தடைகளை நீக்கிப்போடுகிறவர்

ஆதவன் 🔥 886🌻 ஜூலை 02, 2023 ஞாயிற்றுக்கிழமை

"தடைகளை நீக்கிப்போடுகிறவர் அவர்களுக்கு முன்பாக நடந்துபோகிறார்; அவர்கள் தடைகளை நீக்கி, வாசலால் உட்பிரவேசித்துக் கடந்துபோவார்கள்; அவர்கள் ராஜா அவர்களுக்கு முன்பாகப் போவார், கர்த்தர் அவர்கள் முன்னணியில் நடந்துபோவார்." ( மீகா 2 : 13 )


இன்றைய தியானத்துக்குரிய வசனத்தில் நமது தேவனுக்கு "தடைகளை நீக்கிப்போடுகிறவர்" எனும் பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. ஆம், நமது வாழ்வில் வரும் எந்தத் தடையையும் அவர் நீக்கிப்போட வல்லவராய் இருக்கிறார். 

இஸ்ரவேல் மக்களை மோசே எகிப்திலிருந்து விடுவிக்க பார்வோன் பல முறை தடை செய்தான். அவனது கரத்திலிருந்து அவர்களை விடுவித்து கர்த்தர் வழி நடத்தினார். கானானை நோக்கிய அவர்களது பயணத்தில் முதலில் வந்தத் தடை செங்கடல். ஆனால் அதனைக் கால் நனையாமல் அவர்களை தேவன் கடைக்கச் செய்தார். தடையாய் நின்ற எரிகோவின் மதில்கள் துதியினால் இடிந்து விழுந்தன. அவர்களுக்கு எதிர்த்துவந்த வல்லமைமிக்க பல அரசர்கள் அழிந்துபோயினர். ஆம், நமது தேவன் தடைகளை நீக்கிப்போடுகிறவர்.  

அப்போஸ்தலர்களது வாழ்விலும் தேவன் இப்படித் தடைகளை நீக்கிப்போடுவதைப்  பார்க்கின்றோம். பேதுருவை சிறைச்சாலை அடைத்துவைக்க முடியவில்லை. பவுலையும் சீலாவையம் சிறைச்சாலையின் தொழுமரம்  தொடர்ந்து கட்டிவைக்க முடியவில்லை. அப்போஸ்தலர்களின் ஊழியத்தில் வந்த பல்வேறு இடர்கள்,  தடைகளை நீக்கிப்போடும் கர்த்தரால் தகர்ந்தன. அதே கர்த்தர் மாறாதவராக இன்றும் இருக்கிறார்.

அன்பானவர்களே, நமது வாழ்வில் வரும் துன்பங்கள், பிரச்சனைகள் இவைகளைக்கண்டு நாம் தயங்கி ஆவிக்குரிய வாழ்வில் தோல்வியடைந்திடக் கூடாது. நமது தேவன் வல்லமைமிக்கப் பராக்கிரமசாலியாக நம்மோடு இருக்கிறார். நமது வாழ்வில் வரும் எந்தத் தடையையும் தகர்த்துப்போட வல்லவர் அவர். 

இன்றைய தியானத்துக்குரிய வசனம் மிகத் தெளிவாகக் கூறுகிறது, தடைகளை நீக்கிப்போடுகிறவர் அவர்களுக்கு முன்பாக நடந்துபோகிறார்; அவர்கள் தடைகளை நீக்கி, வாசலால் உட்பிரவேசித்துக் கடந்துபோவார்கள்; அவர்கள் ராஜா அவர்களுக்கு முன்பாகப் போவார், கர்த்தர் அவர்கள் முன்னணியில் நடந்துபோவார் என்று. நமக்குமுன் கர்த்தர் செல்கிறார் எனும் விசுவாசத்தோடு பயணத்தைக் தொடர்வோம்.

நமது தேவன் தனது பிள்ளைகளாகிய நம்மை ஒரு ராஜாபோல நடத்துகின்றார். நமது நாட்டின் பிரதமரோ, முதல்வரோ வருகிறார்களென்றால் முதலில் அவர்கள் வரும் சாலைகளிலுள்ள குண்டு குழிகள், தடைகள் அகற்றப்பட்டு அவர்கள் பயணம் செய்ய லெகுவாக்கப்படும். நமது கர்த்தர் நம்மை ராஜாபோல நடத்துவதால் நமக்குமுன் சென்று நமது பயணப் பாதையிலுள்ள தடைகளைச் சரிசெய்து நமக்குமுன் ஒரு பாதுகாவலர்போல நடந்து செல்கிறார். இதுவே கிறிஸ்துவின் அன்பு. 

எனவே அன்பானவர்களே, நாம் எதனையும் கண்டு பயப்படத் தேவையில்லை. நமது  ராஜா நமக்கு  முன்பாகப் போகிறார். அந்த விசுவாசத்தோடு அவரைப் பின்தொடர்வோம்.

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712                                                         

Comments

அதிகமாகப் படிக்கப்பட்டச் செய்திகள்