கிரயத்துக்குக் (விலைக்கு) கொள்ளப்பட்டீர்களே....!

ஆதவன் 🔥 863🌻 ஜூன் 09, 2023  வெள்ளிக்கிழமை


"கிறிஸ்துவினுடையவர்கள் தங்கள் மாம்சத்தையும் அதன் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைந்திருக்கிறார்கள்." ( கலாத்தியர் 5 : 24 )

கிறிஸ்து இயேசு மூலம் பாவங்கள் மன்னிக்கப்பட்ட நிச்சயத்தைப் பெற்றவர்களது மன நிலையினை இன்றைய வசனம் விளக்குகின்றது. நாம் நமது பாவங்கள் கிறிஸ்து இயேசுவின் இரத்தத்தால் கழுவப்பட்டு மீட்பு அனுபவம் பெறும்போது அவருடையவர்கள் ஆகின்றோம். அதாவது, அப்போது அவர் நம்மை தனது இரத்தத்தால் விலைகொடுத்து வாங்கிவிடுகின்றார் என்று பொருள்.  

இதனை அப்போஸ்தலரான பவுல் அடிகள், "கிரயத்துக்குக் (விலைக்கு)  கொள்ளப்பட்டீர்களே; ஆகையால் தேவனுக்கு உடையவைகளாகிய உங்கள் சரீரத்தினாலும் உங்கள் ஆவியினாலும் தேவனை மகிமைப்படுத்துங்கள்." ( 1 கொரிந்தியர் 6 : 20 ) என்று கூறுகின்றார். எனவே நாம் கிறிஸ்துவினுடையவர்கள். இப்படி கிறித்துவினுடையவர்களான நாம் நமது உடலையும் அதன் ஆசைகளையும் கொன்றவர்கள் ஆகின்றோம். அதாவது, கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டதுபோல நமது உடலையும் அதன் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைந்துவிட்டோம். 

நாம் உண்மையாகவே ஆவிக்குரிய வாழ்வு வாழ்கின்றவர்களென்றால் மற்றவர்களிடமிருந்து நம்மைப் பிரித்துக் காட்டுவது இந்தக் குணம்தான். நமது உலக ஆசைகள் குறையும், உடலின் இச்சைகள் மறையும். இப்படி நான் ஒருமுறை ஒரு நண்பரிடம் கூறியபோது அவர் அப்படியானால் ஆவிக்குரிய சபைப் போதகர்கள் ஏன் விபச்சாரப் பாவத்திலும், பெண்கள் சம்பந்தமான வழக்குகளிலும்,  பண ஏமாற்று வேலைகளில் ஈடுபட்டு போலீஸ் விசாரணையிலும் சிக்கியுள்ளனர்? என்று என்னிடம் கேட்டார். 

அன்பானவர்களே ஆவிக்குரியவர்கள் என்று கூறிக்கொள்ளும் எல்லோரும் ஆவிக்குரியவர்கள் அல்ல. அவர்கள் கிறிஸ்துவின் மீட்பு அனுபவம் பெறாமலே கிறிஸ்துவுக்கு ஊழியம் செய்கிறேன் என்று கூறிக்கொள்பவர்கள். இதுவே கிறிஸ்தவத்தையும் ஆவிக்குரிய மேலான நிலையினையும் கிறிஸ்தவர்களே அறியமுடியாமல் போகக் காரணம். பிரபல ஊழியர்களும்கூட இப்படி இருப்பதால் கிறிஸ்துவை அறியாத பிற மதத்தினர் கூட கிறிஸ்துவை அறியமுடியவில்லை.

இதனையே அப்போஸ்தலரான பவுல் அடிகள்,  "அவர்கள் ஆபிரகாமின் சந்ததியாரானாலும் எல்லாரும் பிள்ளைகளல்லவே; ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்கும் என்று சொல்லியிருக்கிறதே. அதெப்படியென்றால், மாம்சத்தின்படி பிள்ளைகளானவர்கள் தேவனுடைய பிள்ளைகளல்ல, வாக்குத்தத்தத்தின்படி பிள்ளைகளானவர்களே அந்தச் சந்ததி என்றெண்ணப்படுகிறார்கள்."( ரோமர் 9 : 7,8 ) என்று கூறுகின்றார். அதாவது, இத்தகையவர்கள் தங்களை தேவனுடைய பிள்ளைகள், ஆவிக்குரியவர்கள்  என்று கூறிக்கொள்கின்றனர்.  (அதாவது பெயரளவில் கிறிஸ்தவர்கள்) ஆனால், இத்தகையவர்கள் தேவனுடைய பிள்ளைகளல்ல என அப்போஸ்தலரான பவுல் அடிகள் இந்த வசனத்தில் தெளிவாக விளக்கியுள்ளார்.

"நாம் ஆவியினாலே பிழைத்திருந்தால், ஆவிக்கேற்றபடி நடக்கவும்கடவோம்." ( கலாத்தியர் 5 : 25 ) என்று பவுல் அடிகள் கூறுவதுபோல நாம் ஆவிக்குரிய வாழ்வில் பிழைத்திருப்போமென்றால் ஆவிக்கேற்றபடி நடப்போம். 

அன்பானவர்களே, நாம் மற்றவர்களையும் ஊழியர்களையும் பார்க்கவேண்டிய அவசியமில்லை. தேவனது வார்த்தைகளைக் கவனிப்போம், அந்த வார்த்தைகள் நம்மில் செயல்பட இடம்கொடுப்போம். கிறிஸ்துவினுடையவர்களாக நாம் வாழும்போது நமது மாம்சத்தையும் அதன் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைந்திருக்கிறவர்களாக நாம் மாறுவோம். மற்றவர்களுக்கும் சாட்சியாக விளங்குவோம்.  அத்தகைய வாழ்வு வாழ நமக்கு உதவுபவரே பரிசுத்த ஆவியானவர். வசனத்தை விசுவாசிக்கும்போது நம்மில் மாற்றங்கள் ஏற்படுவதை நாம் உணர்ந்துகொள்ளலாம்.

✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️                                                                              
தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712                                                                                                Website :- www.aathavanmonthly.blogspot.com 

Comments

அதிகமாகப் படிக்கப்பட்டச் செய்திகள்