விதைப்பதையே அறுப்போம் !!


 ஆதவன் 🖋️ 520 ⛪ ஜுலை 01, 2022 வெள்ளிக்கிழமை 

"...........மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான். தன் மாம்சத்திற்கென்று விதைக்கிறவன் மாம்சத்தினால் அழிவை அறுப்பான்; ஆவிக்கென்று விதைக்கிறவன் ஆவியினாலே நித்தியஜீவனை அறுப்பான்." ( கலாத்தியர் 6 : 7, 8 )

நெல் விதைத்துவிட்டு கோதுமையை அறுவடை செய்ய முடியாது. இது நாம் எல்லோரும் அறிந்ததே. இதே இயற்கையின் விதிதான் மனிதர்களது வாழ்க்கைக்கும் பொருந்தும். 

இந்த உலகத்திலேயே சிலவேளைகளில் அப்பட்டமாக இது வெளிப்படும். ஒரு முறை ஒரு சம்பவம் குறித்துக் கேள்விப்பட்டேன். ஒரு குறிப்பிட்ட நகரத்தில் சாலை ஓரம் ஒரு முதியவர் பல நாட்களாக வசித்து வந்தார். அவர் சொந்த குடும்பத்தால் கைவிடப்பட்டு அவலமான நிலையில் இருந்தார். ஆனால் அவரது முகத்தில் ஒரு சிரிப்பு இருக்கும். தர்மம் கொடுப்பவர்களை வாழ்த்துவார்.

நகரத் தூய்மை பணிக்காக சாலை ஒர மக்களை அப்புறப்படுத்தினர் அதிகாரிகள். அப்போது ஒரு முரட்டு அதிகாரி கோபத்துடன், "பிச்சைக்கார பயலே, இங்கிருந்து ஓடுடா.." என்றும் , கெட்டவார்த்தைகள் பேசியதுமல்லாமல்  தனது காலால் அந்த முதியவரையும் அவரது உடைமைகளையும் மிதித்துத் தள்ளினார். சரியாக மூன்றாம் நாள் அதே இடத்தில் நடந்த ஒரு விபத்தில் அந்த அதிகாரியின் கால் பேருந்து சக்கரத்தில் சிக்கி நசுங்கித் துண்டானது. இதனைப் பார்த்தப் பலரும் , "ஆணடவன் உண்மையிலேயே இருக்காரு...." என மனித முறைமையில் சொல்லிக்கொண்டனர். 

"சிலருடைய பாவங்கள் வெளியரங்கமாயிருந்து, நியாயத்தீர்ப்புக்கு முந்திக்கொள்ளும்; சிலருடைய பாவங்கள் அவர்களைப் பின்தொடரும்." ( 1 தீமோத்தேயு 5 : 24 ) என்கின்றார் அப்போஸ்தலரான பவுல்.

சிலருடைய பாவங்கள் என்று கூறப்பட்டுள்ளதால் எப்போதுமே இப்படி நடைபெறும் என்று சொல்லமுடியாது என்பது தெளிவு. 

இதுபோல "ஆவிக்கென்று விதைக்கிறவன் ஆவியினாலே நித்தியஜீவனை அறுப்பான்." எனவே அன்பானவர்களே, நாம் இந்த குறுகிய உலக வாழ்க்கைக்கு முன்னுரிமை கொடுத்து நித்திய ஜீவன் எனும் முடிவில்லா வாழ்க்கையினை இழந்துவிடக் கூடாது. 

நாம் எதை விதைக்கின்றோமோ அதையே அறுப்போம்  எனும் உண்மையினை உணர்ந்துகொண்டோமானால் நமது வாழ்க்கை வித்தியாசமானதாக மாறும். குறுகிய உலக ஆசைகளுக்காகப் பாவ காரியங்களில் ஈடுபடமாட்டோம்.  


Comments

அதிகமாகப் படிக்கப்பட்டச் செய்திகள்