தேவன் நமது செய்கைகளையெல்லாம் கவனித்துக்கொண்டிருக்கிறார்.

 

ஆதவன் 🖋️ 550  ஜுலை 31, 2022 ஞாயிற்றுக்கிழமை

"கர்த்தர் வானத்திலிருந்து நோக்கிப்பார்த்து, எல்லா மனுபுத்திரரையும் காண்கிறார்தாம் வாசமாயிருக்கிற ஸ்தானத்திலிருந்து பூமியின் குடிகள் எல்லார்மேலும் கண்ணோக்கமாயிருக்கிறார்அவர்களுடைய இருதயங்களையெல்லாம் அவர் உருவாக்கி, அவர்கள் செய்கைகளையெல்லாம் கவனித்திருக்கிறார்." ( சங்கீதம் 33 : 13-15 )

உலக மக்கள் அனைவரையும் ஜாதி, மதம், இனம், மொழி  இவற்றுக்கு அப்பாற்பட்டு தேவன் காண்கின்றார். அவர்கள் செய்யும் செயல்களைக்  கண்ணோக்கிக் கொண்டிருக்கின்றார்

மனிதனது இருதயங்களை உருவாக்கியவர் அவர். தன்னைப்போல பரிசுத்தமுள்ளவர்களாக மனிதர்கள் வாழவேண்டுமென்று அவர் விரும்புகின்றார். எனவேதான் இந்த வசனம் கூறுகின்றது, "அவர்களுடைய இருதயங்களையெல்லாம் அவர் உருவாக்கி, அவர்கள் செய்கைகளையெல்லாம் கவனித்திருக்கிறார்" என்று

இதன்படியே அவர் உலகத்தை நியாயம் தீர்ப்பார். கிறிஸ்துவை அறிந்தவர்கள் அறியாதவர்கள் ஒவ்வொருவரது மனசாட்சியும் தேவனது குரலாய் இருந்து அவர்களை எச்சரிக்கின்றது. இந்த எச்சரிப்பை மீறி செயல்படும்போது தேவன் அவற்றுக்குத் தண்டனை தீர்ப்பளிப்பார். கிறிஸ்துவை அறியாதவர்கள் அவரது போதனையை இதுவரை அறியாதவர்கள் இவர்களை தேவன் அவரவர் மனச்சாட்சியின்படியே நியாயம் தீர்ப்பார்.

"அவர்களுடைய மனச்சாட்சியும்கூடச் சாட்சியிடுகிறதினாலும், குற்றமுண்டு குற்றமில்லையென்று அவர்களுடைய சிந்தனைகள் ஒன்றையொன்று தீர்க்கிறதினாலும், நியாயப்பிரமாணத்திற்கேற்ற கிரியை தங்கள் இருதயங்களில் எழுதியிருக்கிறதென்று காண்பிக்கிறார்கள்என் சுவிசேஷத்தின்படியே, தேவன் இயேசுகிறிஸ்துவைக்கொண்டு மனுஷருடைய அந்தரங்கங்களைக்குறித்து நியாயத்தீர்ப்புக்கொடுக்கும் நாளிலே இது விளங்கும்." ( ரோமர் 2 : 15,16 )

ஆம், நமது இருதயங்களை உருவாக்கி, அது தனது இருதயம்போல பரிசுத்தமானதாக மாறவேண்டும் என விரும்பும் தேவன்,  வானத்திலிருந்து நோக்கிப்பார்த்து, எல்லா மனுபுத்திரரையும் காண்கிறார்அவர்கள் செய்கைகளையெல்லாம் கவனித்துக் கொண்டிருக்கிறார்.

மட்டுமல்ல, ஆண்டவர் நமக்குச் செவிகொடுக்கவேண்டுமானால் நமது இருதயம் அவருக்கேற்றதாக இருக்கவேண்டியது அவசியம். "என் இருதயத்தில் அக்கிரமசிந்தை கொண்டிருந்தேனானால், ஆண்டவர் எனக்குச் செவிகொடார்." ( சங்கீதம் 66 : 18 ) என்று வாசிக்கின்றோம்

அன்பானவர்களே, ஒரு இடத்தில்  CCTV கேமரா கண்காணிப்பு இருக்குமானால் நாம் எவ்வளவு கவனமாகச் செயல்படுவோமோ அதுபோன்ற கவனத்துடன் நமது ஆவிக்குரிய வாழ்வை வாழவேண்டியது அவசியம்.   ஆம், தேவன் நமது  செய்கைகளையெல்லாம் கவனித்துக்கொண்டிருக்கிறார்

Comments

அதிகமாகப் படிக்கப்பட்டச் செய்திகள்