ஆவிக்குரிய வாழ்வின் வேலியைக் காத்துக்கொள்ளவேண்டும்.

 ஆதவன் 🖋️ 534 ⛪ ஜுலை 15, 2022 வெள்ளிக்கிழமை

"..........அக்காலத்திலே எருசலேமிலுள்ள சபைக்கு மிகுந்த துன்பம் உண்டாயிற்று. அப்போஸ்தலர்தவிர, மற்ற யாவரும் யூதேயா சமாரியா தேசங்களில் சிதறப்பட்டுப்போனார்கள்." ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 8 : 1 )

ஸ்தேவான் கொலை செய்யப்பட்டபின்னர் ஏற்பட்டக் கலவரத்தால் எருசலேம் சபைக்கு மிகுந்த துன்பம் உண்டாயிற்று. மக்கள் யூதர்களுக்கு அஞ்சிச் சிதறி யூதேயா மற்றும் சமாரியா தேசங்களுக்குச் சிதறிஓடினார்கள்.

ஆனால் எந்த ஒரு தீமையான செயலையும் தேவன் நன்மையாக மாற்றக்கூடியவர் என்பதற்கேற்ப நடந்தது. யூதர்கள் சமாரியர்களைத் தீண்டத்தகாதவர்கள் என்று கருதி அவர்களோடு உணவுகூட உண்பதில்லை. ஆனால் இப்போது அவர்கள் சமாரியாவில் தஞ்சம் ஏற்படும் நிலைமை ஏற்பட்டுவிட்டது. இப்படிச் சமாரியாவுக்குப்போன கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட யூதர்கள் அங்கு கிறிஸ்துவின் சுவிசேஷத்தைப் பிரசங்கித்தார்கள்.

"சிதறிப்போனவர்கள் எங்குந்திரிந்து, சுவிசேஷவசனத்தைப் பிரசங்கித்தார்கள்." ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 8 : 4 )ஆம் சிதறப்பட்டு ஓடியதால் சமாரியர்கள் கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அறியும் வாய்ப்பு உண்டானது.

நமது ஆவிக்குரிய வாழ்விலும் பிசாசு பல்வேறு துன்பங்களையும் பிரச்சனைகளையும் எழுப்பி நம்மைச் சிதறடிப்பான். ஆம் , பிசாசுதான்  சிதறடிக்கின்றவன்.  நாம் நமது ஆவிக்குரிய வாழ்வின் அரணை (வேலியைக்) நமது ஜெப ஜீவியத்தால்  காத்துக்கொள்ளவேண்டும்.    "சிதறடிக்கிறவன் உன் முகத்துக்கு முன்பாக வருகிறான்; அரணைக் காத்துக்கொள், வழியைக் காவல் பண்ணு, அரையைக் கெட்டியாய்க் கட்டிக்கொள், உன் பெலனை மிகவும் ஸ்திரப்படுத்து." ( நாகூம் 2 : 1 )  என்று நாகூம் தீர்க்கதரிசி கூறுகின்றார். 

இப்படி நாம் நமது ஆவிக்குரிய வாழ்வின் வேலியை உறுதியாகக் காத்துக்கொண்டால் சாத்தானின் சிதறடிக்கும் முயற்சி  வெற்றிபெறாது. மட்டுமல்ல, அன்று சிதறடிக்கப்பட்ட மக்கள் கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அறிவித்ததுபோல நம்மூலம் கிறிஸ்து அறிவிக்கப்பட்டு மகிமைப்படுவார்.

ஆம், ஆவிக்குரிய வாழ்வில் சிதறடிக்கப்படும் அனுபவம் இன்றியமையானது. பக்தனான யோபு சிதறடிக்கப்பட்டபின் பொன்னாகத் திகழ்ந்தார்.  எனவே, நாகூம் கூறுவதுபோல நமது அரணைக் காத்துக்கொண்டு  வழியைக் காவல் பண்ணி  அரையைக் கெட்டியாய்க் கட்டிக்கொண்டு நமது பெலனை மிகவும் ஸ்திரப்படுத்துவோம். அதற்கு ஜெபத்தில் உறுதியாய்த் தரித்திருப்போம்.


தேவ செய்தி :- சகோஎம் . ஜியோ பிரகாஷ்                                  தொடர்புக்கு- 96889 33712

Comments

அதிகமாகப் படிக்கப்பட்டச் செய்திகள்