பெரிய அழிவு கிறிஸ்துவின் வருகைக்குமுன் வருவது உறுதி


 ஆதவன் 🖋️ 551 ⛪ ஆகஸ்ட் 01, 2022 திங்கள்கிழமை


"நோவாவின் நாட்களில் நடந்ததுபோல மனுஷகுமாரனுடைய நாட்களிலும் நடக்கும். நோவா பேழைக்குள் பிரவேசித்த நாள்வரைக்கும் ஜனங்கள் புசித்துக் குடித்தார்கள், பெண்கொண்டு கொடுத்தார்கள்; ஜலப்பிரளயம் வந்து எல்லாரையும் அழித்துப்போட்டது." ( லுூக்கா 17 : 26,27 )

இயேசு கிறிஸ்து தனது இரண்டாம் வருகையினைக் குறித்துக் கூறும்போது இதனைச் சொல்கின்றார். நோவாவின் நாட்களில் பூமியில் அக்கிரமம் பெருகி இருந்தது.   "தேவன் பூமியைப் பார்த்தார்; இதோ அது சீர்கெட்டதாயிருந்தது; மாம்சமான யாவரும் பூமியின்மேல் தங்கள் வழியைக் கெடுத்துக்கொண்டிருந்தார்கள்." ( ஆதியாகமம் 6 : 12 ) எனவே, தேவன் தான் உருவாக்கிய மக்களை அழிக்க சித்தம்கொண்டார்.

ஆனால் தேவனுக்குமுன் உத்தமனாய் நடந்த நோவாவுக்கு கடவுளின் கண்ணில் தயவு கிடைத்தது. எனவே உலகினைத் தான் அழிக்கும்போது அவனையும் அவன் குடும்பத்தையும் காப்பாற்றிட மரத்தால் ஒரு பேழை செய்யுமாறு கூறுகின்றார். நோவா பேழை செய்யும்போது அதனைப் பார்த்தவர்கள் அவனைக் கேலி செய்திருக்கலாம். ஆனால் அவர்கள் அவனை நம்பவில்லை, மனம் திரும்பவுமில்லை. புசித்துக் குடித்தார்கள், பெண்கொண்டு கொடுத்தார்கள், இயல்பான தங்கள் வாழ்வைத் தொடர்ந்தார்கள். ஆனால் எல்லோரும் இறுதியில் அழிவுற்றனர். 

இதனைத் தொடர்ந்து இயேசு கிறிஸ்து இன்னொரு உதாரணமும் சொல்கின்றார், "லோத்தினுடைய நாட்களில் நடந்ததுபோலவும் நடக்கும்; ஜனங்கள் புசித்தார்கள், குடித்தார்கள், கொண்டார்கள், விற்றார்கள், நட்டார்கள், கட்டினார்கள்." ( லுூக்கா 17 : 28 )

இங்கும் லோத்து தனது மருமக்களிடம் சென்று வரவிருக்கும் அழிவினைக் கூறி எச்சரித்தார். ஆனால் அவர்கள் அதனை கேலியாக எண்ணினர். "அப்பொழுது லோத்து புறப்பட்டு, தன் குமாரத்திகளை விவாகம்பண்ணப்போகிற தன் மருமக்கள்மாரோடே பேசி: நீங்கள் எழுந்து இந்த ஸ்தலத்தை விட்டுப் புறப்படுங்கள்; கர்த்தர் இந்தப் பட்டணத்தை அழிக்கப்போகிறார் என்றான்; அவனுடைய மருமக்கள்மாரின் பார்வைக்கு அவன் பரியாசம்பண்ணுகிறதாகக் கண்டது." ( ஆதியாகமம் 19 : 14 )

அன்பானவர்களே, இதே நிலைதான் இன்றும் தொடர்கின்றது. இயேசு கிறிஸ்துவின் வருகையினைப்பற்றி கூறினால் கிறிஸ்தவர்கள் என்று தங்களைக் கூறிக்கொள்பவர்கள்கூட நம்புவதில்லை, நம்பினாலும் தங்கள் குணங்களை மாற்றி தேவனிடம் உண்மையாய் மனம்திரும்பி வருவதில்லை. 

நோவா காலத்திலும் லோத்துவின் காலத்திலும் வந்த அழிவைவிடப் பெரிய அழிவு கிறிஸ்துவின் வருகைக்குமுன் வருவது உறுதி. உலக ஆசீர்வாதங்களைப் போதிக்கும் போதகர்களை மேன்மையாகவும் கிறிஸ்துவின் வருகையினைப்பற்றி போதிக்கும் ஊழியர்களை கேலியாகவும் எண்ணி நமது ஆத்துமாவை பாதாளத்துக்குள் தள்ளிடாமல் எச்சரிக்கையாய் இருந்து மனம் திரும்புவோம். 

தேவ செய்தி :- சகோஎம் . ஜியோ பிரகாஷ்                                  தொடர்புக்கு- 96889 33712

Comments

அதிகமாகப் படிக்கப்பட்டச் செய்திகள்