DAILY MEDITATION ON WHATSAPP

ஆதவன் தினசரி வேதாகமத் தியானத்தை வாட்சப் இல் பெறுவதற்கு 96889 33712 அல்லது 76390 22747 எண்களில் தொடர்பு கொள்ளவும் / To get daily Scripture Meditation on WhatsApp kindly contact 9688933712 or 7639022747

Wednesday, May 31, 2023

ஒருவனும் உன்மேல் கைபோடுவதில்லை

ஆதவன் 🌞 855🌻 ஜூன் 01, 2023  வியாழக்கிழமை       

 "நான் உன்னுடனேகூட இருக்கிறேன், உனக்குத் தீங்குசெய்யும்படி ஒருவனும் உன்மேல் கைபோடுவதில்லை; இந்தப் பட்டணத்தில் எனக்கு அநேக ஜனங்கள் உண்டு." ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 18 : 10 )


ஒரு உலக அரசாங்கம் ஒருவரைப் பதவியில் வைத்துள்ளது என்றால் அந்தப் பணியாளருக்கு வேண்டிய அனைத்துத் தேவைகளையும் சந்திப்பது மட்டுமல்ல, அவர்களது பாதுகாப்புக்கும்  அதிக முக்கியத்துவம் கொடுக்கும்.  பதவியில் இருக்கும் ஆட்சித் தலைவர்கள்,  வருவாய்த்துறை அதிகாரிகள், நீதிபதிகள், போன்றோருக்கு பாதுகாவலர்கள் பாதுகாப்பு அளிப்பதை நீங்கள்  பார்த்திருக்கலாம். இந்த பாதுகாப்பு அவர்கள் தங்கள் பணியைத் தடையில்லாமல் செய்ய உதவுகின்றது.   

இதுபோலவே தேவன் தனது பிள்ளைகள் உலகத்தில் தங்கள் பணிகளைச் செய்யவும் பாவமில்லாத வாழ்க்கைவாழவும் வேண்டிய உதவிகளைச் செய்கின்றார். பவுல் அப்போஸ்தலர் ஊழியத்தில் பயமில்லாமல் தொடர்ந்திட தேவன் அவரைத் திடப்படுத்துகின்றார். பவுலே , "நான் உன்னுடனேகூட இருக்கிறேன், உனக்குத் தீங்குசெய்யும்படி ஒருவனும் உன்மேல் கைபோடுவதில்லை; இந்தப் பட்டணத்தில் எனக்கு அநேக ஜனங்கள் உண்டு என்றார்.")

ஊழியம் செய்பவர்களுக்கு மட்டுமல்ல கர்த்தருடைய பிள்ளைகள் அனைவருக்குமே கர்த்தர் இப்படிக்  கூடவே இருந்து பாதுகாப்பளிக்கின்றார்; உதவுகின்றார். கர்த்தர் இப்படி நம்மோடு இருந்துச்செய்யும் காரியம் சிலவேளைகளில் நாமே கண்டு வியக்கத்தக்கதாகவும் நமக்கு எதிராக செயல்படுபவர்களுக்குப் பார்க்கவே பயங்கரமானதாகவும் இருக்கும்.  மோசே அற்பமான மனிதனாகவே காணப்பட்டார். அவரைப் பார்க்கும்போது மற்றவர்களுக்கு பெரியதாகத் தெரியவில்லை. எனவேதான் சொந்த இஸ்ரவேலரே அவருக்கு எதிராக செயல்பட முயன்றனர். ஆனால் மோசேக்கு தேவன் வாக்களித்திருந்தார். "உன்னோடேகூட இருந்து, நான் செய்யும் காரியம் பயங்கரமாயிருக்கும்." ( யாத்திராகமம் 34 : 10 ) என்று. 

அப்படியே எகிப்தியரும் அவருக்கு எதிராக முறுமுறுத்த இஸ்ரவேல் மக்களும் கண்டு பயப்படத்தக்கக் காரியங்களை தேவன் மோசே மூலம் செய்தார்.  

இதுபோல மோசேக்குப்பின் யோசுவாவுக்கு தேவன் வாக்களித்தார். "நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் ஒருவனும் உனக்கு முன்பாக எதிர்த்து நிற்பதில்லை; நான் மோசேயோடே இருந்ததுபோல, உன்னோடும் இருப்பேன்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை." ( யோசுவா 1 : 5 ) அப்படியே கைவிடாமலிருந்து காப்பாற்றினார். இந்த யோசுவா மூலமே இஸ்ரவேல் கோத்திரங்கள் கானான் தேசத்தில் தங்கள் தங்கள் உடைமைகளைப் பெற்றார்கள்.

அன்பானவர்களே, எனவே நாம் சூழ்நிலைகளைப்  பார்த்துக் கலங்கிடாமல் கர்த்தர்மேல் விசுவாசம்கொண்டு வாழ்வோம்.  பவுலுக்கு வாக்களித்து நடத்தியவர்,  மோசேயுடனிருந்து பயங்கரமான காரியங்களைச்  செய்தவர், யோசுவாவை எவரும் எதிர்க்கமுடியாதவாறு பலப்படுத்தியவர் நம்மோடும் இருக்கின்றார்.  தேவன் ஆள் பார்த்துச் செயல்படுபவரல்ல. எனவே அவர் மேல் விசுவாசம்கொண்டு வாழும் நம்மையும் அதுபோல காத்து, பலப்படுத்தி நடத்திடுவார். 

✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️                                                                              
தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712                                                                                                Website :- www.aathavanmonthly.blogspot.com 

No comments: