DAILY MEDITATION ON WHATSAPP

ஆதவன் தினசரி வேதாகமத் தியானத்தை வாட்சப் இல் பெறுவதற்கு 96889 33712 அல்லது 76390 22747 எண்களில் தொடர்பு கொள்ளவும் / To get daily Scripture Meditation on WhatsApp kindly contact 9688933712 or 7639022747

Monday, July 11, 2022

நாம் தேவனின் மக்களா இல்லை பிசாசின் மக்களா?

 ஆதவன் 🖋️ 532 ⛪ ஜுலை 13, 2022 புதன்கிழமை

"தேவனால் உண்டானவன் தேவனுடைய வசனங்களுக்குச் செவிகொடுக்கிறான்; நீங்கள் தேவனால் உண்டாயிராதபடியினால் செவிகொடாமலிருக்கிறீர்கள் ". ( யோவான் 8 : 47 )

இந்த உலகத்தில் படைக்கப்பட்ட அனைவருமே தேவனால் உண்டானவர்கள்தான். ஆனால் ஆவிக்குரிய விளக்கத்தின்படி இது சரியல்ல. இயேசு கிறிஸ்து தேவனால் உண்டானவனுக்கும் பிசாசானவனால் உண்டானவனுக்குமுள்ள வேறுபாட்டை இங்குக் குறிப்பிடுகின்றார். 

தேவனுடைய வசனத்தைக் கேட்டு அதன்படி நடப்பவனே தேவனால் உண்டானவன். தேவனுடைய வசனத்தை அறியாமலும் அதன்படி வாழாமலும் இருப்பவன் பிசாசானவனால் உண்டானவன். 

தனது வார்த்தைகளை விசுவாசியாமலும் தனக்கு எதிராகவும் நின்ற யூகர்களைப்பார்த்து இயேசு கிறிஸ்துக்  கூறினார்,  "நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசானவனால் உண்டானவர்கள்; உங்கள் பிதாவினுடைய இச்சைகளின்படி செய்ய மனதாயிருக்கிறீர்கள்"  ( யோவான் 8 : 44 )

கிறிஸ்துவின் வார்த்தைகளை விட்டுவிட்டு, அல்லது அதனை விசுவாசியாமல் அவற்றுக்கு எதிரான செயல்பாடுகளை நாம் செய்யும்போது பிசாசின் விருப்பத்தினை நிறைவேற்றுகின்றோம். இதனைத்தான் இயேசு கிறிஸ்து,  "உங்கள் பிதாவினுடைய இச்சைகளின்படி செய்ய மனதாயிருக்கிறீர்கள்" என்று குறிப்பிட்டார்.

நாம் தேவனால் உண்டானவர்கள் என்று கூறிக்கொண்டு வெறும் ஆராதனையில் மட்டும் அவரைப் புகழ்ந்து துதித்துவிட்டு உலக காரியங்களில் அவரது கற்பனைகளுக்கு முரணாக வாழ்வோமானால் நாம் பிசாசானவனால் உண்டானவர்கள்.

"தேவனால் உண்டானவன் தேவனுடைய வசனங்களுக்குச் செவிகொடுக்கிறான்" என்று இயேசு கிறிஸ்து கூறுவது வெறுமனே பிரசங்கத்தில் அவரது வார்த்தைகளை காதால் கேட்பதைக் குறிக்கவில்லை. வசனங்களுக்குச் செவிகொடுத்தல் என்பது அவரது வார்த்தைகளை வாழ்வாக்குவது.  

நம்மை நாமே நிதானித்துப் பார்ப்போம். நாம் எப்படி இருக்கின்றோம்? வெறும் ஆராதனைக் கிறிஸ்தவர்களாக இருக்கின்றோமா? கன்வென்சன் பிரசங்கங்களை காதால் கேட்பதற்கு ஓடி வாழ்க்கையில் சாட்சியற்றவர்களாக இருக்கின்றோமா ? 

நாம் தேவனால் உண்டானவர்களென்றால் தேவனுடைய வசனங்களுக்குச் செவிகொடுப்போம் இல்லாவிட்டால்  நம்மைக் கிறிஸ்தவர்கள் என்று கூறிக்கொண்டாலும் தேவனால் உண்டாயிராதபடி பிசாசின் மக்களாகவே வாழ்வோம்.   

தேவ செய்தி :- சகோஎம் . ஜியோ பிரகாஷ்                                  தொடர்புக்கு- 96889 33712

No comments: