பராக்கிரமசாலியே கர்த்தர் உன்னோடே இருக்கிறார்

ஆதவன் 🔥 885🌻 ஜூலை 01, 2023 சனிக்கிழமை

"கர்த்தருடைய தூதனானவர் அவனுக்குத் தரிசனமாகி: பராக்கிரமசாலியே கர்த்தர் உன்னோடே இருக்கிறார் என்றார்." ( நியாயாதிபதிகள் 6 : 12 )

அன்பானவர்களே, மனிதர்களால் பிடிக்கப்பட்டுக் கட்டி வைக்கப்பட்டிருக்கும்  யானைக்குத் தனது பலம் தெரியாது என்பார்கள்.  எனவே அது தன்னைவிட பலமடங்கு பலம் குறைந்த பாகனுக்குக் கீழ்ப்படிந்து அவன் சொல்படி கேட்கின்றது. தன்னைக் கட்டி வைத்திருக்கும் சிறிய சங்கிலியை அதன் பலத்தால் அறுத்துவிட அதனால் முடியும். ஆனால் அது அப்படிச் செய்வதில்லை. காரணம் தனது  சுய பலம் அதற்குத் தெரியாது. 

இதுபோலவே பலவேளைகளில் ஆவிக்குரிய நாமும் இருக்கின்றோம். நம்மோடு கர்த்தர் இருப்பதும் அவரால் நம்மை விடுவிக்கவும், எந்தச் சூழ்நிலையினையும் நாம் கடந்துவரச் செய்யவும்  முடியும் என்பதையும்  பல வேளைகளில் நாம் உணருவதில்லை.  எனவே நாம் சலித்துக்கொள்கின்றோம். "என்ன ஆண்டவர்........நம்ம  தலையில ஆண்டவன் இப்படி எழுதிவிட்டான்; அநுபவிச்சுதான் தீரணும்..." என எண்ணிக்கொள்கின்றோம். 

இதுபோலவே கிதியோனும் இருந்தான்.  கர்த்தருடைய தூதன் பராக்கிரமசாலியே என்று கூறியதும் கிதியோன், "ஆ என் ஆண்டவனே, கர்த்தர் எங்களோடே இருந்தால், இவையெல்லாம் எங்களுக்கு நேரிடுவானேன்? கர்த்தர் எங்களை எகிப்திலிருந்து கொண்டுவரவில்லையா என்று எங்கள் பிதாக்கள் எங்களுக்கு விவரித்துச்சொன்ன அவருடைய அற்புதங்களெல்லாம் எங்கே? இப்பொழுது கர்த்தர் எங்களைக் கைவிட்டு, மீதியானியர் கையில் எங்களை ஒப்புக்கொடுத்தாரே என்றான்." ( நியாயாதிபதிகள் 6 : 13 )

அதனால் ஆண்டவர் அவனைத் திடப்படுத்தினார். "உனக்கு இருக்கிற இந்தப் பலத்தோடே போ; நீ இஸ்ரவேலை மீதியானியரின் கைக்கு நீங்கலாக்கி இரட்சிப்பாய்; உன்னை அனுப்புகிறவர் நான் அல்லவா என்றார்." ( நியாயாதிபதிகள் 6 : 14 ) ஆம் அன்பானவர்களே, நாம் மிகப்பெரிய தீர்க்கதரிசியாகவோ, வல்லமைமிக்க ஊழியனாகவோ, புகழ்பெற்றவராகவோ இருக்கவேண்டியது அவசியமில்லை. நமக்கு இருக்கின்ற ஆவிக்குரிய  பலம் போதும். காரணம் நம் ஒவ்வொருவரது நிலையினையும் தேவன் அறிவார்; நமக்கு உதவுவார்.

ஆனால் அதற்கு, முதலில் நமக்குக்   கிதியோனைப்போல ஒரு தாழ்மையான இருதயம் தேவை. கிதியோனது தாழ்மையான உள்ளத்தை தேவன் அறிந்திருந்ததால்தான் அவனோடு இருந்தார். "தேவன் தாழ்மையுள்ளவர்களுக்குக் கிருபையளிக்கிறார்" என்று வேதம் கூறவில்லையா? கிதியோனின் இந்த தாழ்ந்த இருதயம் அவனது பதிலில் தெரிகின்றது.  "அவன்: ஆ என் ஆண்டவரே, நான் இஸ்ரவேலை எதினாலே இரட்சிப்பேன்; இதோ, மனாசேயில் என் குடும்பம் மிகவும் எளியது; என் தகப்பன் வீட்டில் நான் எல்லாரிலும் சிறியவன் என்றான்." ( நியாயாதிபதிகள் 6 : 15 ) எனது குடும்பமும் நானும் மிக எளிமையானவர்கள் என்று தன்னைத் தாழ்த்துகின்றான் கிதியோன். 

"அதற்குக் கர்த்தர்: நான் உன்னோடேகூட இருப்பேன்; ஒரே மனுஷனை முறிய அடிப்பதுபோல நீ மீதியானியரை முறியடிப்பாய் என்றார்." ( நியாயாதிபதிகள் 6 : 16 )

இப்படியே அப்போஸ்தலரான பவுல் அடிகள் கிறிஸ்துவோடுள்ள நெருக்கத்தினால் நம்பிக்கைகொண்டு விசுவாசத்தோடு கூறுகின்றார்,  "என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு."( பிலிப்பியர் 4 : 13 )

ஆம் அன்பானவர்களே, கிதியோனைப்போல ஒரு தாழ்மையான உள்ளமும் அப்போஸ்தலரான பவுலைப்போல ஒரு விசுவாசமுள்ளத் தூய்மையான வாழ்வும் நமக்கு மிகமிகத்தேவை. அப்படி இருப்போமானால் கிதியோனிடமிருந்தும் பவுலிடமிருந்தும் அவர்களைப் பலப்படுத்தியதுபோல நம்மையும் பலப்படுத்திப் பயன்படுத்துவார். கர்த்தர் நம்மைப்பார்த்தும், "பராக்கிரமசாலியே நான் உன்னோடே இருக்கிறேன்"  என்பார்.

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712                                                                                               

Comments

அதிகமாகப் படிக்கப்பட்டச் செய்திகள்