ஆவிகுரியார்களே ஆவிக்குரிய சத்தியங்களை அறிய முடியும்.

 

ஆதவன் 🖋️ 526 ⛪ ஜுலை 07, 2022 வியாழக்கிழமை


"தேவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு ஆயத்தம்பண்ணினவைகளைக் கண் காணவுமில்லை, காது கேட்கவுமில்லை, அவைகள் மனுஷனுடைய இருதயத்தில் தோன்றவுமில்லை; நமக்கோ தேவன் அவைகளைத் தமது ஆவியினாலே வெளிப்படுத்தினார்; அந்த ஆவியானவர் எல்லாவற்றையும், தேவனுடைய ஆழங்களையும் ஆராய்ந்திருக்கிறார்." ( 1 கொரிந்தியர் 2 : 9, 10 )


மறு  உலக வாழ்வு, பரலோகம், நித்திய ஜீவன் இவைகளை தேவன் ஏற்கெனவே தம்மை விசுவாசித்து ஏற்றுக்கொள்பவர்களுக்காக ஏற்பாடு செய்துள்ளார்.  ஆனால் இவைகளை நாம் நமது ஊனக்கண்ணால் காணமுடியாது.  இதுபோல நமக்காக இயேசு கிறிஸ்து ஒரு இடத்தை ஆயத்தம் பண்ணுவதற்குத் தான் செல்வதாகக் கூறினார். இதனையும் நாம் காணவில்லை. 

"என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு; அப்படியில்லாதிருந்தால், நான் உங்களுக்குச் சொல்லியிருப்பேன்; ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்போகிறேன். நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை ஆயத்தம்பண்ணினபின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன்." ( யோவான் 14 : 2, 3 ) என்றார் இயேசு கிறிஸ்து. 

இவைகள் எல்லாமே தேவனிடம் அன்புகூருகிறவர்களுக்காக அவர் ஏற்பாடு செய்தவை என்று இன்றைய வசனம் கூறுகின்றது. ஆனால், எதையுமே நாம் காணவில்லை. தேவனுடைய பரிசுத்த ஆவியானவர் நமக்கு இவைகளை வெளிப்படுத்தித் தருகின்றார். அவர் அப்படி வெளிப்படுத்தித் தருவதால் நமக்குள் இவைகுறித்த விசுவாசம் ஏற்பட்டுள்ளது. 

ஆனால் கிறிஸ்தவர்கள் என்று கூறிக்கொள்ளும் பலருக்கும் கூட இவைகளில் விசுவாசம் இல்லை. அவர்கள் தேவனை ஆராதிக்கின்றார்கள், பல்வேறு பக்திபூர்வமான காரியங்களில் ஈடுபடுகின்றனர். ஆனால்  பெரும்பாலான கிறிஸ்தவர்களுக்கும் இவற்றைப்பற்றிய அறிவும் இல்லை தெளிவும் இல்லை. 

இதற்குக் காரணம் அவர்கள் தேவனைத் தேடுவது இவற்றுக்காக அல்ல. அவர்கள் தங்கள் உலகத் தேவைகளை நிறைவேற்றுவதற்கும்  அவை பற்றி வேண்டுதல் செய்வதற்கும் மட்டுமே தேவனிடம் வருகின்றனர். 

ஆவிகுரியார்களே ஆவிக்குரிய சத்தியங்களை அறிய முடியும். "மாம்சத்தின்படி நடக்கிறவர்கள் மாம்சத்துக்குரியவைகளைச் சிந்திக்கிறார்கள்; ஆவியின்படி நடக்கிறவர்கள் ஆவிக்குரியவைகளைச் சிந்திக்கிறார்கள்."(ரோமர்-8:5).

அன்பானவர்களே, "நமக்கோ தேவன் அவைகளைத் தமது ஆவியினாலே வெளிப்படுத்தினார்; அந்த ஆவியானவர் எல்லாவற்றையும், தேவனுடைய ஆழங்களையும் ஆராய்ந்திருக்கிறார்." என்று கூறியுள்ளபடி ஆவிக்குரிய மக்களாக நாம் மாறும்போதே இவைகளை அறியவும் முடியும்; சுதந்தரிக்கவும் முடியும்.

தேவ செய்தி :- சகோஎம் . ஜியோ பிரகாஷ்                                  தொடர்புக்கு- 96889 33712

Comments

அதிகமாகப் படிக்கப்பட்டச் செய்திகள்