DAILY MEDITATION ON WHATSAPP

ஆதவன் தினசரி வேதாகமத் தியானத்தை வாட்சப் இல் பெறுவதற்கு 96889 33712 அல்லது 76390 22747 எண்களில் தொடர்பு கொள்ளவும் / To get daily Scripture Meditation on WhatsApp kindly contact 9688933712 or 7639022747

Saturday, July 02, 2022

விசுவாசத்தில் உறுதிப்படும்போதே நமது வாழ்வு கனியுள்ளதாக மாறும்.

 ஆதவன் 🖋️ 522 ⛪ ஜுலை 03, 2022 ஞாயிற்றுக்கிழமை 

"ஆகையால், நீங்கள் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை ஏற்றுக்கொண்டபடியே, அவருக்குள் வேர்கொண்டவர்களாகவும், அவர்மேல் கட்டப்பட்டவர்களாகவும், அவருக்குள் நடந்துகொண்டு, நீங்கள் போதிக்கப்பட்டபடியே, விசுவாசத்தில் உறுதிப்பட்டு, ஸ்தோத்திரத்தோடே அதிலே பெருகுவீர்களாக." ( கொலோசெயர் 2 : 6, 7 )

நாம் நமக்கு இருக்கும் விசுவாசத்தில் பெருகவேண்டும் என்பதே இன்றைய செய்தி கூறும் கருத்து. இதனாலேயே சீடர்கள் இயேசு கிறிஸ்துவிடம் தங்கள் விசுவாசத்தை வர்த்திக்கப்பண்ணவேண்டும் என்று வேண்டினர். ( லுூக்கா 17 : 5 ) காரணம், "விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாக இருப்பது கூடாத காரியம்" (எபிரெயர் - 11:6). 

நாம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின்மேல் நமக்கு விசுவாசம் இருந்ததால்தான் இரட்சகராக ஏற்றுக்கொண்டோம். ஆனால் அந்த நிலையிலேயே நாம் நின்றுவிடக் கூடாது. அவருக்குள் வேர்கொண்டு வளரவேண்டும்; அவர்மேல் கட்டப்படவேண்டும் என்கின்றது இன்றைய வசனம்.

நாம் இரட்சிக்கப்படும் ஆரம்பகாலத்தில் தேவன் பல அதிசயங்களை நமது வாழ்வில் செய்து நமது விசுவாசம் வளர்ந்திட உதவி செய்கின்றார்.   மெய்யான மீட்பு அனுபவம் பெற்றவர்கள் இதனை அறிவார்கள். ஆனால், அந்த அதிசயங்களை உணர்ந்துகொள்ளும் கண்கள் நமக்கு வேண்டும். 

"நீங்கள் போதிக்கப்பட்டபடியே, விசுவாசத்தில் உறுதிப்பட்டு, ஸ்தோத்திரத்தோடே அதிலே பெருகுவீர்களாக" என்று இந்த வசனம் கூறுகின்றது. அதாவது கிறிஸ்துவின் இரட்சிப்பை நமக்கு பிறர் எடுத்துச்சொல்லி போதித்தபோதுதான் நாம் அவர்மேல் விசுவாசம்கொள்ள ஆரம்பித்தோம். ஆனால் அந்த ஆரம்ப நிலையிலேயே நில்லாமல்  அதில் நாம் உறுதிப்படவேண்டும். விசுவாசத்தில் பெருகிட ஸ்தோத்திரம் பண்ணவேண்டும் என்று இந்த வசனம் மூலம் அறிகின்றோம்.

எல்லாவற்றுக்காகவும் ஸ்தோத்திரம் செலுத்தும் நிலைக்கு நாம் வந்துவிட்டால் விசுவாசத்தில் வளர்ந்துள்ளோம் என்று பொருள். இப்படி வாழ்வதே அவர்மேல் கட்டப்படுவது. 

சிலர்  என்றோ தாங்கள்  பெற்றுக்கொண்ட மீட்பு அனுபவத்தையே எப்போதும்  கூறிக்கொண்டிருப்பார்கள். ஆனால் அவர்களது வாழ்வில் எந்த கிறிஸ்தவ கனியையும் காண முடியாது. காரணம் அவர்கள் விசுவாசத்தில் வளரவில்லை; கட்டப்படவில்லை என்று பொருள். 

நாளுக்குநாள் விசுவாசத்தில் வளர்ந்து உறுதிப்படும்போதே நமது கிறிஸ்தவ வாழ்வு கனியுள்ளதாக மாறும். ஆம், இத்தகைய வளர்ந்த  "விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாக இருப்பது கூடாத காரியம்" 

தேவ செய்தி :- சகோஎம் . ஜியோ பிரகாஷ்                                  தொடர்புக்கு- 96889 33712

No comments: