்தவம் வெறும் இரண்டே கட்டளைகளுக்குள் தான் அடங்கியுள்ளது. இயேசு கிறிஸ்து கூறினார், "உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக; இது முதலாம் பிரதான கற்பனை. இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால், உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக." ( மத்தேயு 22 : 37 - 39 )

அதாவது, தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவதும் தன்னிடத்தில் அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவதும் இணையான கட்டளைகள். தன்னைப்போல பிறனிடத்தில் அன்புகூருபவன் மற்றவனைப் பிரித்துப் பார்க்கமாட்டான். ஆனால் இந்த இரண்டு கட்டளைகளில் ஒன்றில் தவறுகின்றவன் இரண்டிலும் தவறுகின்றான். 

எனவே அன்பானவர்களே, ஜாதி பாகுபாடுபார்ப்பவன் கிறிஸ்தவத்தில் எந்த உயர் பதவியில் இருபவனாக இருந்தாலும் அவன் தேவனுக்கு அருவெறுப்பானவன். அத்தகைய அருவெறுப்பானவன் மக்களை நல்வழியில் நடத்திட முடியாது. இதுபோலவே, ஒருவன் சாதாரண கிறிஸ்தவ விசுவாசி என்று தன்னைக் கூறிக்கொண்டாலும் அவன் கிறிஸ்தவ விசுவாசி கிடையாது. 

எனவே, எந்த மனிதரையும் தீட்டுள்ளவனென்றும் அசுத்தனென்றும் சொல்லாதபடிக்கு எச்சரிக்கையாக இருப்போம். அப்படிச் சொல்லிக்கொண்டு ஆலய வழிபாடுகளிலும் தவறாமல் கலந்துகொண்டு வாழ்வோமானால் இறுதிநாளில் தேவன் நம்மையும்  அசுத்தன் என்று கூறிப் புறம்பே தள்ளுவார். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்             

வேதாகம முத்துக்கள் - ஆகஸ்ட் 2024

                                                  - எம். ஜியோ பிரகாஷ் 

 

✉'ஆதவன்' 💚ஆகஸ்ட் 01, 2024. 💚வியாழக்கிழமை 💚                             வேதாகமத் தியானம் - எண்:- 1,270                                                                                 

"காதுகேளாதவனும், தன் வாயில் மறுஉத்தரவுகள் இல்லாதவனுமாயிருக்கிற மனுஷனைப்போலானேன்; கர்த்தாவே, உமக்குக் காத்திருக்கிறேன்; என் தேவனாகிய ஆண்டவரே, நீர் மறுஉத்தரவு கொடுப்பீர்." (சங்கீதம் 38:14, 15 )

இன்றைய தியான வசனமானது தாவீது பாடிய நினைவுகூருதலுக்கான சங்கீதம் என்று கூறப்பட்டுள்ள சங்கீதத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. தாவீது எதன் நினைவாக இதனைப் பாடினார் என்று பார்ப்போமானால்,  அவரது உயிரைப் பறிக்க பலர் முயன்றனர். குறிப்பாக சவுல், சவுலின் படைத்தலைவர்கள், தாவீதின் சொந்த மகன் என பலர் இப்படித் தாவீதைக் கொலை செய்யக்  காத்திருந்தனர். 

ஆனால் இவை எதனையும் பற்றிக் கவலைப்படாமல் ஒரு செவிடனும் ஊமையனும் இருப்பதுபோல நான் இருக்கிறேன் என்கின்றார் தாவீது. காரணம், கர்த்தர் இவர்களுக்கு மறுமொழி கொடுப்பார் என்று தாவீது நம்பியிருந்ததால்தான். எனவே, இப்படிக் காதுகேளாதவனும், தன் வாயில் மறுஉத்தரவுகள் இல்லாதவனுமாயிருக்கிற மனுஷனைப்போல இருக்கிறேன் என்கின்றார் தாவீது. அதாவது இது தாவீது கர்த்தர்மேல் கொண்டிருந்த நம்பிக்கையின் வெளிப்பாடு என்று கூறலாம்.

மேலும் இன்றைய தியான வசனத்துக்கு முந்தின இரு வசனங்களில் அவர் கூறுகின்றார், "என் பிராணனை வாங்கத்தேடுகிறவர்கள் எனக்குக் கண்ணிகளை வைக்கிறார்கள்; எனக்குப் பொல்லாங்கு தேடுகிறவர்கள் கேடானவைகளைப் பேசி, நாள்முழுதும் வஞ்சனைகளை யோசிக்கிறார்கள், நானோ செவிடனைப்போலக் கேளாதவனாகவும், ஊமையனைப் போல வாய்திறவாதவனாகவும் இருக்கிறேன்" (சங்கீதம் 38:12, 13 )

ஆம் அன்பானவர்களே, நம்மை எதிர்த்துச் சிலர் செயல்படும்போது நாம் அமைதியாக இருப்போமானால் இந்த உலகத்தினர் நம்மைக் கோழை என்றும் கையாலாகாதவன் என்றும் கூறலாம் ஆனால் தாவீது கூறுவதுபோல செவிடனும் ஊமையனும் போல இருந்து கர்த்தருக்குக் காத்திருப்போமானால் கர்த்தரே நமக்காக பதில் செய்வார்.  அப்படிக் கர்த்தர் எதிரிகளுக்கு அளிக்கும் பதில் மிகக் கடுமையானதாக இருக்கும்.

இஸ்ரவேலரை அழிக்க முயன்ற பார்வோனின் படைகளைக் கண்டு இஸ்ரவேலர் பயந்தனர். அப்போது மோசே அவர்களை நோக்கி, "பயப்படாதிருங்கள்; நீங்கள் நின்றுகொண்டு இன்றைக்குக் கர்த்தர் உங்களுக்குச் செய்யும் இரட்சிப்பைப் பாருங்கள்; இன்றைக்கு நீங்கள் காண்கிற எகிப்தியரை இனி என்றைக்கும் காணமாட்டீர்கள். கர்த்தர் உங்களுக்காக யுத்தம்பண்ணுவார்; நீங்கள் சும்மாயிருப்பீர்கள் என்றான்." ( யாத்திராகமம் 14 : 13, 14 ) அப்படியே பார்வோனின் அழிவு மிகக் கடுமையானதாக இருந்ததை நாம் வேதத்தில் வாசிக்கின்றோம். 

நமது வாழ்விலும் இதுவே நடக்கும். ஆம் அன்பானவர்களே, நான் அனுபவித்து அறிந்த வேத  சத்தியம் இது. "பிரியமானவர்களே, பழிவாங்குதல் எனக்குரியது, நானே பதிற்செய்வேன், என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று எழுதியிருக்கிறபடியால், நீங்கள் பழிவாங்காமல், கோபாக்கினைக்கு இடங்கொடுங்கள்." ( ரோமர் 12 : 19 )   என்று அப்போஸ்தலரான பவுல் கூறுகின்ற உண்மையும் இதுதான். 

"பழிவாங்குதல் எனக்குரியது, நானே பதிற்செய்வேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றும், கர்த்தர் தம்முடைய ஜனங்களை நியாயந்தீர்ப்பார் என்றும் சொன்னவர் இன்னாரென்று அறிவோம்." ( எபிரெயர் 10 : 30 ) எனவே நமக்கு எதிராகச் சிலர் செயல்படும்போது ஊமையும் செவிடுமாக இருந்து கர்த்தர் பதிலளிக்கக் காத்திருப்போம்.  

 ✉'ஆதவன்' 💚ஆகஸ்ட் 02, 2024. 💚வெள்ளிக்கிழமை 💚                                வேதாகமத் தியானம் - எண்:- 1,271  
                                                                
"பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருங்கிநிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்;" ( எபிரெயர் 12 : 1 )

இந்த உலகத்தில் வாழும் நமக்குப் பல்வேறு துன்பங்கள் பாடுகள் போன்றவை பாரமான சுமைகளாக நம்மை நெருக்கவே செய்யும். அதுபோல இந்த உலகில் நம்மைப் பாவத்தில் விழத்தள்ளுகின்ற பல்வேறு சூழ்நிலைகள் உள்ளன. ஆனால் நாம் இவற்றை விசுவாசத்தால் மேற்கொண்டு கிறிஸ்துவை நோக்கி நமது ஆவிக்குரிய வாழ்வைத் தொடரவேண்டும். இதனையே இன்றைய தியான வசனம் நமக்குக் கூறுகின்றது.

இப்படி ஆவிக்குரிய வாழ்வில் விசுவாசத்தின் மூலம் துன்பங்களையும் பாவங்களையும் மேற்கொண்ட ஒரு நீண்ட விசுவாசிகளின் பட்டியலை எபிரெய நிரூப ஆசிரியர் முதலில் தருகின்றார். அதன்பின்பு, "ஆகையால், மேகம்போன்ற இத்தனை திரளான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்துகொண்டிருக்க" என்று கூறி இன்றைய தியான வார்த்தைகளைக் கூறுகின்றார். 

இந்த வசனத்தில் "விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசு" என்று கூறப்பட்டுள்ளது. அதாவது நம்மில் தேவன்மேல் விசுவாசம் ஏற்படக் காரணரும் அதனை நாம் இறுதிவரைக் காத்துக்கொள்ளத் துணைசெய்பவரும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துதான். எனவே நாம் நமது துன்பங்களையும் பாவங்களையும் விட்டு விலகி, கிறிஸ்துவை நோக்கி பொறுமையாக ஆவிக்குரிய ஓட்டத்தை ஓடவேண்டியது அவசியம். 

இங்கு பொறுமையாக ஓடவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது ஏன் என்று பலரும் எண்ணலாம். சிலர் ஆவிக்குரிய வாழ்க்கையினைக் கண்டுபிடித்த பின் மிகத் தீவிரமாகச் செயல்படுவார்கள். எங்கு ஆவிக்குரிய கூட்டம் நடைபெற்றாலும் முதலில் சென்று இடம்பிடித்துக்கொள்வார்கள். மற்றவர்களைவிடத் தாங்கள் சிறந்தவர்கள் என்று காட்டிட பல்வேறு செயல்பாடுகளைச் செய்வார்கள். ஆனால் கொஞ்சநாட்களில் இவர்கள் பின்மாற்றமடைந்து பழைய பாவ வாழ்க்கையினுள் சென்றுவிடுவார்கள். 

தமிழில் "மெல்லத் தின்றால் பனையையும் தின்னலாம்"  என ஒரு பழமொழி உண்டு. ஆம், எதிலும் நிதானம் அவசியம். ஒருமுறை இப்படிப் பின்மாற்றமடைந்த சகோதரர் ஒருவரைச் சந்தித்தேன். அவரிடம் பேசியபோது அவர், " எல்லா மதமும் ஒன்றுதான் பிரதர்........நானும் முதலில் எனது நண்பர் தூண்டிவிட்ட ஏதோ ஆர்வத்தில் செயல்பட்டேன். இப்போது நான் தெளிவடைந்துவிட்டேன்" என்றார். மீட்பு அனுபவம் பெற்று, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை அறிந்தபின் இப்போது இவர் கண்டுகொண்டது "எல்லா மதமும் ஒன்றுதான்" என்பது. இதனைத் தான் தெளிவடைந்து விட்டதாகவும் கூறுகின்றார் என்றால் எவ்வளவு பரிதாபம்!!. 

ஆம் அன்பானவர்களே, தேவைக்கதிக ஆர்வம் வேண்டாம். இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம். "கர்த்தரும் இரட்சகருமாயிருக்கிற இயேசுகிறிஸ்துவை அறிகிற அறிவினாலே உலகத்தின் அசுத்தங்களுக்குத் தப்பினவர்கள் மறுபடியும் அவைகளில் சிக்கிக்கொண்டு ஜெயிக்கப்பட்டால், அவர்களுடைய பின்னிலைமை முன்னிலைமையிலும் கேடுள்ளதாயிருக்கும்." ( 2 பேதுரு 2 : 20 ) என்று எச்சரிக்கின்றார் அப்போஸ்தலரான பேதுரு. 


✉'ஆதவன்' 💚ஆகஸ்ட் 03, 2024. 💚சனிக்கிழமை 💚                                          வேதாகமத் தியானம் - எண்:- 1,272                                                                   

"எங்களால் ஏதாகிலும் ஆகும் என்பதுபோல ஒன்றை யோசிக்கிறதற்கு நாங்கள் எங்களாலே தகுதியானவர்கள் அல்ல; எங்களுடைய தகுதி தேவனால் உண்டாயிருக்கிறது."  (2 கொரிந்தியர் 3:5)

முற்றிலுமாகத்  தன்னை தேவனுக்கு ஒப்புவித்து வாழ்த்த தனது வாழ்க்கையினை அப்போஸ்தலரான பவுல் இன்றைய தியான வசனத்தில் கூறுகின்றார். அதாவது, தன்னால் தேவனுடைய உதவியில்லாமல் எதனையும் செய்ய முடியும் என்று தன்னால் எண்ணக்கூட முடியவில்லை என்கின்றார். 

இன்று மனிதர்கள் சிலவேளைகளில், "என்னைத் தெரியுமா? நான் நினைத்தால் எதனையும் செய்துவிடுவேன்" என்பார்கள்.  தன்னம்பிக்கைப்  பேச்சாளர்களும் எழுத்தாளர்களும், "என்னால் முடியும் என்று சொல்லிக்கொண்டே இருங்கள் அப்போது அது உங்களால் முடியும்" என்பார்கள்.  சிலர், "எண்ணம்போலவே வாழ்க்கை; நல்லதை எண்ணினால் நல்லதே நடக்கும்" என்பார்கள்.

ஆனால் இவை எல்லாமே மனித அறிவினால் அவர்கள் எண்ணுவது. தேவனது கிருபை இல்லாமல் நம்மால் எதுவுமே செய்ய முடியாது. அப்போஸ்தலரான யாக்கோபு இதனால்தான், "நாளைக்கு நடப்பது உங்களுக்குத் தெரியாதே. உங்கள் ஜீவன் எப்படிப்பட்டது? கொஞ்சக்காலந்தோன்றிப் பின்பு தோன்றாமற்போகிற புகையைப்போலிருக்கிறதே. ஆதலால்: ஆண்டவருக்குச் சித்தமானால், நாங்களும் உயிரோடிருந்தால், இன்னின்னதைச் செய்வோம் என்று சொல்லவேண்டும்." ( யாக்கோபு 4 : 14, 15 ) என்று நமக்கு ஆலோசனைத் தருகின்றார். 

ஆம் அன்பானவர்களே, தன்னம்பிக்கைப் பேச்சாளர்களைப்போல் நம்மையே நம்பாமல் தேவன்மேலேயே முழு நம்பிக்கையை வைப்போம். நம்மால் ஏதாகிலும் ஆகும் என்பதுபோல ஒன்றை யோசிக்கிறதற்கு நாம் தகுதியானவர்கள் அல்ல; நம்முடைய தகுதி தேவனால் உண்டாயிருக்கிறது. "நூறு வயதுவரை வாழ்வது எப்படி?" எனத் தன்னம்பிக்கைப் புத்தகம் எழுதிய "கல்கண்டு" இதழ்  தமிழ்வாணன் அவர்கள் ஐம்பத்திரெண்டு வயதில் மரித்துப்போனார்.

எனவே நாம் எதுவும் செய்யாமல் சும்மா இருந்து கொண்டு தேவனே எல்லாம் செய்வார் என்று சொல்லிக்கொண்டிருக்கக் கூடாது. "நான் இதனைச் செய்கிறேன், ஆண்டவருக்குச் சித்தமானால், என்னை வெற்றிபெறச் செய்வார்" என்று தேவனை முன்னிலைப்படுத்திச் செயல்படவேண்டும். நமக்கு பல்வேறு திறமைகளும் தகுதிகளும் இருக்கலாம். ஆனால் திறமைகளும் பல்வேறுத்  தகுதிகளும் உள்ள எல்லோரும் வாழ்வில் வெற்றியடையவில்லை என்பதனையும் நாம் எண்ணிப்பார்க்கவேண்டும்.  

கிறிஸ்து நமக்குள் இருந்து செயல்படும்போது கிறிஸ்துவுச் சித்தமான செயல்பாடுகளில் நாம் ஈடுபட்டால் நிச்சயம் வெற்றி பெறுவோம் அவரே நமக்கு அதற்கான பெலத்தையும் தருவார். எனவேதான், அத்தகைய செயல்பாடுகள் அனைத்தையும் செய்யத் தனக்கு பெலன் உண்டு என்கின்றார் அப்போஸ்தலரான பவுல். ஆம், "என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு." ( பிலிப்பியர் 4 : 13 )


✉'ஆதவன்' 💚ஆகஸ்ட் 04, 2024. 💚ஞாயிற்றுக்கிழமை 💚                                               வேதாகமத் தியானம் - எண்:- 1,273                                                        

"ஒருவன், தான் ஒன்றுமில்லாதிருந்தும், தன்னை ஒரு பொருட்டென்று எண்ணினால், தன்னைத்தானே வஞ்சிக்கிறவனாவான்." ( கலாத்தியர் 6 : 3 )

மனிதர்கள் நாம் பெரும்பாலும் நம்மைக்குறித்து சில மேன்மையான எண்ணங்களை வைத்திருக்கின்றோம். அப்படிச் சில எண்ணங்கள் நமக்கு இருப்பது தவறல்ல. ஆனால் சிலர் எதனைப்பற்றியும் எந்த அறிவும் இல்லாதிருந்தாலும் எல்லாம் தெரிந்ததுபோல பேசிக்கொண்டிருப்பார்கள். இப்படி ஒருவன், தான் ஒன்றுமில்லாதிருந்தும், தன்னை ஒரு பொருட்டென்று எண்ணினால், தன்னைத்தானே வஞ்சிக்கிறவனாவான் என்று இன்றைய தியான வசனம் கூறுகின்றது. 

ஆவிக்குரிய வாழ்க்கையிலும் சிலர் இப்படியே இருக்கின்றனர். எந்த ஆவிக்குரிய அனுபவமோ, தகுதியோ இல்லாதிருந்தும் எல்லாம் தெரிந்ததுபோல பேசுவார்கள், மற்றவர்களுக்கு அறிவுரை கூறுவார்கள். ஆனால் இப்படி இவர்கள் கூறும் அறிவுரைகள் அர்த்தமற்றதாகவே இருக்கும். ஆனால் இவர்கள் தங்களை பெரிய ஆவிக்குரிய மனிதர்களாக எண்ணிக்கொள்வர். 

ஒருமுறை நான் உடல்நலமில்லாமல் சில மாதங்கள் இருந்தபோது என்னைப் பார்க்கவந்த பலர் இதுபோலவே எனக்கு அறிவுரை கூறினர். சிலர், "நாலுமாவடிக்கு வருவேனென்று நேர்ந்துகொள்ளுங்கள், கர்த்தர் சுகம் தருவார்" என்றனர். வேறு சிலரோ, ஒருமுறை சாலக்குடி தியானத்துக்குச் சென்று வாருங்கள்" என்றனர். இன்னும் சிலர், "வேளாங்கண்ணிக்கு நேர்ச்சை செய்துகொள்ளுங்கள்" என்றனர். வேறு சிலரோ, "91ஆம் சங்கீதத்தை தினமும் மூன்றுவேளை வாசியுங்கள்" என்றனர். அதாவது,  இவர்கள் ஆவிக்குரிய மேலான அனுபவமோ தேவனது உடனிருப்பு அனுபவமோ இல்லாமல் இருந்தும் அவை தங்களுக்கு இருப்பதாக எண்ணித் தங்களையே வஞ்சித்துக்கொண்டவர்கள். 

இத்தனைக்கும் இவர்கள் அனைவருமே ஏதாவது ஒரு நற்செய்தி குழுவில் உறுப்பினராக இருந்து நோயாளிகளுக்காக ஜெபிக்கச் செல்பவர்கள். இவர்களில் ஒருவர்கூட வேதாகம அடிப்படையில் எனக்கு ஆறுதல் சொல்லவில்லை;  ஒருவர்கூட என்னிடம், "நோயெல்லாம் வாழ்வில் சகஜம், ஆண்டவரிடமுள்ள விசுவாசத்தைமட்டும் விட்டுவிடாமல் இருங்கள்" என்று கூறவில்லை. இவர்கள் தாங்கள் ஜெபித்ததால் சுகம் பெற்றவர்களது சாட்சிகளைக் கூறித் தங்களையே பெருமையும் படுத்திக்கொண்டனர். ஆனால் நானே நோயுற்றிருக்கும்போது அந்த வேளையில் இவர்களுக்குப் பதில்சொல்ல முடியவில்லை. 

இத்தகையோருக்கே இன்றைய தியான வசனத்தை அப்போஸ்தலரான பவுல் எழுதியுள்ளார். எனவேதான் அடுத்த வசனத்தில் தொடர்ந்து எழுதுகின்றார், "அவனவன் தன்தன் சுயகிரியையைச் சோதித்துப்பார்க்கக்கடவன்; அப்பொழுது மற்றவனைப் பார்க்கும்போதல்ல, தன்னையே பார்க்கும்போது மேன்மைபாராட்ட அவனுக்கு இடமுண்டாகும்." ( கலாத்தியர் 6 : 4 ) அதாவது இப்படி மற்றவர்களுக்கு ஆவிக்குரிய அறிவுரைகள் கூறுமுன்பு தங்களது சுய தேவஐக்கியத்தைச் சோதித்துப்பார்த்துவிட்டு அறிவுரை கூறவேண்டும். அதுவே அவர்களுக்கு உண்மையான மேன்மை.  

ஆம் அன்பானவர்களே, நமது ஆவிக்குரிய செயல்பாடுகளை நாம் நமக்குள் சோதித்துப்பார்க்க வேண்டியது அவசியம். அப்படி இல்லாமல் வேதாகமத்தை வாசிப்பதாலோ, ஜெபிப்பதாலோ நாம் ஆவிக்குரியவர்கள் என்று எண்ணிக்கொண்டிருப்போமானால் நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாகவே இருப்போம். உண்மையாகவே நாம் தேவனோடு இருப்போமானால் அது மட்டுமே நமக்கு மேன்மை.  


✉'ஆதவன்' 💚ஆகஸ்ட் 05, 2024. 💚திங்கள்கிழமை 💚                                      வேதாகமத் தியானம் - எண்:- 1,274                                                                   

"கர்த்தருடைய கை குறுகியிருக்கிறதோ? என் வார்த்தையின்படி நடக்குமோ நடவாதோ என்று. நீ இப்பொழுது காண்பாய் என்றார்." ( எண்ணாகமம் 11 : 23 )

நாம் பல வேளைகளில் நமது பலம், தகுதி இவைகளைக்கொண்டே தேவனது பலத்தையும் வல்லமையையும் அளவிட்டுக் கொண்டிருக்கின்றோம். நாம் மனிதர்கள் ஆதலால் நாம் ஒரு குறுகிய வட்டத்திற்குள் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். ஆனால் பெரும்பாலும் நாம் இதனை உணராமல் "என்னால் எல்லாம் கூடும்" என்று கூறிக்கொண்டு செயல்படுகின்றோம். ஆனால் அதே வேளையில் நம்மில் பலரும் தேவனது வல்லமையைக் குறைத்து மதிப்பிட்டுக் கொண்டிருக்கின்றோம். 

செங்கடலைப்  பிரித்து இஸ்ரவேலரை கால் நனையாமல் அதனைக் கடக்கச் செய்தவர் கர்த்தர். எரிகோவின் மதில் சுவர் துதியினால் இடிந்து வீழ்ந்தது,  கற்பாறையிலிருந்து தண்ணீர், வானத்திலிருந்து மன்னா என இஸ்ரவேலர் தொடர்ந்து தேவ வல்லமையினை அனுபவித்து வந்தனர். இப்போது இறைச்சி உண்ண ஆசைப்பட்டு மோசேயிடம் முறுமுறுத்தனர். அவர்களது முறுமுறுப்பிற்கு தேவன் பதிலளித்தார். ஒருநாள் இரண்டுநாளல்ல, ஒருமாதம் முழுவதும் நீங்கள் இறைச்சியை உண்பீர்கள் என்றார் தேவன்.

"அதற்கு மோசே: என்னோடிருக்கிற காலாட்கள் ஆறுலட்சம்பேர்; ஒரு மாதம் முழுவதும் புசிக்கும்படி அவர்களுக்கு இறைச்சி கொடுப்பேன் என்று சொன்னீரே." ( எண்ணாகமம் 11 : 21 ) என்று சந்தேகித்தார். அப்போது கர்த்தர், "கர்த்தருடைய கை குறுகியிருக்கிறதோ? என் வார்த்தையின்படி நடக்குமோ நடவாதோ என்று. நீ இப்பொழுது காண்பாய் என்றார்." 

இயேசு கிறிஸ்துவும்கூட சீடர்களிடம், "மனுஷரால் இது கூடாததுதான், தேவனால் இது கூடாததல்ல; தேவனாலே எல்லாம் கூடும் என்றார்." ( மாற்கு 10 : 27 ) ஆம் அன்பானவர்களே, தேவனால் எல்லாம் கூடும். தண்ணீரை இனிமையான திராட்சை இரசமாக்குவதும், கல்லறையில் புதைக்கப்பட்ட மனிதனை இறந்து நான்கு நாட்களுக்குப்பின் உயிருடன் எழுப்புவதும், ஒரு வார்த்தையால் இறந்தவர்களுக்கு உயிர் கொடுப்பதும் தேவனால் கூடும். 

நாம் நமது பலத்தைக் கொண்டு தேவனையும் எடைபோட்டுவிடக்கூடாது. "பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலேயே ஆகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்." (சகரியா 4:6)

இந்த வல்லமை அவருக்கு இல்லாதிருந்தால் நாம் அவரை வழிபடவோ, அவரிடம் நமது தேவைகளை எடுத்துச் சொல்லவோ தேவையே இருக்காது. நமது சுய பலத்தாலேயே வாழ்ந்துகொண்டிருபோம்.  தேவன் தனது கிருபையால் நாம் கேட்காமலேயே பல நல்ல காரியங்களை நமக்குச் செய்துகொண்டிருக்கின்றார். இதனாலேயே கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் தொடர்ந்து தங்கள் நம்பிக்கையில் நிலைத்து நிற்கின்றனர். ஆனால், பல நாத்தீகவாதிகள் இறுதியில் பரிதாபகரமான அவநம்பிக்கையில் நிம்மதியின்றி மரித்தனர். 

இப்படி வல்லமையான தேனை நாம் தகப்பனாகப் பெற்றுள்ளதால் திட நம்பிக்கையோடு வாழ்வோம். ஆனால் அப்படித் தேவன் செயல்பட நம்மிடமுள்ள பாவங்களையும் அக்கிரமங்களையும் முதலில் அவரிடம் அறிக்கையிட்டு மன்னிப்பை வேண்டுவோம். ஏனெனில், "இரட்சிக்கக்கூடாதபடிக்குக் கர்த்தருடைய கை குறுகிப்போகவுமில்லை; கேட்கக்கூடாதபடிக்கு அவருடைய செவி மந்தமாகவுமில்லை. உங்கள் அக்கிரமங்களே உங்களுக்கும் உங்கள் தேவனுக்கும் நடுவாகப்பிரிவினை உண்டாக்குகிறது; உங்கள் பாவங்களே அவர் உங்களுக்குச் செவிகொடாதபடிக்கு அவருடைய முகத்தை உங்களுக்கு மறைக்கிறது." ( ஏசாயா 59 : 1, 2 ) என்று நமக்கு அறிவுறுத்துகின்றது வேதாகமம். 


✉'ஆதவன்' 💚ஆகஸ்ட் 06, 2024. 💚செவ்வாய்க்கிழமை 💚                                  வேதாகமத் தியானம் - எண்:- 1,275                                                                     

"ஆயிரங்களான ஆட்டுக்கடாக்களின்பேரிலும், எண்ணெயாய் ஓடுகிற பதினாயிரங்களான ஆறுகளின்பேரிலும், கர்த்தர் பிரியமாயிருப்பாரோ? உன் அக்கிரமத்தைப் போக்க உன் முதற் பேறானவனையும், உன் ஆத்துமாவின் பாவத்தைப் போக்க உன் கர்ப்பக்கனியையும் கொடுக்கவேண்டுமோ?" ( மீகா 6 : 7 )

கடவுளது ஆசீர்வாதத்தினைப் பெறுவதற்கு மனிதர்கள் எந்தக் குறுக்கு  வழியையும் பின்பற்றத் தயங்கமாட்டார்கள். ஆனால் எளிதான நேர்வழியை மனிதர்கள் புறக்கணிக்கின்றனர். 

இன்றும் தமிழகத்தின் சில கோவில்களில் திருவிழாக்களில் ஆயிரக்கணக்கான மிருகங்கள் மக்களால் பலியிடப்படுவதை நாம் செய்தித்தாள்களில் படிக்கின்றோம். பல ஆயிரம் கிலோ நெய் அபிஷேகம் செய்ய விக்கிரகங்களின்மேல் ஊற்றப்படுகின்றன. எப்படியாவது கடவுளின் ஆசீர்வாதத்தினைப் பெற்றுவிடவேண்டுமென்று மனிதர்கள் விரும்புவதால் இப்படிச் செய்கின்றனர். 

கடவுளது ஆசீர்வாதத்தினைப் பெறுவதற்கு, ஜோதிடர் சொன்னார் என்பதற்காக ஒரு குடும்பத்தினர் தங்களது தலைப்பிள்ளையைப் பலிகொடுத்தச் செய்தி சில மாதங்களுக்குமுன் பத்திரிக்கையில் வெளிவந்ததை பலரும் படித்திருக்கலாம்.   

தேவனது ஆசீர்வாதத்தினைப் பெறுவதற்கு மனிதர்கள் இக்காலத்தில் செய்வதுபோலவே பல ஆயிரம் ஆண்டுகளாகச் செய்து வருகின்றனர்.  இத்தகைய மனிதர்களைப் பார்த்துதான் தேவன் "ஆயிரங்களான ஆட்டுக்கடாக்களின்பேரிலும், எண்ணெயாய் ஓடுகிற பதினாயிரங்களான ஆறுகளின்பேரிலும், கர்த்தர் பிரியமாயிருப்பாரோ? உன் அக்கிரமத்தைப் போக்க உன் முதற் பேறானவனையும், உன் ஆத்துமாவின் பாவத்தைப் போக்க உன் கர்ப்பக்கனியையும் கொடுக்கவேண்டுமோ?" என்று இன்றைய தியான வசனத்தில் கேள்வி எழுப்புகின்றார். 

பின் என்னதான்  செய்யவேண்டும் என்பதனை அடுத்த வசனத்தில் கூறுகின்றார், "மனுஷனே, நன்மை இன்னதென்று அவர் உனக்கு அறிவித்திருக்கிறார்; நியாயஞ்செய்து, இரக்கத்தைச் சிநேகித்து, உன் தேவனுக்கு முன்பாக மனத்தாழ்மையாய் நடப்பதை அல்லாமல் வேறே என்னத்தைக் கர்த்தர் உன்னிடத்தில் கேட்கிறார்.' ( மீகா 6 : 8 )

ஆம் அன்பானவர்களே, தேவன் நம்மிடம் எதிர்பார்ப்பது ஆடு, மாடு, பணம், தங்கம், வெள்ளி,  செல்வம் பிள்ளைகளின் இரத்தம் இவைகளையல்ல, மாறாக அவரது கற்பனைகளின்படி வாழ்வதையே. நியாயஞ்செய்து, இரக்கத்தைச் சிநேகித்து, தேவனுக்கு முன்பாக மனத்தாழ்மையாய் நடப்பதை கர்த்தர் நம்மிடம் எதிர்பார்க்கின்றார். 

பணத்தையும் வெள்ளியையும் பொன்னையும் கோவிலில் கொண்டு கொட்டிவிட்டு மீண்டும் மீண்டும் அநியாயம் செய்யும் வஞ்சக உள்ளத்தைத் தேவன் வெறுக்கின்றார்; அருவெறுக்கின்றார். அறிவோடு சிந்திப்போம்; நம்மைத் திருத்திக்கொள்வோம். 


✉'ஆதவன்' 💚ஆகஸ்ட் 07, 2024. 💚புதன்கிழமை 💚                                     வேதாகமத் தியானம் - எண்:- 1,276                                                                   

"என் ஜனங்கள் இரண்டு தீமைகளைச் செய்தார்கள்; ஜீவத்தண்ணீர் ஊற்றாகிய என்னை விட்டுவிட்டார்கள்; தண்ணீர் நிற்காத தொட்டிகளாகிய வெடிப்புள்ள தொட்டிகளைத் தங்களுக்கு வெட்டிக்கொண்டார்கள்." ( எரேமியா 2 : 13 )

மெய்தேவனாகிய கர்த்தரை அறிந்தபின்பு நாம் அவரைவிட்டுப்  பின்மாறிப் போவோமானால் இன்றைய தியான வசனம் கூறும் நிலையில் நாம் இருக்கின்றோம் என்று பொருள். அதாவது அப்படி நாம் பின்மாறும்போது இரண்டு தீமைகளை செய்தவர்களாகின்றோம். முதலில்,   ஜீவத்தண்ணீர் ஊற்றாகிய தேவனை விட்டுவிடுகின்றோம் அடுத்து, தண்ணீர் நிற்காத தொட்டிகளாகிய வெடிப்புள்ள தொட்டிகளை நமக்காக உருவாக்கிக்கொண்டவர்கள் ஆகின்றோம்.      

அதாவது, தமிழில் ஒரு பழமொழி உண்டு. "கையில் வெண்ணையை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைந்தாளாம் ஒருத்தி." அன்பானவர்களே, நமது கையில் வெண்ணையான தேவன் இருக்கும்போது அதனைப் பாதுகாத்து உபயோகப்படுத்திடாமல் நாம் நெய்க்காக அலைந்து திரியும் முட்டாள்களாக இருக்கக்  கூடாது. இஸ்ரவேல் மக்கள் இப்படித்தான் செய்தனர். ஜீவத்தண்ணீர் அவர்கள் நடுவில் இருந்தும் அதனை விட்டுவிட்டு தண்ணீர் நிரப்ப வெடிப்புள்ள ஓட்டையான தொட்டிகளைத் தங்களுக்காக உருவாக்கிக்கொண்டனர். 

அன்று இஸ்ரவேலர் செய்த அதே தவறையே இன்றும் கிறிஸ்தவர்கள் என்று தங்களைக் கூறிக்கொள்வோரில் பலரும் செய்து கொண்டிருக்கின்றனர். ஆம், ஜீவத்தண்ணீர் ஊற்றாகிய அவரை முழுமையாகப் பற்றுவதை விட்டுவிட்டு முட்டாள் பெண் நெய்க்கு அலைந்ததுபோல ஏமாற்று ஊழியர்களை நோக்கி ஓடுகின்றனர். ஆம், நாம் பற்றிக்கொள்ளவேண்டியது கிறிஸ்துவையே தவிர ஊழியர்களையல்ல. இவர்களைப்பார்த்து வேதனையுடன் தேவன் கூறுகின்றார், "என் ஜனங்கள் ஜீவத்தண்ணீர் ஊற்றாகிய என்னை விட்டுவிட்டார்கள். "

இதுபோலவே கிறிஸ்துவின்மேலுள்ள முழுமையான விசுவாசத்தை விட்டுவிட்டு வேதம் கூறாத முறையில் பல்வேறு புனிதர்களை நாடிப்போகும்போது நாம் ஜீவத்தண்ணீர் ஊற்றாகிய அவரை விட்டுவிடுகின்றோம் என்று பொருள். 

அன்பானவர்களே, நமது வீட்டில் தண்ணீர் நிற்காத ஒரு ஓட்டையான தொட்டி இருக்குமானால் அதனால் என்ன பயன்? அது இருப்பதும் ஒன்றுதான் இல்லாமல் இருப்பதும் ஒன்றுதான். வேதனையுடன் தேவன் கூறும் இன்றைய வார்த்தைகளுக்குச் செவி கொடுப்போம். நல்ல பலமான ஓட்டையில்லாத தொட்டியை நமக்குத் தந்து அதனை ஜீவத் தண்ணீரால் நிரப்பிட ஆவலுடன் காத்திருக்கிறார் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து. அவரிடம் முழு மனதுடன் திரும்புவோம்.

"சகோதரரே, ஜீவனுள்ள தேவனை விட்டு விலகுவதற்கேதுவான அவிசுவாசமுள்ள பொல்லாத இருதயம் உங்களில் ஒருவனுக்குள்ளும் இராதபடிக்கு நீங்கள் எச்சரிக்கையாயிருங்கள்." ( எபிரெயர் 3 : 12 )


✉'ஆதவன்' 💚ஆகஸ்ட் 08, 2024. 💚வியாழக்கிழமை 💚                               வேதாகமத் தியானம் - எண்:- 1,277                                                                                                    

"நாம் தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோமென்று ஆவியானவர்தாமே நம்முடைய ஆவியுடனேகூடச் சாட்சி கொடுக்கிறார்." ( ரோமர் 8 : 16 )

இந்தக் காலத்திலும்கூட எதற்கும் சட்டபூர்வமாக இரண்டு சாட்சிகள் தேவைப்படுகின்றன. ஒரு பத்திரம் பதிவுசெய்யும்போதுகூட இறுதியில் சாட்சிகள் என்று இரண்டுபேர் கையெழுத்திடுவார்கள். திருமண ஒப்பந்தத்திலும்கூட  மணமகன் மணமகள் கையொப்பமிட்ட பின்னர் இரண்டு சாட்சிகள் இறுதியில் கையொப்பமிடுவார்கள். இதற்குப் பொருள் என்னவென்றால், இங்கு கூறப்பட்டுள்ளது அல்லது நடந்தது அனைத்தையும் நாங்கள் பார்த்தோம். அதற்கு நாங்கள்தான் சாட்சிகள் என்று பொருள். 

இப்படியே, நாம் தேவனுடைய பிள்ளைகளாய்த்தான்  இருக்கிறோம் என்பதற்கு இரண்டு சாட்சிகளை அப்போஸ்தலரான பவுல் குறிப்பிடுகின்றார். ஒன்று ஆவியானவர் இன்னொன்று  நம்முடைய சொந்த ஆவி என்று குறிப்பிடுகின்றார். 

நாம் தேவனுக்கேற்ற பிள்ளைகளாக நடக்கின்றோமா என்பதனை ஆவியானவர் நமக்கு முதலில் உணர்த்துகின்றார். நம்மைத் திருத்திக்கொள்ள வழி காட்டுகின்றார். அப்படி நாம் நம்மைத் திருத்திக்கொள்ளாவிட்டால் அவர் துக்கமடைகின்றார். இதனை அப்போஸ்தலரான பவுல், "அன்றியும், நீங்கள் மீட்கப்படும் நாளுக்கென்று முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்த ஆவியைத் துக்கப்படுத்தாதிருங்கள்." ( எபேசியர் 4 : 30 ) என்று குறிப்பிடுகின்றார். 

ஆவியானவரின் உணர்த்துதலின்படி நாம் நம்மைத் திருத்திக்கொள்ளும்போது  நமது ஆவியும் குற்ற உணர்ச்சி இல்லாமல் நாம் தேவனுடைய பிள்ளைகளாய்த்தான் இருக்கின்றோம் என்பதனை உறுதி செய்யும். இப்படி இரண்டு சாட்சிகளும் சரியாக இருக்குமானால் நாம் மெய்யாலுமே தேவனுக்கேற்றவர்கள் ஆகின்றோம்; அவரது பிள்ளைகளாகின்றோம். 

இதனையே இதற்கு அடுத்த வசனத்தில் அப்போஸ்தலரான பவுல் குறிப்பிடுகிற்றார். "நாம் பிள்ளைகளானால் சுதந்தரருமாமே; தேவனுடைய சுதந்தரரும், கிறிஸ்துவுக்கு உடன் சுதந்தரருமாமே; கிறிஸ்துவுடனேகூட நாம் மகிமைப்படும்படிக்கு அவருடனேகூடப் பாடுபட்டால் அப்படியாகும்." ( ரோமர் 8 : 17 )

அதாவது நாம் அவரது பிள்ளைகளாகி ஒரு மகன் அல்லது மகள் எப்படித் தகப்பனது சொத்துக்களில் உரிமை பெறுவார்களோ அதுபோன்ற உரிமையினைப் பெறுவோம். அப்படி உரிமைப்பேறு கிடைக்க நமக்கு மேற்படி இரண்டு சாட்சிகளும் தேவைப்படுகின்றன. நமக்கு இந்த இரண்டு சாட்சிகளும் உண்டுமா என்பதனை நாம் நிதானித்துக்கொள்வோம்.

ஆவியானவர் நம்மைக்குறித்து என்னச் சொல்லுவார்? நமது சொந்த ஆவி நம்மைக் குறித்து என்ன உணர்த்துகின்றது?


✉'ஆதவன்' 💚ஆகஸ்ட் 09, 2024. 💚வெள்ளிக்கிழமை 💚                               வேதாகமத் தியானம் - எண்:- 1,278                                                                      

"என் சகோதரனாகிய யோனத்தானே, உனக்காக நான் வியாகுலப்படுகிறேன்; நீ எனக்கு வெகு இன்பமாயிருந்தாய்; உன் சிநேகம் ஆச்சரியமாயிருந்தது; ஸ்திரீகளின் சிநேகத்தைப்பார்க்கிலும் அதிகமாயிருந்தது." ( 2 சாமுவேல் 1 : 26 )

தனது நண்பனான யோனத்தான் இறந்துபோனான் என்று கேள்விப்பட்டபோது தாவீது வெளிப்படுத்தின வேதனையின் வார்த்தைகள்தான் இன்றைய தியான வசனம். 

வேதாகமத்தில் உண்மையான நட்புக்கு உதாரணமாக இருந்த இரு நண்பர்கள்தான் தாவீதும் சவுலின் மகன் யோனத்தானும். யோனத்தான்  சவுல் அரசனின் மகன் என்பதால் தகப்பனுக்கு அடுத்தபடி ராஜாவாக  ஆட்சிப்பொறுப்பை ஏற்கும் நிலையில் இருந்தவன். தாவீது சவுலிடம் பணி செய்தவன். ஆனால் சவுல் தாவீதை மிகவும் வெறுத்தான். தாவீதை அழித்து ஒழிக்க முயன்றுகொண்டிருந்தான். காரணம், தாவீதுக்கு இருந்த தைரியம், பலம், அறிவு இவை சவுலைக் கலங்கச் செய்தன. தனக்குப்பின் தனது மகனுக்குப்பதில் ஆட்சிப்பொறுப்பைத் தாவீது கைப்பற்றிவிடுவான் என்று சவுல் அஞ்சினான். 

ஆனால் சவுலின் மகன் யோனத்தான் தாவீதை "தன் உயிரைச் சிநேகித்ததுபோல சிநேகித்தான்." ( 1 சாமுவேல் 20 : 17 ) என்று கூறப்பட்டுள்ளது. இது முரண்பாடுகளுக்குள் எழுந்த நட்பு. ராஜாவான தகப்பன் தாவீதைக் கொன்று ஒழிக்க முயல, அவன் மகனோ அவனைத் தன் உயிரைப்போல நேசிக்கிறான். 

ஒருமுறை சவுல் தனது மகன் யோனத்தானிடம், "ஈசாயின் மகன் பூமியின்மேல் உயிரோடிருக்கும் நாள்வரையும் நீயானாலும், உன் ராஜ்யபாரமானாலும் நிலைப்படுவதில்லை; இப்போதே அவனை அழைப்பித்து, என்னிடத்தில் கொண்டுவா; அவன் சாகவேண்டும் என்றான்." ( 1 சாமுவேல் 20 : 31 ) ஆனால் யோனத்தானோ அப்படி நினைக்கவில்லை. தாவீது அரசன் ஆவான் அப்போது நான் அவனுக்கு அடுத்த நிலையில் இருக்கவும் தயார் எனும் மனநிலையில் இருந்தான் யோனத்தான். இந்த மனநிலையை நாம் நினைத்தும் பார்க்க முடியவில்லை. தனது ராஜ மேன்மையை நண்பனுக்காக விட்டுக்கொடுக்கும் மனநிலை கொண்ட உயரிய நட்பு தாவீதுமேல் யோனத்தான் கொண்ட நட்பு. 

எனவே தன் தகப்பன் சவுலுக்குப் பயந்து காட்டில் ஒளிந்திருந்த தாவீதிடம் சென்று அவனைத் திடப்படுத்தினான் யோனத்தான். "அப்பொழுது சவுலின் குமாரனாகிய யோனத்தான் எழுந்து, காட்டிலிருக்கிற தாவீதினிடத்தில் போய், தேவனுக்குள் அவன் கையைத் திடப்படுத்தி: நீர் பயப்படவேண்டாம்; என் தகப்பனாகிய சவுலின் கை உம்மைக் கண்டு பிடிக்கமாட்டாது; நீர் இஸ்ரவேலின்மேல் ராஜாவாயிருப்பீர்; அப்பொழுது நான் உமக்கு இரண்டாவதாயிருப்பேன்; அப்படி நடக்கும் என்று என் தகப்பனாகிய சவுலும் அறிந்திருக்கிறார் என்றான்." ( 1 சாமுவேல் 23 : 16, 17 )

யோனத்தான் எனும் உலக மனிதனின் அன்பு இப்படி இருக்குமானால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் அன்பு எவ்வளவு மேலானதாக இருக்குமென்று எண்ணிப்பாருங்கள். அன்பானவர்களே, இதனைவிட மேலான நட்போடு கூடிய அன்புடன்தான் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நம்மிடம் வந்தார். பரலோக மேன்மையைத் துறந்து நமக்காகத் தனது உயிரையும் கொடுத்தார்.  நம்மைத் தன்னைப்போல உருமாற்ற; பிதாவோடு அவர் கொண்டிருந்த அதே உறவோடு நாமும் அவரோடும் பிதாவோடும்  ஒன்றாக அமர்ந்திட.  (யோவான் 17:20 - 26) அவரையே நாமும் அன்புசெய்வோம்.


✉'ஆதவன்' 💚ஆகஸ்ட் 10, 2024. 💚சனிக்கிழமை 💚                               வேதாகமத் தியானம் - எண்:- 1,279                                                                       

"நாம் அனைவரும் தேவனுடைய குமாரனைப்பற்றும் விசுவாசத்திலும் அறிவிலும் ஒருமைப்பட்டவர்களாகி, கிறிஸ்துவினுடைய நிறைவானவளர்ச்சியின் அளவுக்குத்தக்க பூரணபுருஷராகும் வரைக்கும்,....." ( எபேசியர் 4 : 11 )

சுவிசேஷம் ஏன் உலகுக்கு அறிவிக்கப்படவேண்டும் என்பதனை இன்றைய தியான வசனம் கூறுகின்றது. அதாவது இந்த உலகத்தில் வாழக்கூடிய அனைவரும் தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசத்தினால் பற்றிக்கொண்டு கிறிஸ்துவினுடைய நிறைவான வளர்ச்சியைப்போல நாமும் வளர்ந்து பூரண மனிதர்களாக வேண்டும். பூரணம் என்பது நிறைவைக் குறிக்கின்றது. நாம் அனைவருமே நம்மில் எந்தக் குறைவுமின்றி கிறிஸ்துவைப்போல மாறவேண்டும். 

எனவேதான், "...சுவிசேஷ ஊழியத்தின் வேலைக்காகவும், கிறிஸ்துவின் சரீரமாகிய சபையானது பக்திவிருத்தி அடைவதற்காகவும், அவர், சிலரை அப்போஸ்தலராகவும், சிலரைத் தீர்க்கதரிசிகளாகவும், சிலரைச் சுவிசேஷகராகவும், சிலரை மேய்ப்பராகவும் போதகராகவும் ஏற்படுத்தினார்." ( எபேசியர் 4 : 12, 13 )

அதாவது, எப்படியாவது மக்கள் கிறிஸ்துவை அறிவதன்மூலம் பூரணம் அடையவேண்டும் என்பதற்காக, அப்போஸ்தலர்கள், தீர்க்கதரிசிகள், சுவிசேஷகர்கள், மேய்ப்பர்கள் மற்றும் போதகர்கள் என ஐந்துவகை ஊழியங்களை தேவன் ஏற்படுத்தினார் என்று கூறப்பட்டுள்ளது. 

கிறிஸ்துவை வாழ்வில் அறிந்திடாத மக்கள் பலர் இந்த ஐந்து வகை ஊழியங்களில் ஏதாவது ஒன்றினாலும் தொடப்பட்டு கிறிஸ்துவுக்கு நேராகத் திரும்பியுள்ளதை நாம் உலகினில் பார்க்கலாம். அப்போஸ்தல அடையாளங்களான அற்புதங்கள் மூலம் பலரும், தங்கள் உள்ளத்திலுள்ளதை தீர்க்கதரிசனங்களால் வெளிப்படுத்துவதன் மூலம் சிலரும் சுவிசேஷகர்களின் நற்செய்தி  அறிவிப்புகள் மூலம் மற்றும்  மேய்ப்பர்கள், போதகர்கள் இவர்களின் வழிகாட்டுதலின் மூலம் பலரும் கிறிஸ்துவிடம் திரும்பியுள்ளனர். 

ஆம் அன்பானவர்களே, தேவன் எப்படியாவது மக்கள் தன்னை அறிந்து  தன்னைப்போல பூரணர்களாக மாறவேண்டும் என்று இப்படிச் செய்துள்ளார். எனவே இத்தகைய சுவிசேஷ அறிவிப்புகளை நாம் புறக்கணித்துக்கொண்டே இருப்போமானால் நிச்சயம் தண்டனைக்கு நாம் தப்பமுடியாது. 

"முதலாவது கர்த்தர் மூலமாய் அறிவிக்கப்பட்டு, பின்பு அவரிடத்தில் கேட்டவர்களாலே நமக்கு உறுதியாக்கப்பட்டதும், அடையாளங்களினாலும் அற்புதங்களினாலும் பலவிதமான பலத்த செய்கைகளினாலும், தம்முடைய சித்தத்தின்படி பகிர்ந்துகொடுத்த பரிசுத்த ஆவியின் வரங்களினாலும், தேவன் தாமே சாட்சி கொடுத்ததுமாயிருக்கிற இவ்வளவு பெரிதான இரட்சிப்பைக்குறித்து நாம் கவலையற்றிருப்போமானால் தண்டனைக்கு எப்படித் தப்பித்துக்கொள்ளுவோம்." ( எபிரெயர் 2 : 3, 4 )

ஆம் அன்பானவர்களே, சுவிசேஷ அறிவிப்புகளை அற்பமாக எண்ணாமல் அறிவிக்கப்படும் செய்திக்கு நேராக நமது இருதயத்தைத் திரும்புவோம்; கிறிஸ்துவினுடைய நிறைவான வளர்ச்சியைப்போல நாமும் வளர்ந்து பூரண மனிதர்களாவோம்.   


✉'ஆதவன்' 💚ஆகஸ்ட் 11, 2024. 💚ஞாயிற்றுக்கிழமை 💚                               வேதாகமத் தியானம் - எண்:- 1,280        

"வானம் எனக்குச் சிங்காசனம், பூமி எனக்குப் பாதப்படி; நீங்கள் எனக்குக் கட்டும் ஆலயம் எப்படிப்பட்டது? நான் தங்கியிருக்கும் ஸ்தலம் எப்படிப்பட்டது?" ( ஏசாயா 66 : 1 )

இன்றைய தியான வசனம் நாம் பல்வேறுமுறை கேட்ட வசனம்தான். எனினும், இந்த வசனத்தை இதன் முழு அர்த்தம் தெரிய தொடர்ச்சியாக அடுத்த வசனத்தையும் நாம் வாசிக்கவேண்டியது அவசியம். 

அடுத்த வசனம் சொல்கின்றது, "என்னுடைய கரம் இவைகளையெல்லாம் சிருஷ்டித்ததினால் இவைகளெல்லாம் உண்டாயின என்று கர்த்தர் சொல்லுகிறார்; ஆனாலும் சிறுமைப்பட்டு, ஆவியில் நொறுங்குண்டு, என் வசனத்துக்கு நடுங்குகிறவனையே நோக்கிப்பார்ப்பேன்." ( ஏசாயா 66 : 2 ) அதாவது வானம், வானத்திலுள்ள அனைத்துப் படைப்புகளான விண்மீன்கள், கோள்கள், அண்டவெளிகள் இவை அனைத்தையும் நான்தான்  படைத்துள்ளேன். இவை எனக்குச் சிம்மாசனம்போல இருக்கின்றன.  

"ஆனாலும் சிறுமைப்பட்டு, ஆவியில் நொறுங்குண்டு, என் வசனத்துக்கு நடுங்குகிறவனையே நோக்கிப்பார்ப்பேன்." என்று இந்த வசனம் சொல்கின்றது. இதன்பொருள், இப்படி இவையெல்லாம் எனக்குச் சிம்மாசனம்போல இருந்தாலும் இவைகள் அனைத்தையும்விட சிறுமைப்பட்டு, ஆவியில் நொறுங்குண்டு, என் வசனத்துக்கு நடுங்குகிறவனையே நோக்கிப்பார்ப்பேன் என்கிறார் தேவனாகிய கர்த்தர். 

இப்படித் தேவன் மனிதர்களை நோக்கிப்பார்க்கக் காரணம், தேவன் மனிதர்களை அவரது மற்ற படைப்புக்களைவிட மேலானவர்களாகக்  கருதுவதால்தான். எனவே தேவனது ஆகாயப் படைப்புக்கள் தேவனுக்குச் சிம்மாசனம்போல இருந்தாலும் அவர் மனிதர்களுக்குள் வசிக்கவே ஆசைப்படுகின்றார். ஆம், "ஆகிலும் உன்னதமானவர் கைகளினால் செய்யப்பட்ட ஆலயங்களில் வாசமாயிரார்." ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 7 : 48 ) அவர் ஆகாயத்திலோ மனிதர்களால் கட்டப்படும் ஆலயங்களில் வசிப்பதையோவிட மனிதர்களுக்குள் வசிக்கவே ஆசைப்படுகின்றார். 

ஆம் அன்பானவர்களே, எனவேதான் நாம் நமது உடலை தேவன் வாழும் வகையில் பரிசுத்தமாகக் காத்துக்கொண்டு  வாழவேண்டியது அவசியமாய் இருக்கின்றது. 

நினைத்துப்பாருங்கள், பெரிய பெரிய விஞ்ஞானிகளாலும் பகுத்து உணரமுடியாத அண்டசராசரங்களைவிட தேவன் மனிதர்களை அதிகம் விரும்புகின்றார். பூமி அவரது பாதப்படியாக இருந்தாலும் அதில் வாழும் சிறுமைப்பட்டு, ஆவியில் நொறுங்குண்டு, அவரது வசனத்துக்கு நடுங்குகிறவர்களையே நோக்கிப்பார்க்கின்றார்.  எனவே, நொறுக்கப்பட்ட இதயத்தோடு தேவனது வசனத்துக்கு நடுங்கி வாழ்வோமானால் தேவன் நமக்குள் வந்து தங்குவார். 

தேவன் விண்ணுலகமான சிங்காசனத்தில் அமர்ந்துகொண்டு அதிகாரத்தோடு ஆட்சி செய்வதைவிட பாதப்படியான பூமியில் நம்முடன் வாசிக்கவிரும்புவது எத்தனைப் பெரிய  ஆச்சரியம். அவரது விருப்பத்தை நிறைவு செய்யும் வாழ்க்கை வாழ்வோம். 


✉'ஆதவன்' 💚ஆகஸ்ட் 12, 2024. 💚திங்கள்கிழமை 💚                               வேதாகமத் தியானம் - எண்:- 1,281        

"மரணத்துக்கேதுவான பாவத்துக்கானாலும், நீதிக்கேதுவான கீழ்ப்படிதலுக்கானாலும், எதற்குக் கீழ்ப்படியும்படி உங்களை அடிமைகளாக ஒப்புக்கொடுக்கிறீர்களோ, அதற்கே கீழ்ப்படிகிற அடிமைகளாயிருக்கிறீர்களென்று அறியீர்களா?" ( ரோமர் 6 : 16 )

இன்றைய தியான வசனத்தில் அப்போஸ்தலரான  பவுல் இரண்டு வித  அடிமைத்தனத்தைக் குறித்துக் கூறுகின்றார்.  ஒன்று, மரணத்துக்கு ஏதுவாக நம்மைச் சிறைப்படுத்தும் பாவ   அடிமைத்தனம். இன்னொன்று, நீதிகேதுவான தேவனுக்கு கீழ்ப்படியும் அடிமைத்தனம்.   

இந்த இரண்டில் எதற்கு நம்மை அடிமைகளாக ஒப்புக்கொடுக்கின்றோமோ அதற்கே நாம் அடிமைகளாக  .இருப்போம். நாங்கள் யாருக்கும் அடிமைகள் அல்ல என்று   வாதிட்ட யூதர்களைப்பார்த்து இயேசு  கிறிஸ்து கூறினார், "பாவஞ்செய்கிறவன் எவனும் பாவத்துக்கு அடிமையாயிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்." ( யோவான் 8 : 34 ) என்று. 

பாவம் நம்மை அடிமைப்படுத்துவது  மட்டுமல்ல அது ஆத்தும மரணத்தையும் ஏற்படுத்துகின்றது. இதனையே நாம் "பாவத்தின் சம்பளம் மரணம்" (ரோமர் 6:23) என்று வாசிக்கின்றோம்.    ஆம் அன்பானவர்களே, இதனாலேயே இன்றைய தியான வசனம் நமக்கு இந்த இரண்டு அடிமைத்தனத்தையும் எடுத்துக்கூறி வாழ்க்கையில் நாம் நமக்கேற்றதை தேர்வு செய்யக் கூறுகின்றது. இந்த இரண்டில் எதற்குக் கீழ்ப்படியும்படி உங்களை அடிமைகளாக ஒப்புக்கொடுக்கிறீர்களோ, அதற்கே கீழ்ப்படிகிற அடிமைகளாயிருக்கிறீர்களென்று அறியீர்களா? என்று கேள்வியும் எழுப்புகின்றது. 

மட்டுமல்ல, அப்போஸ்தலராகிய பவுல் நாம் எதனைத் தேர்வுசெய்ய வேண்டும் என்றும் ஆலோசனைக் கூறுகின்றார். ஆம்,  "அக்கிரமத்தை நடப்பிக்கும்படி முன்னே நீங்கள் உங்கள் அவயவங்களை அசுத்தத்திற்கும் அக்கிரமத்திற்கும் அடிமைகளாக ஒப்புக்கொடுத்ததுபோல, இப்பொழுது பரிசுத்தமானதை நடப்பிக்கும்படி உங்கள் அவயவங்களை நீதிக்கு அடிமையாக ஒப்புக்கொடுங்கள்." ( ரோமர் 6 : 19 ) என்கின்றார். 

ஆலயங்களுக்குச் சென்று ஆராதனை செய்யுமுன் நாம் நம்மையே சீர்தூக்கிப் பார்த்துக்கொண்டு ஆராதனைகளில் கலந்துகொள்ளவேண்டும். பாவத்துக்கு அடிமைகளாக இருந்துகொண்டு ஆராதனையும் செய்வோமானால் அது அர்த்தமற்ற ஆராதனையாகவே இருக்கும். நீதிக்கேதுவான தேவனுக்குக் கீழ்ப்படிதலுள்ளவர்களாக நம்மைத் தேவனுக்கு அடிமைகளாக்கி ஆலய ஆராதனைகளில் கலந்துகொள்வோம். 

ஆம், இப்பொழுது "பரிசுத்தமானதை நடப்பிக்கும்படி உங்கள் அவயவங்களை நீதிக்கு அடிமையாக ஒப்புக்கொடுங்கள்." 


✉'ஆதவன்' 💚ஆகஸ்ட் 13, 2024. 💚செவ்வாய்க்கிழமை 💚                            வேதாகமத் தியானம் - எண்:- 1,282   

"இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்திருக்கிறார்" (லூக்கா 19:10)

கடவுள் என்றால் அவர் தீயவர்களை அழித்து நல்லவர்களை வாழவைப்பவர் என்று நம்மில் பலரும் எண்ணிக்கொண்டிருக்கின்றோம். காரணம், மனிதர்களாகிய நாம் அத்தகைய குணம் உள்ளவர்களாக இருப்பதால்தான். நம்மை அன்பு செய்பவர்களை மட்டும் நாமும் அன்பு செய்கிறோம்; நமக்கு நன்மை செய்பவர்களுக்கு மட்டும் நாமும் நன்மை செய்கின்றோம். 

ஆனால் தேவன் இப்படிக் குறுகிய எண்ணம் உள்ளவரல்ல; மாறாக அவர் தீயவர்களையும் பாவிகளையும் அன்பு செய்கின்றார். காரணம், இந்த உலக வாழ்க்கைக்  குறுகியது. இந்த உலகமே பெரிதென வாழ்ந்து எதிர்காலத்தில் முடிவில்லா அக்கினியில் ஆத்துமாக்கள் அழிந்துபோவது தேவனுக்குச் சித்தமல்ல. எனவேதான் தேவன் பாவிகளை உடனேயே அழித்து ஒழிக்காமல் விட்டுவைக்கின்றார். அவர்கள் மனம்திரும்ப சந்தர்ப்பம் அளிக்கின்றார்.

"தாமதிக்கிறார் என்று சிலர் எண்ணுகிறபடி, கர்த்தர் தமது வாக்குத்தத்தத்தைக் குறித்துத் தாமதமாயிராமல்;  ஒருவரும்  கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்ப வேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார்." (2 பேதுரு 3:9) என்று நாம் வாசிக்கின்றோம். ஒரு ஆத்துமாகூட அழிவது தேவனுக்குச் சித்தமல்ல. எல்லோரும் மனம்திரும்பவேண்டும் என்று அவர் விரும்புகின்றார். ஆம் அவர் எதிலும் 100% எதிர்பார்ப்பவர். 

அன்று பாவி என்று கருதப்பட்ட சகேயு வீட்டில் இயேசு தங்கச் சென்றபோது யூதர்கள் மனித முறைமையின்படி சிந்தித்ததால், " இவர் பாவியான மனுஷனிடத்தில் தங்கும்படி போனார் என்று முறுமுறுத்தார்கள்."  (லூக்கா 19:7) ஆனால் இயேசு சகேயுவின் ஆத்துமாவைப் பார்த்தார். அது பாவத்துக்கு வருந்தும் தன்மை உள்ள ஆத்துமாவாக இருந்ததை அவர் அறிந்திருந்தார். 

அதுபோலவே "சகேயு நின்று, கர்த்தரை நோக்கி: ஆண்டவரே, என் ஆஸ்திகளில் பாதியை ஏழைகளுக்குக் கொடுக்கிறேன், நான் ஒருவனிடத்தில் எதையாகிலும் அநியாயமாய் வாங்கினதுண்டானால், நாலத்தனையாகத் திரும்பச் செலுத்துகிறேன் என்றான். இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு இந்த வீட்டுக்கு இரட்சிப்பு வந்தது; இவனும் ஆபிரகாமுக்குக் குமாரனாயிருக்கிறானே." (லூக்கா 19: 8, 7) என்றார். 

ஆம் அன்பானவர்களே, இழந்துபோனதை தேடுவதற்கே இயேசு கிறிஸ்து உலகினில் வந்தார். சகேயுவைபோல பாவத்துக்கு வருந்தி பரிகாரம்செய்யும் குணம் நமக்கு இருக்குமானால் நாம் அவருக்குத் தொலைவில் இல்லை. இழந்துபோன நம்மை தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரனான கிறிஸ்து உலகினில்  வந்திருக்கிறார். அவரிடம் நமது பாவங்களை அறிக்கையிட்டு நம்மை ஒப்புக்கொடுப்போம்.


✉'ஆதவன்' 💚ஆகஸ்ட் 14, 2024. 💚புதன்கிழமை 💚                            வேதாகமத் தியானம் - எண்:- 1,283   

"உன்னோடே போராடினவர்களைத் தேடியும் காணாதிருப்பாய்; உன்னோடே யுத்தம்பண்ணின மனுஷர் ஒன்றுமில்லாமல் இல்பொருளாவார்கள்." ( ஏசாயா 41 : 12 )

பழைய ஏற்பாட்டுக்கும் புதிய ஏற்பாட்டுக்கும் அதிக வித்தியாசம் உண்டு. இன்றைய வசனத்துக்கு நாம் பழைய ஏற்பாட்டு முறையில் பொருள்கொண்டு நம்மை எதிர்த்தவர்கள் எல்லோரும் அழிந்துபோகவேண்டும் என்று எண்ணுவோமானால் நாம் மெய்யான கிறிஸ்தவர்கள் அல்ல. 

ஏனெனில், நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து எதிரிகளுக்காகவும், நம்மை அவமதிப்பவர்களுக்காகவும் வேண்டுதல்செய்ய நமக்கு அறிவுறுத்தியுள்ளார். மட்டுமல்ல, அவரே தனது பாடுகளின்போது அதனையே செய்தார். "பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே" ( லுூக்கா 23 : 34 ) என்று தன்னைச் சிலுவையில் அறைந்தவர்களுக்காக பிதாவிடம் மன்னிப்பு வேண்டினார். 

எனவே இன்றைய தியான வசனம் நம்மோடு போராடுபவர்கள் யுத்தம் செய்பவர்கள் என்று கூறுவது நம்மைப் பாவத்தில் விழவைக்கும்  சத்துருவானவனையே. ஆம் அன்பானவர்களே, நாம் பாவத்தை எதிர்த்து போராடி அதனை மேற்கொள்வதுதான் ஆவிக்குரிய வளர்ச்சி. அப்படி உன்னோடே போராடின பாவக் காரியங்களைத்  தேடியும் காணாதிருப்பாய்; உன்னோடே யுத்தம்பண்ணின பழைய பாவங்கள் அனைத்தும் ஒன்றுமில்லாமல் இல்பொருளாகும் என்கிறார் தேவனாகிய கர்த்தர். 

அப்படிப் பாவத்தை மேற்கொள்ள "உன் தேவனாயிருக்கிற கர்த்தராகிய நான் உன் வலதுகையைப் பிடித்து: பயப்படாதே, நான் உனக்குத் துணைநிற்கிறேன் என்று சொல்லுகிறேன்." ( ஏசாயா 41 : 13 ) என்கிறார் கர்த்தர். 

இப்படிப் பாவங்களை நாம் மேற்கொள்ளம்போது தான் தேவன் நம்மைப் பயன்படுத்த முடியும். "இதோ, போரடிக்கிறதற்கு நான் உன்னைப் புதிதும் கூர்மையுமான பற்களுள்ள இயந்தரமாக்குகிறேன்; நீ மலைகளை மிதித்து நொறுக்கி, குன்றுகளைப் பதருக்கு ஒப்பாக்கிவிடுவாய்." ( ஏசாயா 41 : 15 ) என்று இன்றைய தியான வசனத்தைத் தொடர்ந்து கூறப்பட்டுள்ளது. 

ஆம்  அன்பானவர்களே, நமது சுய பலத்தால் பாவங்களை நாம் மேற்கொள்ள முடியாது. தேவனது ஒத்துழைப்பு நமக்குத் தேவையாயிருக்கிறது. தேவனிடம் உண்மையான விருப்பத்தோடு வேண்டுவோமானால் தேற்றரவாளரான பரிசுத்த ஆவியானவரை அவர் நமக்குத் தருவார். "அவர் வந்து, பாவத்தைக்குறித்தும், நீதியைக்குறித்தும், நியாயத்தீர்ப்பைக்குறித்தும், உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார்". ( யோவான் 16 : 8 ) இப்படி உணர்த்தி நம்மைப் பாவத்தை மேற்கொள்ளச் செய்வார். 

அப்போதுதான் நாமும் இதுவரை நம்மை அடிமையாக்கி வைத்திருந்த மலைபோன்ற பாவங்களை மிதித்து நொறுக்கி, அவைகளை பதருக்கு ஒப்பாக்கி போரடிக்கிறதற்கு உதவும் புதிதும் கூர்மையுமான பற்களுள்ள இயந்தரமாக்கப்பட்டு கர்த்தருக்கென்று பயன்படமுடியும். 


✉'ஆதவன்' 💚ஆகஸ்ட் 15, 2024. 💚வியாழக்கிழமை 💚                            வேதாகமத் தியானம் - எண்:- 1,284

"கர்த்தர் என் சுதந்தரமும் என் பாத்திரத்தின் பங்குமானவர்; என் சுதந்தரத்தை தேவரீர் காப்பாற்றுகிறீர்." ( சங்கீதம் 16 : 5 )

அனைவருக்கும் சுதந்திரதின வாழ்த்துக்களைக் கூறிக்கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றேன்.  

சுதந்திரம் என்பதற்குப் பலரும் பல்வேறு பொருள் கொள்ளலாம். பொதுவாக நாம் எண்ணியத்தைச் செய்யும் உரிமை நமக்கு இருக்குமானால் அதுவே சுதந்திரம் என்று பலரும் கூறுவார்கள். இந்திய அரசியலமைப்புச் சட்டம் இந்தியக் குடிமக்களுக்குப் பல்வேறு உரிமைகளைக் கொடுத்துள்ளது. அந்த உரிமைகளில் பல நாம் ஆங்கிலேயரது ஆட்சியிலிருந்து விடுதலை பெற்றதால் நமக்கு உரிமையானவை. 

அதுபோலவே ஆவிக்குரிய வாழ்விலும் நமக்குச் சில சுதந்திரங்கள் உண்டு. இன்றைய தியான வசனத்தில் தாவீது ராஜா, "கர்த்தர் என் சுதந்தரமும் என் பாத்திரத்தின் பங்குமானவர்." என்று கூறுகின்றார். அதாவது, நமது வீட்டில் நாம் அனுபவிப்பதுபோல கர்த்தரும் நம்மோடு இருந்து நம்மில் சுதந்திரமாகச் செயல்படுபவர் என்று பொருள். பாத்திரத்தின் பங்கு என்று கூறும்போது,  ஒரே வீட்டில் குடியிருப்போர் ஒரே பாத்திரத்தில் சமைத்துப் பங்கிட்டு உண்பதுபோல அனைத்துக் காரியங்களிலும் கர்த்தர் நம்மோடு குடியிருக்கும் குடும்ப உறுப்பினர் போன்றவர் என்று பொருள். 

தாவீது கூறுவதுபோல நாம் கர்த்தரை நமது சுதந்திரத்தைக் காப்பவராகவும் நம்மோடு நமது வீட்டில் வசிப்பவராகவும் கருதிச் செயல்படுகின்றோமா?  சிந்தித்துப்பார்ப்போம். அப்படி இல்லையானால் இனியாவது அப்படி இருக்க முயற்சிச் செய்வோம். 

அடுத்து, "என் சுதந்தரத்தை தேவரீர் காப்பாற்றுகிறீர்" என்று கூறப்பட்டுள்ளது. ஆம் நமது நாட்டில் நமக்குள்ள உரிமைகளை தேவனே காப்பாற்றுகின்றார்.  கிறிஸ்தவர்களுக்கு எதிராக எழும்பியுள்ள பல்வேறு அமைப்புகளும் மக்களும் எந்த நாளைவிடவும் இப்போது அதிகம். ஆனால் அவர்களால் நமக்கு எதிராக முற்றிலுமாகச் செயல்படமுடிவதில்லை. காரணம், நமது சுதந்தரத்தை தேவனே காப்பாற்றுகின்றார். 

ஆம் அன்பானவர்களே, இப்போது மட்டுமல்ல கிறிஸ்தவத்தின் ஆரம்ப நாட்கள் முதல் பல்வேறு அரசுக்கள், ராஜாக்கள் கிறிஸ்தவத்தை அழிக்க முயன்று ஆழிந்துபோயுள்ளனர். வேறு எந்த மதத்தையும்விட கிறிஸ்தவ மார்க்கத்துக்கு எதிரிகள் அதிகம். ஆனாலும் இன்றும் கிறிஸ்தவம் வளர்ந்துகொண்டிருக்கிறது. காரணம், கர்த்தர்  நம் சுதந்தரத்தை காப்பாற்றுகிறார் என்பதால்தான். 

மேலும், பாவ அடிமைத்தனத்திலிருந்து விடுதலை அடைவதே வேதாகம அடிப்படையில் நாம் அடையும் ஆவிக்குரிய சுதந்திரம்.  நாம் பாவம் செய்யும்போது பாவத்துக்கு அடிமைகளாகின்றோம். பாவத்திலிருந்து முழு விடுதலை அளிக்கத்   தேவனது ஆவியினால்தான் முடியும். ஆம், "கர்த்தரே ஆவியானவர்; கர்த்தருடைய ஆவி எங்கேயோ அங்கே விடுதலையுமுண்டு." ( 2 கொரிந்தியர் 3 : 17 )

நாம் யாரை நம்முன்  வைத்துள்ளோம்? நமது குடும்பத்தில் கர்த்தரை ஒரு உறுப்பினராகக் கொண்டுள்ளோமா? பாவ அடிமைத்தனத்திலிருந்து விடுபட பரிசுத்த ஆவியானவர் நம்மில்  செயல்பட அனுமதிக்கின்றோமா? சிந்திப்போம்.


✉'ஆதவன்' 💚ஆகஸ்ட் 16, 2024. 💚வெள்ளிக்கிழமை 💚                            வேதாகமத் தியானம் - எண்:- 1,285   

"நீங்கள் பரிசுத்தமுள்ளவர்களாக வேண்டுமென்பதே தேவனுடைய சித்தமாயிருக்கிறது. அந்தப்படி, நீங்கள் வேசிமார்க்கத்துக்கு விலகியிருந்து....." ( 1 தெசலோனிக்கேயர் 4 : 3 )

தேவன் நம்மை உலகத்தில் படைத்தது வெற்று வாழ்க்கை வாழ்வதற்கல்ல; மாறாக அவரைப்போல நாமும் பரிசுத்தராக வாழவேண்டும் என்பதற்காகவே.  உலக உதாரணம்கொண்டு இதனை நாம் புரிந்துகொள்ளலாம். ஒரு புகழ் பெற்ற மருத்துவர் ஒருவர் இருக்கின்றார் என்று வைத்துக்கொள்வோம். அவர் தனது மகனும் தன்னைப்போல ஒரு சிறந்த மருத்துவராகவேண்டும் என்றுதான் விரும்புவார். அந்த மகனுக்காகப்  பல முன்னேற்பாடுகளைச்  செய்துவைப்பார்.   

அதுபோலவே தேவனும் தன்னைப்போன்ற பரிசுத்தமுள்ளவர்களாக நாம் மாறவேண்டும் என்று விரும்புகின்றார். நாம் பரிசுத்தமாய் வாழ்வதற்கு உதவியாக பரிசுத்த ஆவியானவரை ஏற்பாடுசெய்துள்ளார். ஆம் அன்பானவர்களே, "தேவன் நம்மை அசுத்தத்திற்கல்ல பரிசுத்தத்திற்கே அழைத்திருக்கிறார்." ( 1 தெசலோனிக்கேயர் 4 : 7 )

நாம் தொடர்ந்து ஆவியானவரின் விருப்பத்துக்கு எதிராகச் செயல்பட்டுக் கொண்டிருப்போமானால் நாம் அவரை அசட்டைப் பண்ணுகின்றோம் என்று பொருள். எனவே தான் அப்போஸ்தலரான பவுல்,   "ஆகையால் அசட்டைபண்ணுகிறவன் மனுஷரை அல்ல, தமது பரிசுத்த ஆவியை நமக்குத் தந்தருளின தேவனையே அசட்டைபண்ணுகிறான்." ( 1 தெசலோனிக்கேயர் 4 : 8 ) என்று கூறுகின்றார். 

ஆம் அன்பானவர்களே, நாம் பரிசுத்தக் கேடான வாழ்க்கை வாழும்போது "நீங்கள் பரிசுத்தமுள்ளவர்களாக வேண்டுமென்பதே தேவனுடைய சித்தமாயிருக்கிறது..." எனும் வசனத்தை நாம் மீறுபவர்களாக இருப்போம்; தேவ சித்தத்தை மீறுகின்றவர்களாக இருப்போம். 

இன்றைய தியான வசனம்,  "அந்தப்படி, நீங்கள் வேசிமார்க்கத்துக்கு விலகியிருந்து....." என்று கூறுகின்றது.  அதாவது விபச்சார பாவத்தையே பரிசுத்தக் கேட்டுக்கு ஒரு உதாரணமாக இந்த வசனம் கூறுகின்றது. தேவன் அருவருக்கும் இரண்டு பாவங்கள் விபச்சாரம் மற்றும் விக்கிரக ஆராதனை.  விக்கிரக ஆராதனை என்பது சிலைகளை வணங்குவது மட்டுமல்ல, தேவனுக்கு அளிக்கும் முன்னுரிமையை உலகப் பொருட்களுக்குக் கொடுப்பதும் விக்கிரக ஆராதனையே. 

எனவே நாம் இவற்றுக்கு முன்னுரிமை கொடுக்கும் போது பரிசுத்தத்தை மீறுகின்றோம் என்று பொருள். எனவேதான் அப்போஸ்தலரான பவுல், "விபச்சாரக்காரனாவது, அசுத்தனாவது, விக்கிரகாராதனைக்காரனாகிய பொருளாசைக்காரனாவது தேவனுடைய ராஜ்யமாகிய கிறிஸ்துவின் ராஜ்யத்திலே சுதந்தரமடைவதில்லையென்று அறிந்திருக்கிறீர்களே."( எபேசியர் 5 : 5 ) என்று எச்சரித்துக் கூறுகின்றார். தேவன் விரும்பும் பரிசுத்தத்தைக் காத்துக்கொள்வோம்.


✉'ஆதவன்' 💚ஆகஸ்ட் 17, 2024. 💚சனிக்கிழமை 💚                            வேதாகமத் தியானம் - எண்:- 1,286   

"நீங்கள் வளரும்படி, புதிதாய்ப் பிறந்த குழந்தைகளைப்போல, திருவசனமாகிய களங்கமில்லாத ஞானப்பாலின்மேல் வாஞ்சையாயிருங்கள்." ( 1 பேதுரு 2 : 3 )

சிறு குழந்தைகள் பாலைத்தவிர வேறு எதனையும் உணவாக உட்கொள்வதில்லை. ஆனால் அப்படிப் பாலை உட்கொண்டுதான் அவை வளர்கின்றன. தேவனை அறியும் அறிவில் வளருவதும் இப்படித்தான். நாம் ஆவிக்குரிய வாழ்வில் வளரவேண்டுமானால் தேவனுடைய வார்த்தைகளை நாளும் உட்கொள்பவர்களாக இருக்கவேண்டும். 

"புதிதாய்ப் பிறந்த குழந்தைகளைப்போல, திருவசனமாகிய களங்கமில்லாத ஞானப்பாலின்மேல் வாஞ்சையாயிருங்கள்." என்கின்றார் அப்போஸ்தலராகிய பேதுரு. திருவசனத்தை களங்கமில்லாத ஞானப்பால் என்று குறிப்பிடுகின்றார். வசனம்தான் பாலேத்தவிர வசனத்துக்கு அளிக்கப்படும் எல்லா விளக்கங்களும் பால் என்று நாம் கொள்ளமுடியாது. 

ஆனால் இன்று திருவசனமாகிய இந்த ஞானப்பாலினை விசுவாசிகள் உட்கொள்ளாதபடி பல உண்மையில்லாத ஊழியர்களைச் சாத்தான் பயன்படுத்துகின்றான்.  எனவே அவர்கள் தேவ வார்த்தைகள் கூறும் மெய்யான பொருளை மக்களுக்குப் போதிக்காமல் அனைத்து வேத வசனங்களுக்கும் உலக ஆசீர்வாத பொருள்கொண்டு விசுவாசிகளை வஞ்சித்து வைத்துள்ளார்கள்.

ஆதவன் தினசரி தியானத்தில் நான் அடிக்கடி வலியுறுத்துவது என்னவென்றால் ஆலய ஆராதனைகளில் கலந்துகொண்டு அங்கு அளிக்கப்படும் செய்திகளை அப்படியே ஏற்றுக்கொள்ளவேண்டாம் என்பதுதான். ஆதவன் செய்திகளைக்கூட நீங்கள் அப்படியே ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று நான் கூறுவதில்லை. யார் என்ன சொன்னாலும் அதனை வேத வெளிச்சத்தில் ஆவியானவரின் துணையோடு ஆராய்ந்துபாருங்கள். தேவையில்லாத, வேதத்துக்குப் புறம்பான போதனைகளை யார் சொன்னாலும் அவைகளை விட்டு விலகுங்கள்.  

இன்று அதிகக்  கூட்டம் சேர்க்கும் பிரபல ஊழியர்கள் பலரும் வேத வசனங்களுக்கு மெய்யான பொருளைக் கூறுவதுமில்லை மக்களை சத்தியத்துக்கு நேராக நடத்துவதுமில்லை. எனவே அத்தகைய ஊழியர்களைப் பின்பற்றும் பலரும் ஆவிக்குரிய எந்த வளர்ச்சியுமின்றி சாதாரண உலக மனிதர்களைப்போலவே இருக்கின்றனர். 

திருவசனமாகிய களங்கமில்லாத ஞானப்பாலின்மேல் வாஞ்சையாயிருக்கும் மனிதர்கள் இயல்பிலேயே சத்தியத்தைத் தேடுபவர்களாக இருப்பார்கள்.  அவர்கள் ஆவிக்குரிய வாழ்வில்  வளருவார்கள். மற்றவர்களோ, எதெற்கெடுத்தாலும், "எங்கள் பாஸ்டர் சொன்னார்.... கன்வென்சன் கூட்டத்தில் பேசக் கேட்டேன் .." என்று கூறிக்கொண்டு தேவனுக்கும் தங்களுக்கும் தனிப்பட்டத் தொடர்பின்றி வாழ்பவர்களாக இருப்பார்கள். 

ஆம் அன்பானவர்களே, நாம் வளரும்படி, புதிதாய்ப் பிறந்த குழந்தைகளைப்போல, திருவசனமாகிய களங்கமில்லாத ஞானப்பாலின்மேல் வாஞ்சையுள்ளவர்களாக இருக்கவேண்டியது அவசியம். அப்போதுதான்  வேதாகமத்தை நாம் வாசிக்கும்போது ஆவியானவர் நம்மோடு பேசுவதையும் பல ஆவிக்குரிய சத்தியங்களை நமக்கு உணர்த்துவதையும் நாம் அனுபவிக்கமுடியும். 


✉'ஆதவன்' 💚ஆகஸ்ட் 18, 2024. 💚ஞாயிற்றுக்கிழமை 💚                            வேதாகமத் தியானம் - எண்:- 1,287   

"நீ அழாதபடிக்கு உன் சத்தத்தை அடக்கி, நீ கண்ணீர் விடாதபடிக்கு உன் கண்களைக் காத்துக்கொள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; உன் கிரியைக்குப் பலனுண்டென்று கர்த்தர் சொல்லுகிறார்". (எரேமியா 31:16)

ஆவிக்குரிய வாழ்க்கை வாழ்ந்தும் பல்வேறு நெருக்கடிகளில் சிக்கித் தவிக்கும் மக்கள் பலர் உண்டு. ஆம், சில வேளைகளில் நாம் எவ்வளவுதான் உண்மையும் உத்தமுமான வாழ்க்கை வாழ்ந்தாலும் நெருக்கடிகளும் பாடுகளும் நம்மைத் துரத்துவதுண்டு. யோபுவின் வாழ்க்கையைப் பாருங்கள், "அந்த மனுஷன் உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து, பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாயிருந்தான்." (யோபு 1:1) என்று வாசிக்கின்றோம். 

ஆனால் யோபு பல்வேறு நெருக்கடிகளுக்குள்ளானார். '..ஆகையால் என் துக்கம் சொல்லிமுடியாது. சர்வவல்லவரின் அம்புகள் எனக்குள் தைத்திருக்கிறது; அவைகளின் விஷம் என் உயிரைக் குடிக்கிறது; தேவனால் உண்டாகும் பயங்கரங்கள் எனக்கு முன்பாக அணியணியாய் நிற்கிறது." ( யோபு 6 : 3, 4 ) என்று அவர் புலம்பினார். அவரது நண்பர்கள் யோபுவின் துன்பத்துக்குக்  காரணம் அவர்தான்;  அவரது பாவம்தான் என்று அவர்மேல் பழிசுமத்தினார்கள்.  ஆனால், இறுதியில் அவரது நண்பர்களைத் தேவன் கடிந்துகொண்டதை நாம் வாசிக்கின்றோம். 

ஆம், ஆவிக்குரிய வாழ்வில் வரும்  சில துன்பங்கள் நம்மால் புரிந்துகொள்ளமுடியாதவை.  ஆனால் தேவன் நமது கண்ணீரைப் பார்க்கின்றார். அதனை அவர் புறக்கணிப்பதில்லை. எசேக்கியா ராஜா நோய்வாய்ப்பட்டபோது  "ஆ கர்த்தாவே, நான் உமக்கு முன்பாக உண்மையும் மனஉத்தமமுமாய் நடந்து, உமது பார்வைக்கு நலமானதைச் செய்தேன் என்பதை நினைத்தருளும் என்று விண்ணப்பம்பண்ணினான். எசேக்கியா மிகவும் அழுதான்." ( 2 இராஜாக்கள் 20 : 3 ) என்று கூறப்பட்டுள்ளது. எசேக்கியா தேவனுக்காக   வைராக்கியம்கொண்டு பல நல்ல செயல்களைச் செய்தவர்தான். 

இதுபோலவே இன்று நாம் ஆவிக்குரிய வாழ்வைச் சிறப்பாக வாழ்ந்துகொண்டிருந்தாலும் துன்பங்கள் வருமானால் நம்மைப்பார்த்தும் தேவன் சொல்கின்றார், "நீ அழாதபடிக்கு உன் சத்தத்தை அடக்கி, நீ கண்ணீர் விடாதபடிக்கு உன் கண்களைக் காத்துக்கொள்; உன் கிரியைக்குப் பலனுண்டு"

நேர்மையாக வாழ்பவர்களின் கண்ணீரைத் தேவன் புறக்கணிப்பதில்லை.  பிளவை நோய் முற்றியதால் ஏசாயா தேவ அறிவிப்புப்  பெற்று   எசேக்கியா ராஜாவிடம்  "நீர் உயிர் பிழைக்கமாட்டீர், எனவே உமது வீட்டின்  காரியங்களை ஒழுங்குபடுத்தும்"  என்று கூறினார்.  ஆனால், "ஏசாயா பெரிய தீர்க்கதரிசியல்லவா? அவரே கூறிவிட்டாரே இனி நான் பிழைக்கமாட்டேன்" என்று எசேக்கியா எண்ணவில்லை; மனம் தளரவில்லை. 

நமது தேவனிடம் இரக்கங்கள் உண்டு என்பதனை உணர்ந்திருந்த எசேக்கியா தேவனை நோக்கிக் கண்ணீருடன் விண்ணப்பித்தார்.  எசேக்கியாவின் நற்செயல்களை அறிந்திருந்த தேவன்,  "உன் விண்ணப்பத்தைக் கேட்டேன், உன் கண்ணீரைக் கண்டேன்; இதோ, நான் உன்னைக் குணமாக்குவேன்; மூன்றாம் நாளிலே நீ கர்த்தருடைய ஆலயத்துக்குப் போவாய். உன் நாட்களோடே பதினைந்து வருஷங்களைக் கூட்டுவேன்." ( 2 இராஜாக்கள் 20 : 5, 6 ) என்று வாக்களித்து அதனை நிறைவேற்றினார். 

ஆம் அன்பானவர்களே, "அழாதபடிக்கு உன் சத்தத்தை அடக்கி, நீ கண்ணீர் விடாதபடிக்கு உன் கண்களைக் காத்துக்கொள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; உன் கிரியைக்குப் பலனுண்டு" என்கிறார் தேவனாகிய கர்த்தர். 


✉'ஆதவன்' 💚ஆகஸ்ட் 19, 2024. 💚திங்கள்கிழமை 💚                          வேதாகமத் தியானம் - எண்:- 1,288   

"இடுக்கமான வாசல்வழியாய் உட்பிரவேசிக்கப் பிரயாசப்படுங்கள், அநேகர் உட்பிரவேசிக்க வகைதேடினாலும் அவர்களாலே கூடாமற்போகும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்." ( லுூக்கா 13 : 24 )

மரித்தபின்பு நித்திய ஜீவனுக்குள் நுழையத் தகுதியுள்ளவர்களாக மாறவேண்டியதே உலகினில் வாழும் ஒவ்வொருவரும்  செய்யவேண்டியது.  எல்லோருக்கும் அதில் நுழைந்திட ஆசைதான். ஆனால் இன்றைய தியான வசனத்தில் இயேசு கிறிஸ்து கூறுகின்றார், "அநேகர் உட்பிரவேசிக்க வகைதேடினாலும் அவர்களாலே கூடாமற்போகும்" என்று. 

அதற்கான காரணத்தையும் "அது இடுக்கமான வாசல்" வழியாக நுழையவேண்டிய அனுபவம் என்றும்  இயேசு கூறுகின்றார். 

அப்போஸ்தலரான பவுல் அதனை, விசுவாசத்தின் அடிப்படையிலான போராட்டத்தின் வெற்றியின் மூலம்தான் அடையமுடியும் என்கின்றார். "விசுவாசத்தின் நல்ல போராட்டத்தைப் போராடு, நித்தியஜீவனைப் பற்றிக்கொள்; அதற்காகவே நீ அழைக்கப்பட்டாய். " ( 1 தீமோத்தேயு 6 : 12 ) ஆனால் நித்திய ஜீவனை விரும்பும் பலரும் இப்படி விசுவாச போராட்டத்தினை விரும்புவதில்லை. 

உலக வாழ்க்கையினை மகிழ்ச்சியோடு அனுபவிக்கவேண்டும்; தேவனைவிட்டு நம்மைப் பிரிக்கும் உலகத்திலுள்ள அனைத்து இன்ப பாவகாரியங்களையும்  அனுபவிக்கவேண்டும் இறுதியில் நித்தியஜீவனும் வேண்டும் என்று பலரும் விரும்புகின்றனர். ஆனால் இயேசு கிறிஸ்து கூறும் அந்த இடுக்கமான வாசல் இப்படி எல்லோரையும் நுழைய அனுமதிக்கும் வாசல் அல்ல. 

இப்படித் தங்களுக்கு  உலகமும் வேண்டும் தேவனும் வேண்டும் என்று இரண்டு எஜமானர்களுக்கு ஊழியம் செய்தவர்கள் அதில் நுழைய முடியாது என்கின்றார் இயேசு கிறிஸ்து. "இரண்டு எஜமான்களுக்கு ஊழியஞ்செய்ய ஒருவனாலும் கூடாது; ஒருவனைப் பகைத்து, மற்றவனைச் சிநேகிப்பான்; அல்லது ஒருவனைப் பற்றிக்கொண்டு, மற்றவனை அசட்டைபண்ணுவான்; தேவனுக்கும் உலகப்பொருளுக்கும் ஊழியஞ்செய்ய உங்களால் கூடாது." ( மத்தேயு 6 : 24 )

ஆம் அன்பானவர்களே, "அநேகர் உட்பிரவேசிக்க வகைதேடினாலும் அவர்களாலே கூடாமற்போகும்" என்று இயேசு கிறிஸ்து  குறிப்பிடும் இந்த அநேகர் பிரவேசிக்க வகை தேடினவர்கள்தான். ஆனால் அவர்கள் எப்படித் தேடினார்கள்? அவர்கள் நாம் மேலே பார்த்தபடி உலகத்துக்கும் தேவனுக்கும் பிரியமாக இருக்க முயன்று வழிதேடினார்கள்.  

நித்தியஜீவனுக்குச் செல்லும் பாதை குறுகியது. எல்லோரையும் அனுமதிக்கும் விசாலமான பாதையல்ல அது. எனவே அன்பானவர்களே, நாம் அப்போஸ்தலரான பவுல் கூறுவதுபோல விசுவாசத்தின் நல்ல போராட்டத்தைப் போராடி இயேசு கூறிய இடுக்கமான வாசல்வழியாய் உட்பிரவேசிக்க  முயற்சிசெய்யவேண்டும். போராட்டமில்லாமல் வெற்றியில்லை. 


✉'ஆதவன்' 💚ஆகஸ்ட் 20, 2024. 💚செவ்வாய்க்கிழமை 💚                          வேதாகமத் தியானம் - எண்:- 1,289   

"புத்தியீனமான தர்க்கங்களையும், வம்சவரலாறுகளையும், சண்டைகளையும், நியாயப்பிரமாணத்தைக்குறித்து உண்டாகிற வாக்குவாதங்களையும் விட்டு விலகு; அவைகள் அப்பிரயோஜனமும் வீணுமாயிருக்கும்." ( தீத்து 3 : 9 )

இன்று கிறிஸ்தவர்களுக்குள் இருக்கும் முக்கியமான பிரச்னை தேவையில்லாத தர்க்கங்கள். பல்வேறு கிறிஸ்தவ பிரிவினரும் தேவையில்லாமல் ஒருவரையொருவர் குறைகூறுவதும் நாம் அறியாத ஒன்றல்ல. இவைகள் பிரயோஜனமில்லாதவை என்று கூறுகின்றார் அப்போஸ்தலரான பவுல். 

திருச்சபைகளுக்குள் இன்று, "நாங்கள்தான் கிறிஸ்து உருவாக்கிய ஆதி திருச்சபை, எங்களிடம்தான் ஆரம்பமுதலான வரலாறு உள்ளது" என்றும், "நாங்கள்தான் தப்பறைகள் எதுவும் இல்லாமல் சீர்திருத்தப்பட்ட சீர்திருத்தச் திருச்சபை" என்றும், "நாங்கள்தான் ஆவிக்குரிய ஆராதனை செய்யும் ஆவிக்குரிய சபை" என்றும் வெற்றுப் பெருமை பேசும் நிலை உள்ளது மறுக்கமுடியாதது. இவைகளையே "புத்தியீனமான தர்க்கங்கள்" என்கிறார் அப்போஸ்தலரான பவுல். 

மெய்யான கிறிஸ்தவன் இப்படிச் சபை பாகுபாடுபார்த்து சண்டைபோடுபவனாக இருக்கமாட்டான். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை தங்களது  வாழ்வில் சொந்த இரட்சகராக அறியாமல் இருந்துகொண்டு இப்படித் தர்க்கம் செய்வது அறிவீனம். எனவேதான் அப்போஸ்தலரான பவுல், "இயேசுகிறிஸ்துவை, சிலுவையில் அறையப்பட்ட அவரையேயன்றி, வேறொன்றையும் உங்களுக்குள்ளே அறியாதிருக்கத் தீர்மானித்திருந்தேன்." ( 1 கொரிந்தியர் 2 : 2 ) என்று கூறுகின்றார். 

பொது மொழிபெயர்ப்பு வேதாகமத்தில் இந்த வசனம், "நான் உங்களிடையே இருந்தபோது மெசியாவாகிய இயேசுவைத்தவிர, அதுவும் சிலுவையில் அறையப்பட்ட அவரைத் தவிர, வேறு எதையும் அறியவேண்டும் என்று நினைக்கவில்லை." (1 கொரிந்தியர் 2:2) என்று உள்ளது. 

அதாவது, பாரம்பரியங்களோ, வம்சவரலாறுகளோ, தாங்கள் சார்ந்துள்ள சபைப் பிரிவினைக்குறித்த பெருமைகளோ பிரயோஜனமில்லாதவை. சிலுவையில் அறையப்பட்ட அவரைத்தவிர நாம் வேறு எதனையும் அறியவேண்டிய அவசியமில்லை. கிறிஸ்துவை அறியாமல் வாழ்ந்துவிட்டு வெறும் சபை பெருமையோடு இருப்பது அறிவீனமல்லவா? இறுதித் தீர்ப்புநாளில்  கிறிஸ்து நம்மிடம், "நீ எந்தச் சபையைச் சார்ந்த்தவன்? " என்று கேள்வி கேட்கப்போவதில்லை. ஆனாலும் இன்று சபைகளின் போதகர்களும் குருக்களும் இந்த அறிவில்லாமல்தான் இருக்கின்றார்கள். 

கிறிஸ்துவை அறியாத இறையியல் படிப்போ, பாரம்பரியங்களோ வீணானவை. மெசியாவாகிய இயேசுவைத்தவிர, அதுவும் சிலுவையில் அறையப்பட்ட அவரைத் தவிர, வேறு எதையும் அறியவேண்டும் என்று நாம் நினைக்கவும் வேண்டாம்.  அப்படி அறிய நினைப்பதும் அவை குறித்த தர்க்கங்களும் பெருமைகளும் சண்டைகளும் அப்பிரயோஜனமும் வீணுமாயிருக்கும். அவைகளைவிட்டு விலகுவோம். 



✉'ஆதவன்' 💚ஆகஸ்ட் 21, 2024. 💚புதன்கிழமை 💚                            வேதாகமத் தியானம் - எண்:- 1,290   

"பரலோகத்தில் உங்களுக்காக வைத்திருக்கிற நம்பிக்கையினிமித்தம், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரஞ்செலுத்தி, எப்பொழுதும் உங்களுக்காக வேண்டுதல் செய்கிறோம்." ( கொலோசெயர் 1 : 4, 5 )

இன்றைய தியான வசனம் நாம் எப்படிப்பட்ட ஊழியர்களை நமக்கு வழிகாட்டிகளாகத் தெரிந்துகொள்ளவேண்டும் என்பதற்கு ஒரு உதாரணமாக உள்ளது. 

நம்மைக்குறித்து பரலோகத்தில் ஒரு நம்பிக்கை உள்ளது. அந்த நம்பிக்கையின்படி நாம் வாழும்போது பரலோகத்தில் மகிழ்ச்சியுண்டாகின்றது. "மனந்திரும்ப அவசியமில்லாத தொண்ணூற்றொன்பது நீதிமான்களைக்குறித்துச் சந்தோஷம் உண்டாகிறதைப்பார்க்கிலும் மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்." ( லுூக்கா 15 : 7 ) என்று இயேசு கிறிஸ்துக் கூறவில்லையா?

அந்த "நம்பிக்கையினிமித்தம், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரஞ்செலுத்தி, எப்பொழுதும் உங்களுக்காக வேண்டுதல்செய்கிறோம்." என்று அப்போஸ்தலராகிய பவுல் கூறுகின்றார். 

விசுவாசிகளுக்கு என்னென்ன காரியங்கள் வேண்டும் என்று அவர் ஜெபிக்கின்றார் என்றும் கூறுகின்றார். "நீங்கள் எல்லா ஞானத்தோடும், ஆவிக்குரிய விவேகத்தோடும் அவருடைய சித்தத்தை அறிகிற அறிவினாலே நிரப்பப்படவும், சகலவித நற்கிரியைகளுமாகிய கனிகளைத் தந்து, தேவனை அறிகிற அறிவில் விருத்தியடைந்து, கர்த்தருக்குப் பிரியமுண்டாக அவருக்குப் பாத்திரராய் நடந்துகொள்ளவும், சந்தோஷத்தோடே கூடிய எல்லாப்பொறுமையும் நீடியசாந்தமும் உண்டாவதற்கு, மகிமையான அவருடைய வல்லமையின்படி, எல்லா வல்லமையாலும் பலப்படுத்தப்படவும், உங்களுக்காக வேண்டுதல் செய்கிறோம். (கொலோசெயர் 1:9-11)

ஆனால் இன்றைய பிரபல ஊழியர்களும் கன்வென்சன் பிரசங்கிகளும் டி.வி ஊழியர்களும் என்னென்ன காரியங்களுக்காக ஜெபிக்கின்றார்கள்? தங்களது விசுவாசிகளுக்கு தொழில் முன்னேற்றமடைய, சொத்து வாங்க, வீடுகட்ட, கார் வாங்கிட  இன்னும் இதுபோல என்னென்ன உலக ஆசீர்வாதங்கள் உண்டோ அனைத்துக்காகவும் ஜெபித்துக் கொண்டிருக்கின்றார்கள். மட்டுமல்ல, வேத சத்தியங்களை மறைத்துப் பிரசங்கித்து விசுவாசிகள்  பரலோகத்துக்குச் செல்லத் தடையாக இருக்கின்றனர். 

ஒவ்வொரு ஆண்டு துவக்கத்திலும் மாதத்  துவக்கத்திலும், "சென்ற ஆண்டைப்போல /மாதத்தைப்போல நீ துன்பத்தைக் காணமாட்டாய்... கர்த்தர் உன் கண்ணீர்களை பார்க்கின்றார். இந்த மாதம் / வருடம் உனக்கு ஆசீர்வாதமானது" என்கின்றார்கள். அப்படியானால் இவர்கள் சென்ற மாதம் / ஆண்டு சொன்னது பொய்யா அல்லது இப்பொது கூறுவது பொய்யா என்று மக்களும் சிந்திப்பதில்லை.  

அன்பானவர்களே, நாம் தேடவேண்டியது இப்படிப்பட்ட போலிகளையல்ல; இன்றைய வசனத்தில் அப்போஸ்தலனாகிய பவுல் வேண்டுதல்செய்ததுபோல  நமக்காக உண்மையாக வேண்டுதல் செய்யும் ஊழியர்களையே. 



✉'ஆதவன்' 💚ஆகஸ்ட் 22, 2024. 💚வியாழக்கிழமை 💚                            வேதாகமத் தியானம் - எண்:- 1,291   

"தேவனுடைய ராஜ்யம் பிரத்தியட்சமாய் வராது. இதோ, இங்கே என்றும், அதோ, அங்கே என்றும் சொல்லப்படுகிறதற்கும் ஏதுவிராது; இதோ, தேவனுடைய ராஜ்யம் உங்களுக்குள் இருக்கிறதே என்றார்." ( லுூக்கா 17 : 20, 21 )

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நமக்குள் வந்து நம்மை ஆட்சிசெய்வதே தேவனுடைய ராஜ்ஜியம். அது நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கின்றதே தவிர வெளியில் இருப்பதல்ல.  

இந்த உலகத்தில் பல சர்வாதிகாரிகள் தங்களுக்குக் கீழே ஆட்சி அதிகாரத்தை நிலைநிறுத்தி மொத்த உலகத்தையே ஆட்சிசெய்ய முயன்றனர். ஆனால் அவர்களால் அது கூடாமல்போயிற்று. ஆனால் அமைதியின் அண்ணலான இயேசு கிறிஸ்து அமைதியாக இன்று தனது ராஜ்யத்தை விசுவாசிகளின் உள்ளத்தில் நிறுவி அழியாமல் இருக்கின்றார். 

ஆம், எனவேதான் தேவனுடைய ராஜ்யத்தை எவராலும் அழிக்க முடியவில்லை. அது ஒரு குறிப்பிட்ட இடத்திலல்ல நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கின்றது. எனவேதான் இயேசு கூறினார்,  "தேவனுடைய ராஜ்யம் பிரத்தியட்சமாய் வராது. இதோ, இங்கே என்றும், அதோ, அங்கே என்றும் சொல்லப்படுகிறதற்கும் ஏதுவிராது" என்று. 

உலக அரசாங்கங்களின் ராஜ்ஜியம் உழைப்பதும் பொருள் சேர்ப்பதும் உண்பதும் குடிப்பதும் தான். ஆனால், தேவனுடைய ராஜ்ஜியம் அப்படிப்பட்டதல்ல என்கின்றார் அப்போஸ்தலரான பவுல், "தேவனுடைய ராஜ்யம் புசிப்பும் குடிப்புமல்ல, அது நீதியும் சமாதானமும் பரிசுத்த ஆவியினாலுண்டாகும் சந்தோஷமுமாயிருக்கிறது." ( ரோமர் 14 : 17 ) 

நீதியும் சமாதானமும் பரிசுத்த ஆவியினாலுண்டாகும் சந்தோஷமும் நமக்குள் இருக்கின்றது என்றால் நமக்குள் தேவனுடைய ராஜ்ஜியம் இருக்கின்றது என்று பொருள். ஆம் அன்பானவர்களே, சந்தோஷம் சமாதானம் எப்போது நமக்கு வரும்? அது நீதியுள்ள ஒரு வாழ்க்கை வாழும்போது மட்டுமே. தேவனுடைய பரிசுத்த ஆவியானவர் நமக்குள் இருந்து நம்மை நடத்துவதால் இந்த சந்தோஷமும் சமாதானமும் நமக்குக் கிடைக்கின்றது. இத்தகைய ஒரு வாழ்வே தேவனுடைய ராஜ்யத்துக்கு ஏற்ற வாழ்வு. 

தேவனுடைய ராஜ்ஜியம் நமக்குள் இருக்குமானால் நாம் பரலோக ராஜ்யத்துக்குத் தூரமானவர்கள் அல்ல. ஆவியானவருக்கு நம்மை ஒப்புக்கொடுத்து அவரது வழிநடத்துதலை வேண்டுவோம். கிறிஸ்து நமக்குள் வந்து தனது ராஜ்யத்தை நமக்குள் நிறுவிட இடம்கொடுப்போம். இதோ, தேவனுடைய ராஜ்யம் நமக்குள் தான் இருக்கின்றது. 


✉'ஆதவன்' 💚ஆகஸ்ட் 23, 2024. 💚வெள்ளிக்கிழமை 💚                            வேதாகமத் தியானம் - எண்:- 1,292 

"அவருடைய பார்வைக்கு மறைவான சிருஷ்டி ஒன்றுமில்லை; சகலமும் அவருடைய கண்களுக்கு முன்பாக நிர்வாணமாயும் வெளியரங்கமாயுமிருக்கிறது, அவருக்கே நாம் கணக்கு ஒப்புவிக்கவேண்டும்." (எபிரெயர் 4:13)

இந்த உலகத்தில் நாம் பலவேளைகளில் பலரையும் ஏமாற்றிவிடலாம். ஆனால் எல்லோரையும் எப்போதும் ஏமாற்றிவிட முடியாது என்று கூறுவார்கள். இது உண்மையான கூற்றாக இருந்தாலும் தேவனைப் பொறுத்தவரை அவரை நாம் ஒரு சின்ன காரியத்தில்கூட ஏமாற்றிடமுடியாது. 

ஒரு மனிதன் பதினைந்து ஆண்டுகளாக தனது மனைவிக்குத் தெரியாமல் இன்னொரு பெண்ணுடன் குடும்பம் நடத்திக்கொண்டிருந்தான். ஆனால் இந்த மனிதன் ஊரிலும் ஆலய காரியங்களிலும் முன்னின்று செயல்படுபவன். ஆண்டு விழாக்களிலும் இதர கூட்டங்களிலும் கலந்துகொள்ளும் அனைத்து பிரமுகர்களும் ஆயர்களும் இவனையும் இவனது பணிகளையும் பாராட்டி, "நமது ஊருக்குக் கிடைத்த பொக்கிஷம் இவர்" என்று கூறுவார்கள். 

ஆம் அன்பானவர்களே, நாம் ஒரு மனிதரது வெளிச் செயல்பாடுகளைப் பார்த்து அவர்களை மதிப்பிடுகின்றோம். ஆனால் தேவனை ஏமாற்றிட முடியாது. "அவருடைய பார்வைக்கு மறைவான சிருஷ்டி ஒன்றுமில்லை; சகலமும் அவருடைய கண்களுக்கு முன்பாக நிர்வாணமாயும் வெளியரங்கமாயுமிருக்கிறது, அவருக்கே நாம் கணக்கு ஒப்புவிக்கவேண்டும்." 

ஒரு மனிதனது வெளிச் செயல்பாடுகளையல்ல, அவனது உள்ளான மனத்தினையும் தேவன் அறிந்திருக்கின்றார். ஆதியாகமம் நூலில் காயின் ஆபேல் சரித்திரத்தை நாம் வாசித்திருக்கின்றோம். காயினது காணிக்கையினை தேவன் அங்கீகரிக்கவில்லை. காரணம், அவனது உள்ளான மனம் நேர்மையானதாக இல்லை; நன்மைசெய்யும் குணமுள்ளதாக இல்லை. எனவே காயினது காணிக்கையினை  தேவன் அங்கீகரிக்கவில்லை  இதனையே, "காயீனையும் அவன் காணிக்கையையும் அவர் அங்கிகரிக்கவில்லை." ( ஆதியாகமம் 4 : 5 ) என்று வாசிக்கின்றோம். ஆம், காயினை அங்கீகரிக்காததால் அவன் காணிக்கையினையும் அங்கீகரிக்கவில்லை. 

இதனை நாம் தொடர்ந்து வாசிக்கும்போது பார்க்கின்றோம், "அப்பொழுது கர்த்தர் காயீனை நோக்கி: உனக்கு ஏன் எரிச்சல் உண்டாயிற்று? உன் முகநாடி ஏன் வேறுபட்டது? நீ நன்மைசெய்தால் மேன்மை இல்லையோ? நீ நன்மைசெய்யாதிருந்தால் பாவம் வாசற்படியில் படுத்திருக்கும்." ( ஆதியாகமம் 4 : 6, 7 ) என்றார். காயினது எரிச்சல் அவனுக்குள்ளிருந்த கொலைகார  குணத்தை வெளிப்படுத்துகின்றது. தேவன் அதனை அறிந்திருந்தார். ஆம், அவருடைய பார்வைக்கு மறைவான சிருஷ்டி ஒன்றுமில்லை; சகலமும் அவருடைய கண்களுக்கு முன்பாக நிர்வாணமாயும் வெளியரங்கமாயுமிருக்கிறது. 

நம்மை நாம் நிதானித்துப்பார்ப்போம். தேவனுக்கு அல்லது நம்மோடு வாழும் சக மனிதர்களுக்கு உண்மையில்லாத காரியங்களை நாம் செய்துகொண்டிருப்போமானால் நாம் எவ்வளவுதான் நல்ல காரியங்களை ஆலயத்துக்கென்று செய்தாலும் தேவன் அவற்றை அங்கீகரிக்கமாட்டார். சகலமும் அவருடைய கண்களுக்கு முன்பாக நிர்வாணமாயும் வெளியரங்கமாயுமிருக்கிறது,



✉'ஆதவன்' 💚ஆகஸ்ட் 24, 2024. 💚சனிக்கிழமை 💚                            வேதாகமத் தியானம் - எண்:- 1,293 

"கர்த்தாவே, என்னைத் தண்டியும்; ஆனாலும் நான் அவமாய்ப்போகாதபடிக்கு உம்முடைய கோபத்தினாலே அல்ல, மட்டாய்த் தண்டியும்." ( எரேமியா 10 : 24 )

இன்றைய தியான வசனத்தில் எரேமியா தீர்க்கத்தரிசி தேவனுடைய தண்டனைக்குத் தன்னை ஒப்புவித்து ஜெபிக்கின்றார். "நீர் என்னைத் தாண்டியும் ஆனாலும் கடினமான தண்டனை தந்து என்னை அழிந்துவிடாமல் மட்டாய்த் தாண்டியும் என்கின்றார். 

நமது எண்ணங்கள், செயல்பாடுகள் வெற்றிபெறவேண்டுமானால் தேவனது கிருபை அவசியமாய் இருக்கின்றது. நமது வழிகள் நம்மால் ஆவதில்லை. நமது செயல்கள் அனைத்தும் நமது முயற்சியால் வெற்றிபெறுவதில்லை. அதற்கு தேவனுடைய கிருபை தேவையாய் இருக்கின்றது. இப்படி தேவனது கிருபையினைப் பெறுவதற்கு நமது பாவங்களும் தகாத செயல்பாடுகளும் தடையாக இருக்கின்றன. 

இப்படித் தனது செயல்பாடுகள் இருந்துவிடக் கூடாது அப்படி இருக்குமானால் அவற்றுக்கு மட்டான ஒரு தண்டனையினைத் தந்து எனது வழி வாய்க்கும்படிச் செய்யும் என்கின்றார் எரேமியா. இதனையே இன்றைய தியான வசனத்தின் முந்தின வசனத்தில் கூறுகின்றார்,  "கர்த்தாவே, மனுஷனுடைய வழி அவனாலே ஆகிறதல்லவென்றும், தன் நடைகளை நடத்துவது நடக்கிறவனாலே ஆகிறதல்லவென்றும் அறிவேன்." ( எரேமியா 10 : 23 )

அன்பானவர்களே, நாம் தேவனுக்கேற்ற வாழ்க்கை வாழ்ந்தும் நமக்குத் துன்பங்கள் வருமானால் நாம் சோர்ந்துபோகக்கூடாது என்று நாம் எபிரெயர் நிருபத்தில் வாசிக்கின்றோம். அத்தகைய துன்பங்கள்  "சிட்சை" அல்லது "தண்டனை"  என்று கூறப்பட்டுள்ளது. "அன்றியும்: என் மகனே, கர்த்தருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதே, அவரால் கடிந்துகொள்ளப்படும்போது சோர்ந்துபோகாதே. கர்த்தர் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனை அவர் சிட்சித்து, தாம் சேர்த்துக்கொள்ளுகிற எந்த மகனையும் தண்டிக்கிறார் என்று பிள்ளைகளுக்குச் சொல்லுகிறதுபோல உங்களுக்குச் சொல்லியிருக்கிற புத்திமதியை மறந்தீர்கள்." ( எபிரெயர் 12 : 5, 6 ) என்று வாசிக்கின்றோம். 

தகப்பன் தன்  பிள்ளையை நேசிப்பதால்தான் தண்டிக்கின்றானேத்தவிர ஒரேயடியாக அழித்துவிடவேண்டுமென்று தண்டிப்பதில்லை. "நீங்கள் சிட்சையைச் சகிக்கிறவர்களாயிருந்தால் தேவன் உங்களைப் புத்திரராக எண்ணி நடத்துகிறார்; தகப்பன் சிட்சியாத புத்திரனுண்டோ?" ( எபிரெயர் 12 : 7 )

எனவே, இன்றைய தியான வசனத்தில் எரேமியா ஜெபித்ததுபோல நாமும் ஜெபிக்கவேண்டியது அவசியமாய் இருக்கின்றது. காரணம், நம்மிடம் தேவனுக்கு ஏற்பில்லாத பல செயல்பாடுகள் உள்ளன. அத்தகைய செயல்பாடுகளுக்கு தேவ மன்னிப்பு பெறும்போது மட்டுமே நமது வழிகள், நமது திட்டங்கள் தேவ கிருபையால் வெற்றிபெறும்.  "கர்த்தாவே, என்னைத் தண்டியும்; ஆனாலும் நான் அவமாய்ப்போகாதபடிக்கு உம்முடைய கோபத்தினாலே அல்ல, மட்டாய்த் தண்டியும்." என்று வேண்டுதல் செய்து முதலில் தேவ மன்னிப்பைப் பெறுவோம்.  



✉'ஆதவன்' 💚ஆகஸ்ட் 25, 2024. 💚ஞாயிற்றுக்கிழமை 💚                            வேதாகமத் தியானம் - எண்:- 1,294 

"என்னைக்குறித்தும் என் வார்த்தைகளைக்குறித்தும் எவன் வெட்கப்படுகிறானோ, அவனைக்குறித்து மனுஷகுமாரனும் தம்முடைய மகிமையோடும் பிதாவின் மகிமையோடும் பரிசுத்த தூதர்களின் மகிமையோடும் வரும்போது வெட்கப்படுவார்."(லுூக்கா 9 : 26 )

இன்றைய தியான வசனத்தில் தன்னைக்குறித்து வெட்கப்படுதலைப்பற்றி இயேசு கிறிஸ்து கூறுவது ஒரு பெண் வெட்கப்படுவதுபோல வெட்கப்படுவதையல்ல; மாறாக, பிறர் மத்தியிலும் இக்கட்டான நேரங்களிலும் அவரது பெயரை வெளிப்படுத்தவும், அவர் கூறிய வசனங்களை குறிப்பிட்ட நேரங்களில் புறக்கணிப்பதையும்  நாம் அவரை ஏற்றுக்கொண்டுள்ளதை வெளிப்டையாகக் கூறத் தயங்குவதையும் குறிக்கின்றது. 

இன்று பல கிறிஸ்தவர்கள் இப்படியே இருக்கின்றனர். வேலைபார்க்கும் இடங்களில் அல்லது மற்ற மதத்தினரோடு ஒரே இடத்தில சேர்ந்து தங்க நேரிடும்போது தாங்கள் கிறிஸ்தவர்கள் என்பதனை வெளிப்படுத்தத் தயங்கி அவர்களைப்போன்ற செயல்பாடுகளைச் செய்வதைக் குறிக்கின்றது. 

மற்றவர்களோடு நாம் ஒற்றுமையாகவும் நண்பர்களாகவும் வாழவேண்டியது அவசியம். ஆனால், ஆவிக்குரிய காரியங்களில் நாம் நமது தனித் தன்மையினை விட்டுவிடக்கூடாது. அப்படி விட்டுவிடுவது கிறிஸ்துவைக்குறித்து வெட்கப்படுவதாகும். 

மேலும், கிறிஸ்துவைக்குறித்தும் அவரது வார்த்தைகளைக் குறித்தும் வெட்கப்படுவது என்பது அவரது வார்த்தைகளுக்குப் புறம்பான செயல்களில் ஈடுபடுவது. இன்று தங்களைக் கிறிஸ்தவர்கள் என்று கூறிக்கொள்ளும் பலரும் ஆலய வழிபாடுகளைத் தவிர மற்ற எந்த விதத்திலும் கிறிஸ்துவைப் பின்பற்றுவதில்லை. சாதாரண மனிதர்களைவிடக் கீழானவர்களாக பல வேளைகளில் செயல்படுகின்றனர்.  

கிறிஸ்துவுக்கு ஊழியம் செய்கிறேன் என்று கூறிக்கொள்ளும் பலர் கூட ஏமாற்று, லஞ்சம், கொலை, விபச்சாரம், பதுக்கல், பணம் சம்பாதிக்கக் கையாளும் பல்வேறு குறுக்கு வழிகள், சைபர் கிரைம் (cyber crime) போன்ற செயல்பாடுகளில் ஈடுபட்டு கையும் களவுமாக பிடிபடுவதை நாம் செய்தித்தாட்களில் வாசிக்கின்றோம். இவை போன்ற செயல்பாடுகள் செய்யும்போது நாம்  கிறிஸ்துவை வெட்கப்படுத்துகின்றோம்  

இப்படி "என்னைக்குறித்தும் என் வார்த்தைகளைக்குறித்தும் எவன் வெட்கப்படுகிறானோ, அவனைக்குறித்து மனுஷகுமாரனும் தம்முடைய மகிமையோடும் பிதாவின் மகிமையோடும் பரிசுத்த தூதர்களின் மகிமையோடும் வரும்போது வெட்கப்படுவார்." என்கின்றார் இயேசு கிறிஸ்து. அவர் வெட்கப்படுவார் என்பது மணப்பெண்போல வெட்கப்படுவார் என்று பொருளல்ல; இப்படிச் செய்பவர்களை அருவெறுத்து புறம்பே தள்ளுவார் என்று பொருள்.   

ஆம் அன்பானவர்களே, எனவே இதுபோல கிறிஸ்துவைக்குறித்து வெட்கபடாமலும் கிறிஸ்துவை வெட்கப்படுத்தாமலும் வாழ்வோம். அதனையே அவர் விரும்புகின்றார். 



✉'ஆதவன்' 💚ஆகஸ்ட் 26, 2024. 💚திங்கள்கிழமை 💚                            வேதாகமத் தியானம் - எண்:- 1,295 

"அவருடைய கோபம் ஒர் இமைப்பொழுதே, அவருடைய தயவோ ஆயுள் காலம் வரை; சாயங்காலத்தில் அழுகை தங்கும், விடியற்காலத்திலே களிப்புண்டாகும்." ( சங்கீதம் 30 : 5 )

மனிதர்களுடைய பலவீனம் தேவனுக்குத் தெரியும். அவர் எப்போதும் மனிதர்கள்மேல் கோபம் கொள்வதில்லை. எனவே, நமது தப்பிதங்களுக்கு அவர் தண்டனை கொடுத்தாலும் ஒரு தாய் தவறு செய்த குழந்தையை மீண்டும்  சேர்த்துக்கொள்வதுபோல அணைத்துச் சேர்த்துகொள்கின்றார். "நான் எப்போதும் வழக்காடமாட்டேன்; நான் என்றைக்கும் கோபமாயிருப்பதுமில்லை; ஏனென்றால், ஆவியும், நான் உண்டுபண்ணின ஆத்துமாக்களும், என் முகத்துக்கு முன்பாகச் சோர்ந்துபோகுமே." ( ஏசாயா 57 : 16 ) என்று கூறுகின்றார் தேவனாகிய கர்த்தர். 

இதனையே இன்றைய தியான வசனத்தில் நாம் "சாயங்காலத்தில் அழுகை தங்கும், விடியற்காலத்திலே களிப்புண்டாகும்." என்று வாசிக்கின்றோம்.  ஒரு இரவு முடிந்து பகல் விடிவதைப்போல நமது துக்கங்கள் துயரங்களை அவர் மாற்றுவார். காரணம், "அவருடைய இரக்கம் அவருக்குப் பயந்திருக்கிறவர்களுக்குத் தலைமுறை தலைமுறைக்குமுள்ளது." ( லுூக்கா 1 : 50 ) என்று கூறப்பட்டுள்ளது. அதாவது நாம் தேவனுக்கு பயப்படும் ஒரு வாழ்க்கை வாழும்போது இது சாத்தியமாகின்றது. 

இதனையே நாம் மேலும் ஏசாயா நூலில் வாசிக்கின்றோம், "அற்பகாலம் மூண்ட கோபத்தினால் என் முகத்தை இமைப்பொழுது உனக்கு மறைத்தேன்; ஆனாலும் நித்திய கிருபையுடன் உனக்கு இரங்குவேன் என்று கர்த்தராகிய உன் மீட்பர் சொல்லுகிறார்." ( ஏசாயா 54 : 8 ) ஆம் அன்பானவர்களே, "அவருடைய இரக்கங்கள் மகா பெரியது" (1 நாளாகமம் 21:13) அவரது கோபமோ அற்பகாலம்தான்.

இன்று ஒருவேளை பல்வேறு துன்பங்கள் நம்மை நெருக்கிக்கொண்டிருக்கலாம். ஆனால் அவை நிரந்தரமல்ல. தேவனுக்கு ஏற்ற வாழ்க்கை வாழ்வோமானால்  அவரது இரக்கங்கள் நமக்கு நிச்சயம் உண்டு. மனம்திரும்பிய ஒரு வாழ்க்கை வாழ விரும்புவோமானால் அவரது இரக்கம் நமக்கு நிச்சயம் உண்டு.  

இஸ்ரவேல் மக்கள் பல்வேறு முறை தேவனுக்கு எதிராக செயல்பட்டு எதிரி இராஜாக்களிடம் அடிமைகளாக ஒப்புக்கொடுக்கப்பட்டபோதும் அவர்கள் மனம் திரும்பியபோது தேவன் அவர்களை விடுவித்து இரட்சித்தார். அதுபோலவே, இன்று நமது பாவ வாழ்க்கை நமக்குப்  பல்வேறு  துன்பங்களை வாழ்வில் கொண்டு வந்திருக்கலாம். "அவருடைய கோபம் ஒர் இமைப்பொழுதே, அவருடைய தயவோ ஆயுள் காலம் வரை" என்று இன்றைய தியான வசனம் சொல்வதற்கேற்ப நாம் மனம்திரும்பும்போது நமது ஆயுள் காலம்வரை நமக்கு அவர் இரக்கம் காட்டுவார். 

தகப்பன் தன்  பிள்ளையை நேசிப்பதால்தான் தண்டிக்கின்றானேத்தவிர ஒரேயடியாக அழித்துவிடவேண்டுமென்று தண்டிப்பதில்லை. ஆம் அன்பானவர்களே, தேவனிடம் திரும்புவோம்.  அப்போது சாயங்காலத்தில் அழுகை தங்கினாலும்  விடியற்காலத்திலே நமது வாழ்வில் களிப்புண்டாகும்.



✉'ஆதவன்' 💚ஆகஸ்ட் 27, 2024. 💚செவ்வாய்க்கிழமை 💚                            வேதாகமத் தியானம் - எண்:- 1,296 

"நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை." ( புலம்பல் 3 : 22 )

எரேமியா மிகப்பெரிய தீர்க்கதரிசி, அதே வேளையில் மிகப்பெரிய துன்பங்களையும் வாழ்வில் அனுபவித்தவர். புதைகின்ற சேறு நிறைந்த கிணற்றில் போடப்பட்டு அதில்  அழுந்தி பரிதபித்தவர். ஆனால் அவர் தனது அனுபவத்தில் கண்டறிந்த உண்மை தான், "நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை." என்பது. இது வெற்று வார்த்தையல்ல. 

மட்டுமல்ல, அவர் தனது அனுபவத்தின்மூலம் துணிந்து கூறுகின்றார், "கர்த்தர் என் பங்கு என்று என் ஆத்துமா சொல்லும்; ஆகையால் அவரிடத்தில் நம்பிக்கை கொண்டிருப்பேன். தமக்குக் காத்திருக்கிறவர்களுக்கும் தம்மைத் தேடுகிற ஆத்துமாவுக்கும் கர்த்தர் நல்லவர்". ( புலம்பல் 3 : 24, 25 ) சிறிய சிறிய துன்பங்களை அனுபவித்தவர்; அவற்றிலிருந்து தேவன் அவரை விடுவித்த வல்லமையினை அனுபவித்தவர்; எனவே, பெரிய துன்பம் வந்தபோது கூறுகின்றார், "அவரிடத்தில் நம்பிக்கை கொண்டிருப்பேன்" என்று.

வேதாகமத்தில் நாம் இத்தகைய வாசகங்களை பல இடங்களில் பல பரிசுத்தவான்கள் அறிக்கையிடுவதை வாசித்திருக்கின்றோம். இத்தகைய வசனங்கள் நமக்கு நம்பிக்கையும் தேவனுக்குக் காத்திருக்கும் பெலத்தையும் அளிக்கின்றன. காரணம், இந்த உலகத்தில் நமக்கு துன்பங்களும் சோதனைகளும் உண்டு என்று இயேசு  கிறிஸ்துவே கூறியிருக்கின்றார். ஆம், "என்னிடத்தில் உங்களுக்குச் சமாதானம் உண்டாயிருக்கும்பொருட்டு இவைகளை உங்களுக்குச் சொன்னேன். உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன்." ( யோவான் 16 : 33 ) அவர் உலகத்தை ஜெயித்ததைப்போல நாமும் ஜெயிக்கவேண்டும் என்று அவர் எதிர்பார்க்கின்றார்; அதற்கான பலத்தையும் நமக்குத் தருகின்றார். 

சில ஆசீர்வாத ஊழியர்கள் பொய்யாகக்  கூறுவதுபோல, மனம்திரும்பி  இயேசு கிறிஸ்துவிடம் வந்தவுடன் அனைத்துத் துன்பங்களும் மறைந்துவிடும் என்று நாம் எண்ணிவிடக்கூடாது. ஆனால்,  ஒன்று நிச்சயம், "ஆண்டவர் என்றென்றைக்கும் கைவிடமாட்டார். அவர் சஞ்சலப்படுத்தினாலும் தமது மிகுந்த கிருபையின்படி இரங்குவார்." ( புலம்பல் 3 : 31, 32 ) இதுவே கிறிஸ்தவ நம்பிக்கை. 

ஆம் அன்பானவர்களே, நமது தேவன் கிருபை நிறைந்தவர். எனவே, "நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை." ( புலம்பல் 3 : 22 ) என்று கூறுகின்றார் எரேமியா. 

இதனை வாசிக்கும் அன்பு சகோதரனே, சகோதரியே, இன்று ஒருவேளை நீங்கள் துன்பத்தையும் பாடுகளையும் பிரச்சனைகளையும் சந்தித்துக்கொண்டிருக்கலாம். ஆனால் அவை நிரந்தரமல்ல. எந்நேரமும் கர்த்தரது கிருபையைச் சார்ந்துகொள்ளவேண்டியதே நாம் செய்யவேண்டியது. அப்படி நாம் தேவ கிருபையினைச் சார்ந்து வாழும்போது நமது பலவீனத்தில் நாம் தேவ பெலனை அனுபவிக்கமுடியும். 

"என் கிருபை உனக்குப்போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும்"   ( 2 கொரிந்தியர் 12 : 9 ) என்று அப்போஸ்தலனாகிய பவுலிடம் கிறிஸ்து கூறவில்லையா? எனவே அவர் கூறுவதுபோல, கிறிஸ்துவின் வல்லமை நம்மேல் தங்கும்படி, நம் பலவீனங்களைக்குறித்து நாம் சந்தோஷமாய் பெருமைகொள்வோம். 



✉'ஆதவன்' 💚ஆகஸ்ட் 28, 2024. 💚புதன் கிழமை 💚                            வேதாகமத் தியானம் - எண்:- 1,297 

"எங்கள் தேவனாகிய கர்த்தாவே, உம்மையல்லாமல் வேறே ஆண்டவன்மார் எங்களை ஆண்டார்கள்; இனி உம்மை மாத்திரம் சார்ந்து உம்முடைய நாமத்தைப் பிரஸ்தாபப்படுத்துவோம்." ( ஏசாயா 26 : 13 )

மனம்திரும்பாத வாழ்க்கை வாழும்போது நாம் பல்வேறு உலக பொருள்களுக்கும் பாவங்களுக்கும் அடிமைகளாக இருக்கின்றோம். அதாவது இவைகள் நம்மை ஆண்டுவருகின்றன என்று பொருள்.  அப்போது நாமும் தேவனாகிய கர்த்தரைத் தேடாமலும் அவர் நம்மை ஆட்சிசெய்ய விடாமலும் வாழ்ந்து வருகின்றோம்.  இதனையே, "எங்கள் தேவனாகிய கர்த்தாவே, உம்மையல்லாமல் வேறே ஆண்டவன்மார் எங்களை ஆண்டார்கள்" என்று இன்றைய வசனத்தில் வாசிக்கின்றோம். 

ஆனால் நாம் கிருபையால் தன்னை அறிந்துகொள்ள தேவன் கிருபை செய்தார்.  வேறு ஆண்டவன்மார்களுக்கு அடிமைகளாக வாழ்ந்த நம்மைத் தேவன் விடுவித்துத் தனக்கு அடிமைகளாக்கினார்.  

இப்படி வேறு ஆண்டவன்மார் தங்களை ஆண்டபோது இஸ்ரவேல் மக்கள் பல்வேறு துன்பங்களுக்குள்ளானதை நாம் நியாயாதிபதிகள் மற்றும், அரசர்கள் நூல்களில் வாசிக்கின்றோம். அதுபோல, அந்த மக்கள் தங்கள் பாவங்களுக்கு மனம்திரும்பி மன்னிப்பு கேட்டபோதெல்லாம் தேவன் அவர்களை மன்னித்து விடுவித்ததையும் பார்க்கின்றோம்.   "தேசத்திலே குடியிருந்த எமோரியர் முதலான சகல ஜனங்களையும் கர்த்தர் நமக்கு முன்பாகத் துரத்தினாரே; ஆகையால் நாங்களும் கர்த்தரைச் சேவிப்போம்." ( யோசுவா 24 : 18 ) என்று இஸ்ரவேல் மக்கள் அறிக்கையிட்டதையும் பார்க்கின்றோம். 

"நானும் என் வீட்டாருமோவென்றால், கர்த்தரையே சேவிப்போம் என்றான்." ( யோசுவா 24 : 15 ) என்கின்றார் யோசுவா. 

அன்பானவர்களே, இன்று நம்மை அடிமைப்படுத்த உலக அரசர்கள் வருவதில்லை. மாறாக, உலகப் பொருளாசை, புகழாசை, பதவியாசை இவையே அடிமைப்படுத்த முயல்கின்றன.  இவற்றுக்கு நாம் அடிமைகளாகின்றபோது நாம் இவை நம்மை ஆட்சிசெய்யும்படி ஒப்புக்கொடுக்கின்றோம் என்று பொருள். இப்படி இவை நம்மை ஆளவிடாமல் தேவனாகிய கர்த்தரே நம்மை ஆளும்படி ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று இன்றைய வசனம் மூலம் நாம் அறிகின்றோம்.  

ஏசாயா கூறுவதைப்போல, உம்மையல்லாமல் வேறே ஆண்டவன்மார் எங்களை ஆண்டார்கள்; இனி உம்மை மாத்திரம் சார்ந்து உம்முடைய நாமத்தைப் பிரஸ்தாபப்படுத்துவோம் என்று நம்மை நாம் முற்றிலும் தேவனுக்கு அடிமைகளாக ஒப்புக்கொடுக்க வேண்டியது அவசியம். 

இப்படி நாம் பாவங்களுக்கும் அசுத்தமான வாழ்க்கைக்கும் விலகி கிறிஸ்துவுக்கு நம்மை ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று அப்போஸ்தலராகிய பவுல் நமக்கு அறிவுரைகூறுகின்றார். ஆம், "அக்கிரமத்தை நடப்பிக்கும்படி முன்னே நீங்கள் உங்கள் அவயவங்களை அசுத்தத்திற்கும் அக்கிரமத்திற்கும் அடிமைகளாக ஒப்புக்கொடுத்ததுபோல, இப்பொழுது பரிசுத்தமானதை நடப்பிக்கும்படி உங்கள் அவயவங்களை நீதிக்கு அடிமையாக ஒப்புக்கொடுங்கள்." ( ரோமர் 6 : 19 )

இப்படி நமது உடலை நீதிக்கு அடிமையாக ஒப்புக்கொடுக்கும்போது நாம் இதுவரை நம்மை ஆண்டுவந்த வேறே ஆண்டவன்மார்களை விட்டு விலகுகின்றோம் என்று பொருள். கர்த்தர் நம்மை ஆளும்படி ஒப்புக்கொடுத்த நாம் இனி கர்த்தரையேச் சார்ந்து அவருடைய நாமத்தை மட்டுமே  பிரஸ்தாபப்படுத்துவோம்.



✉'ஆதவன்' 💚ஆகஸ்ட் 29, 2024. 💚வியாழக்கிழமை 💚                            வேதாகமத் தியானம் - எண்:- 1,298 

"இதோ, சமாதானத்துக்குப் பதிலாக மகா கசப்பு வந்திருந்தது, தேவரீரோ என் ஆத்துமாவை நேசித்து அழிவின் குழிக்கு விலக்கினீர்; என் பாவங்களையெல்லாம் உமது முதுகுக்குப் பின்னாக எறிந்துவிட்டீர்." ( ஏசாயா 38 : 17 )

தேவன் எசேக்கியா ராஜாவின் நோயைக் குணமாக்கி அவரது வாழ்நாட்களை பதினைந்து ஆண்டுகள் நீட்டிக்கொடுத்தபோது எசேக்கியா எழுதிவைத்த வார்த்தைகளே இன்றைய தியான வசனம்.  

இங்கு எசேக்கியா தனது நோய் குணமானதைவிட தேவன் தனது பாவங்களை மன்னித்ததையே முக்கியமாக கருதுகின்றார். எனவேதான் அவர் கூறுகின்றார், "தேவரீரோ என் ஆத்துமாவை நேசித்து அழிவின் குழிக்கு விலக்கினீர்; என் பாவங்களையெல்லாம் உமது முதுகுக்குப் பின்னாக எறிந்துவிட்டீர்." என்று. 

மனிதர்களுக்கும் தேவனுக்குமுள்ள முக்கிய வித்தியாச மனநிலையினை இந்த வசனத்தில் நாம் பார்க்கின்றோம். மனிதர்கள் நாம் ஒருவரை மன்னித்தாலும் அவர்கள்  நமக்கு எதிராகச் செய்த தவறையும் குற்றத்தையும் நாம் எளிதில் மறந்துவிடுவதில்லை. ஆனால் தேவன் அப்படியல்லாமல் நமது பாவங்களை மன்னிப்பதுடன் அவற்றை தனது  முதுகுக்குப் பின்னாக எறிந்து விடுகின்றார் என்று கூறப்பட்டுள்ளது. அதாவது அவற்றை அவர் திரும்பிப் பார்க்கமாட்டார். 

இன்றைய தியான வசனத்தைத் தொடர்ந்து எசேக்கியா கூறுகின்றார், இப்படிப் பாவங்களை மன்னிக்கும்  மகிமையான தேவனாக அவர் இருப்பதால் அவரது நாமத்தை நான் துதித்துக்கொண்டிருப்பேன். மட்டுமல்ல, இப்படிப் பாவ மன்னிப்பு பெற்றவன் எவனும்  தேவனுடைய இந்தச் சத்தியதைக்குறித்து தனது பிள்ளைகளுக்கும் தெரிவிப்பான் என்கின்றார்.  "பாதாளம் உம்மைத் துதியாது, மரணம் உம்மைப் போற்றாது; குழியில் இறங்குகிறவர்கள் உம்முடைய சத்தியத்தை தியானிப்பதில்லை. நான் இன்று செய்கிறதுபோல, உயிரோடிருக்கிறவன், உயிரோடிருக்கிறவனே, உம்மைத் துதிப்பான், தகப்பன் பிள்ளைகளுக்கு உமது சத்தியத்தைத் தெரிவிப்பான்." ( ஏசாயா 38 : 18, 19 )

அன்பானவர்களே, தனது உடல்நோய் நீங்கியதைவிட பாவ மன்னிப்பு பெற்றுக்கொண்டதையே மேன்மையாகக் கருதும் எசேக்கியாவைப்போல நாம் இருக்கின்றோமா?  

எசேக்கியா இப்படி பாவங்கள் மன்னிக்கப்பட்டதை மேன்மையாகக் கருத முக்கிய காரணமும் இன்றைய தியான வசனத்தில் உள்ளது. அதாவது உடல்நோய் இந்த உலகத்திலிருந்து நம்மைக் கொல்லலாம் ஆனால் பாவம் நமது ஆத்துமாவை நிரந்தரமாகக்  கொல்லும். அதனால் நித்திய நரகத்துக்கு நேராக நாம் செல்லவேண்டியிருக்கும்.  அதனையே அவர், "தேவரீரோ என் ஆத்துமாவை நேசித்து அழிவின் குழிக்கு விலக்கினீர்" என்கின்றார். 

தேவன் நமது ஆத்துமாவை அழிவின் குழிக்குத் தப்புவிக்கவே நமது பாவங்களை மன்னிக்கின்றார். அதற்காகவே பரிகார பலியாக தனது குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை நியமித்திருக்கின்றார். நமது பாவங்களை அவரிடம் அறிக்கையிடுவோம். ஆம் அன்பானவர்களே, அப்போது எசேக்கியா ராஜா குணமானதுபோல நமது உடல்நோய்களும் ஆத்தும பாவங்களும் கழுவப்படும். 



✉'ஆதவன்' 💚ஆகஸ்ட் 30, 2024. 💚வெள்ளிக்கிழமை 💚                            வேதாகமத் தியானம் - எண்:- 1,299 

"பூமியின்மேல் அக்கினியைப் போடவந்தேன், அது இப்பொழுதே பற்றி எரியவேண்டுமென்று விரும்புகிறேன்." ( லுூக்கா 12 : 49 )

இன்றைய தியான வசனத்தில் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து அக்கினி அல்லது நெருப்பு பற்றி கூறுகின்றார். இந்த நெருப்பை பூமியில் போடவே தான் வந்திருப்பதாகக் கூறுகின்றார். இயேசு கிறிஸ்து கூறும் இந்த நெருப்புதான் என்ன? அது பரிசுத்த ஆவியானவரைக் குறிக்கின்றது. நெருப்புக்குள்ள குணங்களெல்லாம் ஆவியானவருக்கு உண்டு. அந்த நெருப்பு இப்பொழுதே பற்றி எரியவேண்டுமென்று விரும்புகிறேன் என்று இயேசு கூறுகின்றார். 

ஆனால் தொடர்ந்து, "ஆகிலும் நான் முழுகவேண்டிய ஒரு ஸ்நானமுண்டு, அது முடியுமளவும் எவ்வளவோ நெருக்கப்படுகிறேன்." ( லுூக்கா 12 : 50 ) என்றும் கூறுகின்றார். அதாவது பரிசுத்த ஆவியானவரை உலகில் அனுப்ப இயேசு  விரும்புகின்றார் ஆனால் அதற்குமுன் அவர் பாடுபட்டு மகிமையடையவேண்டியது அவசியமாய் இருக்கின்றது. அதுவே பிதாவின் சித்தம். அந்தப் பாடுகளையே  அவர்,  "நான் முழுகவேண்டிய ஒரு ஸ்நானமுண்டு" என்கின்றார். 

கிறிஸ்துவின் பாடுகள் மரணம் வழியேதான் ஆவியானர் உலகிற்கு அனுப்பப்பட்டார். இதனை நாம் யோவான் நற்செய்தியில், "இயேசு இன்னும் மகிமைப்படாதிருந்தபடியினால் பரிசுத்த ஆவி இன்னும் அருளப்படவில்லை." ( யோவான் 7 : 39 ) என்று வாசிப்பதால் அறிந்துகொள்ளலாம். 

இயேசு கிறிஸ்து கூறும் இந்த அக்கினி பாவத்தைச் சுட்டெரிக்கும் அக்கினி. தேவனுக்கேற்ற வாழ்க்கை வாழ்பவர்களையும் உலகத்துக்கு ஒத்து வாழ்பவர்களையும் பிரிக்கும் அக்கினி. ஆம், ஒரே வீட்டில் வசித்தாலும் ஆவிக்குரியவர்களும் கிறிஸ்துவை அறியாத அதே வீட்டில் வசிப்பவர்களும் பல்வேறு விதங்களில் மனதளவில் பிரிந்திருப்பர். இதனையே இயேசு கிறிஸ்து, "நான் பூமியிலே சமாதானத்தை உண்டாக்கவந்தேன் என்று நினைக்கிறீர்களோ? சமாதானத்தையல்ல, பிரிவினையையே உண்டாக்கவந்தேன் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்." ( லுூக்கா 12 : 51 ) என்கின்றார். 

"எப்படியெனில், இதுமுதல் ஒரே வீட்டிலே ஐந்துபேர் பிரிந்திருப்பார்கள், இரண்டுபேருக்கு விரோதமாய் மூன்றுபேரும், மூன்றுபேருக்கு விரோதமாய் இரண்டுபேரும் பிரிந்திருப்பார்கள். தகப்பன் மகனுக்கும் மகன் தகப்பனுக்கும், தாய் மகளுக்கும் மகள் தாய்க்கும், மாமி மருமகளுக்கும் மருமகள் மாமிக்கும் விரோதமாய்ப் பிரிந்திருப்பார்கள்".  ( லுூக்கா 12 : 52, 53 )

ஆம் அன்பானவர்களே, கிறிஸ்து பூமியில் போடும் அக்கினி இப்படிப் பிரிவினையுண்டாக்கும் அக்கினி. ஆனால் இந்தப் பிரிவினை நிரந்தரமானதல்ல. ஒரு குடும்பத்தில் இருக்கும் அனைவரும் கிறிஸ்துவை அறிந்து சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ளும்போது இந்தப் பிரிவினை மறைந்துவிடும். கிறிஸ்து பூமியின்மேல் போடவந்த அக்கினியை கிறிஸ்துவை அறிவிப்பதன்மூலம் இன்று நாம் உலகத்தில் போடுகின்றோம். அந்த அக்கினி உலகினில் இப்பொழுதே பற்றி எரியவேண்டுமென்று விரும்புவோம்; செயல்படுவோம். 


✉'ஆதவன்' 💚ஆகஸ்ட் 31, 2024. 💚சனிக்கிழமை 💚                            வேதாகமத் தியானம் - எண்:- 1,300

"நாம் பாவஞ்செய்யவில்லையென்போமானால், நாம் அவரைப் பொய்யராக்குகிறவர்களாயிருப்போம், அவருடைய வார்த்தை நமக்குள் இராது." ( 1 யோவான்  1 : 10 )

ஒருமுறை பிற சமயத்தைச் சார்ந்த நண்பரொருவர் என்னிடம் பேசிக்கொண்டிருக்கும்போது, "கிறிஸ்தவர்கள்தான் பாவம் பாவம் என்று எப்போதும் கூறிக்கொண்டிருக்கிறார்கள்.... உலகத்தில் பிறந்திருக்கும் எல்லோரும் பாவம் செய்துகொண்டா இருக்கிறார்கள்? என்று கேட்டார். அவருக்கு நான் வேதாகமம் கூறும் சத்தியத்தின் அடிப்படையில் சில விளக்கங்களை அளித்தேன். 

அவரோடு பேசிக்கொண்டிருந்தபோது இந்த உலகத்தில் பலரும் கருதும் தீயசெயல்கள் மட்டுமே பாவம் எனும் எண்ணம் அவருக்கு இருப்பது புரிந்தது. ஆம் அன்பானவர்களே, இன்று கிறிஸ்தவர்கள் பலரும்கூட இவரைப்போலவே இப்படி  எண்ணிக்கொண்டிருக்கின்றனர். கொலை, களவு, விபச்சாரம், ஏமாற்று, கற்பழிப்பு போன்ற செயல்கள் மட்டுமே பாவம் என்றும் தாங்கள் இவைகளைச் செய்யாததால் பாவம் செய்யவில்லை என்றும் எண்ணிக்கொண்டிருக்கின்றனர். 

எனவேதான் இன்றைய தியான வசனம் கூறுகின்றது,    "நாம் பாவஞ்செய்யவில்லையென்போமானால், நாம் அவரைப் பொய்யராக்குகிறவர்களாயிருப்போம்". அதாவது நான் பாவம் செய்ததே இல்லை என்று ஒருவர் கூறுவாரென்றால் அவர் கடவுளைப் பொய்யராக்குகின்றார் என்று பொருள். மட்டுமல்ல அப்படிச் சொல்பவரிடம் கடவுளது  வார்த்தை இராது.

எனவேதான் வேதம் திட்டமும் தெளிவுமாகக் கூறுகின்றது, "ஒரு பாவமும் செய்யாமல், நன்மையே செய்யத்தக்க நீதிமான் பூமியிலில்லை." ( பிரசங்கி 7 : 20 ) என்று. பாவம் என்பது கொடிய பாவச்  செயல்கள் மட்டுமல்ல, தீய எண்ணங்கள், மற்றவர்களை அவமதிப்பது, அற்பமாக எண்ணுவது, பிறரது பெயரைக்கெடுப்பது,  பொறாமை, வஞ்சக  எண்ணங்கள், இவைபோன்றவைகளும்தான். மட்டுமல்ல, தேவ சித்தம் செய்யாமலும் தேவ சித்தத்துக்கு எதிராகச் செயல்படுவதும்  பாவமே. 

மேலும், இச்சைதான் மிகப்பெரிய பாவம். இதுவே பாவங்களுக்கு நேராக நம்மை இழுத்துச் செல்கின்றது. பத்துக்கட்டளையின் இறுதிக்கட்டளை, இச்சையைப்பற்றி கூறுகின்றது. அதாவது மற்றவர்களது உடைமைகளின்மேல் மனதில் ஆசைகொள்வது. இதுவும் பாவமே. இதனையே அப்போஸ்தலரான பவுல், "இச்சியாதிருப்பாயாக என்று நியாயப்பிரமாணம் சொல்லாதிருந்தால், இச்சை பாவம் என்று நான் அறியாமலிருப்பேனே." ( ரோமர் 7 : 7 ) என்கின்றார். 

"இச்சையானது கர்ப்பந்தரித்து, பாவத்தைப் பிறப்பிக்கும், பாவம் பூரணமாகும்போது, மரணத்தைப் பிறப்பிக்கும்." ( யாக்கோபு 1 : 15 ) என்று வாசிக்கின்றோம். இப்படி இருப்பதால், நாம் பாவஞ்செய்யவில்லையென்போமானால், நாம் அவரைப் பொய்யராக்குகிறவர்களாயிருப்போம், அவருடைய வார்த்தை நமக்குள் இராது.  இச்சையை வெல்லும்போதே நாம் பாவத்தையும் மேற்கொண்டு வெற்றியடைகின்றோம். தேவ ஆவியானவர் அதற்கு நமக்குத் துணைசெய்கின்றார். 

எனவே நம்மை நாமே நிதானித்துப் பார்ப்போம். நம்மில் யாரும் பரிசுத்தர் அல்ல. ஆனால் தேவன் நாம் அவரைப்போல பரிசுத்தராகவேண்டும் என்று எதிர்பார்க்கின்றார். அப்படி நாம் பாவத்தை வென்று பரிசுத்தராக நமக்கு உதவிட பரிசுத்த ஆவியானவரைத் தந்துள்ளார். எனவே, நான் பாவம் செய்யவில்லையென்றும் நாம் செய்த பாவங்களை நியாயப்படுத்தாமலும் தேவனிடம் அறிக்கையிட்டு மன்னிப்பை வேண்டுவோம். "மூடர் பாவத்தைக்குறித்துப் பரியாசம்பண்ணுகிறார்கள்." ( நீதிமொழிகள் 14 : 9 ) என்று கூறும் வசனம் நமக்கு ஓர் எச்சரிப்பு. நாம் மூடர்களாக இருக்கக்கூடாது.