கர்த்தரது முகத்தைத் தேடுபவர்களாக வாழ்வோம்.

ஆதவன் 🔥 860🌻 ஜூன் 06, 2023  செவ்வாய்க்கிழமை


"ஆளுகை செய்கிறவனுடைய முகதரிசனத்தைத் தேடுகிறவர்கள் அநேகர்; ஆனாலும் அவனவனுடைய நியாயம் கர்த்தராலே தீரும்."( நீதிமொழிகள் 29 : 26 )

மனிதர்கள் பெரும்பாலும் இந்த உலகத்து அதிகாரங்களையே பெரிதாக எண்ணி வாழ்கின்றனர். சாதாரண வார்டு கவுன்சிலர் தங்களது உறவினராகவோ தெரிந்தவராகவோ இருந்துவிட்டால்போதும் சிலரை பிடித்து நிறுத்த முடியாது. இந்த மொத்த நாடே அவர்கள் கையில் இருப்பதாக எண்ணிக்கொள்கின்றனர். இன்றைய வசனம் கர்த்தரை நம்புவதைவிட்டு விட்டு  அதிகார பலத்தில் இருப்பவர்களை நம்பி நாம் செயல்படுவது கர்த்தரது பார்வையில் ஏற்புடையதல்ல என்பதை விளக்குகின்றது.

ஆட்சி செய்பவர்களது முகத்தைப் பார்த்துவிடவேண்டும் என எண்ணும் மக்கள் இரு பிரிவாக இருக்கின்றனர். ஒரு சிலர் நமது தலைவரைப் பார்த்துவிடவேண்டுமென எண்ணுபவர்கள்.  முதலமைச்சரோ பிரதமரோ வரும்போது பலர் சென்று கூடுவது அவர்களைப் பார்த்துவிடவேண்டும் எனும் ஆர்வத்தில்தான்.  ஆனால் பலர் ஆட்சி செய்கிறவருடைய  முகதரிசனத்தை ஏதாவது சலுகையோ உதவியையோ பெறுவதற்குத்   தேடுகிறவர்கள்.  மாவட்ட ஆட்சியாளர், முதல்வர், பிரதமர் இவர்களைச் சந்தித்துத் தங்கள் தேவையைப் பூர்த்திச் செய்திட பல்வேறு முறைகளில் சிபாரிசுகளை நாடுகின்றனர். 

இன்றைய வசனம் கூறுகின்றது, ஆனாலும் அவனவனுடைய நியாயம் கர்த்தராலே தீரும் என்று. அதாவது எப்படி முயற்சி செய்தாலும் கர்த்தர் நினைப்பதே முடிவில் நமது வாழ்வில் சாத்தியமாகிடும். எனவே அன்பானவர்களே, அதிகாரத்திலுள்ளவர்களது முகத்தை எதிர்பார்த்து வாழ்வதைவிட, கர்த்தரையே நம்பி அவர்மேல் பற்றுதலாய் இருப்பதே நலம்.

"மனுஷனை நம்புவதைப்பார்க்கிலும், கர்த்தர் பேரில் பற்றுதலாயிருப்பதே நலம். பிரபுக்களை நம்புவதைப்பார்க்கிலும் கர்த்தர் பேரில் பற்றுதலாயிருப்பதே நலம்." ( சங்கீதம் 118 : 8, 9 )

தாவீது ஆடு மேய்க்கும் சிறுவனாக இருந்தபோதும் ராஜாவாக ஆனபின்பும் கர்த்தரையே நோக்கிப் பார்ப்பவராக இருந்தார். அதில் அவர் உறுதியாக இருந்தார். எனவேதான் அவர் கூறுகின்றார், "என் முகத்தைத் தேடுங்கள் என்று சொன்னீரே, உம்முடைய முகத்தையே தேடுவேன் கர்த்தாவே, என்று என் இருதயம் உம்மிடத்தில் சொல்லிற்று." ( சங்கீதம் 27 : 8 )
 
ஆளுகை செய்கிறவர்களுடைய முகதரிசனத்தைத் தேடுகிறவர்களாக வாழாமல் கர்த்தரது முகத்தரிசனத்தைத் தேடுபவர்களாக வாழ்வோம். அப்போது நமது வாழ்வில் கர்த்தர் நமது தேவைகளைச் சந்தித்து வழி நடத்துவார். 

✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️                                                                              
தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712                                                                                                Website :- www.aathavanmonthly.blogspot.com 

Comments

அதிகமாகப் படிக்கப்பட்டச் செய்திகள்