DAILY MEDITATION ON WHATSAPP

ஆதவன் தினசரி வேதாகமத் தியானத்தை வாட்சப் இல் பெறுவதற்கு 96889 33712 அல்லது 76390 22747 எண்களில் தொடர்பு கொள்ளவும் / To get daily Scripture Meditation on WhatsApp kindly contact 9688933712 or 7639022747

Thursday, June 15, 2023

எப்சிபா , பியூலா

ஆதவன் 🔥 871🌻 ஜூன் 17, 2023 சனிக்கிழமை

"நீ இனிக் கைவிடப்பட்டவள் என்னப்படாமலும், உன் தேசம் இனிப்பாழான தேசமென்னப்படாமலும், நீ எப்சிபா என்றும், உன் தேசம் பியூலா என்றும் சொல்லப்படும்; கர்த்தர் உன்மேல் பிரியமாயிருக்கிறார்; உன் தேசம் வாழ்க்கைப்படும்." ( ஏசாயா 62 : 4 )

அன்பானவர்களே, ஒருவேளை இதுவரை நாம் நமது வாழ்க்கையில் நமக்கு உண்மையாக உதவிபுரிவதற்கு யாருமில்லாத  கைவிடப்பட்ட பெண் போல இருந்திருக்கலாம். எனக்கு உதவிட இந்த உலகினில்  யார் இருக்கின்றார்? என எண்ணிக் கலங்கியிருக்கலாம். கலங்கிடவேண்டாம்; இப்போது ஏற்றத்  துணையாளன் கிடைத்துவிட்டார். எனவே நாம் கைவிடப்பட்டவர்களல்ல.  அதுபோல  நமது குடியிருப்பு (வாழ்க்கை) பாழானதாக, இனி நமக்கு ஒரு நல்ல வாழ்வு உண்டுமா? என ஏங்கவைப்பதாக இருந்திருக்கலாம். கவலைவேண்டாம், இனி அப்படியல்ல,செழிப்பான வாழ்க்கை நமக்கு அமையப்போகின்றது. 

கர்த்தருக்குள் மனம்திரும்பிய ஒரு வாழ்க்கை வாழும்போது கர்த்தர் தரும் மேலான இந்த ஆசீர்வாதத்தையே  இன்றைய வசனம் விளக்குகின்றது. 

"நீ எப்சிபா என்றும், உன் தேசம் பியூலா என்றும் சொல்லப்படும்; கர்த்தர் உன்மேல் பிரியமாயிருக்கிறார்; உன் தேசம் வாழ்க்கைப்படும்." என்று இன்றைய வசனம் தொடர்ந்து சொல்கின்றது. எப்சிபா என்பதற்கு, "அவளில் நான் மகிழ்ச்சியடைகின்றேன்" என்றும் பியூலா என்பதற்கு, "மணமுடித்தவள்" என்றும் பொருள்.

அதாவது, ஒரு மணமகன் மணமகளிடம் மகிழ்சியாய் இருப்பதுபோல கர்த்தர் நம்மேல் மகிழ்ச்சியாய் இருக்கிறார்; அவரே நம்மை மணமுடித்துள்ளார்  என்று பொருள். எனவே நாம் இனி கைவிடப்பட்டவர்களல்ல; கர்த்தரே நம்மை மணமுடித்துள்ளதால் நமது வாழ்க்கை இனி வறண்ட வாழ்க்கையல்ல; செழிப்பான ஒரு வாழ்க்கை. 

அன்பானவர்களே, நமக்கு எவ்வளவு செல்வம், சொத்துக்கள் இருந்தாலும் கிறிஸ்து இல்லாவிட்டால் நமது வாழ்க்கை கைவிடப்பட்ட வாழ்க்கைதான்; வறண்ட வாழ்கைதான். காரணம், நமது செல்வங்களும் சொத்துசுகங்களும் எப்போதும்  நமக்கு உதவிக்கு வராது. கோடி கோடியாக சொத்துச் சேர்த்துள்ள பலர் மன அமைதியின்றி தற்கொலை செய்வதை நாம் பலவேளைகளில் செய்திகளில் பார்க்கின்றோம். காரணம் வெளிப்பார்வைக்கு அழகுறத்தோன்றும் அவர்களது வாழ்க்கை உண்மையில் கைவிடப்பட்ட, பாழான வாழ்க்கை. 

எனவேதான் நாம் கர்த்தரோடு இணைத்து வாழவேண்டியது அவசியமாய் இருக்கின்றது. 

"நானே திராட்சச்செடி, நீங்கள் கொடிகள். ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான்; என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது. ஒருவன் என்னில் நிலைத்திராவிட்டால், வெளியே எறியுண்ட கொடியைப்போல அவன் எறியுண்டு உலர்ந்துபோவான்" ( யோவான் 15 : 5, 6 ) என்று இயேசு கிறிஸ்துக் கூறவில்லையா? 

எனவே கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவோடு நம்மை இணைத்துக்கொண்டு அவருக்கேற்ற வாழ்க்கை வாழ்வோம். அப்போது, இன்றைய வசனம் கூறுவதுபோல, நாம் இனிக் கைவிடப்பட்டவர்கள் எனப்படாமலும், நமது வாழ்க்கை இனிப் பாழான வாழ்க்கை என்று சொல்லப்படாமலும்  இருக்கும். நம்மில் அவர் மகிழ்ச்சியாயிருப்பார்; நம்மை அவர் மெய்யான மணமகளாக சேர்த்துக்கொண்டு நம்மேல் பிரியமாக இருப்பார். 

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712                                                                                                Website :- www.aathavanmonthly.blogspot.com 

No comments: