மேய்ப்பனிடம் வளரும் ஆடுகளுக்கு நல்ல பாதுகாப்பு உண்டு.

 

ஆதவன் 🖋️ 524 ⛪ ஜுலை 05, 2022 செவ்வாய்க்கிழமை 


"கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்; நான் தாழ்ச்சியடையேன். அவர் என்னைப் புல்லுள்ள இடங்களில் மேய்த்து, அமர்ந்த தண்ணீர்கள் அண்டையில் கொண்டுபோய்விடுகிறார்." ( சங்கீதம் 23 : 1, 2 )

ஆடுகளை மேய்க்கும் மேய்ப்பர்களை நாம் கிராமங்களில் பார்த்திருக்கலாம். செம்மறியாடுகளை மந்தையாக மேய்ச்சலுக்குக் கூட்டிச்செல்வார்கள். அப்போது அவர்கள் பல்வேறு வித ஒலிகளை எழுப்புவார்கள். அந்த ஆடுகள் அவற்றைப் புரிந்து மேய்ப்பனின் குரலுக்குச் செவிகொடுக்கும். 

மலைகளில் ஆடுமேய்க்கும் மேய்ப்பர்களுக்கு எங்கெங்கு ஆபத்து இருக்கும் , விஷச்செடிகள் எங்கெங்கு இருக்கும் எல்லாம் தெரியும். அவர்கள் ஓர் கட்டுப்பாட்டுடன் ஆடுகளை மேய்ப்பார்கள். ஆடுகள் விருப்பினாலும் சில இடங்களுக்கு அவை செல்வதை மேய்ப்பர்கள் அனுமதிப்பதில்லை. 

ஆனால் மலைகளில் காட்டு ஆடுகளும் உண்டு. அவைகளுக்கு எந்தக் கட்டுப்பாடுகளும் இருப்பதில்லை. அவை தாங்கள் விரும்பும் இடங்களுக்குச் செல்லும்; விரும்பியவற்றை உண்ணும்.  காட்டு ஆடுகள் மேய்ப்பன் வளர்க்கும் ஆடுகளைவிட நன்கு கொழுத்து திடகாத்திரமாக இருக்கும்.

மேய்ப்பனால் கட்டுப்பாட்டுக்குள் வளரும் ஆடுகள் என்ன நினைக்கும்? "ஆஹா, இந்தக் காட்டு ஆடுகள் கொடுத்துவைத்தவை. அவை விருப்பம்போல சுதந்திரமாக சுற்றிவருகின்றன. நாமோ இந்த மேய்ப்பனிடம் அகப்பட்டு அற்பமான உணவை உண்டு வாழ்கின்றோம்". 

ஆனால் உண்மை அதுவல்ல, மேய்ப்பனிடம் வளரும் ஆடுகளுக்கு நல்ல பாதுகாப்பு உண்டு. காட்டு ஆடுகளை எந்த நேரத்திலும் சிங்கமோ, கரடியோ. புலியோ அடித்துச் சாப்பிட்டுவிடும் வாய்ப்பு இருக்கின்றது. இந்த உண்மையினை  ஆடுகளை மேய்த்து அனுபவப்பட்டத் தாவீது நன்கு அறிந்திருந்தார். எனவேதான் அவர் கர்த்தரைத் தனது மேய்ப்பராகக் எண்ணி அவர் என் மேய்ப்பராயிருப்பதால் தான்  தாழ்ச்சியடைவதில்லை என்று உறுதியாகக் கூறுகின்றார். 

உலகினில் துன்மார்க்கமாக பொருள்சேர்த்து செழித்து வாழும் மக்களைப்பார்த்து நாம் கர்த்தரிடம் விசுவாசமாக இருந்தும் அத்தகைய செழிப்பு நமக்கு இல்லையே என  நமது அற்ப நிலைமையை எண்ணி  வருந்திட வேண்டாம். 

"கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்; நான் தாழ்ச்சியடையேன்." என விசுவாசமாய்க் கூறி தொடர்ந்து கர்த்தரது குரலுக்குச் செவிகொடுக்கும் ஆடுகளைப்போல அமைதியாக செவிகொடுத்து வாழ்வோம்.  அவர்  நம்மை அமர்ந்த தண்ணீர்கள் அண்டையில் கொண்டுபோய்விடுவார். அதாவது பூரண சமாதானத்துடன் நாம் வாழ்ந்திடச் செய்வார்.

தேவ செய்தி :- சகோஎம் . ஜியோ பிரகாஷ்                                  தொடர்புக்கு- 96889 33712

Comments

அதிகமாகப் படிக்கப்பட்டச் செய்திகள்