உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு

 ஆதவன் 🔥 856🌻 ஜூன் 02, 2023  வெள்ளிக்கிழமை      

  

".....................சீஷருடைய மனதைத் திடப்படுத்தி, விசுவாசத்திலே நிலைத்திருக்கும்படி அவர்களுக்குப் புத்திசொல்லி, நாம் அநேக உபத்திரவங்களின் வழியாய் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்க வேண்டுமென்று சொன்னார்கள். ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 14 : 22 )

மெய்யான சுவிசேஷ அறிவிப்பு என்பது கிறிஸ்துவை முன்னிறுத்தி பிரசங்கிப்பதும், அவரைப்போல வாழ நாம் தகுதியாகவேண்டுமென்று விருப்பி சத்தியத்தைச் சொல்வதுமாகும். இயேசு கிறிஸ்துவிடம் வந்துவிட்டால் உடனேயே கார், பங்களா, மாடமாளிகை,  பொருளாதார செழிப்பு இவையெல்லாம் கிடைக்கும் என்று பிரசங்கிப்பது சாத்தானின் வஞ்சகமாகும். உபத்திரவமில்லாமல் கிறிஸ்தவ வாழ்க்கை இல்லை. கிறிஸ்து நமக்கு உலகம் கொடுக்க முடியாத சமாதானத்தை வாக்களித்தார்.அந்த சமாதானத்தைப் பெற்று மகிழ்வதே கிறிஸ்தவ வாழ்வு. அந்த சமாதானத்திற்கு பணமோ செல்வ செழிப்போ காரணமாயிருக்க முடியாது. 

"என்னிடத்தில் உங்களுக்குச் சமாதானம் உண்டாயிருக்கும்பொருட்டு இவைகளை உங்களுக்குச் சொன்னேன். உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன் என்றார்." ( யோவான் 16 : 33 ) கர்த்தராகிய இயேசு கிறிஸ்து. ஆம், உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு என்றுதான் இயேசு கிறிஸ்து கூறினார்.

இதனையே அப்போஸ்தலர்களும் பவுலும் இங்குக் கூறுகின்றார்கள் . "லீஸ்திராவுக்கும் இக்கோனியாவுக்கும் அந்தியோகியாவுக்கும் திரும்பிவந்து, சீஷருடைய மனதைத் திடப்படுத்தி, விசுவாசத்திலே நிலைத்திருக்கும்படி அவர்களுக்குப் புத்திசொல்லி, நாம் அநேக உபத்திரவங்களின் வழியாய் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்க வேண்டுமென்று சொன்னார்கள். " ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 14 : 21, 22 ) என்று வாசிக்கின்றோம். புதிதாக கிறிஸ்தவ மார்க்கத்தை ஏற்றுக்கொண்ட மக்களிடம் அப்போஸ்தலரான பவுலும் சீடர்களும் இப்படிப் போதித்தார்கள். அவர்கள் செழிப்பையோ உலக ஆசீர்வாதங்களையோ போதிக்கவில்லை. 

இன்று இப்படி புதிய கிறிஸ்தவர்களைப் பயமுறுத்தவேண்டுமென்று நான் கூறவில்லை, மாறாக, தவறான உபதேசம் கூடாது என்றுதான் வலியுறுத்துகிறேன்.  உலக ஆசீர்வாதத்துக்கும் கிறிஸ்து இயேசு அளிக்கும் இரட்சிப்பு அனுபவத்துக்கும் சம்பந்தமில்லை. உண்மையான மீட்பு அனுபவம் பெற்றவனது  எண்ணம் கிறிஸ்துவைப்பற்றியே இருக்கும். 

இன்றைய தியானத்துக்குரிய வசனம் தெளிவாகக் கூறுகின்றது, அவர்கள்  சீஷருடைய மனதைத் திடப்படுத்தி, விசுவாசத்திலே நிலைத்திருக்கும்படி அவர்களுக்குப் புத்திசொல்லி, நாம் அநேக உபத்திரவங்களின் வழியாய் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்க வேண்டுமென்று சொன்னார்கள் என்று. அதாவது எந்த இக்கட்டு, பிரச்சனைகள், பாடுகள் வந்தாலும் விசுவாசத்தில் நாம் நிலைத்திருக்கவேண்டுமென்று அவர்களுக்குப் புத்திசொன்னார்கள். 

நமது சபைகளுக்கு அதிக மக்கள் வரவேண்டுமென்பதற்காக ஆசீர்வாதங்களையே கூறிக்கொண்டு விசுவாசிகளை நரகத்தின் மக்களாக்கிவிடக் கூடாது. 

ஆம், நாம் அநேக உபத்திரவங்களின் வழியாய்த்தான்  தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்க வேண்டும்.  அந்த உபாத்திரவங்களைத் தங்கத்தக்கப் பலத்தை ஆவியானவர் தருவார்.  அவரே தொடர்ந்து நம்மை வழிநடத்தவும் செய்வார். அன்பானவர்களே, சோதனைகளை மேற்கொண்டு வாழும்போதுதான் நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து கூறியதுபோல நாமும் உலகத்தை ஜெயிக்கமுடியம். 

✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️                                                                              
தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712                                                                                                Website :- www.aathavanmonthly.blogspot.com 

Comments

அதிகமாகப் படிக்கப்பட்டச் செய்திகள்