நாம் படைக்கப்பட்டதே நற்செயல்கள் செய்வதற்காகத்தான்

 

ஆதவன் 🖋️ 525 ⛪ ஜுலை 06, 2022 புதன்கிழமை


"ஏனெனில், நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாயிருக்கிறோம்; அவைகளில் நாம் நடக்கும்படி அவர் முன்னதாக அவைகளை ஆயத்தம்பண்ணியிருக்கிறார்." ( எபேசியர் 2 : 10 )

கடவுள் மனிதனை ஏன் படைத்தார் என்று ஒரு கேள்வியைச் சிலர் எழுப்புவதுண்டு. கடவுளைப் புகழ்வதற்கு என்று சிலர் இந்தக் கேள்விக்குப் பதில் கூறுவார்கள். அதாவது மனிதரைப் படைத்து அவன் தன்னைப் புகழ்ந்துகொண்டிருக்கவேண்டும் என்று கடவுள் விரும்புவாரா? 

நாம் உலகினில் படைக்கப்பட்டதே நற்செயல்கள் செய்வதற்காகத்தான் என்கின்றார் பவுல் அடிகள்.  அதாவது கடவுள் நல்லவராகவே இருக்கின்றார். அவர் தான் படைத்த மனிதர்களும் தன்னைப்போல நற்செயல்கள் செய்பவர்களாக இருக்கவேண்டுமென்று விரும்புகின்றார். "தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார்." ( ஆதியாகமம் 1 : 27 ) என்று வேதம் கூறுகின்றது.

"தேவன்: நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக "( ஆதியாகமம் 1 : 26 ) என்று கூறுவதைப் பார்க்கின்றோம். சாயல் என்பது குணத்தைக் குறிக்கின்றது. அதாவது தனது சாயலை மனிதன் வெளிப்படுத்தவேண்டும் என அவர் எண்ணினார். ரூபம் என்பது உருவம். அதாவது கடவுள் மனித உருவில் இருக்கின்றார் (கடவுளுக்கு உருவமில்லை என்று கூறுவது சரியான  வேத படிப்பினை அல்ல) ஆனால் மனிதன் பாவம் செய்தபோது அந்த தேவச் சாயலை இழந்துவிட்டான். 

இன்றைய வசனம் கூறுகின்றது, "நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாயிருக்கிறோம்; அவைகளில் நாம் நடக்கும்படி அவர் முன்னதாக அவைகளை ஆயத்தம்பண்ணியிருக்கிறார்". ஆம் அந்த தேவ சாயலை நாம் இழந்துவிடாமல் நடக்கும்படி முன்னதாகவே சரியான வழியை ஆயத்தம் பண்ணியிருக்கின்றார். ஆனால் மனிதன் அந்த வழியில் நடக்கவில்லை.

எனவேதான் கர்த்தராகிய இயேசு உலகினில் வந்தார். "நானே வழி " என்று அறிக்கையிட்டு ஏற்கெனவே ஆயத்தம்பண்ணய சரியான வழியை நமக்குக் காண்பித்தார். 

அன்பானவர்களே, கிறிஸ்து இயேசு உலகினில் வந்து நமக்கு வழியைக் காட்டியது மட்டுமல்ல, அந்த வழியில் நாம் நடந்திட  பரிசுத்த ஆவியானவரை நமக்குத் துணையாளராகத் தந்துள்ளார். நற்செயல்கள் செய்து கிறிஸ்து காட்டிய இந்த வழியில் நடக்கவே நாம் அழைக்கப்பட்டுள்ளோம்.  துணையாளரான பரிசுத்த ஆவியானவர் நம்மை கிறிஸ்து காட்டிய வழியில் நடத்திட அவரது துணையினை எந்நாளும் வேண்டுவோம்.

தேவ செய்தி :- சகோஎம் . ஜியோ பிரகாஷ்                                  தொடர்புக்கு- 96889 33712

Comments

அதிகமாகப் படிக்கப்பட்டச் செய்திகள்