DAILY MEDITATION ON WHATSAPP

ஆதவன் தினசரி வேதாகமத் தியானத்தை வாட்சப் இல் பெறுவதற்கு 96889 33712 அல்லது 76390 22747 எண்களில் தொடர்பு கொள்ளவும் / To get daily Scripture Meditation on WhatsApp kindly contact 9688933712 or 7639022747

Tuesday, July 19, 2022

இரட்சிப்பு ஒருநாளில் நடப்பதல்ல.......


 ஆதவன் 🖋️ 539 ⛪ ஜுலை 20, 2022 புதன்கிழமை

"முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான்." (மத்தேயு 24:13)

பொதுவாக இன்று ஆவிக்குரிய கிறிஸ்தவர்கள் என்று தங்களைக் கூறிக்கொள்ளும் பலரும், "நான் இரட்சிக்கப்பட்டுள்ளேன்" என்று கூறுவது வழக்கம்.   சிலர் அதனை தேதி குறிப்பிட்டு இந்தத் தேதியில் நான் இரட்சிக்கப்பட்டேன் என்றும் கூறுவார்கள். இப்படிக் கூறுபவர்கள் பாவ மன்னிப்புக்கும் இரட்சிப்புக்குமுள்ள வேறுபாட்டை சரியாகப் புரிந்துகொள்ளாதவர்களே.

நமது மகன் நாம் சொல்லும் அறிவுரைகளைக் கேட்காமல் துன்மார்க்க நண்பர்களோடு சேர்ந்து பழகுகின்றான் என்று வைத்துக்கொள்வோம். ஒருமுறை அப்படி அவர்களோடு சேர்ந்து சிறு தகாத செயலில் ஈடுபட்டு காவல்துறையால் கைதுசெய்யப்படுகின்றான். நமக்குத் தகவல் வருகின்றது. நாம் காவல் நிலையம் செல்லுகின்றோம்.

நம்மைக் கண்டதும் மனம் கசிந்து அழுகின்றான். பின், "அப்பா, உங்கள் அறிவுரையினைக் கேட்காதது தவறுதான். என்னை மன்னியுங்கள்" என்கின்றான். நமது மகன் என்பதால் நாம் அவனை மன்னிக்கின்றோம். இதுவே பாவ மன்னிப்பு. கிறிஸ்துவிடம் நமது பாவங்களை அறிக்கையிடும்போது இதுபோல அவர் நம்மை மன்னிக்கின்றார்.  அதாவது நாம் அவருடன் ஒப்புரவாக்கப்படுகின்றோம். அப்போது அதுவரை நாம் செய்த பாவங்களை அவர் மன்னிக்கின்றார். 

ஆனால் காவல் நிலையத்திலிருந்து மீட்கப்பட்டபின் அந்த மகன் பழைய பாவ நண்பர்களைவிட்டு விலகவேண்டும். தாய் தகப்பனுக்கு ஏற்புடைய ஒரு வாழ்க்கை வாழவேண்டும். இறுதிவரை அப்படி இருந்தாலே அவன் பாவ மன்னிப்பைப் பெற்றதில் அர்தமுண்டு. இல்லையானால் மீண்டும் இக்கட்டுக்கு உள்ளாவான்.

இதனையே அப்போஸ்தலரான பவுல், "நாம் தேவனுக்குச் சத்துருக்களாயிருக்கையில், அவருடைய குமாரனின் மரணத்தினாலே அவருடனே ஒப்புரவாக்கப்பட்டோமானால், ஒப்புரவாக்கப்பட்டபின் நாம் அவருடைய ஜீவனாலே இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே." ( ரோமர் 5 : 10 ) 

அதாவது இப்படி ஒப்புரவாக்கப்பட்டபின் நாம் அவருடைய ஜீவனாலே இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே. எனவே இப்படி பாவமன்னிப்பு பெற்று கிறிஸ்துவோடு ஒப்புரவாக்கப்பட்டபின்பு கிறிஸ்துவின் ஜீவனாலே நாம்  இரட்சிக்கப்படுவது நிச்சயம் என்று பவுல் கூறுகின்றார். கிறிஸ்துவின் பாடுகளும் மரணமும் நம்மைப் பாவத்திலிருந்து விடுதலை அளிக்கும். 

இப்படி இரட்சிக்கப்பட்டவர்கள் கிறிஸ்துவின் ஆவியின் படியே நடப்பார்கள். "ஆனபடியால், கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து, மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை. கிறிஸ்து இயேசுவினாலே ஜீவனுடைய ஆவியின் பிரமாணம் என்னைப் பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணத்தினின்று விடுதலையாக்கிற்றே." ( ரோமர் 8 : 1, 2)

இது ஒருநாளில் நடப்பதல்ல. அன்றாடம் நாம் பாவத்துக்கு எதிராகப் போராடவேண்டும். இதுவே கிறிஸ்து கூறிய சிலுவை சுமக்கும் அனுபவம். இப்படிச் சிலுவை  சுமந்து, பாவத்துக்கு எதிராகப் போராடி நமது வாழ்வின் இறுதிவரை நம்மைப் பாவமில்லாமல்  காத்துக்கொள்ளவேண்டும். இப்படி வாழ்வின்  "முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான்." (மத்தேயு 24:13)

அன்பானவர்களே, என்றோ நாம் பெற்றுக்கொண்ட பாவ மன்னிப்பு  அனுபவத்தை வைத்துக்கொண்டு , "நான் இரட்சிக்கப்பட்டேன் " என்று கூறிக்கொண்டு அலைவதால் அர்த்தமில்லை. உலக வாழ்வின் இறுதிவரை நமது வாழ்வு பாவமில்லாமல் நிலை நிற்கவேண்டும். இல்லையானால், நாம் முதலில் பார்த்த சம்பவத்திலுள்ள மகன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதுபோல சாத்தானின் வல்லமைக்குள் கைதியாக இருப்போம்.

தேவ செய்தி :- சகோஎம் . ஜியோ பிரகாஷ்                                 தொடர்புக்கு- 96889 33712 

No comments: