DAILY MEDITATION ON WHATSAPP

ஆதவன் தினசரி வேதாகமத் தியானத்தை வாட்சப் இல் பெறுவதற்கு 96889 33712 அல்லது 76390 22747 எண்களில் தொடர்பு கொள்ளவும் / To get daily Scripture Meditation on WhatsApp kindly contact 9688933712 or 7639022747

Monday, July 11, 2022

தண்ணீர் நிற்காத வெடிப்புள்ள தொட்டிகள்

 ஆதவன் 🖋️ 531 ⛪ ஜுலை 12, 2022 செவ்வாய்க்கிழமை


"எந்த ஜாதியாவது தேவர்களல்லாத தங்கள் தேவர்களை மாற்றினது உண்டோ என்றும் பாருங்கள்; என் ஜனங்களோ வீணானவைகளுக்காகத் தங்கள் மகிமையை மாற்றினார்கள்."( எரேமியா 2 : 11 )


இஸ்ரவேலர் செய்த தேவனுக்குப் பிரியமில்லாத மிகப்பெரிய காரியம் அல்லது பாவம்,  அவர்கள் அந்நிய தெய்வங்களை வழிபடத் துவங்கியதுதான். இஸ்ரவேலர் நடுவே வேறு இனத்து மக்கள் பலர் இருந்தனர். அவர்கள் வெல்வேறு தெய்வங்களை வழிபட்டனர். ஆனால் அவர்கள் தங்கள் மதத்தில் உறுதியாக இருந்து அவற்றையே வழிபட்டனர்.  

இஸ்ரவேல் மக்களுக்குத் தேவன் பல்வேறு விதங்களில் தன்னை வெளிப்படுத்தினார். பல்வேறு அதிசயங்களைச் செய்து தானே மெய்யான தேவன் என்பதை அவர்கள் உணரத்தக்கவிதமாக அவர்களை வழிநடத்தினார். இவைகளைத் தங்கள் முன்னோர்கள் கூற அறிந்து  உணர்ந்திருந்தும் அவர்கள் தங்கள் உலகத் தேவைகளுக்கு தங்களைச் சுற்றியுள்ள மக்கள் வழிபட்ட அந்நிய தேவர்களை வணங்கவும் ஆராதிக்கவும் துவங்கினர். 

பிற இனத்தவர் வணங்கியது மெய்யான தேவனல்ல எனவேதான் இங்கு தேவன்  "தேவர்களல்லாத தங்கள் தேவர்களை அவர்கள்  மாற்றினது உண்டோ?" என்று கேட்கின்றார். ஆனால் வீணான அந்த தேவர்களுக்காக இஸ்ரவேலர் தங்கள் மெய் தெய்வத்தை மாற்றினார்கள்.  

 "என் ஜனங்கள் இரண்டு தீமைகளைச் செய்தார்கள்; ஜீவத்தண்ணீர் ஊற்றாகிய என்னை விட்டுவிட்டார்கள்; தண்ணீர் நிற்காத தொட்டிகளாகிய வெடிப்புள்ள தொட்டிகளைத் தங்களுக்கு வெட்டிக்கொண்டார்கள்." ( எரேமியா 2 : 13 )  என்றும் எரேமியா புத்தகத்தில் வாசிக்கின்றோம். 

அந்நிய தெய்வங்களே வெடிப்புள்ள தொட்டிகள். வெடிப்புள்ள தொட்டியில் நீரைச் சேகரித்து பயன்படுத்த முடியாததுபோல அந்தத் தெய்வங்களால் வேறு எந்த பயனும் இல்லை.

இன்றும் மக்கள் இந்தத் தவறையே செய்கின்றனர். பணத்தையும், சொத்துச்  சுகங்களையும்,  பதவியையும், பெருமையையும் தெய்வங்களாக எண்ணி அவற்றுக்கு முக்கியத்துவம் அளித்து கிறிஸ்துவுக்குச் செலுத்தவேண்டிய கனத்தைச் செலுத்தாமல் போகின்றனர். ஆம், வெடிப்புள்ளத் தொட்டிகளைக் கட்டிக்கொண்டிருக்கின்றனர். 

அன்பானவர்களே, வீணான தெய்வங்களை வழிபட்ட இஸ்ரவேலரைப்போல நாம் இருப்பது முறையல்ல. வீணான உலகத் தேவைகளை தெய்வங்களாக எண்ணி அவற்றைத் தேடி ஓடுவதில் கிறிஸ்துவை, அவர் காட்டிய நெறிகளை  விட்டுவிடக்கூடாது. அப்படி விட்டுவிடுவது வெடிப்புள்ளத் தொட்டிகளைக் கட்டும் மூடத்தனம் போன்றதாகும்.

இஸ்ரவேலர் அடிமைபட்டுபோகக் காரணம் அவர்கள் தேவனை விட்டுவிட்டதுதான். இன்று அற்பகால இன்பத்துக்காக தேவனை விட்டுவிடுவது நமது வாழ்வில் நம்மை பல்வேறு அடிமைத்தனத்துக்குள்தான் கொண்டுபோய்ச்  சேர்க்கும். 

தேவ செய்தி :- சகோஎம் . ஜியோ பிரகாஷ்                                  தொடர்புக்கு- 96889 33712

 

No comments: