ஆவிக்குரிய குருட்டுத்தன்மை நீங்கி வாழ.....

ஆதவன் 🔥 859🌻 ஜூன் 05, 2023  திங்கள்கிழமை

"அந்தப் பட்டணத்தார் மனோவாஞ்சையாய் வசனத்தை ஏற்றுக்கொண்டு, காரியங்கள் இப்படியிருக்கிறதா என்று தினந்தோறும் வேதவாக்கியங்களை ஆராய்ந்து பார்த்ததினால், தெசலோனிக்கேயில் உள்ளவர்களைப் பார்க்கிலும் நற்குணசாலிகளாயிருந்தார்கள்." ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 17 : 11 )


பொதுவாக இன்றைய நாட்களில் ஆலயங்களில் பிரசங்கத்தைக் கவனித்துக் கேட்பவர்கள் மிகக் குறைவு. கடமைக்காக ஆராதனையில் விசுவாசிகள் கலந்துகொள்கின்றனரேத் தவிர அங்கு சொல்லப்படும் பிரசங்கங்களைப்  பெரும்பாலும் கவனித்துக் கேட்பதில்லை. அதுபோலவே  பல போதகர்களும், குருக்களும் கடமைக்காக பிரசங்கம் என்று ஏதோ கூறி மக்களை வழிநடத்துகின்றனர். இதனால் பிரசங்கத்தை மக்களும் ஆர்வமாய்க் கேட்பதில்லை. அது மக்கள் தூங்குவதற்கான நேரமாக பல வேளைகளில் மாறிவிடுகின்றது.

வழிபாடுகளைவிட தேவனது வார்த்தைகள் முக்கியமானவை. தேவ வார்த்தைகள்தான் நம்மை வழிநடத்த முடியுமேத்தவிர வழிபாடுகளல்ல. ஆனால், இன்று யாரோ எழுதிய பிரசங்கக் குறிப்பேடுகளை வாங்கிவைத்து அதன் அடிப்படையில்தான் பலரும் பிரசங்கிக்கின்றனர். ஆவியானவரின் வழிநடத்துதலின்படி அவர்கொடுக்கும் செய்தியைப் பெற்று போதிப்பவனே தேவ செய்தியைக் கொடுக்க முடியும். ஆனால் இத்தகைய அனுபவமுள்ள ஊழியர்கள் இன்று மிகக் குறைவு.  

பேரேயா நகரத்து மக்களைப்பற்றி இன்றைய வசனம் நமக்கு எடுத்துக் கூறுகின்றது.  பவுல் பிரசங்கித்ததை அந்த மக்கள் மன ஆசையுடன் கேட்டனர்; ஏற்றுக்கொண்டனர். மட்டுமல்ல, "காரியங்கள் இப்படியிருக்கிறதா என்று தினந்தோறும் வேதவாக்கியங்களை ஆராய்ந்து பார்த்தார்கள்" என்று கூறப்பட்டுள்ளது. அதாவது பிரசங்கத்தைக் கேட்டு பிரசங்கம் செய்தவர் சொன்ன  கருத்துக்கள்  சரிதானா என்று தினம்தோறும் ஆராய்ந்து பார்த்தார்கள்.

இந்த குணம் நமக்கு இருக்கின்றதா என்று எண்ணிப்பார்ப்போம். பெரும்பாலும் மக்களிடம் இந்த குணம் இல்லாததால் இன்று பல ஊழியர்கள் வேதத்துக்கு முரணான போதனைகளைத் துணிந்து மக்களுக்குக் கொடுக்கின்றனர். "சொன்னவன் சொன்னான்; கேட்டவனுக்கு மதி எங்கே போனது?" என்பார்கள் பெரியவர்கள். அதுபோல பல கிறிஸ்தவர்களும் மதியற்றவர்களாக இருக்கின்றனர். அவர் ஏதாவது சொல்லிவிட்டுப் போகட்டும்,  நாம் தூங்குவோம் எனும் நிலைமையில் இருக்கின்றனர்.  

அன்பானவர்களே, "ஆதவன்" தினசரி தியானங்களில் நான் எழுதுவதையெல்லாம் நீங்கள் ஏற்றுக்கொள்ளவேண்டுமென்று நான் கூறுவதில்லை; எண்ணுவதுமில்லை. பேரேயா மக்களைப்போல நான் எழுதும் செய்திகள் வேதத்துக்கு ஏற்புடையதுதானா? என்று ஒப்பிட்டுப்பாருங்கள். நான் கூறுவது வேதாகமத்துக்கு முரணானதாக இருந்தால் எடுத்துக்கூறுங்கள் திருத்திக்கொள்வேன். 

இன்றைய தியான வசனம் கூறுகின்றது, இப்படி பேரேயா மக்கள் ஆராய்ந்து பார்த்ததனால் தெசலோனிக்கேயில் உள்ளவர்களைப் பார்க்கிலும் நற்குணசாலிகளாயிருந்தார்கள். ஆம், வேத ஆராய்ச்சி நம்மை நற்குணசாலிகளாக மாற்றும். தவறான போதனைகள், தவறான ஊழியர்களை அடையாளம்காட்டும்.  

ஆவிக்குரிய வாழ்வில் வளர்ச்சி வேண்டுமென்றால் நாம் நல்ல ஊழியர்களது செய்திகளைக் கேட்கவேண்டும்; வாசிக்கவேண்டும். அவர்கள் கூறுவதை கேட்பதுமட்டுமல்ல, அவை உண்மைதானா? சரியானதுதானா? என்று வேதத்தின் அடிப்படையில் சோதித்துப்பார்க்கவேண்டும். இப்படிச்செய்யும்போதுதான்  நாம் ஆவிக்குரிய குருட்டுத்தன்மை நீங்கி  தெளிவுள்ள உண்மையான நற்குணமுள்ள கிறிஸ்தவர்களாக வாழ முடியும்.    

✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️                                                                              
தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712                                                                                                Website :- www.aathavanmonthly.blogspot.com 

Comments

அதிகமாகப் படிக்கப்பட்டச் செய்திகள்