கிறிஸ்து நமது ஆவிக்குரிய வளர்ச்சியை விரும்புகின்றார்

 ஆதவன் 🖋️ 548 ⛪ ஜுலை 29, 2022 வெள்ளிக்கிழமை

"ஆகையால், நீங்கள் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை ஏற்றுக்கொண்டபடியே, அவருக்குள் வேர்கொண்டவர்களாகவும், அவர்மேல் கட்டப்பட்டவர்களாகவும், அவருக்குள் நடந்துகொண்டு, நீங்கள் போதிக்கப்பட்டபடியே, விசுவாசத்தில் உறுதிப்பட்டு, ஸ்தோத்திரத்தோடே அதிலே பெருகுவீர்களாக." ( கொலோசெயர் 2 : 6, 7 )

வளர்ச்சிக்குரிய அனுபவத்தை இங்கு பவல் அப்போஸ்தலர் குறிப்பிடுகின்றார். நாம் ஒரு மரத்தையோ செடியையோ நட்டு வளர்ப்போமானால் அதன் அன்றாட வளர்ச்சி நமக்கு மகிழ்வைத் தரும். மாறாக, எவ்வளவு உரம் இட்டு நீர் பாய்ச்சி வந்தாலும்  வளர்ச்சியில்லாத ஒரு மரக்கன்றைப் பார்க்கும்போது நமக்குக் கோபம்தான் வரும். 

இதுபோலவே கிறிஸ்துவும் நமது ஆவிக்குரிய வளர்ச்சியை விரும்புகின்றார். நாம் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட நிலையிலேயே நின்றுவிடக்கூடாது. ஒரு மர்மோ செடியோ மண்ணில் வேர்விட்டு வளர்வதுபோல வேர்விட்டு வளரவேண்டும். இதனையே, " அவருக்குள் வேர்கொண்டவர்களாகவும்", என்று கூறப்பட்டுள்ளது.

வேர்விட்டு வளரும்போதுதான் மரங்கள் வறட்சியைத் தாங்கவும் கடுமையான காற்றை எதிர்த்து நிற்கும் பலமுள்ளதாகவும் மாறும். மட்டுமல்ல வேர்விட்டு செழித்து வளரும்போதுதான் மரத்தில் நாம் விரும்பும் கனி கிடைக்கும். இதுபோல நம்மில் ஆவிக்குரிய கனிகள் பெருகவேண்டுமானால் நாம் கிறிஸ்துவுக்குள் வேர்விட்டு வளரவேண்டியது அவசியம்.

ஆவிக்குரிய வளர்ச்சியைக் கட்டடம் கட்டுவதற்கும் பவுல் ஒப்பிடுகின்றார். கட்டடமானது கட்டப்படும்போது அதன் வளர்ச்சி நமக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும். அதுபோல நாம் ஆவிக்குரிய கட்டடமாக எழும்பும்போது கிறிஸ்து மகிழ்ச்சியடைகின்றார்.

இந்த ஆவிக்குரிய வளர்ச்சி எப்படி ஒருவருக்குக் கிடைக்கும் என்பதனை இந்த வசனத்தின் இறுதியில் விளக்குகின்றார். அதாவது "அவருக்குள் (கிறிஸ்துவுக்குள்) நடந்துகொண்டு, வேதம் கூறும் போதனைகளைக் கைக்கொண்டு, விசுவாசத்தில் உறுதிப்பட்டு, ஸ்தோத்திரத்தோடே அதிலே பெருகுவீர்களாக."

கிறிஸ்துவின் போதனைகளின்படி விசுவாசத்துடன் வாழவேண்டும். மேலும், எல்லாவற்றுக்காகவும் ஸ்தோத்திரம் பண்ணவேண்டும்.  நமது வாழ்வில் நடக்கும் நன்மையோ தீமைகளோ எல்லாவற்றுக்கும் ஸ்தோத்திரம் செலுத்தவேண்டும். யோபு இப்படித்தான் செய்தார். அனைத்தையும் இழந்து நிற்கதியாக நிற்கும்போதும், "கர்த்தர் கொடுத்தார், கர்த்தர் எடுத்தார், கர்த்தருடைய பரிசுத்த நாமத்துக்கு ஸ்தோத்திரம்" என்றார். இறுதியில் அனைத்தையும் இரண்டு மடங்காகப் பெற்றுக்கொண்டார்.   

அன்பானவர்களே, அப்போஸ்தலரான பவுல் கூறியுள்ளபடி, கிறிஸ்துவுக்குள் வேர்கொண்டவர்களாகவும், கட்டப்பட்டவர்களாகவும் வளருவோம். அதற்கு எல்லாவற்றுக்காகவும் கர்த்தரை ஸ்தோத்தரித்து நன்றிசொல்லுவோம். 

தேவ செய்தி :- சகோஎம் . ஜியோ பிரகாஷ்                                  தொடர்புக்கு- 96889 33712

Comments

அதிகமாகப் படிக்கப்பட்டச் செய்திகள்