DAILY MEDITATION ON WHATSAPP

ஆதவன் தினசரி வேதாகமத் தியானத்தை வாட்சப் இல் பெறுவதற்கு 96889 33712 அல்லது 76390 22747 எண்களில் தொடர்பு கொள்ளவும் / To get daily Scripture Meditation on WhatsApp kindly contact 9688933712 or 7639022747

Sunday, July 31, 2022

கண்ணீரோடே விதைக்கிறவர்கள் கெம்பீரத்தோடே அறுப்பார்கள்.

 ஆதவன் 🖋️ 552 ⛪ ஆகஸ்ட் 02, 2022 செவ்வாய்க்கிழமை

"மோசம்போகாதிருங்கள், தேவன் தம்மைப் பரியாசம்பண்ணவொட்டார்; மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்." ( கலாத்தியர் 6 : 7 )

நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் பிரதிபலன் உண்டு. நாம் பிறருக்கு என்ன செய்கின்றோமோ அதேதான் நமது வாழ்வில் நமக்கு நடக்கும். பிறரது பாவங்களை மன்னிக்கும்போது தேவன் நமது பாவங்களை மன்னிக்கின்றார். இயேசு கிறிஸ்து இதனையே தனது ஜெபத்திலும் நமக்குக் கற்றுத்தந்துள்ளார்.

இந்த உலகினில் நமது தற்போதைய நிலைமையினைக்கண்டு பிறர் பரிகசிக்கலாம். ஆனால் அது நிரந்தரமல்ல. நாம் தேவனுக்கேற்ற வாழ்க்கை வாழும்போது தேவன் நம்மைப் பரிகசிக்கப்பட விடமாட்டார்.  நாம் விதைப்பது நமது வாழ்வில் நிச்சயமாக நமக்குத் திருப்பித் தரப்படும்.

இன்று ஒருவேளை நீங்கள் வசிக்கும் ஊரில், வேலைபார்க்கும் இடத்தில நீங்கள் அற்பமாக எண்ணப்பட்டுக் கேலிசெய்யப்படலாம். அதற்காக வருந்தி மனமடிந்து போகவேண்டாம். நாம் தேவனுக்குமுன் உண்மையாய்ச் செய்யும் காரியங்களை அவர் கனப்படுத்துவார்.  இதற்கு பல சாட்சிகளை  நாம் எடுத்துக்காட்டாகக் கூறலாம்.  

ஒரு அரசு அலுவலகத்தில் தனக்குக் கீழ்  உண்மையாய் வேலைசெய்த ஒருவர்க்கு எதிராகச் செயல்பட்டார் ஒரு உயர் அதிகாரி. அவரை வேலையிலிருந்து துரத்தவேண்டும் அல்லது வேறு எங்கோ ஒரு வானாந்தரமான கிராமத்துக்கு பணிமாற்றம் செய்து அனுப்பவேண்டும் என்று செயல்பட்டார். அந்த உண்மையான மனிதரோ அமைதியாக இருந்தார். ஆனால் ஆட்சி மாறியபோது அந்த உயர் அதிகாரி ஊழல் தடுப்பு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுச் சிறைக்கு அனுப்பப்பட்டார். அவர் வகித்துவந்த பதவி அமைதியான அந்த உண்மையுள்ள மனிதனுக்குக்  கிடைத்தது.   

அப்போஸ்தலரான பவுல்  கூறும்போது தொடர்ந்து எழுதுகின்றார், "பின்னும் நான் சொல்லுகிறதென்னவெனில், சிறுக விதைக்கிறவன் சிறுக அறுப்பான், பெருக விதைக்கிறவன் பெருக அறுப்பான்." ( 2 கொரிந்தியர் 9 : 6 )

விதைக்கின்ற காலத்துக்கும் அறுவடை காலத்துக்கும் மிகுந்த வித்தியாசம் உண்டு. விதைக்கும் காலம் கடினமானது, செலவு தரக்கூடியது. அதுபோல நமது வாழ்க்கையும் துன்பங்கள், கேலிகள், அவமதிப்புக்கள் என்ற கடினமான விதைப்பின் காலமாக இப்போது இருக்கலாம். ஆனால் எதிர்காலத்தில் யோவான் ஸ்நானன் கூறியதுபோல அறுவடைநாள் ஒன்று  உண்டு. அப்போது கோதுமைகள் களஞ்சியத்தைச் சென்றடையும் பதர்களோ அக்கினியில் சுட்டெரிக்கப்படும். (லூக்கா 3:17)

இதனையே நாம் சங்கீதத்தில் வாசிக்கின்றோம், "கண்ணீரோடே விதைக்கிறவர்கள் கெம்பீரத்தோடே அறுப்பார்கள். அள்ளித்தூவும் விதையைச் சுமக்கிறவன் அழுதுகொண்டு போகிறான்; ஆனாலும் தான் அறுத்த அரிகளைச் சுமந்துகொண்டு கெம்பீரத்தோடே திரும்பிவருவான்." ( சங்கீதம் 126 : 5, 6 )

தேவ செய்தி :- சகோஎம் . ஜியோ பிரகாஷ்                                  தொடர்புக்கு- 96889 33712

No comments: