என் சுமை இலகுவாய் இருக்கிறது

 ஆதவன் 🖋️ 537 ⛪ ஜுலை 18, 2022 திங்கள்கிழமை

"வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்; என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்; அப்பொழுது உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும்." ( மத்தேயு 11 :28,29 )

வேதாகமம் எழுதப்பட்டபோது அதிகார எண்களோடும் வசன எண்களோடும்  எழுதப்படவில்லை. கி.பி. 1200 க்குப் பின்னரே எண்கள் கொடுக்கப்பட்டன. குறிப்பிட்ட  வசனத்தை எளிதில் கண்டுபிடிக்க இந்த எண்கள் உதவியாக இருக்கின்றன. ஆனால் அதேநேரம் எண்கள் கொடுக்கப்பட்டது பல வசனங்களை  நாம் சரியாகப் புரிந்துகொள்ளத் தடையாகவும் இருக்கின்றன. 

இன்றைய வசனமும் அப்படித்தான். பொதுவாகப் பலரும் மத்தேயு 11:28 ஐ மட்டுமே கூறுவதுண்டு. சுவர்களில் எழுதப்படும் வசனங்களிலும் இதனை மட்டுமே எழுதுவதுண்டு.   "வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்". என்பதோடு இயேசு முடிக்கவில்லை. தொடர்ந்து கூறுகின்றார்,  "என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்; அப்பொழுது உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும்." (மத்தேயு 11:29)

நுகம் என்பது வண்டி மாடுகளுக்கு கழுத்தில் சுமத்தப்படும் குறுக்குத் தடியைக் குறிக்கும். இந்த வசனத்தின் சரியான பொருள், நீங்கள் உங்கள் உலகப்  பாரங்களைச் சுமந்து வேதனைப்படவேண்டாம் என்னிடம் வந்து  ஆறுதல் பெறுங்கள். அதற்கு நீங்கள் எனது நுகத்தை ஏற்றுக்கொள்ளுங்கள். "என் நுகம் மெதுவாயும் என் சுமை இலகுவாயும்  இருக்கிறது " (மத்தேயு 11:30)

சரியான பொருள், நீங்கள் உங்கள் உலக கவலைகளையும் துக்கங்களையும் பாடுகளையும் சுமந்து வேதனை அடையவேண்டாம், என்னிடம் வாருங்கள்; என்னை ஏற்றுக்கொள்ளுங்கள். என்னை ஏற்றுக்கொள்வது லெகுவான காரியம். அப்போது உங்கள் ஆத்துமாவுக்கு வேதனையிலிருந்து இளைப்பாறுதல் கிடைக்கும்.

அன்பானவர்களே, கிறிஸ்துவிடம் வருவது என்பது அவரை ஏற்றுக்கொண்டு அவரது கட்டளைகள் எனும் நுகத்தை ஏற்றுக்கொள்வது. அவை கடினமானவைகளுமல்ல. இதனையே அப்போஸ்தலரான யோவானும் கூறுகின்றார். "நாம் தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்வதே அவரிடத்தில் அன்புகூருவதாம்; அவருடைய கற்பனைகள் பாரமானவைகளுமல்ல." ( 1 யோவான்  5 : 3 )

நாம் நமது துக்கங்களை எண்ணி எண்ணி கவலைப்பட்டு மனபாரத்தோடு இருப்பதைவிட, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிடம் வரவேண்டும். நமது அனைத்துப் பிரச்சனைகளின் பாரத்தையும் அவர் சுமந்துகொள்வார் எனும் நம்பிக்கையுடன் அவரது கற்பனைகளைக் கைக்கொள்ள உறுதிகொள்ளவேண்டும். 

கிறிஸ்துவின் இளைப்பாறுதலை பெற்றுக்கொள்ள ஆர்வத்துடன் அவரிடம் நெருங்கி வருவோம். அவர் நம்மில் எவருக்கும் தூரமானவர் அல்ல. 

தேவ செய்தி :- சகோஎம் . ஜியோ பிரகாஷ்                                  தொடர்புக்கு- 96889 33712 

Comments

அதிகமாகப் படிக்கப்பட்டச் செய்திகள்