தேவன் கொடுத்த வேலையைச் சரியாகச் செய்யாதவன் தேவனை அவமதிக்கின்றான்.


 ஆதவன் 🖋️ 549  ஜுலை 30, 2022 சனிக்கிழமை

"வார்த்தையினாலாவது கிரியையினாலாவது, நீங்கள் எதைச் செய்தாலும், அதையெல்லாம் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே செய்து, அவர் முன்னிலையாகப் பிதாவாகிய தேவனை ஸ்தோத்திரியுங்கள்." ( கொலோசெயர் 3 : 17 )

எது நடந்தாலும் நன்றியும் ஸ்தோத்திரமும் செய்ய நம்மை அறிவுறுத்தும் வேதம் இன்றைய வசனத்தில் எதைச்செய்தாலும் அதையெல்லாம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் செய்து பிதாவாகிய தேவனை ஸ்தோத்தரிக்க நம்மை அறிவுறுத்துகின்றது. நமது உலக வேலைகளை உண்மையாய்ச் செய்வதே தேவனை மகிமைப்படுத்துவதுதான்.

நாம் உலக வேலைகளில் இருந்தாலும் இன்றைய வசனத்தின்படி நாம் அவற்றை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உண்மையுடன் செய்யவேண்டும்இப்படிச் செய்யும்போது நமது வேலைகளை நல்ல முறையில் செய்வதுடன் குறுக்குவழியில் பணம் சம்பாதிக்க மற்றவர்கள் செய்வதுபோல நாம் செய்யமாட்டோம்

இன்று ஆவிக்குரிய வாழ்க்கை வாழ்கின்றேன் என்று கூறிக்கொள்ளும் பலர் உலக காரியங்களில் உண்மையில்லாமல் இருக்கின்றார்கள்ஆவிக்குரிய சபைக்குப் பல ஆண்டுகளாகச் செல்லும் ஒரு நண்பரை எனக்குத் தெரியும். சபையில் கன்வென்சன் நடத்தவேண்டுமா, இல்லை சபைக்கு நிதி திரட்டவேண்டுமா, என்ன காரியத்திலும் இவர் பாஸ்டரோடு இணைந்து தீவிரமாகச் செயல்படுவார். இவர் அரசாங்க வேலையும் பார்த்துவந்தார். வீட்டிலும் ஒரு சிறிய தொழிலும் நடத்திவந்தார். அதனை அவரது மனைவி நிர்வகித்துவந்தார்.   

சபையின் காரியங்களுக்காகவும் தனது  தொழில் காரியங்களுக்காகவும் அடிக்கடி பொய்கூறி அலுவலகத்துக்கு டிமிக்கி கொடுத்துவிடுவார். அரசு ஆவணங்களில் அவர் களப்பணி செய்ய குறிப்பிட்ட ஒரு  இடத்துக்குச் சென்றதாக குறிப்பு எழுதிவைத்துவிட்டு தனது சொந்த வேலைகளைப் பார்க்கச் சென்றுவிடுவார்.

இதுபோல எனக்குத் தெரிந்த கால்நடை மருத்துவர் ஒருவர் தூத்துக்குடி மாவட்டத்தில் வேலைபார்த்தார். வாரத்துக்கு ஒருமுறை அலுவலகம் சென்று வருகைப்பதிவேட்டில்  மொத்தமாக ஒருவாரத்துக்கான கையொப்பத்தினையும் போட்டுவிட்டு ஊரில் தனது சொந்த காரியங்களைப் பார்ப்பார். மருத்துவமனை ஊழியர் இவர் காட்டும் சலுகைகளுக்காக இவரைக் காட்டிக்கொடுக்காமல் உயர் அதிகாரிகள் திடீரென்று வந்துவிட்டால்,  "அவர் இப்போதுதான் வெளியே சென்றார்" எனக்கூறி சமாளித்துவிடுவார். இவரும் கிறிஸ்தவர்தான்.   

இப்படிப்பட்டவர்கள் பிதாவாகிய தேவனை அவமதிக்கின்றார்கள் என்றுதான் கூறவேண்டும். எத்தனையோபேர் வேலையில்லாமல் திண்டாடும்போது கிருபையாய் தேவன் கொடுத்த வேலையைச் சரியாகச் செய்யாதவன் தேவனை அவமதிக்கின்றான்

அன்பானவர்களே, இத்தகைய  தவறினை உங்கள் பணியிடங்களில் செய்திருந்தால் தேவனிடம் மன்னிப்பு வேண்டுங்கள்.    வார்த்தையினாலாவது கிரியையினாலாவது, நீங்கள் எதைச் செய்தாலும், அதையெல்லாம் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே சரியாக நேர்மையாகச் செய்யுங்கள். இப்படிச் செய்வதும் தேவனை மகிமைப்படுத்துவதுதான்.

Comments

அதிகமாகப் படிக்கப்பட்டச் செய்திகள்