DAILY MEDITATION ON WHATSAPP

ஆதவன் தினசரி வேதாகமத் தியானத்தை வாட்சப் இல் பெறுவதற்கு 96889 33712 அல்லது 76390 22747 எண்களில் தொடர்பு கொள்ளவும் / To get daily Scripture Meditation on WhatsApp kindly contact 9688933712 or 7639022747

Sunday, July 24, 2022

கிறிஸ்துவோடுகூட சிலுவையில் அறைந்திட ஒப்புக்கொடுப்போம்.

 ஆதவன் 🖋️ 545 ⛪ ஜுலை 26, 2022 செவ்வாய்க்கிழமை


"கிறிஸ்துவுடனேகூடச் சிலுவையிலறையப்பட்டேன்; ஆயினும், பிழைத்திருக்கிறேன்; இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்; நான் இப்பொழுது மாம்சத்தில் பிழைத்திருக்கிறதோ, என்னில் அன்புகூர்ந்து எனக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த தேவனுடைய குமாரனைப்பற்றும் விசுவாசத்தினாலே பிழைத்திருக்கிறேன்."( கலாத்தியர் 2 : 20 )

அப்போஸ்தலராகிய பவுல் அடிகள் இந்த வசனத்தில் இரண்டுவித பிழைத்திருத்தலைக் குறித்துப்  பேசுகின்றார். ஒன்று ஆவிக்குரிய பிழைத்திருத்தல் இன்னொன்று சரீர விதமாகப் பிழைத்திருத்தல். இரண்டு பிழைத்திருத்தலும் நமக்கு அவசியம். 

முதலாவது பிழைத்திருத்தல் என்பது, பாவத்தால் மரித்த ஆத்துமம் கிறிஸ்துவால் பிழைத்திருப்பதைக் குறிக்கின்றது.  எனது உடலையும் ஆத்துமாவையும் ஒடுக்கி கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டதுபோல அறையப்பட ஒப்புக்கொடுத்தேன். எனவே இப்போது கிறிஸ்துவுக்குள் பிழைத்திருக்கின்றேன். இப்போது பழைய பவுல் அல்ல, இயேசு கிறிஸ்துவே எனக்குள் வாழ்கின்றார் என்கின்றார். 

இது நாம் அனைவரும் செய்யவேண்டிய முக்கியமான ஆவிக்குரிய காரியம். நமது உடலையும் ஆத்துமாவையும்  கிறிஸ்துவுக்கு அர்ப்பணித்து நமது பாவ மனிதன் அழிவுற நம்மை ஒப்புக்கொடுக்கவேண்டும். "அப்படியே நீங்களும், உங்களைப் பாவத்திற்கு மரித்தவர்களாகவும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்குள் தேவனுக்கென்று பிழைத்திருக் கிறவர்களாகவும் எண்ணிக்கொள்ளுங்கள்." ( ரோமர் 6 : 11 )

இப்படி நாம் நமது ஆத்துமாவையும் சரீரத்தையும் கிறிஸ்துவுக்கு ஒப்புக்கொடுத்து வாழும்போது அவர் நமது உடலையும் நோய்களிலிருந்து காத்துக்கொள்வார். மட்டுமல்ல, இந்த உலகத்தில் ஏற்படும் விபத்துக்கள் சடுதி மரணங்கள் இவைகளிலிருந்தும் நாம் காக்கப்படுகின்றோம். 

உடலளவில் நாம் நோயில்லாமல் பிழைத்து வாழ்கின்றோமென்றால் அது கிறிஸ்துவைப் பற்றும் விசுவாசத்தால்தான். இதனையே, நான் இப்பொழுது மாம்சத்தில் பிழைத்திருக்கிறதோ, என்னில் அன்புகூர்ந்து எனக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த தேவனுடைய குமாரனைப்பற்றும் விசுவாசத்தினாலே பிழைத்திருக்கிறேன்."( கலாத்தியர் 2 : 20 ) என்கின்றார் பவுல் அடிகள். 

அன்பானவர்களே, நாம் இன்று உலகத்தில் பிழைத்து உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறோமென்றால் அது கிறிஸ்துவைப் பற்றும் விசுவாசத்தால்தான். உலகினில் கிறிஸ்துவை விசுவாசியாதவர்களும் சுகத்தோடு வாழ்வதை நாம் பார்க்கின்றோம். தேவன் கிருபையுள்ளவரும் மனிதரில் வேற்றுமை பாராட்டத்தவருமாக இருப்பதால் அவர் பலரையும் வாழச் செய்கின்றார். ஆனால், ஏற்கெனவே நாம் பார்த்த முதலாம் பிழைத்திருத்தல் கிறிஸ்துவை இரட்சகராக ஏற்றுக்கொண்டால் மட்டுமே சாத்தியம்.  

உடலளவில் இந்த உலகத்தில் பிழைத்து வாழ்வதோடு ஆவிக்கேற்றபடி கிறிஸ்து நமக்குள் வாழக்கூடிய பிழைதிருத்தலோடு வாழ்வதே கிறிஸ்தவ வாழ்வு. அத்தகைய பிழைத்திருத்தலுக்கு தகுதியுள்ளவர்களாக மாறிட நமது பாவத்துக்கு கிறிஸ்துவோடுகூட சிலுவையில் அறைந்திட நம்மை ஒப்புக்கொடுப்போம். 

தேவ செய்தி :- சகோஎம் . ஜியோ பிரகாஷ்                                  தொடர்புக்கு- 96889 33712

No comments: