தீமையை வெறுப்பதே கர்த்தருக்குப் பயப்படும் பயம்

 ஆதவன் 🖋️ 543 ⛪ ஜுலை 24, 2022 ஞாயிற்றுக்கிழமை

"அவருடைய இரக்கம் அவருக்குப் பயந்திருக்கிறவர்களுக்குத் தலைமுறை தலைமுறைக்குமுள்ளது." ( லுூக்கா 1 : 50 )

காபிரியேல் தூதன் கூறிய செய்தியைக் கேட்டு அன்னை மரியாள் எலிசபெத்தை சந்திக்கச்செல்லுகின்றாள். எலிசபெத்து மரியாளைப்பார்த்து, "என் ஆண்டவரது தாயார் என்னிடத்தில் வரக்கூடிய பாக்கியம் எனக்கு எதனால் கிடைத்தது" என ஆச்சரியப்பட,  அன்னை மரியாள் பாடிய புகழ் பாடலில் இன்றைய தியானத்துக்குரிய வார்த்தைகளைக் கூறுகின்றார். 

ஆம், கர்த்தரது இரக்கம் அவருக்குப் பயந்திருக்கிறவர்களுக்கு இந்தத் தலைமுறையில் மட்டுமல்ல, அடுத்தடுத்த தலைமுறைக்கும் தொடர்ந்து இருக்கும் என்பதே இந்த வசனம் கூறுவது. 

கர்த்தருக்குப் பயப்படுதல் என்பது ஒரு போலீஸ்காரரைப் பார்த்துப் பயப்படுவதுபோலவோ அல்லது ஒரு ஆசிரியரைப் பார்த்து மாணவன் பயப்படுவதுபோல பயப்படுவதையோ குறிக்கவில்லை.  

"தீமையை வெறுப்பதே கர்த்தருக்குப் பயப்படும் பயம்; பெருமையையும், அகந்தையையும், தீய வழியையும், புரட்டுவாயையும் நான் வெறுக்கிறேன்." ( நீதிமொழிகள் 8 : 13 ) என நீதிமொழிகள் நூலில் வாசிக்கின்றோம். 

தீமையை வெறுக்கக்கூடிய மனம் நமக்கு வேண்டும். "பெருமையையும், அகந்தையையும், தீய வழியையும், புரட்டுவாயையும் நான் வெறுக்கிறேன்." என்று இந்த வசனம் கூறுகின்றது. இத்தகைய குணங்கள் மிகுதியாக அரசியல்வாதிகளிடம் இருப்பதை நாம் அறிவோம். பதவிக்காகவும் தாங்கள் சார்ந்துள்ள கட்சி செய்வதை நியாயப்படுத்தவும் அரசியல்வாதிகள் இப்படிச் செய்கின்றனர்.

ஆனால் இந்தக் குணம் பெரும்பாலான மனிதர்களிடமும் இருக்கின்றது. ஒரு கல்லூரியில் பேராசிரியர் பணி கிடைத்துவிட்டாலே பெருமை, அகந்தை மனிதர்களுக்கு வந்துவிடுகின்றது. பிரபஞ்சத்தையே படைத்து ஆட்சிசெய்யும் தேவன் எல்லா மகிமையையும் விட்டு அற்பமான மனிதனுக்கு ஒப்பானவராக மாறினாரே ? (வாசிக்க - பிலிப்பியர் 2 : 6-11)அவர் எப்படி இந்த அகந்தையும் பெருமையும் உள்ள மனிதர்களை ஏற்றுக்கொள்வார்? 

அன்பானவர்களே, நமது தலைமுறை நன்றாய் இருக்கவேண்டுமென்று சொத்து சுகங்கள் சேர்த்து வைத்து கூடவே தேவ சாபத்தையும் சேர்க்கக்கூடாது. அவருடைய இரக்கம் அவருக்குப் பயந்திருக்கிறவர்களுக்குத் தலைமுறை தலைமுறைக்குமுள்ளது என்று கூறப்பட்டுள்ளதால், "தீமையை வெறுப்பதே கர்த்தருக்குப் பயப்படும் பயம்" என்ற வசனத்தின்படி தீமையை வெறுத்து அவருக்குப் பயந்த ஒரு வாழ்க்கை வாழ்வோம்.

தேவ செய்தி :- சகோஎம் . ஜியோ பிரகாஷ்                                  தொடர்புக்கு- 96889 33712

Comments

அதிகமாகப் படிக்கப்பட்டச் செய்திகள்