DAILY MEDITATION ON WHATSAPP

ஆதவன் தினசரி வேதாகமத் தியானத்தை வாட்சப் இல் பெறுவதற்கு 96889 33712 அல்லது 76390 22747 எண்களில் தொடர்பு கொள்ளவும் / To get daily Scripture Meditation on WhatsApp kindly contact 9688933712 or 7639022747

Sunday, July 10, 2022

ஆவிக்குரிய வாழ்வில் நமக்கும் தினசரி போராட்டம் உண்டு

 ஆதவன் 🖋️ 530 ⛪ ஜுலை 11, 2022 திங்கள்கிழமை



"அவர்கள் உனக்கு விரோதமாக யுத்தம்பண்ணுவார்கள்; ஆனாலும் உன்னை மேற்கொள்ளமாட்டார்கள்; உன்னை இரட்சிக்கும்படிக்கு நான் உன்னுடனே இருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்." ( எரேமியா 1 : 19 )

எதிரி நாட்டு ராஜாக்கள் உனக்கு எதிராக யுத்தம் செய்ய வருவார்கள்; ஆனால் உன்னை மேற்கொள்ள மாட்டார்கள். காரணம், சர்வ வல்லவரான நான் உன்னோடுகூட  இருக்கிறேன் என   மக்களைத் திடப்படுத்த எரேமியா தீர்க்கதரிசி யூதாவுக்குக் கூறிய வார்த்தைகள் தான் இன்றைய தியானத்துக்குரிய வசனம். 

தங்களது மீறுதலால் தேவ கோபத்துக்கு உள்ளாகி யூதா மற்றும் இஸ்ரவேலர்கள் பல்வேறு ராஜாக்களின் அடிமைத்தனத்துக்கு உள்ளானார்கள். ஆனால் தேவன் தெரிந்துகொண்ட மக்கள் இனமானதால் தேவன் அவர்கள்மேல் பரிவு கொண்டார். மக்கள் தங்கள் தவறான வழிகளைவிட்டு தன்னிடம் திரும்பிட தேவன் தீர்க்கதரிசிகள் மூலம் மக்களுக்கு அறிவுரைகள் கூறினார்.  

உங்களுக்கு எதிராக யுத்தம் பண்ணுவார்கள் ஆனால் உங்களை  மேற்கொள்ள மாட்டார்கள் என்பதே செய்தி. 

அன்பானவர்களே, இதுவே ஆவிக்குரிய வாழ்வில் ஈடுபடும் நமக்கும் பொருந்தக்கூடிய செய்தி. ஆவிக்குரிய வாழ்வில்  நமக்கும் தினசரி போராட்டம் உண்டு. "ஏனெனில், மாம்சத்தோடும் இரதத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு." ( எபேசியர் 6 : 12 ) என்கின்றார் பவுல் அடிகள். 

ஆனால் தேவனுடைய ஆவியானவர் நம்மோடுகூட இருப்பதால் அந்தப் போராட்டங்கள் நம்மை மேற்கொள்ளாது. ஒருவேளை நமக்கு எதிராக யுத்தம்செய்வது பாவங்களாக இருக்கலாம். ஆனால் அவை நம்மை மேற்கொள்ளாது. காரணம், தேவன் நம்மோடு இருக்கின்றார்.  

ஆவிக்குரிய வாழ்வில் போராடி வெற்றிபெறுவதற்குத் தேவன் பல்வேறு ஆவிக்குரிய போராயுதங்களைத் தந்துள்ளார். சத்தியம் , நீதி, சமாதானத்தின் சுவிஷேஷத்துக்குரிய ஆயத்தம், விசுவாசம், இரட்சிப்பு எனும் இவைகளே பல்வேறு ஆவிக்குரிய ஆயுதங்கள். எபேசியர் 6:14-17 இல் நாம் இதுகுறித்து விபரமாக  வாசிக்கலாம். 

ஆவிக்குரிய வாழ்வில் இந்த ஆயுதங்களை நாம் சரியாகப் பயன்படுத்துவோமானால், நமக்கு விரோதமாக யுத்தம்பண்ணும் பாவங்களும் நமக்கு எதிராகச் செயல்படும் வல்லமைகளும், எதிரிகளும் நம்மை மேற்கொள்ளமாட்டார்கள்; நம்மை இரட்சிக்கும்படிக்குத் தேவன் நம்மோடே கூட இருப்பார். 

தேவ செய்தி :- சகோஎம் . ஜியோ பிரகாஷ்                                  தொடர்புக்கு- 96889 33712

No comments: