DAILY MEDITATION ON WHATSAPP

ஆதவன் தினசரி வேதாகமத் தியானத்தை வாட்சப் இல் பெறுவதற்கு 96889 33712 அல்லது 76390 22747 எண்களில் தொடர்பு கொள்ளவும் / To get daily Scripture Meditation on WhatsApp kindly contact 9688933712 or 7639022747

Wednesday, July 27, 2022

தேவனுக்கேற்ற துக்கம்

 ஆதவன் 🖋️ 547 ⛪ ஜுலை 28, 2022 வியாழக்கிழமை


"தேவனுக்கேற்ற துக்கம் பின்பு மனஸ்தாபப்படுகிறதற்கு இடமில்லாமல் இரட்சிப்புக்கேதுவான மனந்திரும்புதலை உண்டாக்குகிறது; லெளகிக துக்கமோ மரணத்தை உண்டாக்குகிறது."( 2 கொரிந்தியர் 7 : 10 )

கவலை அல்லது துக்கம் மனிதர்களது அன்றாட வாழ்க்கையை மிகவும் பாதிக்கும், அது பசியின்மை, வாழ்க்கை முறை பழக்கவழக்கங்கள், உறவுகள், தூக்கம் மற்றும் வேலை செயல்திறன் ஆகியவற்றில் பாதிப்புகளை ஏற்படுத்தலாம். 

அதிகமாகக் கவலைப்படும் பலர் மிகவும் பதட்டத்தில் இருப்பார்கள். அவர்கள் அதிகப்படியான புகைப்பழக்கம், மது மற்றும் போதைப்பொருள்களைப் பயன்படுத்துதல் போன்ற தீங்கு விளைவிக்கும் வாழ்க்கை முறை பழக்கங்களில் நிவாரணம் தேடி, பல்வேறு நோய்களுக்கு ஆளாகி  இறுதியில் மரணத்துக்கு நேராக கடந்து செல்கின்றனர். மருத்துவர்கள் கூறும் இதே கருத்தையே பவுல் அடிகளும் லெளகிக துக்கமோ மரணத்தை உண்டாக்குகிறது என்று கூறுகின்றார். 

இயேசு கிறிஸ்துவும், "கவலைப்படுகிறதினாலே உங்களில் எவன் தன் சரீர அளவோடு ஒரு முழத்தைக் கூட்டுவான்?" ( மத்தேயு 6 : 27 ) என்றும் "என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று உங்கள் ஜீவனுக்காகவும்; என்னத்தை உடுப்போம் என்று உங்கள் சரீரத்துக்காகவும் கவலைப்படாதிருங்கள்" ( மத்தேயு 6 : 25 ) என்றும் கூறினார்.  

ஆனால் இதே இயேசு கிறிஸ்து, "துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் ஆறுதலடைவார்கள்." ( மத்தேயு 5 : 4 ) என்றும் கூறினார். இதுவே அப்போஸ்தலரான பவுல் கூறும் தேவனுக்கேற்ற துக்கம். இந்தத்  "தேவனுக்கேற்ற துக்கம் பின்பு மனஸ்தாபப்படுகிறதற்கு இடமில்லாமல் இரட்சிப்புக்கேதுவான மனந்திரும்புதலை உண்டாக்குகிறது" 

அன்பானவர்களே, எவ்வளவுதான் முயற்சி செய்தும் தேவனுக்கு ஏற்றபடி வாழ முடியவில்லை என்று துக்கப்பட்டிருக்கிறீர்களா? குறிப்பிட்ட பாவ காரியங்களை விடமுடியவில்லை  என்று கவலைப்பட்டிருக்கிறீர்களா? பரிசுத்தமான ஒரு வாழ்வு வாழ முடியவில்லை என கவலை உங்களை வாட்டியிருக்கின்றதா? இவைகளே தேவனுக்கேற்ற துக்கம்.

இப்படி தேவனுக்கேற்ற துக்கம் நீங்கள் கொண்டிருந்தால் பின்பு மனஸ்தாபப்படுகிறதற்கு இடமில்லாமல் இரட்சிப்புக்கேதுவான மனந்திரும்புதலை அது உண்டாக்கும். கிறிஸ்துவின் இரட்சிப்பு அனுபவம் கிடைக்கும். 

யூதாசும் துக்கமடைந்தான், ஆனால் அது தேவனுக்கேற்ற துக்கமல்ல. அப்படியானால் அவரிடம் வந்து மன்னிப்பு வேண்டியிருப்பான். ஆனால் பேதுருவும் கிறிஸ்துவை மறுதலித்து, பின் ஆத்துமாவில் வேதனைப்பட்டு அழுதார். கிறிஸ்துவை மீண்டும் கிட்டிச் சேர்ந்தார். 

அன்பானவர்களே, உலக காரியங்களுக்காக அல்ல, தேவனுக்கேற்ற காரியங்களுக்காகத் துக்கம் கொள்வோம். அது நமக்கு  இரட்சிப்புக்கேதுவான மனந்திரும்புதலை உண்டாக்கும். 

தேவ செய்தி :- சகோஎம் . ஜியோ பிரகாஷ்                                  தொடர்புக்கு- 96889 33712

No comments: